பிரியமான கணவருக்கு,

                        அன்பே! நம் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக நம் வீட்டார் அறிவிக்கும் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உங்களைப் பற்றியும் உங்களது புகைப்படத்தையும் என்னிடம் அறிமுகப்படுத்தினார்கள். உண்மையில் உங்களுக்கு என்னைப் பிடிக்கும் முன்பே எனக்கு உங்களைப் பிடித்துப் போயிற்று என்று தான் நான் நம்பியிருந்தேன். இப்படியான நம்பிக்கை இருவருக்குள்ளும் இருப்பதன் ஒற்றுமையைத்தான் காதல் என்று சொல்லிக் கொள்வார்களோ என்னவோ. உங்களுக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஆம், இதுதான் காதலாக இருக்கக்கூடும். நிச்சயிக்கப்பட்டு ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட காதல்.

 நாம் ஒன்றும் நெடுநாட்கள் பழகிப் பார்த்து பேசிச் சிரித்து ஒருவரையொருவர் காதலித்து மணந்து கொண்டவர்களல்ல. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட பின்பான நாட்களில் தான் இருவரும் நேரில் பேசிக் கொள்வதும் அடுத்த திருமணநாள் வரையிலும் அழைபேசியில் பேசிப் புரிந்து கொள்ளவுமாக வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் குறுகிய இடைவெளிதான் நாம் நம்மைப் புரிந்து கொள்வதற்கும் பின்னாளில் வளமான குடும்பத்தை அமைப்பதற்கும் உதவப்போகிறது என்ற வகையில் நாம் பகலிரவாக  பேசிக் கொண்டோம். நம் கனவுகள் சிறியது முதல் பெரியதாக பட்டியலிட்டுப் பட்டியலிட்டு இரவும் பகலுமாக நீண்டு கொண்ட அந்த பொழுதுகளை நினைத்தால் இப்போதும் உடலிற்குள் ஒரு சிலிர்ப்பு மின்னி மறைகிறது.

‘ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்’ என்கிற பழமொழியை நம்மைப் பார்ப்பவர்கள் குறும்பாக பேசிவிட்டுச் செல்லும் போதெல்லாம் என்னை அறியாமலே பயம் தொற்றிக் கொள்வதை நீங்கள் அப்போது புரிந்து கொண்டீர்களா என்று எனக்குப் புரியவில்லை. குறுகிய கால பேச்சுப் பழக்கத்திலேயே நாம் அன்று திருமணம் முடித்த கையோடு முதலிரவிற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். தன் சகோதரி முன்னால், சக தோழியர் முன்னால்கூட உடல் விலகித் தெரிகிறதை எண்ணி கூசிப் போகிற பெண்கள் இருக்கிற காலகட்டத்தில் எப்படி ஒரு பெண் திருமணமானவள் என்பதற்காக கணவன் முன்னால் முதல் நாளே ஆடைகளைக் களைய சம்மதிக்கிறாள் என்று நீயும் யோசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இதை நான் செல்கிறேன்.

இதன் கூச்சமும் ஆண் விரல் தொட்ட முதல் நடுக்கமும் அதனுடன் தொடரும் பயமும் சேர்ந்த கலவையான பெண்ணை முதலிரவின் இருட்டில் நீங்கள் கண்டீர்களா என்பதை பலமுறை உங்களிடம் கேட்கவே நினைத்திருக்கிறேன். ஆனால் கணவன் மனம் நோகும்படி ஏதும் செய்யக்கூடாது, ஆண்கள் பலர் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், அவர் கேட்பதையெல்லாம் முகம் கோணாமல் செய் என்பன போன்ற அறிவுரைகளால் நிரப்பி அனுப்பப்பட்ட அந்த பால்குடம் தழும்பிய மனைவியாக வருகையில் எனக்குள் எந்த கேள்வியும் மனதில் எழுந்திருக்கவில்லை.

ஒரு பெண்ணின் திருமணம் அவள் ருதுஜாதகம் வைத்தும், முதலிரவு அவள் மாதவிலக்கு காலத்தை வைத்தும் நடத்தப்படுகிற வைபோகத்தை எனக்கு எப்படி புரிந்து கொள்வதென்றே தெரியவில்லை. நல்ல சினையணுக்களைக் கொண்ட, குழந்தைப் பேறு பெறுவதற்கு முழுத் தகுதியும் உடைய ஒரு பெண்ணை ஆணுக்குத் தேர்ந்தெடுக்கிற வழமை எனக்குப் புதிராக இருக்கிறது. ஒரு சுபமுகூர்த்தம் கூடிய நன்னாளில் தன் கணவனுடன் கூடிக்களிக்கிற பொழுது புகுந்த வீட்டிற்கென்று புதிய பிள்ளை பெற்றுக் கொடுக்கக்கூடும் என்று கூட்டிக் கழித்து கணக்குப் பார்க்கும் திருமண உறவு இப்போதைக்கு நமக்குள் வேண்டாம் என்று நினைத்தாலும் அதை ஒருநாளும் என்னால் சொல்ல முடிந்ததில்லை.

முதலிரவு முடிந்த விடியலில் ஒரு ஆண் எளிதாக வாசலைக் கடந்து மௌனமாகச் சென்றுவிட முடியும். ஆனால் ஒரு பெண்ணாக கதவைத் தாண்டுவதற்கே பலப்பல இத்தியாயங்களை சமிக்ஜையில் பிறருக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. இன்முகத்தால் அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை ஆமோதிப்பதைப் போல சிரித்து உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் பேசிச் சிரிக்கிற கூட்டணியில் ஆபாசம் கலந்த பேச்சுக்களை கேட்டு அதற்கும் தலையாட்டி வைத்து எல்லாம் நல்லபடியாக முடிந்ததாக வெட்கப்பட்டு ஜாடையாக வெளிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதவிலக்கு ஆகும் நாளையும் புதிதாக திருமணமான பெண் கடக்கும் துயரை உன்னிடம் நான் இதுவரை சொல்லியதேயில்லை. அது வரவில்லையா, எத்தனை நாளாகிறது, எப்போதும் இப்படித்தான் தள்ளிப்போகுமோ, இந்த முறை அதுவாகத்தானிருக்கும் பரிசோதித்துப் பார்த்துவிடுவோமா என்று மாதா மாதம் மாதவிலக்கை கடக்கும் நாட்கள் அதன் வலியைவிடக் கொடுமையாக இருக்கும்.

முதலிரவு நடக்கவில்லை' பெண் போன்று வேடமிட்டு பாதிரியாரை திருமணம் செய்து  கொண்ட ஆண், அதிர்ச்சியளிக்கும் சம்பவம்!

சில பெண்களுக்கு முதலிரவு கூடலிலே கரு ஜனித்து அன்றே அவர்களின் கர்ப்ப காலத்தை வெகு விமர்சையாக துவங்கிவிடுவார்கள். அவர்களுக்குள் கணவன்-மனைவி, மருமகள்-குடும்பம், புதுப்பெண்-சுற்றத்தார் இப்படியாக புரிந்து கொள்வதற்குள் கருவும் ஜனித்துவிட்டால் அவளால் தன்னைச் சுற்றியுள்ளோரை தனது கர்ப்பகாலத் புரிதலுக்காக எப்படி அனுக முடியும்? அவளால் எதையாவது கேட்ட முடியுமா, ஆசைப்பட்டதைச் சொல்ல முடியுமா, வயது வந்த நாட்களில் உடம்பிற்குள் நடக்கிற ஒவ்வொரு இனம்புரியா உணர்வுகளையும் ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் கேட்டுத் தெளிந்து கொள்வதைப்போல அத்தையிடம் நான் கேட்டுத் தெளியத்தான் முடியுமா?

அப்படித்தான் எதையும் வெளிப்படையாக சொல்லவொண்ணா தயக்க நிலையில் நானும் இப்போது கர்ப்பிணியாயிருக்கிறேன். நான் இன்னமும் நம் குடும்பத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. குடும்பத்தில இருப்போருக்கும்கூட பிறந்த வீட்டிலிருந்து வந்த எனது இயல்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வதற்கான காலமும் அமையவில்லை. முதலிரவன்றே கர்ப்பவதியாகிவிடுகிற பெண்ணின் மனநிலையை என்றாவது நீங்கள் கனவிலாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அது, ஒரு பக்கம் மகிழ்ச்சியென்றால் இன்னொரு பக்கம் பெருந் துயரம்.

இந்த கர்ப்பத்திற்கான சந்தோசத்தை சொல்வதற்காக பொழுது சாயும்வரை காத்திருந்து உங்களிடம் சொல்லும்போது நீங்கள் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியைக் கண்டு நானும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன். அடுத்த கணமே உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பீர்கள், அதற்கு வேறெதுவும் வேண்டாம், எனக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது அழைத்துச் செல்லுவீர்களா என்று பதில் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஆனால் கோவிலுக்குச் செல்லலாம் என்று நீங்கள் சொன்னதைக் கேட்டவுடன் உங்களது மகிழ்ச்சியாவது நிலைத்திருக்கட்டும் என்று அன்றே கோவிலுக்குச் சென்றோம்.

அன்றைய தினம் நாம் இருவரும் என்ன வேண்டினோம் என்று இருவருமே மகிழ்ச்சியாக பேசிக் கொண்டோம். ஆனால் வேண்டியதைச் சொல்லிவிட்டால் அது நடக்காது என்பதால் உங்களிடம் நான் போலியாகத்தான் சொல்லி வைத்தேன் என்பதை தெரிந்த பின்பு நீங்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். அன்று எந்தக் குழந்தையானாலும் பரவாயில்லை என்று பேசி மகிழ்ந்த நீங்கள் ஒரு கட்டத்தில் எனக்குப் பையன் தான் வேண்டும் என்று சொல்லியபோது அதன் மறுபக்கத்தில் என் மகளைப் புறக்கணிக்கின்றீர்களா என்கிற பதட்டம் வந்ததை நான் உங்களிடம் வெளிப்படுத்தியதேயில்லை. எனக்குக் குழந்தையாய் தெரிவது உங்களது ஆணாகவோ பெண்ணாகவோ தெரிவது ஏனென்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எது எப்படியென்றாலும் குழந்தை பிறந்துவிட்டால் அப்பாவாக நீங்கள் என்னைவிட அளவிற்கு மிஞ்சிய பாசத்தைக் காட்டுவீர்கள் என்று தெரிந்தாலும் மனம் என்னவோ தவியாய் தவிக்கறது.

ஒவ்வொரு நாளும் எனக்கு புதியதொரு நாளாய் தெரிகிற பட்சத்தில் என் உடலில் புதுப்புதுவாய் தோன்றுகிற மாற்றங்கள், மனதில் ஏற்படுகிற குழப்பங்கள் இவற்றையெல்லாம் உங்களிடம் ஆசையாய் சொல்ல வருகிற போது என்னை எக்காரணம் கொண்டும் தவிர்த்துவிட வேண்டாம் என்று மட்டும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். தினந்தினம் எனக்குள் ஏதோ மாயாஜாலம் போல் உடலுக்குள்ளும் மனதிற்குள்ளும் நடந்து கொண்டே இருக்கிறது. அதெல்லாம் என்னவென்று எனக்கே பிடிபடாத போது அதைப் புரியும்படியாக உங்களிடம் போசாத பொழுதுகளில் பிறந்த குழந்தையின் மழலைப் பேச்சைப் போல இரசித்து கடந்துவிடுவீர்கள் என்று நம்புகிறேன்.

உடல் குறுகுறுக்கிறது, வாயில் எச்சில் ஊறுகிறது, கைகள் நடுங்குகிறது, அடித்துப் போட்டாற் போல் அசதியாயிருக்கிறது, உடம்பு ஊதிக் கொள்கிறது, படுத்தால் தூக்கம் பிடிக்க இரண்டு மணியாகிறது, எப்போதும் பதட்டமாய் இருக்கிறது என்று உங்களிடம் ஒவ்வொன்றாய் சொல்லி தினந்தினம் முறையிடும் போது, மாசமாயிருக்கையில் எல்லாம் அப்படித்தான் இருக்கும்! என்ற ஒற்றை வரியில் என்னை கடந்துவிடாதீர்கள் என்று உங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

வேலைவிட்டு வீட்டிற்குள் நுழைகிறபோது எனக்கென்று நேரம் ஒதுக்கிக் கொண்டு இன்றைக்கு உடம்பிற்கு என்ன செய்கிறது, வயிற்றுக்குள் பிள்ளை என்ன குறும்பு செய்கிறாள் என்று கேட்டால் மட்டும் போதும், பள்ளி சென்ற குழந்தையைப் போல கதைகதையாய் பேச எத்தனையோ விசயங்கள் என்னிடம் இருக்கத்தான் செய்கின்றன. நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் உங்கள் அறிவுத் தளத்திலிருந்து அறிவுரைகளையும்கூட சொல்ல வேண்டாம். உண்மையில், நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி புத்தி பேதலித்தவளைப் போல நடந்து கொள்ளதான் ஆசைப்படுகிறேன். உங்களது படித்த அறிவிலிருந்து சொல்லுகிற பதில்களால் என் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறையவேதான் செய்யும். ஆதலால் நான் பேசுவதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படவும், சிரிக்கவும், என்னோடு குழந்தையாய் விளையாடவும் மட்டும் செய்தாலே எனக்கு எல்லாம் நிறைவானதாகத் தெரிய ஆரம்பித்துவிடும்.

Covid-19 and pregnancy: What expectant mothers need to know | Parenting  News,The Indian Express

எனக்கு மசக்கையால் பசிக்கவில்லை என்று சொன்னால் எதைக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டேன் என்கிறாய் என்று உடனே கோபப்பட்டுவிட வேண்டாம். உண்மையாகவே இப்போதெல்லாம் என்னால் எதையும் சாப்பிட முடிவதில்லை. நான் எனக்கான மசக்கை உணவுகளைக் கண்டுபிடிக்க நீங்கள்தான் எனக்கு உதவி வேண்டும். காய்கறி கடைக்கோ பழக்கடைக்கோ அழைத்துச் சென்றால் ஒருவேளை என்னால் அவற்றின் வாசம், ருசியை வைத்து எனக்கானவற்றை கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றுகிறது. அதற்காக எப்போதும் என்னுடன் நீங்கள் துணையாய் இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.

என்னை அடிக்கடி வெளியே அழைத்துப் போங்கள். இறுக்கமான நான்கு சுவர்களுக்குள்ளே அடைபட்டு இருப்பது எனக்கு மிகவும் மனஅழுத்தமாய் இருக்கிறது. வயிற்றுக்குள் அடைபட்டிருக்கும் குழந்தைக்கு நான் பார்க்கிற வெளி உலகம்தான் வெளிச்சம் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள். வெளியே சென்று வருகிற போதெல்லாம் உங்களுக்குப் பிடித்ததை, கர்ப்பவதிகள் எதைச் சாப்பிட்டால் நல்லது என்று யாராவது சொல்லி வைத்ததை வாங்கி வராதீர்கள். முதலில் எனக்கு என்ன தேவையென்பதை நீங்கள் புரிந்து கொண்டு அதை எனக்கு வாங்கி வாருங்கள். உண்மையில் வெளியே சென்று வருகிற எல்லா அப்பாக்களிடமும் எதிர்பார்க்கிற ஒரு மகளைப் போலவேதான் நானும் இப்போது உங்களிடம் வெட்கத்தை விட்டு எதிர்பார்க்கிறேன் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.

எனக்கு ஓய்வு தேவைப்படுகிற போதெல்லாம் எனக்கு மிக நெருக்கமாக நீங்கள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதைவிட நான் குழப்பமாகவும் கவலையோடும் இருக்கும் நேரங்களிலெல்லாம்  கட்டாயம் நீங்கள் என்னுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அந்தக் கவலையே எனது எல்லா சந்தோசத்தையும் கரைத்துவிடும் என்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிடுகிறது. அந்த கணத்தில் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாமல் குறைந்தபட்சம் அழைபேசியிலாவது என்னிடம் பேசிவிடுங்கள். அந்த பத்துநிமிட உரையாடல்கள்தான் எனக்கான மருந்து என்பதை ஒருபோதும் நீங்கள் மறவாதிருங்கள்.

குழந்தை மீது அன்பு வையுங்கள். நானும்கூட எல்லையின்றி வைத்திருக்கிறேன். நாம் இருவருமே நம் பிள்ளை மீது நேசமாய் இருந்து நல்லபடியாய் அவர்களை வளர்ப்போம். ஆனால் அதற்காக என் மீதான அன்பும் அரவணைப்பும் குறையும்படியாக ஒருபோதும் நடந்து கொள்ளாதீர்கள். பிள்ளைக்கு நாமிருவரும் இருக்கிறோம். ஆனால் எனக்காக நீங்கள்தான் இருக்கிறீர்கள் என்பதை எப்போதுமே மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

என் தோழிகளை இந்த தருணத்தில் சந்திக்க நேர்ந்தால் நன்றாக இருக்கும் என்றால் எனக்காக தோழிகளிடம் அழைத்துச் செல்லுங்கள். எனது கர்ப்பகாலம் வெறும் ஒன்பது மாதங்கள்தான். அந்தக் குறுகிய கால வசந்தத்தை முழுமையாக அனுபவித்திட உங்களது கரங்கள் எப்போதும் என்னுடன் இணைந்தே இருக்க வேண்டும். இதுவெல்லாம்கூட எனது கோரிக்கையல்ல அன்பே, எனது எதிர்பார்ப்புகள் மட்டுமே.

இவையெல்லாவற்றையும் உங்களிடம் பேசி மனதைக் காயப்படுத்த விரும்பவில்லை என்கிற காரணத்தினாலே எப்போதும் போல இக்கடிதத்தையும் எனது அலங்காரப் பெட்டியினுள் பத்திரமாய் வைத்துக் கொள்கிறேன். அன்பே, நீங்கள் சொல்வதைப் போலவே நானும் உங்களைவிட அதீத அன்பை வைத்திருக்கிறேன் என்பதை ஒருகாலம் நீங்கள் புரிந்து கொள்ளக்கூடும் என்கிற நம்பிக்கையின்பால் இக்கடித்ததை இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

உங்கள் அன்பிற்குப் பாத்திரமானவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *