ஆரோக்கியம் என்பது நமது உடல் நலம் மற்றும் மனநலம் இரண்டையும் நல்லபடியாகப் பார்த்துக் கொள்வதில் தானே இருக்கிறது. ஆனால் நமது காலில் அடிபட்டால், சளி பிடித்துவிட்டால், கால் வலி வந்துவிட்டால் என்று எப்படியேனும் உடம்பில் தெரிகிற சின்ன சின்ன மாற்றங்களுக்கெல்லாம் தருகிற முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் நமது மூளைக்குக் கொடுப்பதில்லையே.
தனிமை, விரக்தி, சோர்வு, எரிச்சல், கோபம், வெறுப்பு இப்படியாக மூளை தனது உணர்வினை வெளிப்படுத்தும் போது மூளையின் நலனும்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தானே அர்த்தமாகிறது. ஆனால் அப்போதும்கூட மூளை பேசுவதை நாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்பதில்லை. இத்தகைய உணர்வுகளெல்லாம் நமக்கு சர்வ சாதாரணமாகவே வாழ்க்கையில் வந்து போவதால் அதைப்பற்றியெல்லாம் நாம் ஒன்றும் பெரியதாக அலட்டியும் கொள்வதில்லை.
இத்தகைய உணர்வுகளையெல்லாம் நாம் கண்டும் காணாமலும் போகிற போதுதான் அதுவே மனஅழுத்தமாக, மனநோயாக மாறிவிடுகிறது. இப்படி சாதுவான, பவ்வியமான, இராட்சதத்தனமான பல்வேறு குணங்களும்கூட மூளைக்கு உண்டு. அதை நாம் தான் புரிந்து கொள்வதில்லை. ஆனாலும் இப்படியான மனரீதியான பிரச்சனைகளுக்குச் சிகிச்சையென்பதெல்லாம் மனம் விட்டுப் பேசுவதும் பரஸ்பரமாக அன்பைப் பரிமாறிக் கொள்வதும்தான். ஆனால் அதைத்தான் நாம் ஒருபோதும் செய்வதில்லையே.

இப்படித்தான் நாம் என்றுமே உடலில் காட்டும் அக்கறையில் மனதில் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிக் கவனம் கொள்வதில்லை. ‘சுகர் வந்தால் பிரஷர் வந்துவிடும்; பிரஷர் வந்தால் சுகர் வந்துவிடும்’ என்று தெரிந்து வைத்திருக்கும் நமக்கு ‘உடம்பு சரியில்லாமல் போனால் மனமும் சரியில்லாமல் போகும்; மனநிலை பாதிக்கப்பட்டால் உடல்நிலையும் பாதிக்கப்படும்’ என்று தெரிவதில்லை.
எந்நேரமும் குமட்டியபடி வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிற கர்ப்பவதியின் மசக்கைக்கு அவளின் மனநிலையில் ஏற்படுகின்ற மாற்றமும்கூட ஒரு காரணமென மருத்துவ அறிவியல் சொல்கிறது. இன்று மகப்பேறு சிகிச்சைக்காக மருத்துவமனை செல்கிற கர்ப்பிணிப் பெண்களில் எத்தனை பேர் மன ஆரோக்கியத்திற்காகவென்று ஆலோசனையையும் சிகிச்சையையும் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதோ ஒரு கேள்விக்குறிதான். ஆனாலும் இத்தகைய மனரீதியான மசக்கைக்கும்கூட சிகிச்சையென்பது பரஸ்பரமாக அன்பைப் பரிமாறிக் கொள்வது தானே தவிர பெரியதாக வேறொன்றுமில்லை.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவரது கணவர்களுக்குக் கர்ப்பகாலம் பற்றிய விழிப்புணர்வு கொடுப்பதற்கும், ஊட்டச்சத்துகளை எடுத்துக் கொள்ளும் விதம், சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம், பால்வினை நோய்கள், தாம்பத்தியம் மற்றும் குடும்பக் கட்டுப்பாடு ஆகிய கர்ப்பகாலம் தொடர்பான அனைத்து விழிப்புணர்வுகளையும் அளிப்பதற்காகத் தனியாகவே ஆலோசகர்கள் இருப்பார்கள். கர்ப்பிணிகள் மனம் விட்டுப் பேசுவதற்கென்றே நிறைய நேரம் ஒதுக்கி மனக்குழப்பங்களைத் தீர்க்க சரியான வழிமுறைகளை அவர்கள் தெரியப்படுத்துவார்கள்.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் அதற்கென தனிநபர் என்றில்லாமல் கர்ப்பிணிகளுக்கு அந்தந்த மருத்துவர்களும், செவிலியர்களுமே ஆலோசனைகளைத் தருகிறார்கள். அதுவும்கூட போதுமானதாக இருப்பதில்லை. தினசரி பரிசோதனைக்கு வரும் அத்தனை கர்ப்பிணிகளுடனும் மனம் விட்டுப் பேச மகப்பேறு மருத்துவர்களுக்கும் நேரம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும்கூட தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் அங்குப் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான இன்னுமே கூடுதலான நேரத்தை ஒதுக்கித்தர வேண்டும்.
கர்ப்பகாலங்களில் கருத்தரித்த பெண்ணிற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களான வயிறு பெரியதாகுதல், உடல் பருமனாகுதல், முகத்தில் பரு முளைத்தல், அடிவயிற்றின் தோல் பகுதியில் தழும்பு உருவாதல் என்று நம் கண்களுக்குத் தெரிகின்ற விசயங்களாகப் பார்த்துக் கவலைப்படுகிறோம். ஆனால் கர்ப்ப காலங்களில் சுரக்கின்ற ஹோர்மோன்களால் கர்ப்பிணிகளின் மனநிலையில் ஏற்படுகின்ற மாற்றங்களைப் பற்றி நாம் கொஞ்சமும் நினைத்துப் பார்ப்பதில்லை.
“மாதா மாதம் வரவேண்டிய மாதவிடாய் ஆகவேண்டிய நாளாகியும் இன்னும் வரவில்லையே! ஒருவேளை நான் கருத்தரித்துவிட்டேனா?” என்று நாற்பது, நாற்பத்தைந்து நாட்களுக்குப் பிறகுதானே கர்ப்பமாக இருப்பதைப் பற்றியே நீங்கள் சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். ஆனால் அதற்கு முன்பாகவே அதாவது கருத்தரித்த இருபதாவது நாளின் அருகாமையிலேயே உங்களது சுட்டிக் குழந்தையின் இதயமும், மூளையும் உருவாகிவிடுகிறது. அதற்கு அடுத்த வாரத்திலேயே இதயம் துடிக்கவும் ஆரம்பித்துவிடுகிறது. இப்படி உங்களது குழந்தையின் மூளையும், இதயமும் சீக்கிரமாக உருவாகி வேலை செய்யத் துவங்கினால் தானே நீங்கள் மசக்கையாக இருப்பதே உங்களுக்குத் தெரியவரும்! என்ன, இது புதிராக இருக்கிறதல்லவா?
![]()
ஆம், நீங்கள் கருத்தரித்த நாளிலிருந்து மூன்றாவது வாரத்திலேயே குழந்தையின் இதயம் உருவாகிவிடுகிறது. இன்று கல்லூரி இளைஞர்கள் அம்பு விட்டபடி வரையும் இதயத்தைப் போலல்லாமல் அது ஓரளவிற்கு இரசிக்கக்கூடியதாக, குழந்தை வளருவதற்குத் தேவையான ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும் அளவிற்கு முதிர்ச்சி பெற்றதாக உருவாகிவிடுகிறது. ஆனால் இதயம் உருவாகினால் மட்டும் போதுமா? அவை துடிக்க வேண்டாமா? அப்படியே துடித்தாலும் தாறுமாறாகத் துடித்துவிட்டால், என்ன செய்வது?
இன்றைய காலத்து இளைஞர்கள் காதலித்துவிட்டு அதைக் காதலியிடம் சொல்லப்போகும் போது இதயம் தாறுமாறாகத் துடிக்குமே! அப்பப்பா!! இதயமே கழன்று வெளியில் வந்து விழுந்துவிடுவது போலிருக்கும். காதலிப்பவர்களுக்காகவே உதவி செய்வதற்கென்று சில அருமையான நண்பர்கள் இருப்பார்களல்லவா. அது போலத்தான் குழந்தையின் இதயத்தின் துடிப்பைக் கட்டுப்படுத்தி, ஒரே சீரான சங்கீதமாகத் துடிக்க வைக்க உதவுவதற்காகவும் கூடவே மூளையாகிய நண்பனும் மூன்றாவது வாரத்திலேயே வளர்ந்துவிடுகிறது. அத்தகைய மூளையின் உதவியால்தான் உங்கள் சுட்டிக் குழந்தையின் இருதயமும் நிமிடத்திற்கு சீராக 140 முதல் 160 வரை துடிக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
“அம்மாடியோவ்! இதயம் இவ்வளவு வேகமாவா துடிக்குது?” என்று ஆச்சரியப்படுவதில் ஒன்றுமே இல்லை. பெரியவர்களாக இருக்கிற உங்களுக்கு வேண்டுமானால் சாதாரணமாக நிமிடத்திற்கு 60 முதல் 100க்குள் சராசரியாக இதயம் துடிக்கலாம். ஆனால் கருவாக இருந்து வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தைக்குத்தான் அதிகமான போஷாக்கு தேவைப்படுமே! அத்தகைய போஷாக்கே தொப்புள்கொடி வழியே குழந்தைக்குப் பாய்ந்தோடுகிற அம்மாவின் இரத்தம் தானே! அப்படிப்பட்ட இரத்தத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத்தான் குழந்தையின் இதயமானது இப்படி வேகமாகத் துடிக்கிறது.
கருவிலே இதயமும், மூளையும் உருவாகி அவை வேலை செய்ய ஆரம்பிக்கும் வேளையில் தான் கர்ப்பவதியான உங்களுக்கு மசக்கையே ஆரம்பிக்கும். அதாவது சிசுவின் உடம்புக்குள் ரத்தம் பாய்ந்து செல்வதால் அப்போது தான் உங்களது ரத்தமும் சிசுவினுடைய ரத்தமும் தொப்புள்கொடி வழியாக நஞ்சுப் பகுதியில் சந்திக்கிறது. கருத்தரித்த மூன்றாவது அல்லது நான்காவது வாரம் வரை எதுவுமே நடக்காதது போலிருக்கும் உங்களது உடம்போ அப்போதுதான் சுருக்கென்று முள் குத்தியதைப்போல “இரத்தத்துல என்னமோ நடக்குது. ஆனா என்னான்னு தெரியலையே?” என்று குழம்பிக் கொண்டிருக்கும். அத்தகைய குழப்பம்தான் மசக்கையே!
வயித்துல இன்னும் புள்ள பூச்சி ஏதும் உண்டாகலையா! என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பதைப் போல, உடம்பும்கூட தனக்குள்ளேயும், எதாவது பூச்சி கீச்சி வளருதோ? என நினைத்துக் கொண்டு அலர்ஜியை உண்டாக்கும். அந்த அலர்ஜிதான் குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல் என்கிற மசக்கை!
![]()
ஆனால் இந்தக் குழப்பம் மூன்றிலிருந்து நான்காவது வாரத்தில் ஆரம்பித்து சிசுவின் பன்னிரெண்டிலிருந்து பதினான்காவது வாரத்திலேயே ஒருவழியாகப் புரியத் துவங்கிவிடுகிறது. “ஆகா, நம் பிள்ளைதான் வயிற்றில் வளர்கிறது போலிருக்கே!” என்று தாயவளது உடம்பிற்குத் தெளிவாக ஆரம்பிக்கிறது. அப்படித் தெளிந்தவுடனே அவளது உடம்பு காட்டும் அக்கறை இருக்கிறதே, அடேயப்பா!
உடம்பு உடனே பூப்போல மென்மையாகிவிடுகிறது. தசைகளும் சவ்வுகளும் தளர்வடைகின்றன. இடுப்பெலும்பு மெல்ல விரிவடைகிறது. குழந்தையும் நன்கு பெரியதாக வளருவதற்கு ஏற்ப இடவசதியைக் கர்ப்பப்பைக்குள்ளே செய்து கொடுக்கிறது. இப்படியான வசதிகளையெல்லாம் கர்ப்பவதியின் உடம்போ ஒவ்வொன்றையுமே பார்த்துப் பார்த்து செய்ய ஆரம்பிக்கிறது. முண்ணூறு கிராம் எடையுடைய கர்ப்பப்பையானது மூணரை கிலோ எடையுடைய குழந்தைகளைத் தாங்கி வளர்ப்பதற்காகத் தன்னையே கர்ப்ப காலத்திலே தயார்படுத்திக் கொள்கிறதென்றால் அதுவொன்றும் சும்மாயில்லையே!
ஆனாலும் கர்ப்பவதியின் மூளை இருக்கிறதே! அது இன்னுமே அடம் பிடிக்கிறது. உடம்பு ஏற்றுக்கொண்டாலும் அவளது மனமோ இன்னும் குழப்பத்திலிருந்து மீளவில்லை. “அய்யய்யோ! எனக்கு குமட்டிக்கிட்டு வருது! ச்சீ.. ச்சீ.. எனக்கு இது பிடிக்கல!” என்று எதைப் பார்த்தாலும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றாள். உடம்பு புரிந்து கொண்ட விசயத்தை அவளது மனமோ புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறது.

நம் குழந்தைதான் வயிற்றில் வளருகிறது என்று அவளது மனதில் முழுமையாகப் பதிந்து விளங்கிக் கொள்கிற வரை இத்தகைய மனப்போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனால் கர்ப்பிணிகள் சீக்கிரமாக மசக்கையிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிக்கிறார்கள். பொரும்பாலான கர்ப்பவதிகளுக்கு மனம் தான் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. மனபலம் தான் உடலின் ஆரோக்கியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய காலமாகத் தான் மசக்கைக்கான காலமும் இருக்கிறது.
அன்பிற்கினிய கர்ப்பவதிகளே! உங்களது உடம்பானது நான்காவது வாரத்தில் மசக்கைக்கு உள்ளாகி பின்பு, நம் குழந்தை தானே! என்று தெரிந்ததிலிருந்து மசக்கையிடமிருந்து மீண்டு வந்து உடனே குழந்தையை நன்றாக வளர்த்தெடுப்பதற்காக எப்படியெல்லாம் பாடுபடுகிறது என்பதைப் பாருங்கள். அதேபோல நீங்களுமே நம் வயிற்றில் வளருகிற குழந்தையால் தான் இத்தகைய மசக்கையே வருகிறது என்பதைப் பரிபூரணமாக உணர்ந்து அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இத்தகைய அசௌகரியமெல்லாம் நம் வயிற்றில் வளருகிற பிள்ளையினால்தான் என்பதைப் புரிந்து கொண்டால் மசக்கையொன்றும் பெரிய அவஸ்தையாய் உங்களுக்கு இருக்கப் போவதில்லை.
உங்களது உடம்பும் உள்ளமும் முழுவதுமாக பிள்ளையின் நினைப்பே நிறைந்து இருக்கும் பட்சத்தில் எந்த மசக்கையும் உங்களையும், உங்கள் குழந்தையையும் ஒருபோதும் பாதித்துவிட முடியாது. இதனை மனதில் வைத்துக் கொண்டால் உங்களது கர்ப்பகாலம் முழுவதுமே தித்திக்கும் கரும்பாக இனித்துக் கொண்டேதான் இருக்கும்.
தொடர் 1 – ஐ வாசிக்க..
மசக்கை: கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர் – உணவும் பசியும் | டாக்டர் இடங்கர் பாவலன்

