கைத்தட்டி
விளக்கணைத்து
கொரானாவுக்கு
வைத்தியம் பார்த்த
குஜராத் கோமான்
கொடிய வரிகளால்
குடிமக்களின்
கோவணத்தையும் உருவிவிட்டு
வீட்டுக்கு வீடு
தேசியக் கொடியை
ஏற்றச் சொல்கிறார்கள்..
கோட்சேக்களுக்கு
குரு வணக்கம் செலுத்திவிட்டு
காந்தியர்களின்
தேகத்தைக் கீறி
தேசப்பற்றைச் சோதிக்கிறார்.
நூற்றிநாற்பது
கோடி பேரின் உடைமையை
நாலு பேருக்கு உரிமையாகிவிட
நாடுசுற்றும் தரகரவர்
அவருக்கு
முன்னோடிகள் அவருக்கு
சொன்னதெல்லாம்
நாக்பூர் தத்துவங்கள்
நம் முன்னோர்கள்
நமக்கு சொன்னதெல்லாம்
நாடுகாக்கும் மனித சமத்துவங்கள்
முன்னூறு ஆண்டு விடுதலைப் போரில்
அவர்களின்
முன்னோடி முகங்கள் எதுவுமில்லை.
எழுபது ஆண்டுகளில்
அவர்கள் கூடாரங்களில்
தாயின் மணிக்கொடி ஏற்றியது மில்லை
தினம் தினம் நம்மை வதைத்து
சுதந்திர தினத்தில்
தந்திரமாய்த் தேசக் கொடியை ஏற்றச்சொல்கிறார்கள்
தேசத்தை விற்றதை மறக்க
தேசியக் கொடியை விற்கிறார்கள்
விலைவாசியை ஏற்றத்தை மறைக்க
வீட்டு வாசலில் கொடியேற்றச் சொல்கிறார்கள்.
முக மூடி தரிப்பது
அவர்களுக்குப் புதிதில்லை
இப்போது
சுதந்திர தின
தேசிய கொடி முகமூடி அணிந்திருக்கிறார்கள்
மதவெறிக்கு மாறுவேடமிட்டு
மனித வேட்டையாடத் துடிக்கிறார்கள்.
– பிச்சுமணி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.