மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி….

பகுதி 2

விவசாயிகள், தொழிலாளிகள், புரட்சிகள், பாதுகாப்பரண்கள் – இவை அனைத்துமே கிளிம்மின் வாழ்நிலைக்கு ஒவ்வாதவை;    இவற்றின் ஒட்டு மொத்த பிம்பமாய் அல்லது உருவகமாய் திகழ முற்படும் மார்க்சிஸ்டுகள் குறித்து   அவன் தன் அந்தரங்கத்தில் ஏளனமும் ஒரு வகை வெறுப்பும் கலந்த உணர்வினைக் கொண்டவனாய் இருக்கின்றான்.

ஒரு பாத்திரம்,மார்க்சிஸ்டுகள் குறித்து   தன் கருத்தைக் கூறும்:

“அவர்களிடம் நீ அறத்தைப் பற்றியோ அல்லது வாய்மைகள் பொறுத்தோ கதைப்பது என்பது உனது நேரத்தை வீணடிக்கும் செயல்தான். அறம் என்ற, அப்படியான ஒன்று அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியே இருந்தாலும் கூட அது ‘அவர்களது’ அறங்களாக அல்லது அவர்களது‘வாய்மைகளாக’ மாத்திரமே இருக்கின்றது. அவர்கள் நம்புகிறார்கள் : உன்னை விட, என்னை விட அவர்களிடம் அதிகளவில் உண்மையான மனித நேயம் இருப்பதாக… ஒரு ‘தனி மனிதனைப் பற்றி   அவர்களிடம் நீ கதைப்பது என்பது உதவாத ஒரு விடயம். நேரத்தை வீணடிப்பது. “மனிதன்”– அது பிற்பாடு என்கிறார்கள் . ‘ முதலில், சுயமான முளைத்தலுக்காய் மண் பண்படுத்தப்படட்டும். பின்னரே ‘மனிதன்’! நீ கூறும் ‘மனிதன்’ என்பவன் யார்? அவன் எங்கிருக்கிறான்’  என்று கேட்கிறார்கள்.   இவர்கள்   வெற்று அடிமைகள். மண்டியிட்டு, அல்லது நன்றாய் நீட்டி நெடுஞ்சாண் கிடையாய்   வணங்கத் தெரிந்த அடிமைகள், அவ்வளவே”

   கிளிம்மின் மனசோ  வேறு வகையில் தர்க்கிக்கின்றது. லட்சோப லட்ச மக்கள் இதே ஆதிக்க சக்திகளின் முன் வெறுமனே தம்மைச் சமர்ப்பித்து, மண்டியிடத்தானே செய்கிறார்கள் என்பதே அது.

இருந்தும் அவ்வப்போது அவனது நினைவில் நெருடும் இன்னும் ஒரு விடயம்:  ”சரி. அப்படி என்றால் இந்த மக்கள்போராளிகள் எனப்படுவோர் யார்? இவர்கள் வெறும் கற்பனைப் பிரியர்களா – அல்லது நூல்கள் ,வெறும்,அச்சடித்த காகிதங்கள்     இவர்களுக்கு  இந்தளவிற்கு திராணியை தருகின்றதா…? பாதுகாப்பு அரண்கள், கட்டுகிறார்களாம்… கட்டினால் என்ன? சுடத்தானே செய்வார்கள்? “

“ இரண்டு மூன்று டசன் மனிதர்கள்…ம்… வரலாற்றை தோற்றுவிக்கின்றார்களாம்!”– அவன் மனம் தொடர்ந்து ஏளனத்துடன் எக்காளமிடுகிறது.  

Life of Klim Samgin (Zhizn Klima Samgina), The – Internet Movie …

முதலாவது எதிர்ப்பலைகள்  நசுக்கப்பட்டு  , பாதுகாப்பரண்  ராணுவத்தினரால் நெருப்பிட்டு வீதியிலிருந்து அகற்றப்படுகின்றது.அதில் கெட்டிப்பட்டிருந்த உறைபனி உருகி எரிந்த சாம்பலுடன் கலந்து, தெருவழியாக மெதுவாக ஓடும்.   தன் மாடியில் இருந்து ரசித்துப் பார்க்கும் கிளிம்  தனக்குள் முணுமுணுப்பான்: “பனிமூட்டத்தில், இதுவும் ஓர் ஓவியத்தைப் போல…”

இப்படியாய் அந்நியப்பட்டு தன்னைச் சுற்றி  ஓர் பாதுகாப்பு வேலியை அமைத்துவிடும் அவன், தனக்குள்ளாகவே ஓர் தீர்மானம் கொள்கிறான் ;  “உயரத்தில் கயிற்றில் நடப்பது போல் நடக்கின்றேன் நான்.  உண்மைதான் – இந்த நாளாந்த நிகழ்வுகள் , நடைமுறைகள் யாவும் என் வாழ்க்கைக்கு எவ்வகையிலும் ஒவ்வாதவை… ஊறு விளைவிப்பவை…”  .இருந்தும் இதுவரை, அதாவது  பாதுகாப்பு அரண்கள் ராணுவத்தினரால் அடித்து நொறுக்கி அகற்றப்படும் வரை -இவன் இப்பாதுகாப்பரணின் சூத்திரதாரி என அந்நகரின் சில வட்டங்களிலேயும்,‘எமது தோழர்’ என்று இன்னும் சில வட்டங்களிலேயும் மரியாதையுடன் நினைக்கப்பட்டவன் தான் இவன். 

 இந்தக் கணங்களில் கூட, அவன் தனக்குள்ளாகவே அந்தரங்கமாய் வன்மத்துடன் முணு முணுத்துக் கொள்ளும் பாடல்: “பொறு…பொறு…நான் என் பாடலைப் பாடும் வரை “

ஒரு வகையில் பார்த்தால் கிளிம்மின்அத்தகைய ஓர் பாடலை நோக்கிய – அல்லது அப்பாடலின் உருவாக்கத்தை நோக்கிய பயணமாக கூட இந்நாவல் கட்டமைக்கப்படுகிறது .அதாவது,‘கயிற்றின் மேல் நடப்பது’ அல்லது ‘தன் பாடலை’ பாடுவதற்கான சரியான ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்து நிற்பது –அல்லது இவை  குறித்த கணிசமான பிரக்ஞையை தன்னுள் உள்ளடக்கிக் கொள்வது என்பவனாகச் –  கிளிம் கால நகர்வில் நடக்க தொடங்குகிறான்.

இத்தகைய ஒரு பிரக்ஞையின் தவிர்க்க முடியாத – அல்லது தருக்க ரீதியான மறுபக்கமாக – அப்பிரக்ஞை மேற்கூறியவாறு ஓர் தத்துவத்தை தனக்காக தேடுகின்றது . தனது இருப்பை நியாயப்படுத்திக் கொள்ளவும் அல்லது தனது இத்தகைய பிரக்ஞைக்கான ஓர் பலத்தை, ஓர் நம்பிக்கையை தேடிக் கொள்ளவுமான  இது நாவலின் சித்தரிப்புகளுக்கு   பலம் சேர்க்கின்றது. 

இது தொடர்பில் சிந்தனையில் ஆழும் கிளிமுக்கு சில சமயங்களில் தட்டுப்படும்:  அவன்  வரலாற்று முக்கியத்துவம் கொண்ட, சரித்திரப் பூர்வமான, தனித்துவமான, தத்துவச் செழுமை மிக்க ஏதோ ஒரு அதிமுக்கிய உண்மையை எட்டிப்பிடித்து விட்டாற் போல. இந்த உண்மையானது, இதுவரை தன்னைப் பற்றிப் பிடித்திருக்கும்  அத்தனை சுற்றுச் சூழல் முரண்களில் இருந்தும்,தன்னை சுற்றிக் குவிந்திருக்கும் எண்ணற்ற நூல்களின் தத்துவங்கள்,கருத்தாக்கங்கள் என்பவற்றில் இருந்தும் தன்னைக் காப்பாற்றி விடுவித்து,  தன்னைப் பாதுகாப்பாய் நிலைநிறுத்திவிடும் என்று கணிக்கின்றான் .   

இருந்தும் ஏதோ ஒரு சக்தி, அத்தகைய அவனது இத்தகைய சிந்தனைத் தொடரை அவனளவில் பூரணப்படுத்தி – அவ்வுண்மையை சென்றடைய முடியாமல் அவனைத் தடுத்து விடுகிறது. அந்த சிந்தனைச் சங்கிலியின் இறுதிக் கண்ணி வரை, அவனால் சிந்தித்துத்தெளிந்து அதை முழுமையாக்க முடியாமல் போகின்றது. ஏதோ ஒன்று அவனை அப்படி முடியாமல் செய்து விடுகின்றது – அல்லது ஒடுக்கி விடுகின்றது.

எந்த ஒரு தத்துவத்தை அவன் இப்படியாக அடைந்து விடப் பிரயத்தனப் படுகின்றான்? அப்படி இவனைக் காப்பாற்றி விடக்கூடிய ஒரு தத்துவம் எங்கே வாழ்கின்றது? எந்த ஒரு சக்தி அவனது சிந்தனைச் சங்கிலியை முழுமையாக்க இயலாமல் தடை செய்கிறது? கிளிம்மின் தத்துவத் தேடல் முகம் கொடுக்கும் சிக்கல்களில் இதுவும் ஒன்றாகின்றது.

இத்தகைய ஓர் சூழ்நிலையிலேயே அவன் குமோவ் என்ற ஓர் பாத்திரத்தையும் சந்திக்க நேர்கிறது.

குமோவ், பரிபூரண சுதந்திரத்தை – அல்லது பரிபூரண விடுதலையை நாடுபவனாக இருக்கின்றான். கடவுளுக்கும் அப்பால் – அறிவு, தர்க்கம் – இவை இரண்டுக்கும் அப்பால் – தனது அக உலகின் அல்லது அக மனதின் தர்க்கத்திற்கு இசைவாக – அவனது தேடல் கட்டமைக்கப்படுகிறது.மனிதனானவன் முதலில் தன்னைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னரே மற்றது. இதற்கு தேவைப்படுவது முதலில் ஒரு பிரபஞ்சப் பார்வையே என்று முடிவு செய்கிறான்.   மற்றவை அனைத்தும் – முக்கியமாக  MICROS0M             என்பவை அனைத்தும்,   அவனது  அதாவது இந்த மனிதனது கண்டுப்பிடிப்புகளே. மனிதன்  MACROSOM பார்வையை கொண்டிருக்கும் போதே அவன் தன்னையும்,தன் பரிபூரண விடுதலையையும் ஒன்று சேரக் கண்டுணர முடியும் என்பது அவனது முடிவு. குமோவ் அபிப்பிராயப்படக் கூடிய இப்பிரபஞ்ச விடுதலை அல்லது பிரபஞ்சப் பேரொளியின் தரிசனம் என்பது எமது தமிழ் இலக்கிய உலகில் நெடுங்காலமாய் வாசம் செய்து வரும் ஒரு கீற்றுதான். 

கிளிம்முக்கு இவ் விவாதங்கள் குறைபாடுடையனவையாகத் தோன்றினாலும்,   கிளிம்மினது  அப்போதைய உணர்வு நிலையுடன் ஒத்துப்போவதை கிளிம் இனம் கண்டு கொள்கிறான்.இருந்தும் கிளிம் கோரக்கூடிய தத்துவம் அல்லது அரசியல் இதனுடன்  மட்டுப்பட்ட ஒன்றல்ல என்பதனையும் மறுபுறமாய்த்  தெளிவாகவே புரிந்து கொள்கிறான்.

ஆக கேள்வி:  யார் இந்த கிளிம்? 

அவன் தேடும், அல்லது அவனை சாத்தியப்படுத்தக் கூடிய அந்த தத்துவம் தான் என்ன? அவனது பாடல் யாது? 

பகுதி 3

 “உன்னைக் காதலிக்கின்றேன் – அனைத்தையுமே அப்படியே அறிந்து வைத்திருந்தும் ஒன்றுமே பேசாமல், மௌனம் காக்கின்றாயே – அதற்காய்…”

உண்மை தான். இவ்வளவு அடக்கம் ஒருவனில் அடங்குமெனில், எந்தப் பெண்தான் காதல் வசப்படாமல் இருப்பாள்! 

கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, ரசிய மாகாணம் ஒன்றில் குடியேறிய பின், அவன் மூன்று முக்கிய மனிதர்களைச் சந்திக்கின்றான்.

அவர்களில் ஒருத்தி, கிளிம்மிடம் கூறும் கூற்றே மேலே காணப்படுகின்றது.இவள் ஒரு பாடகி. ஏற்கனவே மாஸ்கோவில், கிளிம்முக்கு ஓரளவு அறிமுகமாகி இருந்தவள், அவர்களின் பரஸ்பர நண்பர்களின் சுற்று வட்டத்திற் கூடாக நடமாடியவள்.

Ухарь-купец” – из фильма “Жизнь Клима Самгина”—“Ukhar merchant …

வித்தியாசமான ஒரு பெண்ணாக இவளை நாவலில் உலவ விட்டிருக்கின்றார் கார்க்கி.

“எனக்கு பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் இஷ்டமில்லை…”

“என்னைப் பொறுத்தவரை, மனிதன் என்பவன், அன்பு செலுத்திக் கொண்டிருக்கும் வரை தான் வாழ்கின்றான். பிறிதொருவன் மீது அவனால் அன்பு செலுத்த முடியாது போய் விட்டால், அவன் இருப்பதன் அர்த்தம் தான் என்ன…?”

அவளது தர்க்கங்கள் இப்படியாகத்தான் இருக்கின்றது.

கிளிம்மின் புலமைத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு, அவனது மௌனத்தால் வசீகரிக்கப்பட்டு விடும் இவள், கிட்டத்தட்ட கிளிம்மின் அடிமை போன்றே இருப்பதில் பெருமை கொள்கின்றாள் – ஆரம்ப கட்டத்தில். போதாதற்கு தனது அந்தரங்கங்களை எல்லாம் கிளிம்மிடம் கொட்டித் தீர்ப்பதில்   ஆனந்தம் கொள்கின்றாள்.  

“என் தந்தை ஒரு சீட்டுப் பிரியர். அவர் தோற்கும் போதெல்லாம் என் தாயாரை அழைத்து, பாலில் தண்ணீர் கலக்கச் சொல்லுவார். எங்களிடம் இரண்டு பசுக்கள் இருந்தன. அம்மா பால் விற்பவர். நேர்மை. அனைவரும் அம்மாவை மனதார விரும்பினர். மரியாதை செலுத்தினர். அவள் தண்ணீரைக் கலக்கும் போது எப்படியாய் அழுதாள் தெரியுமா ? என் அம்மா எவ்வளவு, எவ்வளவு துன்புற்றுக் கலங்கினாள் என்பதை உங்களால் அறிய முடிந்தால்…”

“பாடும் போது, நான் என்னை மறந்து போகின்றேன். நன்றாகப் பாட முடியாது போனால் அப்படியே வெட்கித் தலை குனிந்து செல்கின்றேன்…”

“பாடும் போது… என் கால்களை என்னால் உணர முடியாது போகும். கால்கள் இருப்பதே எனக்கு தெரியாது…நினைத்துப் பார்… தந்தை தச்சு வேலை. தாய் பால் விற்பவள்…. திடீரென நான் பாடுகிறேன்… முழுச் சபையுமே மயங்கித் தள்ளாடுகிறது… நினைத்துப் பார்…”

ஆனால் இந்த அபலையின் இப்படியாய்ப் பொங்கி வழியும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அனைத்துமே, கிளிம்மைத் தொடுவதாக இல்லை. அவை அனைத்தும் அப்படி அப்படியே அவனது உலர்ந்த, உணர்வற்ற தோல்களில் பட்டுப் பட்டுத் தெறித்து முறிந்து விழுகின்றன – உலர்ந்த, காய்ந்த சருகுகளாய்.

இத்தகைய  சூழலில் விடயங்களை மேலும் மோசமாக்க அவன், அவள் மன்றாடிக் கேட்டுக் கொண்டதற்கிணங்க போனால் போகிறதென்று, அவள் பாடும் மண்டபத்திற்குள் நுழைந்து விடுகிறான், அவள் பாடும் பாட்டைக் கேட்க, பார்க்க.மக்கள் ஆரவாரிக்கின்றார்கள். ரோஜா மலர்களை விட்டெறிகின்றனர். அள்ளி அள்ளிக் கட்டோடு அவள் மேல் கூடை கூடையாய் வீசி எறிகின்றனர்- வெறி கொண்டது போல்!. விக்கித்துப் போகிறான் கிளிம், சில நொடிகளில்.அவன் எதிர்பாராதது இது. சிறிது நேரத்தில் அவனது திகைப்பு, ஒரு   கோபமாக, ஒரு   வெறுப்பாக, மெது மெதுவாக மாறத் தொடங்குகிறது அவனுள். 

“வெறும் பால் விற்பவள்…” 

“என் படுக்கையில் எப்படிக் கிடந்தவள் இவள்”, 

-என அவன் மனம் அவள் படுக்கையில் கிடந்த கிடப்பை காட்சிப் படுத்த முனைகின்றது. பாட்டு முடிகின்றது. வெறுமையோடு அறைக்கு திரும்பும் கிளிம் காத்திருக்கிறான்.   அவளோ அனைவருடனும் இருந்து விடை பெற்று சற்றுச் சுணங்கியே வந்து சேர்கின்றாள். கிளிம்மை பார்க்கும் ஆர்வத்துடனும் மிகுந்த குதூகலத்துடனும் அறையை அடைகிறாள்.அவளது அந்தக் குதூகல மனநிலையை சிதைக்கவோ என்னவோ கிளிம், தான் ரயிலில் வரும் போது சந்திக்க நேர்ந்த, ஒரு புரட்சிகாரன் சம்பந்தப்பட்ட, திகில் காட்சியை கூறத் தொடங்குகிறான்.

தன் கண் முன்னால் அப்புரட்சிக்காரன், ஒரு படையினனின் துப்பாக்கியை பறித்தெடுத்துக் கொண்டு ஓடிய விதம் பற்றி அவளிடம் விரிவாக விவரிக்க தொடங்குகிறான் கிளிம். மிகுந்த வெறுப்புடன், அப்புரட்சியாளன்  பற்றி இப்படிக் கூறும் கதையை, மிகுந்த ஆர்வத்துடன் உன்னிப்பாய் கேட்கும் இவள், “அப்படியா… அப்படியா செய்தான் அவன்? உண்மையாகவா? அப்பப்பா, எவ்வளவு தைரியசாலி? எவ்வளவு திறம் படைத்த ஆளாய் இருக்கின்றான் அவன்…?”  என்று மறுதலையாக அதிசயித்து அவனைக் கொண்டாடத் துணிகின்றாள்.   

இவளின் இத்தகைய எதிர்வினையைக் காணும் கிளிம்,   இவளிடம் மேலும் வெறுப்புத் தட்ட, அவளது குதூகல சிந்தையை அப்படியே நைத்துத் தேய்க்க வேண்டுமென்றே பின்வரும் வார்த்தைகளை உமிழ்வான்: “அவன் கிடக்கட்டும் ஒரு புறமாய்… ஆனால் உனது எதிர்காலத்தை நினைத்தால் தான்…” என்று ஒரு விதமாய் இழுப்பான் . 

“ஏன்… என் எதிர்காலத்துக்கென்ன…” என இப்போது திடுக்கிடும் அவளிடம் தொடர்ந்து வெகு சாவதானமாய் கூறுவான் கிளிம்: “ஓ.. உனது குரலை எண்ணிப்பார்… மிகவும் மெலிதானது அது… நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்க முடியாதது… மேலும்… பாடகர்களின் கூட்டம் என்பது வெறும் முட்டாள் மனிதர்களால் ஆக்கப்பட்ட ஒன்று… ஏற்கனவே, கெடுக்கப்பட்டு விட்ட ஒரு கூட்டம்தான்… அவர்கள், கூட்டத்தை குஷிப்படுத்தவே பாடுகின்றார்கள்…”

எதிர்பாராத இக்கோரத் தாக்குதலை கேட்க நேரிடும் விக்கித்து போன   அபலை   கூவுவாள்: “ஓ… கிளிம்… கடவுளே… நீயுமா… இப்படி…அட… அவனைப் போல் அல்லவா நீயும் பேசுகின்றாய்…”

“யாரைப்போல… யார் அந்த அவன்?” என கேட்கும் கிளிம் மேலும் சாவதானமாய் தொடர்வான்: “அந்த அவன் அப்படியே பேசியிருந்தாலும் கூட, அவனது கூற்று, அப்படி ஒன்றும் முட்டாள்தனமானதல்லவே…” என அசட்டையாகத் தட்டி விடுவது போல் பேசுவான்  . 

“இல்லை… இல்லை… அவன் முட்டாள் தான் . கேவலமான, அசட்டு முட்டாள் தான் அவன்… அவனிடம் ஒன்றுமே இருக்கவில்லை… அவனிடம் இருந்ததெல்லாம் வெறும் பாழடைந்த வெறுமை தான்… புத்தகங்கள், நூல்கள், படிப்பு, வாசிப்பு…வாசிப்பு…தான்.  இவை தவிர வேறென்ன… அவன் இதயத்தில் அப்படி ஒரு ஓட்டை –அப்படி ஒரு வெறுமை… ஒரு கேவலமான பிச்சைக்காரனைப் போன்றவன்… அவனுக்கு உண்மையில், யாரையுமே மனதாரப் பிடிப்பதில்லை…”

“பூனை,நாய், எதையுமே அவனுக்கு பிடிப்பதில்லை… கேவலமான நாய் அவன். ஒரு சிறு மாட்டின் மூளை அவனுக்கு. என்னைப்பார்… நான் அப்படி வாழ விரும்பியதில்லை… என்றுமே” 

மேலும் சொல்வாள்: “உன்னிடம் சந்தோசம் இருக்கின்றதா? கொடு… அனைவருக்கும் கொடு… கொண்டாடு… பகிர்ந்து கொள்… அனைவருடனும்… அதுதான் வாழ்க்கை… நான் சந்தோசமாகவே இருக்கப் பிரியப்படுகிறேன்.    உண்மை , மனிதர்கள் அப்படி வாழக்கூடாதா, என்ன? வாழலாம். அப்படி வாழலாம்… என்னால் முடியும்…”

Смотреть сериал "Жизнь Клима Самгина" Онлайн. Все серии - eTVnet

கண்ணீர்   பெருக்கெடுத்துப் பொங்கி கன்னங்களின் இருபுறமும் வழிய அவள் குமுறிக் குமுறி கூறுவாள்  .தன்னைவிடவும் ஒரு வகையில் தன் வாழ்வை விடவும் மேலாக நினைக்கும் ஓர் புனிதப் பொருள் காயப்படுத்தப்பட்டு விட்டதை எண்ணி அவள் பதறுகிறாள் போலும்.

ஆனால் கிளிம்முக்கோ, இதனை மேலும் சகிக்க முடியாமல் போகின்றது. கோபத்துடன் கூறுவான்: “நிப்பாட்டு… போதும்… நிறுத்து… உன் பிதற்றலை…”

இப்போது கிளிம்மினுள், வன்மம் கொண்ட ஒரு வகை பாலியல் உணர்வு, மெது மெதுவாக முளைவிடத் தொடங்குகிறது.அவளை உடல் ரீதியாக, பிடித்திழுத்து வளைத்து நைத்து விட வேண்டும் என்ற அவா அவனில் பரவி விரவத் தொடங்குகின்றது. ஆனால் அவளோ, அவன் கைக்கு எட்டாத வண்ணம்,ஒரு மேசையின் பின்னால் ஓடி நின்றுக் கொண்டு கூவுவாள்   “ஆ.. உன் கண்ணைப்பார்… அம்மா… எவ்வளவு வெறுப்பும் கோபமும் வன்மமுமாய்… ஐயோ கடவுளே…ஏன் இப்படி…”

இறுதியில் இருவரும் அன்புடன் பிரிகின்றனர் – ஒருவரை ஒருவர் இனியும் காண முடியாதவாறு…

பிறிதொரு சந்தர்ப்பத்தில், அவள் குறித்து வேறொரு பாத்திரம் கிளிம்மிடம் கூறும்  : “பாடல் என்பது ஒன்று… பாடுவது என்பது மற்றொன்று”  . 

அவள் பேசுவதற்கும் வாழ்வதற்கும் தொடர்பில்லை என்ற பொருளில்.

பகுதி 4

இதேபோல் கிளிம் மாஸ்கோவை விட்டகன்று மாகாணத்தில் குடியேறிய பின் சந்திக்க நேரும் பாத்திரங்களில் மற்றுமொரு முக்கியப் பாத்திரம் – வெலண்டைன். அதி அற்புதமான சித்தரிப்பு எனலாம்.  கலைந்த தலை, அலங்கோலமான உடை, உடல் முழுவதும் தூசி, தும்பு, புறாக்களின் எச்சங்கள் – முகம்   பூசணியைப் போல – கண்களும் பாவமற்று வெறும் கண்ணாடித் துண்டுகளை போல்…

“உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா… ஓ… இங்கே, சுடுகாட்டில் இருக்குமே, அவ்வளவு நிரம்ப மலர்கள்…– கிளிம்மிடம் கூறிக் கொண்டிருப்பான் வெலண்டைன்.

“விடயத்தை பாருங்கள்… என் மனைவி ஓடி விட்டாள், என்னை விட்டு… புறாக்கள் தான் காரணம்… நான் என்ன செய்ய…”

“அவள் ஏதோ ஒரு ஜிம்னேசியத்தில் படித்தவள்தான்… தெரியாதா… பதின்வயது இளம்நங்கைகளை…ஏராளமான காதல் காவியங்களை படித்துக் குவித்திருப்பாள் போலும் – நண்பிகளுடன். எனது பெயரோ,‘வெலண்டைன்’! இது போதாதா – அவள் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட. அதாவது என்னை அவள் காதலித்திருக்க மாட்டாள்… என் பெயரைத்தான் காதலித்திருப்பாள் – ஆனால், பாருங்கள்,‘வெலண்டைன்’ என்ற காந்தர்வ பெயருக்கும் எனக்கும் உள்ள ஒட்டுறவை… அட கடவுளே…”

இப்படியாய் கிளிம்முடன் ஏனோ அவன் மனம் விட்டு பேசத் தொடங்குகிறான் – தனித்து இருப்பதால் போலும்!. பின் அவன்  புறாக்கள் வளர்ப்பது ஏன் என்பதையும் மிக கிரமமாக கிளிமுக்கு எடுத்துரைக்கின்றான். 

“பாருங்கள்… நான், ஒரு அசடு… முட்டாள்… கற்பனை செய்யுங்கள்… தெளிவான நீல வானம்… அதன் கீழே நான்…என் புறாக்களை மேலே பறக்க விடுகிறேன்… அவை வட்டமடித்து வட்டமடித்து உயர, உயர வானில் படிப்படியாக பறந்து ஏறுகின்றன… மேலே… மேலே… அவற்றுடன் என் பாவப்பட்ட ஆத்மாவும் கூடவே சிறகடித்துப் பறக்கின்றது, அவற்றை தொடர்ந்து… விளங்குகிறதா… என் ஆன்மா… இங்கே தான் அந்தப் புள்ளி – அதாவது… என் இதயத்தை வெடிக்க செய்யும், அப்புள்ளி… மயக்கம் கூட வந்துவிடும்…அப்போது ஒரு வகை அச்சம் வேறு எழுகிறது… அவை வராவிட்டால்…திரும்பாவிட்டால்”

“ஆனால், உண்மையில், அவை திரும்பக் கூடாது – திரும்பவே கூடாது என உங்கள் உள் மனம் கூவுகின்றது…”

கிளிம்முக்கு இப்போது அவனில் ஓரளவு அனுதாபம் சுரந்து விடுகின்றது. தொடர்கின்றான் வெலண்டைன்: “அந்த தருணம் மகத்தானது… மதிப்பார்ந்தது…யாருடனும், யாரையும் தொந்தரவு செய்வதில்லை… யாரையும் துணைக்கு அழைப்பதும் இல்லை… அனைத்துச் சிறுமைகளும்,கேடு கெட்ட இழிவுகளும் நாசமாய்ப் போய் ஒழியட்டும்… வாருங்கள், தயவு செய்து மதுவைப் பருகுவோம்…”

 -கிளிம் தனக்குள் நகைத்துக் கொள்வான்: “ஓ…ஒரு அசட்டுத்தனம்…தன் கவித்துவப் புள்ளியை, தன் பரவச தரிசனத்தை எட்டிவிடும் தருணம் இதுவோ…போதும்…”-எண்ணிக் கொள்வான். 

வெலண்டைன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் கூறுவான் கிளிம்மிடம்: “என் மனைவிக்கும் எனக்குமிடையிலான முறுகலுக்கே காரணம் புறா தான்… அவை, அவளது தன்மானத்தை தொட்டுவிட்டன…கோழிகளோடு, அவள் ஒரு வகையில் சமாதானம் செய்து கொண்டிருப்பாள்…ஆனால், பாருங்கள், இவை புறாக்கள்…”

இருக்கலாம்…இருந்தும் அவள் ஏன் ஒரு கோழியை அல்லது ஒரு மாட்டை அல்லது ஒரு நாயைக் கூட வளர்த்து ஈடுபாடு காட்டியிருக்கக் கூடாது? நான் எனக்காக ஒரு புறாவைக் கண்டுப்பிடித்துக் கொள்ளவில்லையா? நான் பாடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த பாடலை நான் கண்டுபிடித்துக் கொள்ளவில்லையா? சரி.. வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? அவனவனுக்கு உரிய பாடலை அவனவன் கண்டுப்பிடித்து, தன் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பாடுதல் தானே வாழ்வின் சாரம்…”

கிளிம்மில், இப்போது அவனில்,   சிறு ஆர்வம் கூட கொப்புளிக்க தொடங்குகிறது. அசடனாய் இருந்த இவனா, என்பது போல் சற்றே கவனத்தைச் செலுத்தி மேலும் அவதானத்தோடு கேட்க முனைகின்றான் .   

  “பாருங்கள்… நான் சிறுவனாய் இருந்த போது, எனது தாயாரும், எனது தெய்வீகத் தந்தையும், என்னிடம் அதி விசேட அம்சங்கள் இருந்ததாக நினைத்துக் கொண்டார்கள்… ஆனால் என்னிடம் அப்படி எந்த ஒரு அபூர்வமும் இருக்கவில்லை… ஆச்சர்யமும் இருக்கவில்லை… எனவே நான் அந்த அபூர்வங்களை எனக்குள்ளாக கண்டுபிடிக்கத் தொடங்கினேன். அதாவது வாய்க்கு வந்தபடி, மூளைக்கு ஏற்றபடி ’பொய்களைத்’  திரிக்கத் தொடங்கினேன்.”

  கிளிம் ஆச்சரியம் அடைகின்றான்.இது கிட்டத்தட்ட அவனது பால்ய காலக் கதையை போல இருக்கின்றது .   கிளிம் சிறுவனாய் இருந்த போது அவன் தந்தை உட்பட்ட அவனைச் சூழ்ந்த பெரியவர்கள், அனைவரும் அவனை ‘வித்தியாசமாகவும்’,‘மூலச்சிறப்புள்ள’,‘சிந்தனையுள்ள’ சிறுவனாகவும் கொண்டாட முனைந்ததை   நினைவு கூர்கின்றான்.

 “இந்த ‘அசடன்’ கதையும், என்னுடையதை ஒத்ததா? சீச்சீ…கேவலம்…இவனா…இவனதா… இந்த அட்டுப்பிடித்தவன்…? என்னைப் போலவா…?”  

இப்போது கிளிம்மின் உள் மனதில் சற்றே அவமானத்தின் சாயல் படியத் தொடங்குகின்றது.இவன், இந்த அசடு, இப்படி தலைவிரிகோலமாய் திரிபவன், எனக்கு சமமானவனா? 

சம்பாசனை இப்போது அரசியலை நோக்கி எகிறிப் பாயத் தொடங்குகின்றது: “உங்களுக்கு ஓர் அரசியலமைப்பு அல்லது புரட்சி, அல்லது ஏதோ ஒரு சீர்குலைவு தேவையுறுகிறது… ஆனால் எனக்கு அத்தகைய எந்த ஒரு தேவையும் இருப்பதாய் இல்லை. எனக்கு வேண்டாம். அவை அனைத்தும் – இவை எதுவுமே எனக்கு வேண்டாம்…மற்றது… எனக்கு ஏன் வேண்டாம் என்கிறேன் என்பது குறித்தும் எந்த ஒரு பிரச்சாரத்தையும் நான் மேற்கொள்ளப் போவதுமில்லை… யாருக்கும் வகுப்பு நடத்த போவதும் இல்லை… என்னை விட்டு விடுங்கள்… என் பாட்டுக்கு… எனக்கு ஒன்றுமே வேண்டாம்… தொழிலாளர்களுக்கு புரட்சி வேண்டும் என கூவுகின்றார்கள்…இருக்கலாம்…ஒரு வேளை அது அவர்களுக்கு தேவைப்பட்ட, தேவையான, ஏன் அவசியமான ஒன்றாகக் கூட இருக்கலாம்… தேவையானதா… நல்லது…செய்து கொள்ளுங்கள்… ஆனால் என்னை விட்டு விடுங்கள் என் புறாக்களோடு… நான் ஒரு செவிட்டூமையாக இருந்துவிட்டுப் போகிறேனே… பரவாயில்லை…”

இப்போது கிளிம்மிடம் ஒருவித மாறுதல் ஏற்படுகின்றது. மெல்ல அவனில்   ஒரு கோபம் எட்டிப் பார்த்து வேர்கொண்டு வளர முற்படுகின்றது. பெருக்கெடுக்கின்றது… பிரவாகம் கொள்கின்றது…அவனை முற்ற முழுதாய் கிளிம் புரிந்து கொள்ளத் தலைப்படுகின்றான். 

“விலங்கு… ஆஹா… ஒரு வெறுக்கத்தக்க விலங்கு இது” 

  கிளிம் அவனை வரையறை செய்கிறான்.

யாருக்குமே அபாயம் அற்ற, தான் உண்டு ,தன் புறாக்கள் உண்டு என்று வாழ முற்படும் தலைவிரி கோலமான இந்த  மனிதன், புறாக்களோடு சேர்ந்து தன் ஆன்மாவை இணைத்து அனுப்பி, தன் பாடலை தன் பாட்டில் பாடிக் கொண்டு திரிய முற்படும்  இவன் – இவனிடம் கிளிம் இப்படி ஒரு வெறுப்பு கொள்ள என்ன காரணம்? காரணம் என்ன?  வாசகனை குடைந்தெடுக்க கூடிய இக்கேள்வியை கார்க்கி, வாசகனிடமே விட்டு விட்டு நகர்கின்றார். 

ஆனால் ஒரு வழியில் பார்த்தால் இந்தக் கோபம், இந்த முரண் – அனைத்துமே நாம் ஏதோ ஒரு வழியில் ஏற்கனவே தரிசித்த ஒன்றாகத்தான் இருக்கின்றது. உதாரணமாக தமிழ் இலக்கியப் பரப்பினை எடுத்துக் கொண்டால், ஜெயமோகனின், ஜி.நாகராஜன் மேலான கோபம் மேற்படி சித்திரத்தை  தான் நமக்கு சடுதியாக நினைவூட்டுகிறது . ஜி. நாகராஜன் குறித்த ஜெயமோகனின் கூற்று பின்வருமாறு  : 

ஜெய மோகனின் கேள்வி: “இவன் யார்? நடுத்தர வரக்கத்தை சேர்ந்தவன். இந்த வர்க்கத்திற்கு இந்த சமூகம் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து வளர்ந்தவன். அதன் நிழலில் வாழ்பவன்” (பக்கம் 62 – நவீனத்துவத்தின் முகங்கள் – ஜெயமோகன்) 

நாகராஜனை நோக்கி ஜெயமோகன் வீசி எறியும் இக்கணைகள் அக்னியில் தோய்த்தெடுத்து எய்த அம்புகள் போலிருக்கின்றன.

“ஏன் இந்த கோபம்? இந்த கோபத்தின் சாரம் என்ன?இவ்வளவையும் உனக்கு செய்து தந்த ஓர்  அமைப்பை  – அதன் தேவைப்பாட்டை, அதன் நிலைபேற்றை புறந்தள்ளி – உன் அரசியல் நிலைபாட்டை – உன் கடைமையை மறந்து – வாழாவிருக்கப் பார்க்கின்றாயா?…மூடனே, என்பது போல்”-  தர்க்கிக்கின்றது, இந்தக் கோபம்.

இதே போன்றுதான் மகாபாரதத்தில், அருச்சுனன் கதையும் வந்து போகின்றது…சாடைமாடையாக… கொல்லமாட்டானாம்…! கோபம் வராதா என்ன? (கிளிமுக்கு வந்தாற் போல்)

மீண்டும் வருவோம்:

ஜெய மோகனின் கேள்வி: “இவன் யார்? நடுத்தர வரக்கத்தை சேர்ந்தவன். இந்த வர்க்கத்திற்கு இந்தச் சமூகம் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்து வளர்ந்தவன். அதன் நிழலில் வாழ்பவன்”

தலையாய குற்றச்சாட்டு: ’ நாகராஜன் ஒரு போகியாகத் திரிந்தவன். தன் வசதி, வாய்ப்புகளால், அந்த மக்களைச் சுரண்டியவன். இதுகுறித்த குற்ற உணர்விலிருந்து தப்பவே நாகராஜன் இதுபோன்ற (குறத்தி முடுக்கு) கதைகளை எழுதுகிறான். இவர்கள் பெற எண்ணும் இவ்விடுபாடு (சுதந்திரம்),  இதுகுறித்த குற்ற உணர்வில் இருந்து விடுபடும் சுதந்திரமேயன்றி வேறொன்றும் இல்லை’ என்பதே ஜெயமோகனின் விளக்கப்பாடு.

மேலும் கூறுவார்: “அவர்களைச் சுரண்டுவதற்காக ஆழமான குற்ற உணர்வை, சுய வெறுப்பை அவன் (நாகராஜன்) அடைந்தாக வேண்டும்”.

 கேள்வி: ஜெயமோகனின் மேற்படி கோபமானது, யாது, என்ன, எவ்வகை சார்ந்தது?  உண்மையில்,ஜெயமோகனின் பின்னணியையும், அவரது எழுத்தின் குணாம்சத்தையும், அதன் தருக்கத்தையும் அறிந்தவர்கள்,‘சுரண்டலுக்கு’ எதிரான, இந்த இவரது தார்மீகக் கோபத்தைப் பார்த்து ஒரு கணம் விக்கித்துத் தான் போவார்கள். 

ஆனால், சம்பந்தமுறும் சில தரவுகளை கவனமாக எடுத்து நோக்கினால், இத்தகைய கோபத்துக்குரிய உண்மை வேர்கள் வெளிப்படவே செய்யும். 

“இவன் யார்? – கேள்வியின் தலையாய பகுதி இதுவே. ‘யார் அவன்’?

நாகராஜனின் வாழ்க்கைக் குறிப்பு கூறுகின்றது: 

“தந்தை கணேச ஐயர்… வக்கீல்… தாய்வழிக் குடும்பம் வசதியானது… கணிதத்தில் நூறு மதிப்பெண்கள் பெற்று சி.வி.ராமனிடம் தங்கப் பதக்கம் பெற்றார்… அதே கல்லூரியில் (மதுரைக் கல்லூரி) பி.ஏ முதல் வகுப்பில் தேறினார். அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளர்… இத்தியாதி…இத்தியாதி…”

இருந்தும் இதிலே, எமது பரப்புக்குத் தேவையானது: ‘தந்தை கணேச அய்யர்’ என்பதுவே. ஏனெனில் ஜெயமோகனின் கேள்வியும் பதிலும்  வருமாறு   வடிவமைக்கப்பட்டுள்ளது: ‘இவன் யார்?’– கேள்வி!

பின் அவரே ‘தெரிவு’ செய்யும் பதில்: “நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவன்…”

இதற்கு முன்னால் அவரே, இக்கதை தொடர்பில் கூறியுள்ளார் : “இந்திய விபசார சூழலில் ‘சாதி’ முக்கியமான இடத்தை வகிப்பது…” (பக்கம்:46)

நல்லது. 

கேள்வி:  சாதி இந்திய விபசார சூழலில் மாத்திரமா என்பதே.

உண்மையைக் கூறினால், விபசார சூழலில் என்பதை விட, எழுத்தாளர் சூழலில் சாதி, ‘சில வேளைகளில்’ அதைவிட முக்கியமான இடத்தை வகிக்கிறது   என்பது பல நுணுக்கமானவர்களின் அவதானிப்பு.

ஜெயமோகனே தனது கண்டுப்பிடிப்பைக் கூறுவார்: “வெள்ளாள சாதியை சேர்ந்த எழுத்தாளர்களிடம் தன்னிரக்கம் கலந்த சாதி உணர்வு வலுவாக இருக்கிறது. பிற்பட்ட சாதியைச் சேர்ந்த எழுத்தாளர்களிடம் வெறுப்பும், அச்சமும், சில சமயம் அருவருப்பும் ஊட்டக் கூடிய தீவிரமான சாதி வெறியின் கூறுகள் உள்ளன… பிராமணர்களும் தலித்துகளும் மட்டுமே தங்கள் சாதியை விமர்சித்து எழுதும் திறந்த மனதுடன் செயல்பட்டிருக்கிறார்கள்”.   (மேலது:80)

அப்படி என்றால், தமிழ் நாட்டின், பின்புலத்தின் உண்மை;  கேள்வியும் பதிலும் வருமாறுதான் அமையக்கூடும்: 

“இவன் யார்?”

“பிரமாணன்!” 

தொடர்ந்தும் கூறலாம்: “இச்சாதிக்கு இச்சமூகம் வழங்கியுள்ள அங்கீகாரத்தையும், பாதுகாப்பையும் அனுபவித்து வளர்ந்தவன்…”                                                     

கேள்வியின் உண்மை நிலை இதுதான் என்றால்,அதாவது உண்மைக் கொந்தளிப்பு இதுவாகத்தான் இருக்க முடியும் என்றால், இங்கே எழக்கூடிய ஆட்சேபனைதான் என்ன என்பதே அடுத்த கேள்வியாகின்றது.

‘குறத்தி முடுக்கின்’,‘கதை’ மிக எளிமையானது.

ஓர் 22 வயது இளைஞன், ஒரு இருபது வயது விபசாரியை குறத்தி முடுக்கில் சந்திக்கிறான். ஆரம்பத்தில் உடல் பசிக்காக செல்பவன், நாள் செல்லச்செல்ல அவள் மேல் காதல் வயப்படுகின்றான். ஒரு கட்டத்தில் அவளை மணம் முடிக்கவும் சித்தமாகிறான். அவளுக்காக, அவளது நலனைக் காப்பதற்காக,அவமானங்களை ஏற்று,கோர்ட்-பொலீஸ் என்று ஏறி சாட்சி கூறவும் செய்கிறான் – வெறுமனே கை கழுவி விட்டு வந்துவிடாமல். இது ஓர் சரடு. 

இதுபோக, சமாந்திரமாய், அவ்வப்போது, குறத்தி முடுக்கின் பெண்கள் நிலை பிறிதொரு சரடாய் விவரிக்கப்படுகின்றது. 

தாய்மைக்காக, குழந்தைக்காக ஏங்கும் ஒரு விலை மாது – நிறைமாத கர்ப்பிணி – பின் ஒரு வாடிக்கையாளனின் மூர்க்க கையாளுகையின் பிறகு கருச்சிதைவு அடைகிறாள் என்பது முதல், போலீஸ் அடாவடித்தனத்தால் ஒரு பெண் அவர்களால் மொட்டை அடிக்கப்பட்டு மனப் பிறழ்வு ஏற்பட்டு, புத்தி சுவாதீனமில்லா நிலையடைந்து கண்ணாடியில் முகத்தைப் பார்த்துப் பார்த்து பேதலித்துச் சிரித்துக் கொண்டிருக்கிறாள் என்பது வரை, கதையில் வந்து போகும் சமாச்சாரங்களாகின்றன.

  கதையின் ஆரம்பமே, இவ்வமைப்பின் பொய்மையை,இன்னும் கறாராக கூறுவோமானால், இவ்வமைப்பின் – அரசியலின்,கேடு கெட்ட போக்கிரித்தனத்தை  தோலுரித்து அம்மணமாக நிறுத்துவதாக அமைந்து விடுகின்றது. 

Tamil story | விதவை தான் விபச்சாரி அல்ல...

“மெத்தப் படித்தவரும், சிறிது படித்தவரும், படிக்க மட்டும் தெரிந்தவரும் வாசிக்கும் பத்திரிக்கை ஒன்றில் ’கதைசொல்லி’  உத்தியோகம் பார்க்கின்றார். பத்திரிக்கை – ஜம்பர் காணாமல் போனது முதல் கிழவன் – குமரி கல்யாணம், சாவு, வெட்டு, குத்து, இத்தியாதி – என்றெல்லாம் அனைத்தையுமே வெளியிடுகிறது பத்திரிகை;  சர்வதேச விவகாரம், அறிவு சார்ந்த செய்தி உலகு, இவை – அதாவது மக்களுக்கு ‘தேவையற்ற’ விடயங்களை முற்றாய்த் தவிர்த்து,’மெத்தப் படித்தவரும், சிறிது படித்தவரும்’ எங்கள் பத்திரிகை மட்டகரமான செய்திகளை பிரசுரிக்கின்றது என்று   கூறிக் கொண்டே, எப்படியாகிலும் அதனை வாங்கியோ, வாங்காமலோ பெற்று வாசித்தனர் என்று கதைசொல்லி கூறும் போதே, தமிழ் நாட்டின் ‘மெத்தப் படித்த’ கூட்டத்தின் வண்டவாளத்தை தேரில் ஏற்றி ஊர்வலம் அனுப்ப போகும்,‘கதைசொல்லி’யின் அரசியல், அம்பலமாக்கி விடுகின்றது.

போதாதற்கு மேலும் கூறுவான்: ‘சுதந்திரம் வந்துவிட்ட காலம். (அதாவது சுதந்திரம் வந்து முடிந்துவிட்ட காலம்). தேச பக்தர்கள் சிறை வாழ்க்கையையும், அகிம்சா போராட்டங்களையும் மறந்துவிட்டு தத்தம் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு இந்தியனும் தனது தொழில் திறம்படச் செய்வதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று தலைவர்கள் போதித்த காலம். நானும் (கதைசொல்லி) காலத்துக்கு ஏற்றவாறு மாறி இருந்தேன்”

“நண்பன், ஒருவனுக்கு இரவலாகக் கொடுத்த “பாரதி பாடல்களை”க் கூட திரும்பக் கேட்க மறந்துவிட்டேன். போலீசிடத்தும், அரசாங்க அதிகாரிகளிடத்தும், எனது தகப்பனாரிடத்தும் எனக்கிருந்த வெறுப்பெல்லாம் படிப்படியாக மறைந்து விட்டது….”

“சிகரெட், பாப்ளின் சர்ட்டு, அழகிய மோட்டார் கார்கள் இவையெல்லாம் என் மோகத்துக்கு இலக்காகின”

கால மாற்றத்தை அல்லது இக்கால மாற்றத்துக்கு வழிகோலிய ஒரு அரசியலை,  அரசியலின் சாரத்தை,ஆழமாக, மிக ஆழமாக விமர்சித்து வெளிக்கொணரும் இவ்வரிகள், வெறுமனே வெகுளித்தனமாக கூறுவது போல் கதைசொல்லியால் கூறிச் செல்லப்பட்டிருந்தும் கூட, அவனது சமூகம் தொடர்பிலான மிக ஆழமான அரசியல் பார்வையைக் காட்டி நிற்கின்றது. ‘ஆழம்’ அவன் தேறும் உதாரணங்களின் எளிமையிலும், தாக்குதலுக்கு ஏற்ற, நடைமுறை யதார்த்தங்களுக்கு பொருந்தி வரும் தேர்வுகளிலிலும் வெளிப்படுவதாயுள்ளது. 

உதாரணமாக மேலே குறிப்பிடப்படும் “பாப்ளின் சர்ட் மீதான மோகம்”, மற்ற இரு வார்த்தைகளின் நடுவே இருத்தப்பட்டு, அமுக்கி வாசிக்கப்பட்டாலும், நாகராஜனே கூறி இருப்பது போல்,“உண்மையை சொல்வதென்றால்… நான் விரும்பும் அளவுக்கு சொல்ல முடியவில்லையே என்பதுதான் என் வருத்தம்” என்று படைப்பின் முகப்பிலேயே, முகாந்திரம் போன்று தனது வருத்தத்தை தெரிவித்திருப்பது ஆழமானது, கவனிக்கத்தக்கது. 

கதையின் இரண்டாம் காட்சி கதைசொல்லி, தன் கதாநாயகியான விபசாரியை, (தங்கத்தை) குறத்தி முடுக்கின் அறைகள் ஒன்றில் சந்திக்கும் காட்சி. முதல் தடைவையாக,  அறைக்குச் செல்லும் கதை சொல்லி நோட்டம் விடுகிறான், அறையைச் சுற்றி.

சுவரில் சிவன்-பார்வதி, ராமர்-சீதை படம் பக்கம் பக்கமாக மாட்டப்பட்டிருக்கின்றன. நாற்காலியை அவளருகில் நகர்த்திப் போட்டுக் கொண்டே கேட்கிறான் கதாநாயகன் “உன் பெயரென்ன?”

இங்கே, சிவன்-பார்வதி படத்துடன், ராமர் சீதை படமும் இடம்பெறுவது தற்செயலான விவரிப்பா என்ற கேள்வி மிக எளிதில் எழக்கூடிய ஒன்று.   ஏனெனில், முன்னர் குறிப்பிட்ட சுதந்திரத்தின் பின்னரான, அபிவிருத்திகளில் ஒன்றான, “பாப்ளின் சர்ட் மோகம்” கதர்ச் சட்டை மோகத்தின் தருக்க ரீதியான அபிவிருத்தித்தான் என்று ஒரு வாசகன் நினைப்பானாகில், ராமர்-சீதை படத்தையும் அதே தினுசில், அதாவது ராமராஜ்யம் என்ற தினுசில், யோசித்து வைத்துக் கொள்ளவும் அதனை கதாசிரியனின் கூற்றான, முழுவதையும்தான் சொல்ல முடியவில்லையே என்ற வருத்தத்துடன் இணைத்துப் பார்க்கவும் வசதி செய்வதாக உள்ளது. அதாவது, ஒரு ராமராஜ்யத்தின் கீழேதான் இவ்வளவும் நடக்கின்றது எனும் கேள்வி பளீரென எழுகின்றது. உண்மையைச் சொன்னால்,இன்னும் இராட்டையின் மோகம் தீர்ந்தபாடில்லை என்பதும் அவ்வப்போது தூசு தட்டி எடுக்கப்பட்டு,  இராட்டையை வைத்து ஆற்றப்படும் நகர்வுகளை அல்லது அரசியலை, உலகம் பார்த்துக் கொண்டுதான் இன்னும்   இருக்கிறது என்பதும் ஆழமாய் நினைத்துப் பார்க்கத் தக்கதே. முக்கியமாக, ஜெயமோகன் போன்ற‘காந்தி பக்தர்’ வாசிக்கும் போது…!

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, கதை சொல்லி காலப்போக்கில் தன் காதலியான தங்கத்துடன், இராட்டை சுழலுவது போல் சுழன்று சுழன்று மெதுவாக காதல் வயப்படுகின்றான்.   முக்கியமாக அவனது மனநிலை மாறவில்லை, அவனது பின்வரும் கூற்று மெதுவாக வெளிக்கொணர்கின்றது: “நான் தங்கத்தைப் பார்த்தேன். ஒன்றுமறியாத குழந்தையைப் போல் அவள் எனக்குத் தோன்றினாள்…அவள் ஒரு அநாதை. நானும் ஒரு அநாதை. எங்கள் கொள்கைகளாலும் நடத்தையாலும் சமுதாயத்திலிருந்து தங்களைத் தாங்களே பகிஷ்கரித்து கொண்டவர்களில் நானும் ஒருவன். அவளும் ஒருத்தி. நாங்கள் தனிப்பிறவிகள். எங்குமே அந்நியர்கள். நான் தங்கத்தின் அருகே சென்றேன். இரு கைகளாலும் அவளைத் தழுவி கண்களை மூடினேன். என் கண்களில் நீர் உகுந்தது. நான் எனக்காகவும் அவளுக்காகவும் சிந்திய கண்ணீர்.”

கண்ணீரை சந்தேகப்படுமளவுக்கு எதுவும் அங்கு அரங்கேறுவதாய் தெரியவில்லை – பூதக் கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் கூட நல்லது. வினா: யாருடைய கண்ணீர் இது? இதையே முன்னர் கேட்டு கொண்டது போல் கேட்டுக் கொள்வோம்:

கேள்வி: “இவன் யார்?”–

பதில்:  “பிராமணன்!” 

அவனது அரசியல் கடமை என்ன?‘இச்சாதீய அமைப்பை, தன் பலம் கொண்ட மட்டும் காப்பது. காலத்திற்கு ஏற்ற வகையில் மிக நுணுக்கமாகவும், நாசூக்காகவும் பிறர் எளிதில் அறிய முடியா வண்ணம்,இப்படிக் காத்து முடித்து காலா காலத்துக்கும் அது ,  இச்சாதீய அடுக்குகள் ஜீவித்திருக்குமாறு நிலைபெறச் செய்வது!’

கேள்வியும், பதிலும் இப்படி இருக்கையில்,இத்தகைய பிறப்புக் கடமைகளில் இருந்து பிறழ்ந்து போனவனை என்னவென்பது? அதிலும் முக்கியமாக, ஒரு பிராமனணை? கோபம் வராதா என்ன? அதிலும் ‘கடமையை’ விட்டு விட்டுக் கண்ணீர் வடித்தால்…?

உண்மையில், ஜெயமோகன் தன் சாதீய பிரக்ஞைக்கு அப்பாற்பட்டவரா என்ன? ஜெயமோகனின் வாழ்க்கை சித்திரத்தில் ஒரு ஏடு: 

“டே, நீ    சி.வியை வாசிச்சிருக்கியா…”-    பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. 

“அப்போது நான் சுந்தர ராமசாமியின் ஞானப்பிடியில் அடங்கியிருந்த காலம்…” -ஜெயமோகன்.

“நீ என்னத்துக்கு கண்ட கண்ட தமிழ்ப் பட்டர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு சீரழிகின்றாய்? ஒன்றுமில்லையென்றாலும் நீ ஒரு நல்ல நாயரல்லவா? நமக்கு நம்முடைய ஞானமும் திறமையும் இல்லையா”– சுள்ளிக்காடு. (பக்கம் 30-31: முன்சுவடுகள்:ஜெயமோகன்)

வேறு வார்த்தையில் கூறுவதென்றால், இது வெறும் நாகராஜனின் மனிதாபிமானத்தின் மீது மாத்திரம் வந்த வெறுப்பல்ல. இது தற்போதிருக்கும் சாதீய அடுக்குமுறையை, சமூக அமைப்பு முறையை சீர்குலைக்கும் – சீர் குலைக்க கூடிய கண்ணீர் என்பதை ஜெயமோகனின் நுண்ணறிவு உணர்வதினாலேயே   வெறுப்பு இப்படியாக மண்டுகிறது. 

கிளிம் எப்படிக் குமுறுகின்றானோ – விலங்கு வெறுக்கத்தக்க விலங்கு என – அதே கோபத்தை ,  அல்லது அதைவிட மேலான கோபத்தை ஜெயமோகனில் இங்கு காண்கின்றோம் – ஒருமையில் உறுமுகின்றார்:  “யார் இவன்?”

ஒரு வேளை மரீனா, வெலண்டைன்  குறித்துக் கூறுவது போல், “இவன்,தன்னையும் போஷிக்கத் தெரியாதவன் – இந்த சமூகத்தையும் பேணி போஷிக்கத் தெரியாதவன்…”

இருக்கலாம். இருந்தும் ஒரு பிராமணன். அதிலும் எழுத்தாளன். அதாவது ஏதோ ஒரு வகையில் தன் எழுத்தின் மூலம் பிரசாரத்தை மக்களிடையே முன்னெடுப்பவன் தான். வெலண்டைன் போன்ற தனித்த கட்டை அல்ல. எனவே தான் வெறுப்பு இங்கு இரு மடங்காய் மண்டுகிறது- கிளிம்மைப் போலவே ஜெயமோகனிடம்.

எமது காலத்திய சாதீய அரசியலைக் கூர்ந்து நோக்கினால் (மோடியினது உட்பட) சாதீய அரசியல், தான் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாக, தலீத்திய அரசியலைத் துணையாகக் கொண்டுள்ளது என்பது நுணுகிப் பார்க்குமிடத்து அவதானிக்கதக்க ஒன்றாகவே இருக்கின்றது. இன்னும் சரியாகச் சொன்னால், தற்போது ஆட்சி செலுத்தும் அரசியல், தனது ஊன்று கோல்களாய் தலித்திய அரசியலை ஒரு கக்கத்திலும்,  மறுகக்கத்தில் மகாபாரதத்தையும் ஊன்றிக் கொண்டு நங்குநங்கென  நொண்டி, நொண்டி வருகின்றது நாட்டைச் சுற்றி சுற்றி.

இச்சூழலில் எந்த ஒரு சாதீய உணர்வும், சாதீயமற்ற உணர்வு போன்றே பொய்த் தோற்றம் காட்ட, ஆளை மயக்கி நுணுக்கமாகச் செயல்பட வேண்டிய ‘பொறுப்புமிக்க’ ஒரு காலகட்டம் இது. (அதுவும் –  முக்கியமாக படித்த ஒரு தளத்தில் – எல்லாவற்றையும் விட எனலாம்).

விடயங்கள் இப்படியாக, தத்தமது மானசீக கொதிப்பு நிலையை எட்டும் ஒரு பின்னணியிலேயே, நாகராஜனின் மேற்படி நிலைப்பாடுகள் நம்மை வந்து சேர்ந்து, பரிசீலிக்கப்பட வேண்டிய ஒரு தேவையையும் வலியுறுத்தி நிற்கின்றன. போதாதற்கு சுந்தரராமசாமி வேறு, ஒன்றும் புரியாதவராய்! “ஓஹோ…மகான்களுக்கு கிடைக்காத தரிசனங்கள் எல்லாம் இவருக்கு கொஞ்சம் கிடைத்து விட்டது  மாதிரிப் படுகின்றது” என்று நாகராஜனைப் பற்றி எழுதித் தீர்த்து விட்டார். 

இத்தகைய ஒரு சூழலில், இக் கோடாரிக் காம்பை,இந்த அருவருக்கத்தக்கவனை என்ன செய்வது என்பதே கேள்வி. 

சுருங்கச் சொன்னால், ஒரு ரசிய வரலாற்று காலக்கட்டம், அதாவது புரட்சி கொந்தளித்துக் கரை புரளும் ஒரு காலகட்டத்தில், இளைஞர்கள் கைக்குண்டுகளை வீசி எறிந்து ரகளை செய்யும் ஒரு காலகட்டத்தில், தொழிலாளர்கள் பாதுகாப்பு அரண்களை வீதிகளில் எழுப்பி தொழிற்சாலைகளின் உற்பத்தியையே முடக்கி ஊர்வலங்கள் போகத் துணிந்துவிட்ட ஒரு காலகட்டத்தில், விவசாயிகள் பண்ணைகளைத் தீயிட்டுக் கொளுத்தி ஆரவாரம் செய்யும் ஒரு காலகட்டத்தில், ”புரட்சியா? அவர்களுக்குத் தேவையா? நல்லது அப்படி என்றால் நன்றாய் செய்து கொள்ளட்டும்… என்னை என் புறாக்களோடு விட்டு விடுங்களேன்” என்று கெஞ்சும் இந்த வெலண்டைனை எதில் சேர்ப்பது? பிராமணனுடனா? கோபம் வராதா என்ன?

Vintage soviet book Maxim Gorky 'Life of Klim by LaReveuseVintage ...

கிளிம், இச்சமுதாய அடுக்கின் சரிவுக்கான முதல் கோடாரிக் காம்பாக இனம்கண்டு தன்னை ஒத்த இந்த  வெலண்டைன் மீது  கொண்ட கோபமும் வெறுப்பும், நாகராஜன் எனும் பிராமண கோடாரிக் காம்பின் மீது ஜெயமோகன் அடையும்  கோபத்திற்கும் வெறுப்புக்கும் நிகரானது என்பதே இங்கு குறிக்கத்தக்க ஒன்று.

வேறு வார்த்தையில் கூறுவதானால், ஒரு பிராமணன் உதிர்க்கும் இக் கண்ணீரில், அதன் புனிதத்தில் சாதிகள் கரையலாமென்றால், சாதிகள் ஒன்று சேரலாம் என்றால், இச்சாதீய அடுக்குமுறை சரியலாமென்றால், முதலில் தகர்க்கப்பட வேண்டியது அக்கண்ணீர்த் துளிகளையும், அதனை வடித்தவனையும் தான். இது நுண் அரசியல். இந்நுண் அரசியலின் முக்கிய அடிப்படைக் கோபம் – தன்னை பாதுகாத்த இச்சாதீய அமைப்பை சரிக்கின்றார்களே எனும் அரசியல் கோபமே! கிளிம், இக்காரணத்தினாலேயே வெலண்டைன் மீது கோபம் அடைகின்றான், ஜெயமோகன், நாகராஜனின் மீது அடைந்த கோபத்தைப் போன்று.

பகுதி 1ஐ படிக்க 

மார்க்சிம் கார்க்கியின் நாவல் – ” கிளிம் சாம்ஜியின் வாழ்வு ” –  மூன்றாம் தொகுதி : தமிழ் இலக்கிய உலகை  முன்னிறுத்தி….  பகுதி 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *