1
அடித்துப்பெய்கிற பெருமழையில்
கோணிச் சாக்கு தலையோடு
முடைந்த கொல்லைமட்டையைக்
கையிலேந்தியபடி
பேரனை அழைக்க
பள்ளிக்கு வரும்
அம்மாயிக்குள் பெய்வதும்
ஒரு பெருமழைதான்.
2
சடசடத்துப் பெய்கிற மழையில்
கும்மாளமிட்டு நனைந்த மெல்லினா
அதட்டலுக்குப் பின்
அருகில் வந்து
குறுநகையுடன் தலை சிலுப்ப
தெறித்த துளிகள்
அவளின் நடன பாவத்தில் இறங்குகின்றன
என் கோபத்தைக் கரைத்தபடி
3
சாலைகளில் வழிந்தோடி
ஆக்கிரமிப்பை இடம்பெயர்த்து
வீடுகளுக்குள்ளும் நுழைகிற
மழைநீருக்கு
நிலம் மீட்ட அகதியின் சாயல்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

