பேரா.சோ.மோகனா எழுதிய "மின்மினிப் பூச்சி: காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்.!" கட்டுரை | மின்மினிகளின் காதல் தூது: நீங்கள் அறியாத வியப்பூட்டும் அறிவியல் உண்மைகள் | Firefly Based Article in Tamil | www.bookday.in

மின்மினிப் பூச்சி: காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்.! – பேரா.சோ.மோகனா

மின்மினிப் பூச்சி: காதலுக்கு ஒளியைத் தூதுவிடும் காதலர்கள்.!

– பேரா.சோ.மோகனா

நண்பர்களே, வணக்கம். நீங்கள் கிராமத்தில் வாழ்ந்ததிருக்கிறீர்களா ?  அல்லது கோடைகால இரவு நேரங்களில் கிராமத்துக்குப் போனதுண்டா? அது ஒரு சுவையான அனுபவம்தான். அதனை அனுபவித்து உணர்ந்தால்தான் அறிய முடியும். கோடையிலிருந்து கார்த்திகை மாதம் வரை, முக்கியமாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை  அறுவடை முடிந்த வயல் வெளிகளை ஒட்டியும், நீர் நிலைகளை ஒட்டியும் இருக்கும் , மரங்களில், இரவு நேரத்தில் வெளிச்சப் பட்டாளங்கள் திரியும்.

Where Do Fireflies Sleep? - Nature Center at Greenburgh

மயக்கும் மாலைப் பொழுதே நீ வா வா ?

மனதை மயக்கும் பசுமஞ்சள் நிறம். நாம் சொக்கியே  போவோம் அந்த ஒளியின் நிறத்தில்.நீங்கள் பார்த்தீர்கள் என்றால்  ஆச்சரியத்தில் பிரமித்து விடுவீர்கள். மரத்தைச் சுற்றிச் சுற்றித்  திரிந்து பறக்கும் குட்டி மின்னல் கூட்டம் ஒரு பக்கம். யாரைத் தேடி இந்த ஓட்டம்? தரையில் புல் நுனியில் அமார்ந்து தியானம் செய்வது போல மினுக்கும் விளக்கு வண்டுகள் மறு பக்கம். இரண்டுமே நம்மை ஆச்சரியத்தால் கட்டிப் போட்டுவிடும். ஆமாம். தரையிலிருந்து  மேலே பார்க்கும்  மினுக்கும் வண்டு விட்டு விட்டுப் பிரகாசிக்கும்.விளக்குப் பூச்சி விட்டு விட்டு வெளிச்சத்தைப் பீற்றி அடிக்கும். அதற்குப் பதில் சொல்வது போல  மரத்தையு,ம் வானையும் அளந்து திரியும் ஆண் சிங்கம் அதாங்க ஆண்பூச்சி, அதற்கு ஈடாகவே .நிஜமாலுமே பதில் கொடுக்கும். ஆமாங்க. அது அது உண்மைதான்.சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். போய்ப்பார்த்து அந்த அனுபவத்தை ரசித்தால் தான் இதனை ஒருவரால் அறியமுடியும்.

தூது சொல்ல ஒரு தோழி ..ஒளி !

9 Creatures Of Animal Kingdom That Emit Light

காதல் தூதை முதலில் அனுப்புவர் யார். வேறு யார் ? பெண்ணேதான்.அது மட்டுமல்ல அதிக ஒளிதந்து தன்னை நோக்கி கவர்ச்சி விசையை, வலையை  வீசுபவரும் பெண் தான். பின்னர்தான்  ஆண் பதிலுக்கு சம்மதம் தெரிவிப்பார். ஆனால் அவரின் ஒளி பெண்ணை விட கொஞ்சம் குறைவும், பலவீனமானதும் தான். கீழே கிடக்கும் பெண் பூச்சியை மையம் /மையல் கொண்டுதான் மேலே பறக்கும் ஆண் பூச்சி ஒளியைத் தூதுவிடுகிறது தன் காதலுக்கு. அதற்கு எழுதப் படிக்க, பேசத்  தெரியாதல்லவா? காதலுக்கு விழி வழி தான் பேச வேண்டுமா,? ஒளி வழியும் கூட பேசலாமே, இணக்கம் தெரிவிக்கலாமே!அதனால் தனக்குத் தெரிந்த மொழியில் தூதுவிடுகிறது பூச்சி.. தன் இணைவுக்கு இணக்கமா என ஒளியால் கேட்கிறது பெண் . ஒளியின் வழி மொழியிலேயே  ஆணும் சம்மதம் தெரிவிக்கிறது.இது எப்படி

ஏன் பெண் பறப்பதில்லை ?

Firefly Conservation | Xerces Society

பெண் தன் சந்ததியை சரியான ஆற்றலுடன், உருவாக்கவே, பறப்பதில்லை. அதிகம் ஓடுவதில்லை. அனைத்தும் சக்தியை மிச்சம் பிடித்து தன் முட்டைகளை வளர்த்து , சரியான பாதுகாப்பான இடத்தில் முட்டையிடவே. பளபளவென மின்மினிப் பூச்சியின் முட்டையும் கூட பளபளவென பிரகாசிக்கும். வெளிவரும் குஞ்சுகள் நத்தை போன்றவற்றை மொசு  மொசுவென்று மேய்ந்துவிடும். இதன் வாழ்நாள் 12 ஆண்டுகள் மட்டுமே. . முதிர்ச்சி அடைந்ததும் அதிக பட்சம் மூன்று மாதங்கள்தான் அவர்களின் வாழ்க்கை. ஆனால் , அதுவும் பெண் முட்டையிட்ட ஓரிரு நாளில், அந்த  அயர்ச்சியில்  இறந்துவிடும்.

இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மின்மினிக்களின் வாழ்க்கை இப்படித்தான்.இவைகளின் அளவு

5 to 25 மி.மீ தான்.  (up to 1 inch).மின்மினிப் பூச்சிகளில்  2000   வகைகள் உள்ளன.

பறந்தாலும் விடமாட்டேன்…

பொதுவாக இவை இரவு நேரங்களில் மட்டுமே சஞ்சரிக்கும்  , சிலவகை பகலிலும் வரும். ஆனால் இரவில் இருட்டில் சுற்றுபவர்களுக்குத்தானே  விளக்கும், வெளிச்சமும் வேண்டும். அதனால்தான் இந்தப் பூச்சிகள் ஒரு விளக்கைச் சுமந்து கொண்டு, அது தரும் ஒளியில் ஆகாயத்தில் அழகாக, அற்புதமாய், தன்னைத் தானே மினுக்கி,  மயக்கி வலம் வருகிறது. ஆண் பூச்சியின் மேல் தோல் வண்டின் தோல் போல கடினமாக இருக்கும். பெண்ணோ பரம சாது. ரொம்ப மென்மையானவளும் கூட. அட ஆமாம்பா. அவளுக்கு தோல் கடினம் கிடையாது. பஞ்சு போல மென்மையாக இருக்கும்.

மின்மினிப் பூச்சி - தமிழ் விக்கிப்பீடியா

பறக்க விடாத இயற்கை – அதுவே பரம்பரைக்கு பாதுகாப்பு

அது மட்டுமா,அவள் பறந்து ஓடிவிடாமல் இருக்க, அவளின் இறக்கை உருவாக்கப்படவில்லை. அது மட்டுமல்ல பெண் முதிர்ச்சி  அடைந்துவிட்டால் அவர் தாய்மைப் பொறுப்பேற்க உணவு உண்ணமாட்டார். அதற்காகவே பறப்பது ஆண் மட்டுமே சுதந்திரமாய் பறப்பார். பெண்ணுக்கு அந்த விடுதலை இல்லை.அவளின் கரங்கள்  , பறக்கும் கரங்கள் வெட்டப்பட்டுவிட்டன இயற்கையால். அதிக பட்சம் பெண் பூச்சி ஒரு செடி/புல்லின் மேல் ஏறலாம்.ஆணும் பெண்ணும் ஒரு குறிப்பிட்ட கால கதியில் ஒளியை விட்டு விட்டுப் பிரகாசிக்கும். பெண் சம்மதம் தெரிவித்த பின், இருவரும் இணை சேருவார்கள்.. பின்னர் இயற்கை நியதிப்படி பெண்மை  கருவுரும். பின்னர் அங்கேயே.கொஞ்ச நாள் கழித்து பெண், பாதுகாப்பாக முட்டைகளை ஈர மண்ணில் புதைத்து வைப்பாள்

இளம் குஞ்சின் வாழ்நாள்?

முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் சுமார் ஒரு வருட காலம், இளம் பிள்ளையாய் சுற்றித் திரியும். கோடை வந்ததும்தான் அவர் இணை சேரும் பக்குவம் அடைவார். பெண் இறக்கை இன்றியே காலம் கழிப்பாள்.

மின்மினியின் வெளிச்சம் எப்படி?

அது சரி.. மின்மினிக்கு இந்த வெளிச்சம் எப்படி என்கிறீர்களா? அந்த ஒளி மின்மினியின் உடலிலிருந்து உருவாகிறது. மின்மினிப் பூச்சிகள் இளம்பருவத்தி லிருந்தே மினுக்கும் தன்மையவை. ஆனால் இதில் இன்னொரு ஆச்சரியமும் அடங்கி இருக்கிறது.அதுதான் எப்படி இவை இந்த ஒளியால், அது உருவாக்கும் ஒளியால், அந்த சூட்டால்  இறந்து போகாமல் அதனூடேயே வாழ்கின்றன. ஆச்சரியம்தானே. இப்போது அந்த ஆச்சரியத்தைப் பார்ப்போமா? பொதுவாக, ஒரு பொருள் ஒளிவிடும்போது, அதிலிருந்து பெரும்பாலும் வெப்பமே வெளியில் வரும். அதாவது ஒரு மின் விளக்கு எரியும் போது, அதில்  90% வெப்பமும், 10% ஒளி மட்டுமே  வரும். அப்படி என்றால் இந்த குட்டியூண்டு பூச்சி அம்புட்டு வெப்பம் வந்தால் வெந்து கருகிவிட மாட்டார்களா? ?இங்கே அப்படி எல்லாம் நடப்பது இல்லப்பா. அப்புறம் என்னதான் நடக்கிறது விரைவில் சொல்லுங்கள். உண்மை தெரியாவிட்டால், மண்டை வெடித்துவிடும்.

The life cycle of the most common firefly species, Photinus pyralis. :  r/Infographics

மின்மினி உடலில் குளிர் ஒளி..?

மின்மினியின் உடலில் உருவாகும் ஒளி குளிர் ஒளி (cold light) தான் இதனை /உயிர் ஒளி (Bioluminescence)என்றே அழைக்கின்றனர். ஏன் தெரியுமா? அந்த ஒளியிலிருந்து   இந்த பூச்சிகள் ஒரு மந்திரக் கோலை தன் வயிற்றில் வைத்துள்ளன குழந்தைகளே.  அதுதான் ஒளியைஉருவாக்கித்  தரும் சிறப்பு செல்கள். அவை முழுக்க முழுக்க ஒளியை மட்டுமே தரும், துளிக்கூட வெப்பம் தருவதில்லை. அதாவது மின்மினியிலிருந்து வரும் ஒளியில் 100 % ஒளி மட்டுமே. வெப்பம் பூஜ்யம் டிகிரிக்கும் குறைவே..!

ஏனெனில் மின்மினியின் உடலிலிருந்து பார்வை ஒளியலைகள் (Visible light  ) மட்டுமே உருவாக்கப்படுகின்றன. இங்கு  புறஊதாக்கதிரோ, அகச்சிவப்பு கதிரோ உற்பத்தி செய்யப்படுவதில்லை.அது மட்டுமல்ல நண்பா. அதன் வெப்ப அளவு, பூச்சி எவ்வளவு விரைவில் பிரகாசிக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல இருக்கும். விரைவான காலகதி என்றால் வெப்ப அளவு அதிகம். இரு மினுக்குகளுக்கு இடையே, கொஞ்ச நேரம் அதிகமானால், ஒளியின் வெப்பம் கொஞ்சம் குறைவு. இந்த ரிதம் இருப்பதால்தான்  ஆண்பூச்சிகள், பெண்களை இனம் கண்டு ஈர்க்கப்படுகின்றன  . இணை தேட மட்டுமல்ல, சமயத்தில் இரை தேடவும், இந்தப் பூச்சிகள் ஒளியைத்தான்  தூண்டிலாகப் போடுகின்றன.

ஒளியை உண்டாக்குவது எப்படி ? 

மின்மினியின் வயிற்றுப் பகுதியில்    ஒளியை உருவாக்கும் சிறப்பு ஒளிசெல்கள் (Photcytes) உள்ளன. இதில் லூசிபெரின் (Luciferin)    என்ற ஒளியை உருவாக்க வல்ல ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. இது பூச்சியில் உடலுக்குள் வரும் காற்றுக் குழாயிலிருந்து (Trachea)  ஆக்சிஜனை எடுத்துக் கொள்கிறது.பின்னர்,லூசிபெரினும், ஆக்சிஜனும் லூசிபெரேஸ் (Luciferase) என்ற நொதியினால் இணைந்து ஆக்சிலூசிபெரிலின் (oxyluciferin)   என்ற பொருளாக மாறி விடுகிறது. அப்போதே மின்மினி ஒளியையும் கக்குகிறது தந்து வயிற்று செல்கள் மூலமாக..

luciferin + ATP ————-> luciferyl adenylate + PPi

adenylate + O2 ————-> oxyluciferin +AMP + light  

இந்த ஒளியின் அலை நீளம்  510 &  670 நானோ மீட்டர். இதன் நிறம் வெளிர் மஞ்சளிலிருந்து பசு மஞ்சள், இளஞ்சிவப்பு பச்சை ஆகியவை.ஆனால் இதன் ஒளி விடும் கட்டுப்பாட்டை நிறுத்தி, ஓடச் (On -Off mechanism) செய்பவைகள் நரம்பு செல்கள்+ ஆக்சிஜன் வரத்து மட்டுமே.  அதன்கடை நிலை லூசிபெரேஸ் மட்டும் சமீபத்தில் அறியப்பட்டுள்ளது..அதன் மரபணுவும் பிரிக்கப்பட்டுவிட்டது. இவ்வளவு அறிவியல் முன்னேறிய நவீன தொழில் நுட்ப நிலையிலும், நம்மால் மின்மினி போன்ற ஒளியை உற்பத்தி செய்ய முடியவில்லை. .லூசிபெரின்  உருவாக்கம் இன்னும் முழுமையாய் விஞ்ஞானிகளுக்குப் பிடிபடவில்லை.

பெண் கொலையாளிகள்

:ஃபோட்டூரிஸ் (Photuris ) என்ற பேரினத்தைச் சேர்ந்த சில பெண் மின்மினிப் பூச்சிகள்ண் பூச்சிகளைக் கவர்ந்திழுப்பதற்காக மற்ற இனங்களின் ஒளிரும் முறைகளைப் பின்பற்றுகின்றன, பின்னர் அவற்றை உண்கின்றன.

அழிவின் விளிம்பில் மின்மினிப் பூச்சிகள்... மின்மினிப் பூச்சிகளை  சீர்குலைக்கும் விளக்குகள்

ஒளிராத மின்மினிகள்

ராக்கி மலைகளுக்கு மேற்கே காணப்படும் மின்மினிப் பூச்சிகள் பெரும்பாலும் மின்னுவதோ அல்லது ஒளிர்வதோ இல்லை; மாறாக, அவை துணைகளைக் கண்டறிய ஃபெரோமோன்களை/ வாசனைகளைப் பயன்படுத்துகின்றன

கசக்கும் மின்மினி

மின்மினிப்பூச்சிகள் தாக்கப்படும்போது, ​​அவை வெளியிடும் இரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள், பறவைகள் அல்லது சிலந்திகள் போன்ற வேட்டையாடும் விலங்குகளுக்குக் கசப்புச் சுவையைக் கொடுக்கும்.இதனால் அவைகள் எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்கின்றன.

ஒரு வரலாற்றுத்  தகவல்:

  • முதல் உலகப்போர் நடந்த காலத்தில், இராணுவ முகாம்களில், மின் விளக்கு வசதி கிடையாது. அப்போது காயம் பட்ட வீரகளுக்கு சிகிச்சை அளிக்கவும், அறுவை சிகிச்சை செய்யவும், லாந்தர் விளக்கில் மின்மினியைப் பிடித்துப் போட்டு வைத்துக் கொண்டு, சிகிச்சை செய்தனராம்.
  • அது போல, இராணுவ வீரர்கள் கடிதம் படிக்க மின்மினியின் உலர்ந்த உடலைப் பொடி செய்து, அதில் உமிழ் நீர் உமிழ்ந்து, கலந்து அதன் ஒளியில் படித்தனராம்.
  • இப்போதும் கூட, ஆதிவாசிகளின் இல்லங்களில் இரவில் மின்மினி விளக்குகள்தான் கண்ணாடி பெட்டியில்/லாந்தரில்.
  • ஒரு புத்தகம் படிக்கலாம் நீங்கள்.மின்மினியின் குளிர் ஒளியில்
  • பழங்கால சீனர்களும், மின்மினியை வெளிச்சம் தர பயன்படுத்தினர்கண்ணாடி  பாட்டிலில் அடைத்து.
  • நீலப் பேய்கள்” என்று அழைக்கப்படும் சில இனங்கள், மின்னுவது போன்ற வடிவத்திற்குப் பதிலாக, தொடர்ச்சியான நீல-பச்சை ஒளியை வெளியிடுகின்றன.
  • கேரளாவின் ஆணைக்கட்டி மாவட்டத்தில் உள்ள கொட்டத்தாரா என்னுமிடத்தில். ஏராளமான மின்மினிப் பூச்சிகளைக் காண்பது,தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது. குறிப்பாக கோடை மாதங்களிலும் பருவமழையின் தொடக்கத்திலும், ஒரு மாயாஜாலமான, இயற்கையோடு ஒன்றிப்போகும் அனுபவத்தை வழங்குகிறது. ஆற்றின் அருகே அமைந்துள்ள பண்ணை வீடுகள், தங்குமிடங்கள் இதனை அந்த பூச்சிகளுக்கு இடையூறின்றி, பார்வையிடுகின்றனர்.
  • பழனியில் பெரிய ஆவுடையார் கோயிலுக்குச் செல்லும் பாதையில் , மாலை மயங்கிய பொழுதில், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை , மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், மரங்கள் முச்சூடும், கொத்து கொத்தாக மின்மினிகள்  ஒளிவிட்டு ஜொலிக்கும், நீங்கள் நடந்து சென்றாலே, அவை உங்களின் முகத்தையும் முத்தமிட்டுவிட்டுச் செல்லும். அம்புட்டு அதிகம் உண்டு.

📚 எழுதியவர்:

பேரா.சோ.மோகனா

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *