ஒரு மீனுக்கு வலைவிரித்தவன் வலையில் ஒரு கடலே சிக்கி இருப்பது போல தான் கவிஞரது இந்த கவிதை புத்தகத்தை வாங்கியதும் எனக்கு தோன்றியது .. சிக்கியது வெறும் மீனல்ல அத்தனையும் பொன்மீன் ….
மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் ஒரு அலைகடலின் இசையென மனதில் இசைத்து கொண்டிருக்கிறது …
காலத்திடம் இலக்கு தவறாமல் மிக சரியாக கவிதைகளை வீசினார் கவிஞர்
அது காற்றில் மிதக்கும் இசையாக தாள்களில் குறிப்புகளாக தவழ்ந்து வந்து எல்லோர் கைகளிலும் சென்று சேர்ந்தது மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள் .
பெரிய பெரிய கப்பல்கள் ஆழ்கடலில் மிதந்தாலும் அதை ஓரிடத்தில் நிறுத்திவைக்கும் நங்கூரமாய் மனதில் பதிந்த சில கவிதைகள் இங்கே இலக்கு தவறாமல் குறி வைத்து மிக சரியாக கற்கள் வீசப்பட்டன புறாக்கள் பழுதான கால்களோடு பயம் சுமந்து படபடவென பறப்பதை கைத்தட்டல் சத்தத் துணையோடு குதித்து ரசித்த சிறுவர்களுக்கு ஒரே ஒரு முறை தானியங்கள் வைக்கும் அனுபவம் சொல்லிக் கொடுத்தேன் ..
இப்போதெல்லாம் புறாக்கள் பயத்தில் படபடக்கும் சத்தம் கேட்பதேயில்லை ..
கற்களை வீசும் கைகளில்தானியங்களை கொடுத்து புள்ளினங்களை வளர்ப்பதை பற்றியும் சொல்வதோடு அதை கவிதைகளின் மூலம் கடத்தவும் செய்கிறார் கவிஞர்.ஒரு நல்லவற்றை சொல்வதோடு நிறுத்திவிடாமல் அதை செயல்படவும் செய்வதென்பது உண்மையில் சிறந்த செயல்தான்..
வாழ்த்துகள் கவிஞரே..
செவியிசைமாட்டி ..உணர்வுகள் தொலைத்து வயிறு காட்டி கையேந்தும் சகமனித பசியின் அடர்த்தியை சலனமற்று செயலிகளில் மூழ்கி கடக்கும் இயந்திரத்தனத்திற்கு பழக்கியிருக்கிறது பெருநகர வாழ்வியல் …!எத்தனை யதார்த்தமான உண்மை நம் உணர்வுகளை தொலைத்து வாழ பழக்கியிருக்கிறது இப்பெருநகர வாழ்வியல் உண்மையில் அண்மையில் உணர்ந்தேன் …
பணம் கொட்டி தனிவகுப்பு வைத்தும் கண்டிப்பு காட்டியும் தேர்வில் தவறிய மகனைப்போல்..
காலமும் சிலசமயம் நம்மை கைவிட்டுவிட்டு கைக்கொட்டி தான் சிரிக்கிறது ..
தனிமையில் நாமழுதால் துயர்துடைக்க காற்றுக்கு என்ன கைகளா இருக்கிறது ..
நாம் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மரம் இல்லை ஒரு கடவுள் .. இந்த கவிதையை வாசித்த பிறகு அதற்கு எந்த பெயர் வேண்டுமானாலும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் ..
சொல்வதற்கு ஏதேனும் ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது ..ம் கொட்டி மிக ஆர்வமாக கேட்க வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை ..ஓட்டத்தை தடை செய்யாமல் பொறுமையாய் இருந்தால் போதுமானது ..உணர்வுகளை கடத்த அனுபவம் பகிர அறிவுரையும் குறுக்கீடுமற்ற
எவரேனும் தேவைப்படுகிறார்கள் அப்படிதான் தெருவோர அரசமரப் பிள்ளையார் அறிமுகமானார் …!
நாமும் இப்படிதானே பல கோவில்களில் வேண்டுதல்களோடும்
நம் மனக்குமுறல்களையும் கொண்டிங்கொண்டிருக்கிறோம் ..
ஊடல் பொழுதில் முந்தானையை கணவன் மெதுவாக இழுப்பதும்மனைவியவள் முடங்கிதான் படுப்பதும் பசலைக்கொடி அங்கே வளர்வதும் அதையும் ரசித்து கவிதையாய் வடித்து மௌனத்தை கலைத்து மனைவிக்கு கொடுத்து மகிழ்ச்சியில் திளைப்பவன் தானே கவிஞன். அப்படியானதொரு கவிதை தான் இது ..
மரம் வளர்ப்பது பிடிக்குமென்கிறாய்..தினம் இரண்டு மூன்று முறை செடிகளுக்கு நீர் விடுகிறாய் பூச்சி பிடித்த இலைகளை களையெடுக்கிறாய் ..கொடிகளைப் படரவிட மறப்பதேயில்லை..சருகுகளுக்கு கண்ணீர் விடுகிறாய் ..நம் அறையைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கும் பசலைக் கொடி மட்டும்தான் உன் பார்வையில் தெரிவதே இல்லை …!
அடுத்த கவிதையில்
நடுக்கடலில் சுருட்டி காகிதப்பந்தாய்
எறிந்து வந்தமர்ந்தேன் ..
பக்கத்தில் கரையொதுங்கி
உதட்டை பிதுக்கினாய்..
மலை உச்சியில் தொலைத்து விட்டு
வேகமாய் இறங்கி வந்தேன் ..
எனக்கே தெரியாமல் தோளில் அமர்ந்திருந்தாய் ..
எப்படிக்கொல்வது ..
தனிமையின் மேல் இலகுவாக
பயணித்தும் ..
சின்ன திடுக்கிடலோடு
மீண்டும் கைக்குலுக்குகிற
உன் நினைவுகளை ….!
எங்கேயும் எப்போதும் நினைவுகள் என்பது பெரும்பாடுதான் உணர்ந்தவர்கள் மட்டுமே எழுதகூடிய கவிதையிது …!
கவிதை வாசித்தல் என்பது சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தைத் தேடுவது …!
என்று கவிஞர் ச. ஆனந்தகுமார் கூறுகிறார் ..
முத்தெடுத்தது போதும் இனி உங்கள் கவிதை வாழ்வில் வைரங்கள் வைடூரியங்கள் கிட்டட்டும் வாழ்த்துக்கள் கவிஞரே …!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

