பணம் என்பது ஒரு வகையான நாணயம், இது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது . ஒரு மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக நாணயங்களின் மதிப்புகள் ஒட்டுமொத்த பொருளாதாரச் சந்தையில் இயங்கும் வழங்கல் (Demand) மற்றும் தேவையைப் பொறுத்து (Supply) மாறுகின்றன. இத்தகைய நாணயங்களை கையாளுவது அரசாங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது. அதேபோல, பல சமயங்களில் பணவீக்கம் காரணமாக பயனற்றதாகி போய்விடுகின்றன. . பணம் எவ்வாறு உருவானது என்பதையும் அதற்கு மாற்றாக உருவாகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் நாணயத்தைப் பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.
பணம் எவ்வாறு உருவானது?
ஆரம்பத்தில் பொருட்களின் பரிமாற்ற ஊடகமாக கால்நடைகள் இருந்தன. வரலாற்றுரீதியாக, அரியவகை உலோகங்கள் பணத்தின் ஆரம்ப வடிவங்களாக உருவாயின. காரணம், அவை விலைமதிப்பற்றதாகவும், பருண்மையானதானகவும் இருந்தன. உதாரணமாக தங்கம் என்ற நாணயத்தை எடுத்துக் கொள்வோம். இது சீரானதாகவும், நீடித்து இருக்கும் தன்மையுடையதாகவும், பகுக்கக்கூடியதாகவும், அதிக மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் இருப்பதால்தான் தங்கம் பரிமாற்ற ஊடகமாக விளங்கியது. மேலும் அது சிறிய அளவில் இருக்கும் பொருளாக இருந்தாலும், ஒப்பீட்டளவில் அதிக அளவிலான உழைப்பு நேரத்தை தன்னுள்ளே குவித்து வைத்திருக்கிறது. காலப்போக்கில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய நாணயங்கள், மதிப்பு கூட்டப்பட்ட காகிதத்தால் மாற்றப்பட்டன. பரிமாற்றப்படும் பொருட்களின் உண்மையான மதிப்பை, இந்தக் காகிதப் பணம் பிரதிபலித்தது. அதன் மதிப்பு உண்மையானதாகவும் நிலையானதாகவும் இருந்தது.
இன்று நாம் காணும் நாணயங்களின் மதிப்பு, சந்தைப் பரிவர்த்தனைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் வலிமையை பிரதிபலிக்கிறது. வட்டி விகிதங்கள், புதிய பணத்தை அச்சிடுதல் மற்றும் அச்சிடுதல் ஆகியவற்றின் மூலம் மத்திய வங்கிகள் பணத்தின் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
பணத்தின் செயல்பாடுகள் யாவை?
சாராம்சத்தில், பணம் ஒரு சமூக உறவை அடிப்படையாகக் கொண்டது; மொத்த சமூக செல்வத்தின் பிரதிநிதியாகவும் விளங்குகிறது. இது வரலாற்று ரீதியாக பொருளாதார வளர்ச்சியின் விளைவாக உருவானது, அது பொருட்களின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தின் வளர்ச்சியின் விளைவாக எழுந்தது. பணத்தின் செயல்பாடுகளை மார்க்ஸ் பின்வருமாறு வரையறுக்கிறார்:
- கணக்கு வழக்கின் ஓர் அலகு: பணம் என்பது மதிப்பின் அளவீடாகத் திகழ்கிறது. வெவ்வேறு பொருட்களில் உள்ள சமூக ரீதியாக தேவையான உழைப்பை நேரத்தின் அதன் மதிப்பால் வெளிப்படுத்தப்படுகிறது. மதிப்பை உள்ளடக்கியுள்ள பணம், சந்தை விலைகளால் குறிக்கப்படுகிறது.
- பரிமாற்றத்தின் ஓர் ஊடகம்: பொருட்களின் புழக்கத்தில் பணம் இரண்டு வகையான செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. முதலாவது விற்பனை செய்தல் இங்கு பணத்திற்காக பொருள் பரிமாற்றம் செய்து கொள்ளப்படுகிறது. இரண்டாவது வாங்குதல். இங்கு பொருட்களுக்காக பணம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. .
- மதிப்பின் சேமிப்பு: காலப்போக்கில் திரட்டப்பட்ட செல்வத்தை பராமரிக்கவும் பாதுகாக்கவும் அனுமதிக்கிறது.
- பணம் செலுத்துவதற்கான வழிமுறை. பணம் என்பது கடன்களைத் தீர்க்கவும், வரிகளை செலுத்தவும் அனுமதிக்கிறது.
கிரிப்டோகரன்சி என்றால் என்ன?
கிரிப்டோ கரன்ஸி என்பவை டிஜிட்டல் நாணயங்கள் அல்லது மெய்நிகர் நாணயங்கள் என்றழைக்கப்படுகின்றன. இவற்றிற்கு பொருள்வடிவம் கிடையாது. இவை முழுவதும் இணையத்தில் மட்டுமே புழங்கக்கூடிய பணமாகும். இவற்றை சேமிக்க ஒரு பணப்பை இருக்கும். அதில் இந்த நாணயங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு பொருளை அல்லது சேவையை வாங்க விரும்பினால் விற்பனையாளரிடம் இந்த நாணயங்களைக் கொடுத்து பரிமாற்றம் செய்துகொள்ளலாம்.
மெய்நிகர் நாணயங்கள் என்பவை, வழக்கமான காகிதம், அரசு முத்திரை, உலோகம், போன்றவை எதுவும் இல்லாமல் மெய்நிகர் முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முகவரியிட்ட பணப்பைகளில் சேமித்து வைக்கப்படும். இந்த நாணயங்களுக்கு பரவலாக்கப்பட்ட வடிவமைப்பு உள்ளது என்று சிலர் சிலாகிக்கின்றனர்.
மெய்நிகர் நாணயங்கள் பரிமாற்ற ஊடகமாக செயல்பட முடியும். அதன் பரிவர்த்தனைகளை செயல்முறைப்படுத்தவும், பாதுகாக்கவும், சரிபார்க்கவும் நிகர்நிலைத் (ஆன்லைன்) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன. பொதுவாக, இந்த மெய்நிகர் நாணயங்கள் எந்த ஒரு மத்திய வங்கியாலும் கட்டுப்படுத்தப் படுவதில்லை. இந்த மெய்நிகர் நாணயங்கள் பிளாக்செயின் போன்ற இணையத் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிளாக்செயின் என்பது பாதுக்காக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும். இந்த தொழில்நுட்பம் எண்ணற்ற கணினிகளை ஒருங்கிணைக்கும் ஒரு தொகுப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
பங்குச் சந்தைக்கும், உண்மையான நாணயத்திற்கும் குறியீடுகள் வழங்கப்படுகின்றன. அதை போன்று இந்த டிஜிட்டல் அல்லது மெய்நிகர் நாணயங்களுக்கும் குறியீடு கொடுக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் நாணயங்கள் பங்குச் சந்தைகளின் வளர்ச்சியின் விளைப் பொருளாகும். பங்கு சந்தைக்கான பண்புகளிலிருந்து குறிப்பாக ஊக வணிகம் போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து இந்த டிஜிட்டல் நாணயங்கள் தப்பிக்க முடியாது.
பணப்பையில் உள்ள நாணையங்களை மற்றொருவருக்கு அனுப்ப வேண்டுமென்றால் அதற்கு வழங்கப்பட்ட குறிச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். மற்றொருவரிடம் இருந்து நாணயங்களை வாங்க வேண்டுமென்றால் பணப்பையின் முகவரியை அனுப்ப வேண்டும். இதற்கு வழங்க்ப்படும் குறிச்சொல்லை மறந்து விட்டால் நாணயங்களை ஏதும் செய்ய இயலாது.
பிட்காயின் என்றால் என்ன?
பிட்காயின் என்பது ஒரு மெய்நிகர் நாணயமாகும். இதுதான், முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மெய்நிகர் நாணயம் ஆகும். இது 2009 இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. பணப்பரிமாற்ற விஷயத்தில் இது ஒரு வகையான புரட்சி என்று சிலர் அறிவித்தனர். அதன் பரவலாக்கப்பட்ட வடிவமைப்பு சிலரைக் கவர்ந்தது.
இது டாலர், ரூபாய், யூரோ போன்று காகிதத்தால் செய்யப்பட்ட பணம் அல்ல. மாறாக இது இணையத்தில் இயங்கும் ஒரு மென்பொருள் ஆகும். அதாவது பிட்காயின் என்பது ஒரு மொபைலில் பயன்படுத்தப்படும் ஒரு செயலி (application) அல்லது கணினியில் பயன்படுத்தப்படும் நிரலைப் (programme) போன்றது. அவ்வளவுதான். ஆயினும் பொருட்களை வாங்குவது, விற்பது, சேமிப்பது போன்ற அனைத்து செயல்பாடுகளையும், உண்மையான பணத்தால் பரிவர்த்தனைச் செய்வது போலவே, பிட்காயினை வைத்துச் செய்ய இயலும். பொதுவில் வழங்கும் காகிதப் பணம் ஒரு மைய வங்கியால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. பொதுவாக பிட்காயினைக் கட்டுபடுத்த அது போன்ற மைய அதிகார அமைப்பு எதுவும் கிடையாது. பிட்காயின் ஒரு கணினி வலையத்தில் செயலாக்கப்பட்டு, அந்த வலையத்தில் உள்ளவர்களே பிட்காயினை நிர்வகித்துக் கொள்கிறார்கள்.
இந்த பிட்காயின்களை வைத்திருப்பவர்கள் பொருட்களையும், சேவைகளையும் நிகர்நிலை (ஆன்லைன்) மூலம் பெற்று, அவற்றின் வரவு செலவுகளைப் பராமரிக்கலாம். இது தனிப்பட்ட நபர்களுக்கான பிட்காயின் பணப்பையை வழங்குகிறது. ஒரு பயனாளி மற்றவர்களுக்கு பிட்காயின்களை அனுப்பவும் பெறவும் அனுமதிக்கிறது.
பிட்காயினுக்கு பின்னால் “பிளாக்செயின்” என்று அழைக்கப்படும் ஒரு புதிய தொழில்நுட்பம் உள்ளது. இதனுடன் தொடர்புடைய பல விசயங்களை, ஒருங்கிணைக்கும் ஒரு வடிவமாகும். இதற்கு என்று ஒரு மின் பேரேடு வழங்கப்படும். பிட்காயினைப் பயன்படுத்தி ஒருவர் பரிவர்த்தனை செய்யப்படும் போது, அதற்காக வழங்கப்பட்ட பேரேடுகளின் விவரங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகிறது,
பிட்காயின் என்ற டிஜிட்டல் நாணயம் புழக்கத்திற்கு வந்தபோது அதன்விலை ஒரு டாலருக்கும் கீழே இருந்தது. இன்று ஒரு பிட் காயின் வாங்கவேண்டுமென்றால் ஆயிரக்கணக்கில் டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும். பிட்காயின் மட்டுமன்றி இன்றைய சந்தையில் ஏராளமான கிரிப்டோ நாணயங்கள் வந்துவிட்டன. இவற்றில் எது அதிக அளவில் மக்களை பயன்பாட்டைக் கொண்டுள்ளதோ அவையே வணிக ரீதியிலும் வெற்றிபெறுகிறது. சில வணிகக் கடைகளில் இதை மற்ற நாணயங்களைப் போலவே பரிமாற்றத்திற்கு ஏற்றுக்கொள்கின்றனர்.
பிட்காயின் மற்றும் அதைப் போன்ற மெய்நிகர் நாணயங்கள் பரிமாற்றம் செய்யப்படும் முறைகளில் இடைத்தரகர்ளோ அல்லது அரசாங்கங்களோ குறுக்கீடு செய்யவோ தலையீடு செய்யவோ முடியாது. அந்தளவுக்கு முற்றிலும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இந்த மெய்நிகர் நாணயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. பிட்காயின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், டிஜிட்டல் நாணயங்கள் மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
தனியார் நிறுவங்களின் டிஜிட்டல் நாணயங்கள்
தற்போதுள்ள காகித நாணயங்களுக்கு மாற்றாக இந்த மெய்நிகர் நாணயங்களைப் பயன்படுத்த சில நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன. ஐஆர்சிடிசி, அமேசான், கூகிள், பேடிஎம், ஏர்டெல் போன்ற சில நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக இந்தப் பணத்தை சேமிக்கப்பதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளன. வாடிக்கையளர்கள் இந்நிறுவனங்களின் இந்தப் பணப்பையில் அவற்றை வைத்திருக்க முடியும். பிட்காயின், ஈத்தரீயம் உள்ளிட்டவை அனைவராலும் அறியப்பட்ட மெய்நிகர் நாணயங்களகும்.
முகநூல் நிறுவனமானது இணைய வர்த்தகம் மற்றும் சர்வதேச பணப்பரிமாற்றத்துறையில் இப்போது கால்பதித்துள்ளது. அந்த நிறுவனம் லிப்ரா என்னும் மெய்நிகர் நாணயத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த மெய்நிகர் பணத்தை பரிமாற்றம் செய்து கொள்ளவும், சேமித்து வைக்கவும் கலிப்ரா எனப்படும் பணப்பையையும் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த லிப்ரா நாணயங்களை நிர்வகிக்க முகநூல் நிறுவனம், 28 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதில் முகநூல் நிறுவனத்தின் தலையீடு அதிகமிருக்காது எனவும், பயனாளர்களின் அனுமதியில்லாமல் தகவல்கள் இதற்காக கையாளப்படமாட்டாது எனவும் அந்த நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது. முகநூல் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் மூலம் வங்கிக்கணக்கு இல்லாதோர் கூட பணப்பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இதற்கான கட்டணம் மற்ற நிறுவனங்களைக்காட்டிலும் மிகவும் குறைவாகவே இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பணப்பரிமாற்றத்தின் போது வாடிக்கையாளர்கள் இழக்கும் பணத்தை அந்த நிறுவனமே திரும்ப அளிப்பதாகவும் உத்திரவாதம் அளித்துள்ளது. சில ஆண்டுகளில் முகநூல் நிறுவனம் இந்த செயலியை சந்தைப்படுத்தும் என அறிவித்துள்ளது.
மெய்நிகர் நாணயம், பணத்தின் வரலாற்றுப் பாத்திரத்தை முன்னெடுக்குமா?
டாலர் அல்லது யூரோ போன்ற காகித நாணயங்களுக்கு உண்மையான மாற்றாக இந்த மெய்நிகர் நாணயங்கள் இருக்க முடியுமா என்பது கேள்விக் குறிதான். மெய்நிகர் நாணயத்தின் விலையானது எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றது. அது பொருட்களின் பரிமாற்றம் செய்யப்படுவதன் அடிப்படையில் நிர்ணயிப்பதில்லை. மாறாக ஊக வணிக நடவடிக்கைகளால் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது நம்பகமான கணக்காகவோ, பரிமாற்ற ஊடகமாகவோ, மதிப்பின் சேமிப்பாகவோ அல்லது பணம் செலுத்தும் வழிமுறையாகவோ பயன்படுத்த முடியாது.
மெய்நிகர் நாணயத்தின் உண்மையான பயன்பாடு என்பது பெரும்பாலும் இணையத்தின் நிழலுடன் மட்டுமே தொடர்பு கொண்டிருக்கும். இந்தக் காரணங்களினால் மெய்நிகர் நாணயத்தின் மதிப்பு ஒரே நாளில் மாற்றத்திற்கு உள்ளாகும் அபாயங்கள் எப்போதும் இருந்து கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த நாணயத்தின் மதிப்புகள் பாரதூரமான வீழ்ச்சிக்கு உள்ளாக நேரிடும். மெய்நிகர் நாணயத்திற்கான விலைகள் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும்.
கிரிப்டோகரன்சியின் வரம்புகள்
பணம் எவ்வாறு வரலாற்று ரீதியாக உருவானது என்பது பார்த்தோம். வெளியிலிருந்து எந்தவொரு சக்தியினாலும் பணம் சமூகத்தின் மீது திணிக்கப்படவில்லை. பணம் ஒரு சமூகத்தின் பரிவர்த்தனைக் கருவி. இது பொருட்களின் உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தின் தேவைகளிலிருந்தும் உருவானது. பணத்தை ஒழிக்க முடியாது. பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால், இந்தப் பணத்தை உருவாக்கிய பொருளாதார அமைப்பை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்.
பாரம்பரிய பணத்திற்கு மாற்றாக மெய்நிகர் நாணயங்களை பயன்பாட்டு விடுவது என்பது, குதிரைக்கு முன்நால் வண்டியைப் பூட்டுவதைப் போன்றதாகும். முதலாளித்துவம் மற்றும் தேசிய அரசின் எல்லைக்குள் ஒரு ஆழமான உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தற்காலிக தீர்வாக முன்வைக்க விரும்புகின்றனர். வளர்ந்து வரும் பரிவர்த்தனைகளின் விரிவடைந்துவரும் சந்தையின் கோரிக்கைகளுக்கு இணங்க, பண விநியோகத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் பண புழக்க முறையை இனியும் முறைப்படுத்தவோ அல்லது எளிதில் கையாளக் கூடியதாகவோ இருக்காது. எனவே இந்தக் காகிதப் பணத்திற்கு மாற்று தேடி அனைத்து அரசுகளும் பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிட்காயினின் செறிவும் குவிதலும் பொதுவாக சமூகத்தில் செல்வத்தின் குவிப்பை பிரதிபலிக்கிறது. ஒரு பகுப்பாய்வின்படி, 95% பிட்காயின் வெறும் 4% பேர்களுக்கு சொந்தமானது. பிட்காயின் வடிவத்தில் வைத்திருக்கும் மொத்த செல்வத்தில் பாதி அனைத்து பிட்காயின் பயனர்களில் வெறும் 1% மட்டுமே., இன்று நம்மைச் சுற்றியுள்ள பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் மத்திய வங்கி தலையீட்டின் விளைவாக அல்ல, மாறாக சந்தை அராஜகத்தின் விளைவாகும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எப்போதுமே, முதலீட்டாளர்கள் தொடர்ந்து விரைவான லாபத்தை ஈட்ட முற்படுகிறார்கள். மார்க்ஸ் தனது எழுத்துக்களில் விளக்கி கூறியுள்ளதைப் போன்று, முதலாளித்துவத்தின் குறிக்கோள் பணத்திலிருந்து பணத்தைச் சம்பாதிப்பதாகும். இந்தச் செயல்பாட்டில் சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதாவது தயாரிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குரியதாகும். முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த விஷயம் வங்கி மற்றும் கடன் அமைப்பு முறைகளாகும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு அனைத்து பணத்தையும் மூலதனமாக – அதாவது லாபத்தை ஈட்டக்கூடிய பணமாக மாற்றுவதாகும்.
பல தனிநபர்கள் சேமித்து வைத்திருந்த சேமிப்புகள் எல்லாம் ஒன்றாக பறிக்கப்பட்டு, முதலீட்டு வங்கியாளர்களின் கைகளில் குவிக்கப்படுகின்றன. பங்குச் சந்தையும் பல்வேறு நிதிக்கருவிகளும் பணம் மட்டும் காய்க்கும் மரங்களாக கருதப்படுகின்றது. இத்தகைய ஊகச் செயல்பாடுகள் கற்பனையான மூலதனத்தை உருவாக்குகின்றன.
இங்கு இலாபங்கள் உண்மையான உற்பத்தியில் இருந்து பெறப்படவில்லை, மாறாக, அது நிதி ரசவாதத்திலிருந்து பெறப்படுகிறது என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். இந்த நிதி நடவடிக்கைகளில் பெரும்பாலானவை உண்மையான பொருளாதாரத்துடன் சில பிணைப்புகளைக் கொண்டுள்ளன என்பது உண்மைதான். ஆனால் ஒரு நிறுவனம் எதிர்கால லாபத்தை பங்குகளாக எதிர்பார்க்கின்றது. அரசாங்க பத்திரங்கள் ஒரு நாட்டின் எதிர்கால வரி வருமானத்தை கோருகின்றன.
முதலீட்டாளர்களிடையே இன்னும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமே, பிட்காயினின் விலையை நிர்ணயிக்கும் ஒரே விஷயமாக இருக்கிறது. ஊக நடவடிக்கைகளைத் தவிர பிட்காயின் என்பது உண்மையில் எந்தவொரு பொருளாதாரச் செயல்பாட்டையும் நிறைவேற்றவில்லை என்பது தெளிவு. மெய்நிகர் நாணயங்கள் பாரம்பரிய பணத்திற்கு மாற்றாக எந்தவொரு உண்மையான பாத்திரத்தையும் வகிக்க இயலாது. எளிமையாகச் சொன்னால், பிட்காயின் போன்ற மெய்நிகர் நாணயங்கள் காகிதப் பணத்திற்குத் தேவையான அடிப்படை குணங்களைக் கொண்டிருக்கவில்லை.