Moondru Pernargal Short Story by Ramesh Prem Synopsis 87 Written by Ramachandra Vaidyanath. சிறுகதைச் சுருக்கம் 87: ரமேஷ் பிரேமின் மூன்று பெர்னார்கள் சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்




மனிதராக இருப்பதற்கான துணிவு என்பது தீமைகளை உறுத்தலின்றிச் செய்வதற்கான தெளிவில் ஆரம்பிக்கிறது.  இறையியல் என்பது மனிதர் தாம் இழந்துபோன விலங்குத் தன்மையை ஈடுசெய்வதற்காக உருவாக்கிக் கொள்ளும் வலி நீக்கும் மருந்து.

மூன்று பெர்னார்கள்
                                         ரமேஷ் – பிரேம்

 1998ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் பிற்பகல் இரண்டு மணி பதினைந்து நிமிடங்கள் கடந்த நிலையில் புதுச்சேரி கடற்கரையோர மதுபான விடுதியான கடற்காகத்தின் மேல்மாடியில் பருகி முடிக்கப்படாத இறுதி மிடறு மேசை மீதிருக்க, கூடை வடிவ பிரம்பு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ழான் பெர்னாரின் உயிர் பிரிந்திருந்தது.

அவரைப் பொறுத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது.  அறுபது ஆண்டுகள் ஆறு மாதங்கள் பதினேழு நாட்கள் வாழ்ந்து முடிந்தாகிவிட்டது.  நீர்  கலக்காத இறுதி மிடறு மது மெல்ல மெல்ல காற்றில் ஆவியாகிக் கொண்டிருந்தபோது ழான் பெர்னாரும் உடன் ஆவியாகி அற்றுப் போயிருந்தார்.

கொட்டும் மழையில் ஆளரவமற்ற புதுச்சேரிக் கடற்கரைச் சாலையில் நனைந்தபடி மெல்ல நடந்து செல்வது போன்ற சுகம் போகத்தில்கூட இல்லை எனச் சொல்லும் பெர்னாரை, எட்டு ஆண்டுகளுக்கு முன் நான் நனைந்தபடி நடந்து கொண்டிருக்கும்போது முதன் முதலாக எதிர்கொண்டு ஒருவருக்கொருவர் அறிமுகமானோம்.

நெடிய உருவகம்.  தமிழனா ஐரோப்பியனா என அறுதிட இயலாதத் தோற்றம்.

கப்பித்தான் சிமோனல் தெருவில் வெளித்தோற்றத்தில் காறை பெயர்ந்து  இடிந்து கிடக்கும் சுவர்களைக் கொண்ட அவருடைய வீட்டின் உள்தோற்றம் அத்தனை மோசமில்லை.  வரவேற்பறைச் சுவரில் வெள்ளைக்காரத் தந்தையுடன், கம்மல் மூக்குத்தி அணிந்து குங்குமமிட்ட நெற்றியுடன் தமிழ்க் கிறித்துவ அன்னை, கருப்பு வெள்ளைப் புகைப்படம் தேக்குச் சட்டமிடப்பட்டு பெரிய அளவில் தொங்கிக் கொண்டிருக்க எதிர் மூலையின் வலப்பக்கத்தில் இலைகளைக் கழித்துவிட்டு நட்ட சிறுமரம் போல தொப்பிகளை மாட்டிவைக்கப் பயன்படும் மரத்தாலான ஒரு பொருள்.  

உள்கட்டுக்குள் நுழைந்ததும் வடலூர் ராமலிங்க சுவாமிகளின் மிகப் பெரிய வண்ண ஓவியம், தரையிலிருந்து சுவரில் சாய்ந்த நிலையில் நின்ற காவியுருவத்தின் காலடியின் பணிப் பெண் வைத்துவிட்டுச் செல்லும் நான்கைந்து செம்பருத்திகள்,  சிறு நடையைத் தாண்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் இரண்டு அறைகள்.    இடப்பக்கம் படுக்கையறை.  வலப்பக்கம் அவருடைய பூசையறை எனச்சொன்னார். கதவிற்கும் நிலைச் சட்டத்திற்குமாக ஒட்டடைகள் அடர்ந்திருந்த நிலையில் புழக்கமற்ற அந்த அறையை பூசையறை என்கிறாரே என அப்பொழுது நினைத்துக் கொண்டேன்.  ஒருமுறை பகலில் நான் அங்கிருந்தபோது பணிப் பெண்ணை அழைத்து வலப்பக்க அறைக் கதவைச் சுத்தம் செய்யச் சொன்னேன்.  அதற்கு அவள் ‘மெர்ஸ்யே திட்டுவாரு’ எனச் சொல்லிவிட்டுச் சென்றது எனக்கு விநோதமாக இருந்தது.    

பெர்னாரின் விநோதமான பழக்க வழக்கங்களையும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் கேட்டு ரசிப்பதில் என் மனைவிக்கு அலாதியான விருப்பம் இருந்தது.

பெர்னாரை நான் அடிக்கடி சந்திப்பது போய் தினமும் ஒவ்வொரு மாலையும் அவருடன் கழிவதையும், அளவுக்கு அதிகமாகக் குடிப்பதையும், அடிக்கடி சுட்டிக்காட்டி வந்த என் மனைவிக்கு அவரின் மேல் சிறு கோபமும் வெறுப்பும் மெல்ல வளரத் தொடங்கியது.  

பிரான்சிலிருக்கும் தன் வெள்ளைக்கார மனைவி குறித்தும் தன்னுடைய மகனைக் குறித்தும் பெர்னார் அடிக்கடி குறிப்பிடுவார்.  விவாகரத்து செய்துகொள்ளாமலேயே மிக இளம் வயதிலிருந்தே தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் சொன்னார்.  மகன் ஆண்டுக்கு ஒரு முறை வந்துத் தன்னைப் பார்த்துவிட்டுச் செல்லும் பழக்கமும் நாளடைவில் குறைந்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறார். 

ஒருமுறை அவர் சொன்னார்.  தனது வெள்ளைக்காரத் தகப்பனான ஃப்ரான்சுவா பெர்னாருக்கும் வடலூர் வள்ளலாருக்கும் இடையே ஆழமான பக்திப் பிணைப்பு இருந்தது என்று.  வள்ளலார் என்னுடைய சாதியைச் சார்ந்த மாபெரும் யோகி என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.  பெர்னாரின் அன்னையும் என் சாதியைச் சார்ந்த கிறித்துவர் என அறிய வந்தபோது எங்களுக்குள் சாதிய நெருக்கமும் வளர்ந்து விட்டதைத் தவிர்க்க முடியவில்லை.  

வள்ளலாரைப் பற்றிய ஒரு பேச்சின்போது பெர்னார் சொன்ன தகவல் என்னை அதிர்ச்சியடைய வைத்தது.  தான் நூற்று இருபத்தியைந்து ஆண்டுகள் உயிர் வாழப் போவதாகச் சொன்னபடி அந்த நீண்ட ஆயுளை வாழ்ந்து முடித்தவர் எனச் சொன்னார்.  கிழம் போதையேறி உளறுகிறது என அசிரத்தையோடு கேட்டுக் கொண்டிருந்தேன்.  தனக்குப் பத்து வயது ஆகும்போதுதான் அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டில்தான் அந்தச் சுடர் அணைந்தது என அவர் சொன்னதை என் மனைவியிடம் நான் சொல்ல தயவு செய்து இனி குடித்துவிட்டு மகான்களைப் பற்றி பேச வேண்டாம் என கடுமையோடு முகத்தை வைத்துக் கொண்டு சொன்னாள். 

ஒரு முறை பெர்னாரிடம் நான் கேட்டேன் ‘உங்களுடைய வீட்டின் எல்லா இடத்திலும் நான் புழங்கி வருகிறேன்.  உங்களுடைய பூசையறையை மட்டும் இதுவரை எனக்கத் திறந்து காட்டவில்லையே?’ என்று.  அதற்கு அவர் நெடுநேரம் மௌனமாக இருந்தார்.  பிறகு நிதானமாக ‘வாழ்க்கையில் வினோதமும் யதார்த்தமற்ற போக்கும் மிக அவசியம்.  ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமற்ற நினைவு எப்படி அவசியமோ அது போலவே நிச்சயமற்ற புனைவும் அவசியம்’ என்று பிரெஞ்சு மொழியில் சொன்னார்.

நான் பெர்னாரிடம் சொன்னேன் ‘வள்ளலார் இறக்கவில்லை அவர் மறைந்துவிட்டார்.  சித்தர்கள் என்றைக்குமே அழிவற்றவர்கள் நம்மோடு என்றைக்கும் அலைந்து கொண்டிருப்பவர்கள்’.

பெர்னார் பகடி செய்தபடி என் பேச்சை மாற்ற அவர் எத்தனிப்பதாக தெரிந்தது.

நான் கடுப்பாகிப் போனேன்.  ‘வள்ளலாரை உமது குடும்பச் சொத்துபோல பேசுகிறீரே உமது பொய்யுக்கும் ஒரு அளவு வேண்டாமோ’ எனக் கத்திவிட்டேன்.

கிழவர் ஆடிப்போய்விட்டார்.  தன்னிலைக் குலைந்த அவர் விருட்டென எழுந்து நின்று ஒரு பெரிய சாவியை எடுத்துவந்து பூசையறையைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு வந்து என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு பூசையறைக்குள் சென்றார்.  பிறகு நடந்தவைகளெல்லாம் எனக்கு நிச்சயமற்று தெரிகின்றன.  என் மனைவியிடம் அதைச் சொல்ல அந்தக் கிழவரோடுச் சேர்ந்து நீங்களும் பயித்தியமாகிவிட்டீர்கள் என கத்தினாள்.  அதற்குப் பிறகு இரண்டு மாதம் கழித்து கிழவர் இறந்த செய்திக் கேட்டுத்தான் நான் அவர் வீட்டுக்குப் போனேன்,  ஒருவாரம் அவருடைய உடல் ஜிப்மர் சவக்கிடங்கில் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மகன் பிரான்சிலிருந்து வந்தபிறகு ஈமக்கிரியையை முடித்தனர்.  

ழாக் பெர்னார் இளவயது கிழவரைப் போலவே இருந்தான்.  என்னைவிட இரண்டு வயது இளையவன்.

“கடைசி காலத்தில் அப்பாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்திருக்கிறீர்கள். அவருடய பூசையறையின் மர்மம் பற்றியும் அறிந்திருப்பீர்களே!” என ஒருவித கிண்டல் தொனிக்கும்படி கேட்டான்.

நான் மௌனமாக இருந்தேன்.

“சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒரு சாமியாரின் பிணத்தை வைத்துக் கொண்டு மாரடிக்கிறார்.  இதனால்தான் என் அம்மா இவரைப் பிரிந்து என்னை அழைத்துக் கொண்டு பிரான்சுக்கே போய்விட்டார்.  என் தாத்தா காலத்துப் பிணம்.  இன்னம் சவப்பெட்டிக்குள் கிடக்கிறது.  இதை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்.”

‘பதப்படுத்தப்பட்ட அந்த உடலை பெட்டியோடு எடுத்துவந்து நாம் வைத்துக் கொள்ளலாமா’ என என் மனைவியிடம் கண்கள் கலங்கக் கேட்டேன்.

‘நான் உங்களுடன் வாழ்வதா வேண்டாமா’ என அமைதியாகக் கேட்டுவிட்டு விருட்டென எழுந்து சென்று படுக்கையறைக் கதவை அடைத்துக் கொண்டாள்.

மறுநாள் ழாக் பெர்னாரைச் சந்தித்தேன்.  என்னைப் பார்தததும் “என்ன முடிவு செய்தீர்கள்?” எனப் பதறினான்.

“அரசிடம் ஒப்படைப்பது சாத்தியமில்லை.  அரசாங்கமும் பத்திரிகை மீடியாவும் நம்மை கேள்விகேட்டுத் தொலைத்துவிடும்.  அந்த உடம்பின் ரகசியத்தை வெளிப்படுத்தினால் அது சமயப் பிரச்சினையாகி அது என் உயிருக்கே ஆபத்தாகிவிட்டும்.  இந்தப் பிணம் ஒரு சாமியார் மட்டுமல்ல இந்திய ஆன்மிகத்தின் ஒரு சிகரம். பிரெஞ்சுக்காரனான உனக்கு இதன் வெகுமானமோ அற்புதமோ இதன் மூலம் உருவாகப் போகும் ஆபத்துக்களோ என்னவென்று தெரியாது” என்று நிதானமாகச் சொன்னேன்.

நீண்ட நேரம் அமைதியாக ஒயினைப் பருகியபடி இருந்தோம்.  பிறகு எனது திட்டத்தை அவனிடம் சொன்னேன்.  மகிழ்ச்சியில் என்னைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

விடிந்தால் போகி விடிய விடிய குடித்தபடி இருந்தோம்.  என் மனைவியோ தொலைபேசியில் பதறியபடியே இருந்தாள்.  அதிகாலை மூன்று மணிக்கு பூசையறைக்குள் சென்றோம்.  சவப்பெட்டி ஒரு காவித் துணியால் போர்த்தப்பட்டிருந்தது.  துணியை விலக்கிவிட்டு ஆணியறைப்படாத பெட்டியைத் திறக்க முற்பட்டேன்.  ழாக் தடுத்தான்.  நான் அவனை ஏறிட்டுப் பார்த்தேன்.  பிறகு மூடியைத் திறந்து பார்த்தேன்.  காவித் துணியால் சுற்றப்பட்ட ஒரு பொட்டலம்.  பெட்டியோடு தூக்கிவந்து வாசலில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினோம்.  சடசடவென தீ எழுந்தது.  

ஆங்காங்கே வீட்டு வாசல்களில் எதையெதையோ போட்டுக் கொளுத்தத் தொடங்கிவிட்டனர்.  அரை மணிநேரத்தில் வாசலில் சாம்பல் புகைந்தது.  சாம்பலில் ஒரு கை அள்ளி எனது கைக்குட்டையில் கட்டிக் கொண்டேன்.  வீட்டுக்குள் சென்று வள்ளலாரின் படத்தை எடுத்து வந்து எனது காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு ழாக்கிடம் கை குலுக்கி விடை பெற்றேன்.  வழி நெடுகிலும் வாசல்கள்தோறும் பெருந்தீ வளர்ந்து கொண்டிருந்தது.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *