ஏழு நிறங்களின் மலை (Mountain of seven colors)
– ஏற்காடு இளங்கோ
தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள நாடு பெரு ஆகும். பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரில் ஏழு நிறங்களின் மலை (Mountain of seven colors) அமைந்துள்ளது. முதலில் இது வினிகுங்கா (Vinicunca) என்று அழைக்கப்பட்டது. வினிகுங்கா என்ற பெயர் பெருவின் தாய்மொழியான கெச்சுவா என்பதிலிருந்து உருவானது. இதற்கு வண்ணமலை என்று பொருள்.
இது வண்ணங்களின் மலை (Mountain of color) மற்றும் வானவில் மலை (Rainbow Mountain) என்றும் அழைக்கப்படுகிறது. இது கஸ்கோ நகரில் இருந்து தென்கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 5,036 மீட்டர் உயரத்தில் (16,522 அடி) இடம் பெற்றுள்ளது. இதன் சிகரம் 17,060 அடி உயரம் கொண்டது.
:max_bytes(150000):strip_icc()/Rainbow-Mountain-Peru-Andes-PERURNBW0518-154bc728fa914b509c934c93ab76aa74.jpg)
இந்த மலை சுமார் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. இந்த மலை 2013 ஆம் ஆண்டு வரை முற்றிலும் பனிப் படலத்தால் மூடப்பட்டிருந்தது. பனி உருகத் தொடங்கிய போது, நிலத்தில் உள்ள தாதுக்களுடன் தண்ணீர் கலந்து பல வண்ணங்களாக மாற்றியது. இது 14 வெவ்வேறு தாதுக்களின் அடுக்குகளால் ஆனது. இது பல வண்ண அடுக்குகளுக்காக புகழ் பெற்றது. சில ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதன் அசாதாரண வண்ணத் தட்டு ஒரு நம்ப முடியாத வண்ணக் காட்சியாகும். மலையின் மேற்பரப்பு இளஞ்சிவப்பு, சிவப்பு, பச்சை, நீலம், ஊதா, மஞ்சள், பழுப்பு மற்றும் வேறு சில நிறங்களையும் கொண்டுள்ளது. இது திகைப்பூட்டும் வண்ணக் கலவையைக் காட்டுகிறது. மந்தமான சூரிய ஒளியில் கூட இதன் வண்ணங்களைக் காணமுடியும். இது விசித்திரக் கதைகள் எழுதுவதற்கு ஏற்றக் காட்சிகளை வழங்குகிறது.
இந்த ஏழு நிறங்களின் மலை பெருநாட்டின் புவியியல் அதிசயங்களில் ஒன்றாகும். தற்போது சர்வதேச அளவில் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. இதைக் காண 5 கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். மேலும் 1.5 கிலோமீட்டர் தூரம் செங்குத்தாக மலையேற வேண்டும். அப்போதுதான் இந்த மலையின் வண்ணங்களைக் காணமுடியும். ஒருவர் இறப்பதற்கு முன்பு பார்க்க வேண்டிய இடம் என இங்கு சென்று வந்தவர்கள் கூறுகின்றனர்.
எழுதியவர் :

ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

