மூன்று வேளைக்கு என்று மாத்திரை மருந்து எழுதித் தருகின்றனர் மருத்துவர்கள். எல்லா வேளைக்கும் இசை என்று எழுதித் தந்தால் ஆகாதா என்று தோன்றுகிறது. எல்லாப் பொழுதும் எல்லோரும் இசையோடு நடக்காவிட்டாலும், இசை சூழவே நகர்கிறது வாழ்க்கை, வானத்து நிலா கூடவே நடந்து வருவது மாதிரி.

நம்ப மாட்டீர்கள், மேலே உள்ள பத்தியை மட்டும் மடிக்கணினியில் அடித்துவிட்டு அடுத்த இரு நாட்கள் முழுக்க வேலைகள், சில மாநாடுகள், குடும்ப சங்கமம் ஒன்று என சுற்றிக் கொண்டிருந்ததில், கட்டுரையைத் தொடராமல் வைத்திருந்தேன். அடுத்த நாளும் திருமண நிகழ்வுக்கு அதிகாலை சென்று வந்தது, அக்கா மகன் கீழே விழுந்ததில் வலக்கையில் பிரச்சனை என்று மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் சிறு எலும்பு முறிவு என்றறிந்து மனமுறிந்து முதலுதவிக்குப் பின் அடுத்தகட்ட சிகிச்சைக்கு சிந்திக்க நேரமெடுத்து அவர்கள் இல்லத்தில் கொண்டுவிட்டு வீடு திரும்பியபின் தான் தெரிந்தது, காலையில் இருந்தே உடலில் வாட்டிக் கொண்டிருந்தது ஜலதோஷம் மட்டுமல்ல, காய்ச்சலும் இருப்பது! மறு நாள் முழுக்க ஓய்வு, மருத்துவ ஆலோசனை, மெல்ல மெல்லத் தணிந்து காற்றோடு வெளியேறிக் கொண்டிருக்கிறது காற்றில் தோன்றிய காய்ச்சல்.

இருக்கட்டும், அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. எல்லா வேளைக்கும் இசை என்ற கோரிக்கை அச்சில் வராமலே அன்பர்கள் இசையை அனுப்பிக் கொண்டு இருக்கத்தானே செய்கின்றனர்!

லிங்கராசு, எதிர்பாராத ஓர் இன்பத் தேனைத் தான் பருகிய அதே வேகத்தில் (எனக்கு ஜுர வேகத்தில்!) வாட்ஸ் அப்பில் பரிமாறி இருந்தார். ஒற்றை வரியில் அதை விளக்க முடியாது. அது ஓர் இசை வாழ்க்கையின் குறுநாவல். அதிவேக நினைவு கூரல். பல்வேறு மனிதர்களோடு வெவ்வேறு காலங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஒரே நேரத்தில் யாரோ ஓடவிட்டுக் கேட்கையில் நீங்கள் இன்னார் என்று அடையாளப்படுத்திப் பரவசப்படுமுன் அடுத்த புகைப்படம்…அடுத்த பரவசம்..அதற்குள் மற்றுமொரு படம்…. மற்றுமொரு பரவசம் தணியுமுன் இன்ப அதிர்ச்சி..அதை அனுபவிக்குமுன் மேலுமொரு கிளர்ச்சி…. வேறெப்படி வருணிக்க?

ஆனால், அந்த இசையோட்டத்தைக் கேட்டதோடு நிற்க இடம் கொடுக்கவில்லை மனம். கொஞ்சம் கூடுதலாக அகழ்ந்து பார்ப்போம் என்று தேடுகையில் கிடைத்த தரவுகள்…ஆஹா…. எல்லாம் கொட்டிக்கிடக்கிறது, நாம் தான் தாமதமாகச் சென்றடைகிறோம் என்று நொந்து கொண்டேன் என்னை!

எம் எஸ் வி என்கிற மனிதர் அவர் உருவத்தைப் போல் எத்தனை மடங்கு உயரத்தில் இசையுலகில் சஞ்சரித்தவர் என்பதை நினைக்க நினைக்கக் கண்ணீர் பெருகுகிறது. அப்பேற்பட்ட மெல்லிசை மன்னர், தானாகப் போய் இவர் வீட்டில் இருந்து இவரை அழைத்து வந்த ஆண்டு, நாள் யாருக்குத் தெரியும்….. அப்படி அழைக்கப்பட்டு வந்தவர் வாசித்த இசைக்கருவியைத் தம் உயிராகக் கருதி விஸ்வநாதன் பயன்படுத்திய பாடல்களின் தளங்கள், தன்மைகள், உணர்வுகள், உணர்ச்சிகள் தாம் எத்தனை எத்தனை….

புல்லாங்குழல் வாசித்தவர்…தெலுங்குப் படங்கள் உள்பட கிளாரினெட் வாசித்துப் புகழ் பெற்றிருந்தவர்… சாக்ஸஃபோன் கற்றிருந்தவர். மிகவும் தற்செயலாகக் கையில் எடுத்தார் அந்தக் கருவியை…. அங்கிருந்து அவர் கடந்த இசைப் பயணம் அடுத்தடுத்த தலைமுறை ரசிகர்களது இசை வாழ்க்கைப் பயணத்தின் பகுதியாகி விட்டது!

மகத்தான இசைப்பாடல்களில் அந்த எளிய மனிதரின் வாசிப்புப் பகுதிகளை மட்டுமே தொகுத்து (அன்பர் வைத்தி நீடு வாழி!) 7.33 நிமிடங்களில் வழங்கி இருக்கும் துளிகளில் குளித்தெழவே குதூகலமும், பரவசமும், கண்ணீரும் கட்டுக்கடங்கவில்லை எனில், மொத்தப் பாடலோடு அந்தக் கருவியின் இசையை, அவரது மொத்த வாசிப்பைக் கேட்க முடியுமானால் எத்தனை பேரானந்தம் வாய்க்கும்……

இன்னுமென்ன புதிர்….ஷெனாய் சத்யம் என்று அழைக்கப்படும் சத்யநாராயணா தான் அது! ஷெனாய் உலக பிதாமகன் பிஸ்மில்லாகான் அவர்களால் மதிக்கப்பட்ட பெருங்கலைஞன். ஜெமினி ஸ்டுடியோ ஆர்ட்டிஸ்ட், பின்னர் அங்கிருந்து வெளியேறிய காலத்தில் எம் எஸ் வி அன்போடு சுவீகரித்துக் கொண்ட மேதை. மங்கள இசை என்று வட மாநிலங்களில் கொண்டாடப்படும் இசைக்கருவியின் அசாத்திய கற்பனை உணர்ச்சி மழையை திரை இசைப்பாடல்களில் தங்குதடையின்றி பொழிந்து கொண்டிருந்தவர். 1974இல் வெளியான தீர்க்க சுமங்கலி தான் அவரது கடைசி வாசிப்பு.Music Life 74: Calling My Music - SV Venugopalan இசை வாழ்க்கை 74: என் இசையை அழைக்கிறேன் - எஸ் வி வேணுகோபாலன்

லிங்கராசு அவர்கள் பகிர்ந்து கொண்ட இணைப்பில் அடுத்தடுத்து வேகமாக வெவ்வேறு திரைப்பாடல்களில் அவரது வாசிப்பைக் கேட்கும் மூத்த ரசிகர்கள் அந்தந்தப் பாடல்களை எளிதில் கண்டடைய முடியும், ஓரிரண்டு பாடல்கள் பிடிபடாமல் அதற்குள் அடுத்த பாடல் தொடங்க இன்னும் திணறிக்கொண்டிருக்கிறேன் நான். அந்த த்ரில் இல்லை என்றால் என்ன (இசை) வாழ்க்கை!
விசாகப்பட்டினம் அருகே உள்ள விஜயநகரம் தான் அவரது சொந்தவூர். அங்கிருந்து தான் சென்னை வந்தடைந்தார். இருதய பாதிப்பு இருந்திருக்கிறது அவருக்கு. இயற்கை நமக்கு அதிக வரம் அளித்திருக்கவில்லை. ஆனாலும், அவருடைய மகன்கள் நால்வர், மகள், மருமகன் எல்லோரும் இசை உலகில் தங்களைக் கண்டெடுத்தது மிகவும் சிறப்பான செய்தி.

மூத்தவர் கிருஷ்ணகுமார். சலீல் சவுத்ரி, தேவராஜன் மாஸ்டர் போன்ற பிரபல இசை மேதைகளில் புல்லாங்குழல் கலைஞராக வாசித்தவர். அடுத்தவர் பாபுஜி (இப்போது இல்லை) ஓர் அருமையான கிடார் இசைக்கலைஞர். மூன்றாமவர் நாராயண ராவ் (அண்மையில் காலமானவர்) மிகச் சிறந்த வயலின் கலைஞர். இவருடைய பயிற்சியில் சிறந்த செல்லோ இசைக்கருவி வாசிப்பவராகவும், ஷெனாய் கலைஞராகவும் பரிணமித்திருக்கும் நான்காமவர் பி எஸ் ராமச்சந்திரன் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், சத்யம் அவர்களது சிறப்பியல்புகளை!

தந்தை வாசித்த ஷெனாய் கருவியை, அந்த அழகான கருவியைச் சுமந்திருக்கும் மரப்பெட்டியை, அவர் பாடல்களுக்கிடையே வாசிக்க இசையமைப்பாளர் சொல்லக் கேட்டுத் தெலுங்கில் தனது கைப்பட எழுதி வைத்திருந்த இசைக் குறிப்புகளை எல்லாம் ராமச்சந்திரன் பத்திரமாக வைத்திருக்கிறார். அதே கருவியில் தந்தையின் சிறப்பான இசைத் துளிகளை அவரும் அத்தனை இனிமையாக இசைக்கவும் செய்கிறார்!

(மெல்லிசை) மன்னர் குடும்பம் சார்பில் இவரை நேர்காணல் செய்திருக்கும் பாப்ஜி பீட்டர் அவர்களுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும். எத்தனை அருமையான கேள்விகள் சுரங்கத்திலிருந்து தோண்டியெடுத்துப் பெறும் அரிய செய்திகள்.

ஷெனாய் கருவியில் நாதஸ்வரத்தைப் போலவே சீவாளி உண்டு. அது மிகவும் மென்மையாகவோ, பெரிதும் கடினமாகவோ அமைந்துவிடக் கூடாது. ஈரப்பதம் வேண்டும், ஆனால் அளவோடு. அதற்காகக் காய்ந்து விட்டிருந்தால் காற்று தான் வரும், இசை கேட்காது. நாதஸ்வரத்தில் சுதந்திரமாகக் காற்றை உடசெலுத்தி வாசிக்க இயலும், ஷெனாயில் மிதப்படுத்தி மிகப் பக்குவமாகக் காற்றை அதற்கேற்ப சமன்படுத்தி ஊதி தான் சிறந்த வாசிப்பை வழங்க முடியும்! புல்லாங்குழல் உள்ளிட்டு இசைக் கருவிகளுக்கு இப்படியான வெவ்வேறு வகை பக்குவங்கள் உண்டு என்றாலும், ஷெனாய் இன்னும் நுட்பமானது என்று சொல்லப்படுகிறது.

இத்தனை கெடுபிடிகள், சவால்கள் மிகுந்த கருவியில் தான், ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், நினைக்கத் தெரிந்த மனமே, நிலவே என்னிடம் நெருங்காதே, பல்லாக்கு வாங்கப் போனேன், ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம், கண்ணிலே என்ன உண்டு, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்….என்று எண்ணற்ற பாடல்களில் பின்னி எடுத்திருக்கிறார் சத்யம்.

பாக்கியலட்சுமி படத்தின் புகழ் பெற்ற ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்…’ பாடலின் சரணங்களில் பி சுசீலாவின் இனிமையான வரிகளுக்கு இடையே ஒலிக்கும் ஷெனாய் இசை எத்தனை நெகிழ்ச்சிக்குரிய உணர்வுகளைக் கிளர்த்தக் கூடியது, எல்லாம் சத்யம் அவர்களது மாயாஜாலம் தான்!

இராமச்சந்திரன் பேச்சில் எல்லாக் கலைஞர்களையும் கொண்டாடும் நல்லுள்ளம் பளிச்சிட்டுக் கொண்டே இருக்கிறது. ஓர் இசைக்கலைஞர் இசைக்கலைஞராகத் தான் இருக்க வேண்டும், எந்திரமாக அல்ல என்கிறார். தனது தந்தைக்கோ, புகழ் பெற்ற எந்தக் கலைஞருக்குமோ அந்த இசை எப்படி சாத்தியப்பட்டது எனில் கள்ளம் கபடமற்ற அர்ப்பணிப்பும், இசையில் இருந்த அளவு கடந்த ஈடுபாடும் தான் என்கிறார்! தனது தந்தை ஈட்டிய சொத்து அவரது கலைக்கான புகழன்றி அசையும் அசையா சொத்துக்கள் அல்ல, பிஸ்மில்லா கான் ஏதோ நிகழ்ச்சியில் வாசித்தார் என்றால், அதற்கான சன்மானம் அவரைச் சுற்றி 500 எளிய மனிதர்களுக்கு அன்னமாகப் போய்ச் சேர்ந்துவிடும், காசு கருதுபவர்கள் அல்ல இவர்கள் என்று கண்களில் பெருமிதம் மின்ன இந்தக் காலத்தில் சொல்லத்தக்க மகனைப் பெற்றவர் சத்யம் என்பதை விட வேறென்ன சொல்ல வேண்டும்!

செல்லோ இசைத்தும், ஷெனாய் வாசித்தும் இராமச்சந்திரன் அண்மைக் காலப் பாடல்களிலும் தேர்ச்சியான இசையை பொதிகை தொலைக்காட்சியின் இசையும் இசையும் என்ற நிகழ்வில் வழங்கி இருப்பதைக் கேளுங்கள். அன்பின் பொழிவு அது!

மெல்லிசை மன்னர்களின் இசையில், கர்ணன் படத்தின் ‘இரவும் நிலவும் வளரட்டுமே’ என்ன மாதிரியான கிறக்கம் அளிக்கும் பாடல், ஆனால், கர்ணனில் எந்தப் பாடல் தான் சாதாரணமானது! டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா இணை குரல்களில் என்றென்றும் இரவு நேரப்பாடல்கள் வரிசையில் முக்கியமானதாகத் திகழும் அந்தப் பாடலின் சரணங்களுக்கு இடையே இரட்டை ஷெனாய், ஒன்று கீழ் வரிசையிலும் மற்றொன்று மேல் நோக்கியுமாக இசைக்கும் இடம் அத்தனை உயிரானது.
கர்ணன் படத்திற்கான பாடல்கள் பதிவின்போது சற்று உடல் நலக்குறைவில் ஓய்வில் இருந்திருக்கிறார் சத்யம். வடக்கில் இருந்து ராம் லால் என்ற கலைஞரை – அவரே ஓர் இசை அமைப்பாளரும் கூட, ஷெனாய் வாசிக்க அழைத்திருந்தார் எம் எஸ் வி, ஆனாலும், சத்யம் அவர்களை ரிக்கார்டிங் நேரத்தில் வந்து விட்டுப் போகுமாறு வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார், ‘இந்தப் பாடலில் ஒரு சிறிய இடத்தில் உங்கள் வாசிப்பும் இருக்கட்டும்’ என்று எம் எஸ் வி வாசிக்க வைத்தது தான் சத்யம், ராம் லால் இரட்டை ஷெனாய் கலக்கிய அந்தக் கலக்கல். முக்கியமான உள்ளூர்க் கலைஞர் ஒரு மகத்தான தயாரிப்பில் விடுபட்டு விடக்கூடாது என்ற அக்கறை கொண்டிருந்த எம் எஸ் வி பற்றி நினைத்தால் ஏனய்யா கண்ணீர் வராது!

முதன்முறை கேட்டதில் இருந்தே வீட்டில் அதிகம் பாடிக் கொண்டே இருக்கும் பாடல்களில் ஒன்றில், சத்யம் அத்தனை கலந்திருக்கிறார் என்பதை மிகவும் தாமதமாக உணரும்போது அந்தப் பாடல் மீது இன்னும் காதல் கூடுகிறது. ஆதரவற்ற ஜீவனான தனக்கு பித்தாகிப் போய்விட்ட வாழ்க்கையின் இடையே மிகத் தற்செயலாக வாய்த்த பற்றுதல் மிக்க உறவும் தன்னைக் கைவிட்டுப் பிரிந்து போக நேரும் ஒரு சோதனை மிக்க இரவில் வெடித்தழும் நாயகன் தனது உள்ளத்தைத் திறப்பதில், கேட்போர் உள்ளத்தையும் கரைத்துவிடுகிற பாடல் அது. பாடலுக்கான பாவங்களை சிவாஜி கணேசனும், ஜெயலலிதாவும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார்கள்.

‘நான் உன்னை அழைக்கவில்லை’ என்று தொடங்கும் டி எம் சவுந்திரராஜன், ‘என் உயிரை அழைக்கிறேன்’ என்கிற இரண்டாவது வரியை எடுத்து வைத்ததும், அவரது உருக்கத்திற்குத் தனது ஷெனாய் வாசிப்பில் மேலும் உருக்கம் சேர்க்கிறார் சத்யம். அதற்குப் பிறகு கேள்வியே கிடையாது, கதையில் அந்த இடத்திற்கான அற்புதமான பாடல் பிறந்து விடுகிறது.

பல்லவியைத் தொடங்குகிறார் டி எம் எஸ், ‘கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை’ என்கிற வரி சாதாரணமானது, ஆனால் எங்கே அதை எழுதுகிறார் கவிஞர் என்கிறபோது எப்படி மின்னுகிறது, அதுவும் ‘மனதில்’ என்பதில் டி எம் எஸ் செதுக்கும் சிறு நகாசு ….! அடுத்த வரியில், ‘நான் சின்னக் குழந்தையம்மா சொல்லத் தெரியவில்லை, பிள்ளை மழலையிலே உனக்கும் உள்ளம் புரியவில்லை’ என்பது புரிந்தும் பிடிபட விரும்பாத சூழலின் முரணை பிரதிபலிக்கிறது.

முதல் சரணத்தை நோக்கிய திசையில், வயலின்கள் எங்கே இழைக்கத் தொடங்கி, அதில் எந்த இடத்தில் ஷெனாய் வந்து கலக்க வேண்டும் என்பதை எத்தனை நேர்த்தியாக சிந்தித்திருப்பார் எம் எஸ் வி!

‘என்ன தவறு செய்தேன் அது தான் எனக்கும் புரியவில்லை’ என்பது சரணத்தின் முதல் வரி, அதை டி எம் எஸ் பாடவும், சின்ன இசை கொடுத்து மீண்டும் பாட விட்டுவிடுவதில்லை எம் எஸ் வி, வயலின்களை வைத்து இழைக்கிறார், அதோடு ஷெனாய் ஒரு சிறிய வாசிப்பு, பின்னர் மீண்டும் அதே வரியை எடுக்கிறார் டி எம் எஸ். இடையே எத்தனை உணர்வுகளைக் கிளர்த்தி விட முடிகிறது என்பது தான் அந்தக் கற்பனையின் வலு!

‘வந்து பிறந்து விட்டேன் ஆனால் வாழத் தெரியவில்லை’ என்பது அடுத்த வரி. இது கோடிக்கணக்கானோரது வலிக்கும் இதயக் குமுறல்! அதில் கரையும் இதயத்திடம் நாயகன் உரிமை எடுத்துக் கொண்டு தனது ஆதங்கத்தை வேகமாக எடுத்து வைக்க ஏதுவாக அடுத்த வரிகளின் வேகத்தை, தாளத்தை அமைத்திருக்க, ‘அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால் உலகம் தெரியாதா …’ என்று போய், ஓர் இடைவெளி கொடுத்து, தாளம் நிறுத்திக் குரல் மட்டும் ஒலிக்க, அம்மா….என்ற தனிச்சொல் எடுத்து, ‘விவரம் புரியாதா’ என்று முடித்து, பல்லவிக்குச் செல்கிறார் டி எம் எஸ். பல்லவியில் அந்த ‘நான்’ என்பது அகந்தைக்கு இடமற்ற ஓர் அடிமையின் முகவரிச் சொல், அதை ஒவ்வொரு முறையும் டி எம் எஸ் எத்தனை விதமாகக் குழைத்திருப்பார்…

இரண்டாவது சரணத்தில் ஷெனாய் மேலும் நெருக்கமாகிறது உள்ளத்திற்கு, பாரதியின் பாம்பு பிடாரன் வேறு யார், சத்யம் காரு தான், உள்ளத்தில் ஒட்டும் மூச்சுக் காற்று தானே வெளியே இசைக்கருவியில் வந்து ஒட்டுகிறது ! வயலின்கள் பராமரித்து வழங்கும் சோலையில் நிகழ்கிறது அந்த ஷெனாய் வாசிப்பு!

கண்ணதாசன், காதலையும் கடவுளையும் ஒருபோதும் பிரிப்பதில்லை. அது உரிமை சார்ந்த ஒரு குற்றச்சாட்டு. அதன் மீதான விசாரணை. ‘என்னைப் படைத்த தெய்வம் இன்னும் கண்ணைத் திறக்கவில்லை’ என்கிறார், மீண்டும் வயலின்களும் ஒரு சிறு ஷெனாய் வாசிப்புமாக அந்த வெளியை நிறைக்கிறார் எம் எஸ் வி! ‘உன்னை அனுப்பி வைத்தான்’ என்கிறார் டி எம் எஸ், அது எப்படி சாத்தியம் எனில், அதற்குத் தான் பல்லவியில் விளக்கம் இருக்கிறதே, ‘கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை’ என்று! ‘உனக்கும் கருணை இல்லை’ என்பது நாயகியைக் குறைபட்டுக்கொள்வது போன்ற சாக்கில், பின் தேதியிட்டுக் கடவுளையும் நிந்தித்தல்! எப்பேற்பட்ட கற்பனையோடு இந்த வரிகளில் உருக்கம் கொணர்கிறார் டி எம் எஸ்….

பிறகு வேக நடையில், ‘இருண்ட வீட்டில் அன்பு விளக்கு இருக்கக் கூடாதா…’ இப்போது அம்மா இல்லை, அம்மம்மா… அடுத்த கட்ட உருக்கத்திற்கு! தாளக்கட்டு தவிர்த்து டி எம் எஸ் மட்டும் பாடுகிறார், ‘இரக்கம் பிறக்காதா’ என்று!

இரக்கம் பிறக்க வைக்க மட்டுமல்ல, உற்சாகக் கிளர்ச்சியிலும் நிறைய ஒலித்திருக்கிறது சத்யம் அவர்களது ஷெனாய். அப்படியான பாடல் ஒன்றை உடனே எடுத்துப் பேசவும் ஆசை, ஆனால், இப்போதே வளர்ந்து விட்டிருக்கிறது இந்த அத்தியாயம். வேறொரு தருணத்தில் எடுத்துக் கொண்டாடுவோம்!

ஒரு பாடல் பதிவுக்காக, பிஸ்மில்லா கான் அவர்களைப் போய்ப் பார்த்தாராம் எம் எஸ் வி, உடனே அவர் ஷெனாய் எடுத்து, ஒரு சிறு வாசிப்பு கொடுத்து, என்னது இது என்று கேட்டாராம், உறைந்து போய் நின்றிருக்கிறார் விஸ்வநாதன். ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’ பாடலில் வரும் வாசிப்பு அது, ‘இப்பேற்பட்ட வாசிப்பு கொடுத்த கலைஞன் உங்களிடம் இருக்கிறார், அவரை விட்டு என்னிடம் வருவானேன்?’ என்று கேட்டாராம் பிஸ்மில்லா. அசந்து போன எம் எஸ் வி, “அய்யா, அந்த அற்புதக் கலைஞர் மறைந்துவிட்டார்!” என்று சொன்னாராம். சத்யம் மட்டுமல்ல, அவரை மதிக்கும் தன்மையில் பிஸ்மில்லா கான், எம் எஸ் வி எல்லோரும் சம உயரத்தில் ஒளிரும் தன்னடக்க மேதைகள் அல்லவா!

இராமச்சந்திரன் ஒரு வேண்டுகோள்தான் திரும்பத் திரும்ப வைக்கிறார், அதை மறைந்த எஸ் பி பாலசுப்பிரமணியன் அவர்கள் எண்ணற்ற மேடைகளில் சொல்லிக் கொண்டே இருந்தார்: இசைக் கருவிகளைக் கொண்டாடுங்கள், இசைக் கலைஞர்களைக் கொண்டாடுங்கள், அழிந்து விடாது கலையைத் தழைக்க வையுங்கள், கீ போர்டில் எல்லா இசையையும் கொண்டு வந்துவிட முடியும் என்று எண்ணி எந்திரங்களாகிப் போய் விடாதீர்கள் என்பது தான்!

எந்திரமாகாமல் நம்மை மந்திரம் போட்டு மனிதர்களாகத் தக்க வைப்பதில் இசைக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. அந்த இசையையும் ஓர் எந்திரத்திடம் ஒப்படைப்பதா என்பது தான் எழுப்பப்படும் கேள்வி! பல்வேறு விதமான இசையை அந்தந்தக் கருவிகள் மூலம் வாசிக்கக் கேட்கும் இன்பம், இசைக் கலைஞர்களது வாழ்வாதாரத்தையும் உறுதி செய்யும் சமூக இன்பமாகிறது! ‘வாயினிலும் கையாலும் வாசிக்கும் பல்கருவி’ என்று மகாகவி ‘வேயின் குழலோடு வீணை முதலாய்’ எடுத்துச் சொல்லிச் சென்றது தானே இசை வாழ்க்கை!

இசைத்தட்டு சுழலும் ….
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



2 thoughts on “இசை வாழ்க்கை 74: என் இசையை அழைக்கிறேன் – எஸ் வி வேணுகோபாலன்”
  1. அருமையான நீண்ட படைப்பு. ஒரு தொடர்போல சிறப்பாக உள்ளது. நான்கு நயமான பாடல் இசை. அற்புதமான படைப்பு. நன்றி🙏💕

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *