திரும்பிப் பார்ப்பதற்குள் பத்தாவது அத்தியாயம் தொடங்கி விட்டது போல் இருக்கிறது. ஒரு தொழிற்சங்கவாதி, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர் என்று தான் உங்களைப் புரிந்து கொண்டிருந்தேன், கலாபூர்வமான விஷயங்களிலும் உங்களுக்கு இத்தனை ஆர்வமா என்று தமது உற்சாகம் பொங்கும் குரலில் கேட்டார் கவிஞர் எஸ் வைதீஸ்வரன்.
மொசாரத், பீத்தோவன் போன்ற இசை மேதைகளைக் கொண்டாடிய இதயம் கார்ல் மார்க்ஸ் அவர்களுடையது. லண்டன் மாநகரில் வசித்த காலத்தில், இசை நிகழ்ச்சியில் அவர் இருப்பதை கவனிக்கும் ரசிகர்கள் அவர் அது குறித்து எழுதுவதை வாசிக்கக் காத்திருந்து தங்கள் ரசனையோடு அவரது ரசனையை, அதன் உயர்வை ஒப்பிட்டு ரசிப்பார்கள் என்று அவரைப் பற்றிய பேச்சு ஒன்றில் கேட்ட நினைவு வந்து போகிறது. கவித்துவம் பொங்கும் மொழியில் தான் சமூக மாற்றத்திற்கான தாகத்தை அவர் எழுத்தில் வடித்தார்.
அவரது உற்ற தோழரான ஃபிரெட்ரிக் ஏங்கல்ஸ், இளவயதில் ஏற்றுமதி தொடர்பான பணி நிமித்தம் பயிற்சி மேற்கொள்ளச் சென்ற துறைமுக நகரமான பிரேமனிலிருந்து எழுதிய 46 கடிதங்களில் 12, இசை சார்ந்தவை என்றும், முறையாகக் கற்றுக் கொள்ளாமல் அமெச்சூர் கலைஞராக இசை அமைப்பாளராகவும் தமது திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
அண்மையில் மறைந்த மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானி அவர்களுக்கு இசையில், பழைய திரைப்படப் பாடல்களில் பேரார்வம் இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. பள்ளி ஆசிரியராக இருந்த அவர், நீரிழிவு நோய் முற்றியதில் திடீர் என்று கண் பார்வை இழந்ததும் வேலையை விட்டு நீங்கினார், ஆனால் வாசிப்பையோ, எழுத்தையோ வேறொருவர் துணையோடு தொடர்ந்து கைக்கொண்டிருந்தார், அசாத்திய பணிகளை மேற்கொண்டார். அவரது உதவியாளராக இயங்கிய ஜோதி மீனா, “அய்யா அவர்களுக்கு ஏ எல் ராகவனின் எங்கிருந்தாலும் வாழ்க (நெஞ்சில் ஓர் ஆலயம்) என்ற பாடல் மிகவும் பிடிக்கும்” என்கிறார்.
கிருஷ்ணகிரி தோழர் பாலா, வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்ட எழுத்தாளர் சு வேணுகோபால் அவர்கள் எழுதி இருக்கும் “விலகிச் செல்லும் பாதை” (http://vallinam.com.my/version2/?p=6655) சிறுகதையில் பழனிச்சாமி எனும் பாத்திரமாக (கோவை ஞானி அவர்களது இயற்பெயர்) வரும் இடத்திலும் இசை மணக்கிறது. அய்யா திருமண வரவேற்பில் நுழையும் போதே, அவரது காதுகள் கண்களாக மாறி, நாதஸ்வர குழுவினரின் இசையில் லயிக்கிறது. மாலை சூடும் மணநாள் (நிச்சய தாம்பூலம்) பாடலை ரசிக்கும் அவர், என்னை அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள் என்று உடன் வரும் ஆசிரியர் கந்தசாமியின் கையைப்பற்றி நடந்து அருகே சென்று அவர்களை மெச்சி, அந்தந்தப் பாட்டுக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்திய சீவாளிகள் எங்கே நான் தொட்டுப் பார்க்கட்டும், அப்புறம் தவில்காரர் எங்கே என்று கேட்டு அவர்கள் கைகளைப் பற்றித் தடவி இன்புற்று வாழ்த்தும் காட்சி வருகிறது.
அண்மையில் 99வது வயதில் தமது அனுபவமிக்க காலடி எடுத்து வைத்திருக்கும் சுதந்திர போராட்ட வீரர் தோழர் என் சங்கரய்யா அவர்கள், ‘விடுதலைப் போரினில் வீழ்ந்த மலரே‘ என்ற இசைப்பாடலை எங்கே கேட்டாலும் உணர்ச்சிவசப்படுவாராம்.
இந்தத் தொடரின் கட்டுரைகளுக்கான பரிசுகள் இப்போது அதிகரித்து விட்டன என்பதை மிகுந்த பெருமிதம் பொங்க இங்கே பகிர்ந்தே ஆகவேண்டும். சேலம் தோழர் சோபனா, மணமாலை படத்தின் அற்புதமான ‘நெஞ்சம் அலைமோதவே‘ கேட்டதுண்டா என்று கேட்டு ஆடியோவில் அனுப்பி இருந்தார். பி பி ஸ்ரீநிவாஸ் என்று உடனே ஊகிக்கத் தவறினேன், ஆஹா… என்னமாகப் பாடி இருக்கிறார் மனிதர்! ‘நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணனைப் பிரிந்தே போகிறாள் ராதை…. ‘ அந்தப் பாடலில் விரியும் காட்சியின் கற்பனையில் ரசிகரும் சோகத்தில் ஆழ்ந்து விடுவார். மருதகாசி அவர்களது சொல்லாட்சியும், திறனும் ஆஹா…ஆஹா.
சூரத்தில் பணியில் இருக்கும் வங்கி அதிகாரி தோழர் ஜெயராமன், தர்பாரி கானடா ராகத்தில் அமைந்த பாடல்களை ஆடியோவில் தொகுத்து அனுப்பி இருக்கிறார். கல்யாணத் தேனிலா தொடங்கி மலரே மௌனமா வழியாக முல்லை மலர் மேலே, ஆகாய வெண்ணிலாவே … என்று தேனீக்கள் மொய்க்கும் பாடல்கள்…..அதிகம் இல்லை, நான்கு மொழிகளில் வெறும் 58 பாடல்கள்! அடுத்து, பாகே ஸ்ரீ ராகத்திலும் பாடல்கள்!
கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் என்ற டி எம் எஸ் அவர்களது அற்புதமான பாடலை, மிக இளவயதிலேயே கேட்டபோது சில ராகங்கள் பெயரை அறியாமலே தெரிந்து வைத்த காலம் ஒன்று இருந்தது. அந்த மாதிரி பாடல்கள் ராகமாலிகை எனப்படும், பல ராகங்கள் கலந்து வரும் என்பதெல்லாம் பின்னாளில் இலேசாகக் கேள்வி ஞானத்தில் கற்றவை (அதாவது பதில் சொல்லி மாட்டிக்கக் கூடாது என்பதுதான் கேள்வி ஞானம் போலும்!). அதில், பாகே ஸ்ரீ தாயே பார்வதியே என்ற இடம் பாகே ஸ்ரீ ராகம், கல்யாணியே கபாலி காதல் புரியும் என்று குழைவது கல்யாணி, ரஞ்சனியே ரட்சிப்பாய் கெஞ்சுகிறேன் என்று கொஞ்சுவது ரஞ்சனி ராகம். இப்படி ரசித்து எழுதி இருப்பது எத்தனை அசாத்திய ரசனையும் திறமையும் உள்ள விஷயம்!
எனக்கு உடனே, அகத்தியர் படத்தில் வரும் இராவணன் – அகத்தியர் போட்டிப் பாடலை டி எம் சவுந்திரராஜனும், சீர்காழி கோவிந்தராஜனும் கலக்கி இருக்கும் ‘வென்றிடுவேன்‘ நினைவிற்கு வந்தது. அதில் ராகங்களின் பெயரையொட்டியே சொற்களைப் பொருள் அடர்த்தியோடு புனைந்திருப்பார் உளுந்தூர்பேட்டை சண்முகம். ‘ஷண்முகப்ரியன் என்னும் தைரியமா‘ என்று எடுத்து அப்படியே அந்த ப்ரியன் சொல்லை இழைப்பாரே டி எம் எஸ்…. ‘சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா‘ என்ற கேள்விக்கு, நாடகமா, தர்பார் நாடகமா, அடக்குமுறை தர்பார் நாடகமா என்று சீர்காழி பதில் கொடுக்கும் இடம்….ஆத்தாடி ஆத்தாடி! அம்ச த்வனி அமைந்த மன்னவனும், மனோ லயம் இல்லை உன் பாட்டினிலே (அதுவும் ‘மனோ‘கரைப் பார்த்து!) என்று சொல்லும் துறவியும்….பாடல் முழுவதும் இப்படி ரசனை மிக்க வாதங்களும், நிறைவில் வீணையின் இன்பமும்!
அதேபோல், நீ ஒரு ராக மாலிகை (பெண் ஒன்று கண்டேன்) பாடலை சரஸ்வதி, அம்சத்வனி, நீலாம்பரி என்று ராகங்களின் பெயரை இணைத்து வாலி எழுதி இருப்பார். இன்னும் இன்னும் இப்படியான புதையல்கள் உண்டு.
நமது ஆஸ்தானக் கலைஞர் லிங்கராசு, இந்த வாரம் வாசித்து அனுப்பியது, நெஞ்சினிலே நினைவு முகம்! நூற்றாண்டு கண்ட அருமையான பாடலாசிரியர் கு மா பாலசுப்பிரமணியன் அவர்களது பாடல். கடந்த ஜனவரி மாதத்தில் அவருக்கான கட்டுரை எழுதி முடிக்கையில் இந்தப் பாடல் வரியே தற்செயலாக அதன் தலைப்பாகப் போடத் தோன்றியது. தமிழ் இந்து நாளிதழில் அது வெளியான அன்று மீண்டும் அழைத்துப் பேசிய அவர் மகன் கவிஞர் கு மா பா திருநாவுக்கரசு, பாடலைப் பற்றிய உருக்கமான செய்தியைச் சொன்னார்.
சித்ராங்கி படத்திற்கான இந்தப் பாடலை கு மா பா அவர்களிடம் எழுதக் கேட்கப்பட்ட தருணம், மணம் புரிந்து ஓராண்டே தம்முடன் இல்லறம் நடத்திய ஆருயிர் மனைவி மரகதவல்லியைப் பறிகொடுத்திருந்தாராம், அவர் நினைவில்தான் இந்தப் பாடலை எழுதியும் கொடுத்தாராம். பி சுசீலா அருமையாகத் தொடங்கி இசைக்கும் பாடலில், ‘ஆருயிர் என்று அழைத்தவளே….’ என்று டி எம் எஸ் வந்து கலக்கும் இடத்தைத் தமது குழலிசையில் அதே உருக்கத்தோடு கொடுத்திருந்தார் நண்பர். ‘ஆருயிர் என்று அழைத்தவளே புது ஆசையை நெஞ்சில் விதைத்தவளே நான் ஓருயிர் நின்று தவிக்கையிலே நீ ஓடி மறைந்தது நீதியில்லை‘ என்ற வரிகளை கவிஞர் எப்படி எழுதி இருக்கிறார்…..
ஐந்தாம் வகுப்பில் என் காதில் விழுந்த ‘சின்னச் சின்ன பாலன் சிவபாலன்‘ மட்டும் அல்ல, கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும் பாடலே ஒரிஜினல் தமிழ் மெட்டு அல்ல, இந்தியில் இருந்து எடுத்தாண்ட மெட்டு தான் என்று தெரிவித்த அன்பர்களுக்கு என் அன்பு நன்றி.
ஏ எம் ராஜா தவறி விழுந்தது நெல்லையில் அல்ல, வள்ளியூர் ரயில் நிலையத்தில் என்று உடனே எழுதினர் சிலர். நன்றி
இசை கடத்திகள் (ஏழாவது அத்தியாயம்) கட்டுரையில், வாணி ஜெயராம் அவர்களது அருமையான பாடல்களில் ஒன்றான மேகமே மேகமே பாடலைப் பார்த்தோம், குழலிசையில் பெருகி ஓடிய அந்தப் பாடலின் ஆடியோவை, திரை இசையில் நாட்டம் உள்ள ஒரு வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அடுத்த நிமிடம், ரமேஷ் என்ற தேர்ச்சியான ரசிகர் (ஒரே பகுதியில் குடியிருக்கிறோம், மிக அண்மையில் அறிமுகமாகி, கொரோனா கொடுமையால் இன்னும் நேரில் பார்க்காமல் கடக்கும் நாட்கள்), ஜகஜித் சிங் எனும் அற்புத பாடகரின் ஆடியோவை அங்கே பகிர்ந்து கொண்டார். அது ஒலிக்கத் தொடங்கியதுமே அசந்து போனேன்… அட்றா….அட்றா….வடிவேலு சொல்வது மாதிரி, அதே தான்…அதே தான் அய்யா ! மூலப் பாடல் அது தான் என்று ரசிகர் ஒருவர், சங்கர் கணேஷ் இசை அமைப்பை மிகவும் சிலாகித்து அருமையாக எழுதி இருந்த கட்டுரையின் குறிப்பையும் இணையதளத்தில் பின்னர் வாசிக்க முடிந்தது.
தும் நஹீன் கம் நஹீன் ஷராப் நஹீன் என்பது பல்லவி….ஜகஜித் சிங், தமது அற்புதமான குரலில் கேட்பவரின் இதயத்தை அவர்களறியாமல் தீண்டி சிலிர்க்க வைக்கிறார். நீ இல்லை (எனில்), துயரம் இல்லை. (ஆகவே) மது இல்லை என்ற வரியில் எத்தனை எத்தனை கதைகள் ஒளிந்திருக்கின்றன. சரணங்களில் அவர் சஞ்சரிக்கும்போது, வழக்கமாக உருது கஜல் கச்சேரிகளில் ரசிகர்கள் வாஹ் …வாஹ் ..என்று கொண்டாடி மயிர்க்கூச்செரிவார்களே, அதை இந்த சிறிய பாடலில் கேட்டுக் கொண்டே இருக்க முடிந்தது. அந்தப் பாடலுக்கான பின்னணி இசையும், இடையே அவர் பாடிய எளிய ஸ்வரங்களும் கூட அப்படியே பாலைவனச் சோலையில் ஒலிக்கக் கேட்க முடியும். பாடலின் எளிய ஆங்கில மொழி பெயர்ப்பில் தேடி வாசிக்க, தனது நற்பண்புகளை எல்லாம் நினைவில் வைத்திருக்கும் அவள், தான் செய்யும் கொடுமைகளின் எண்ணிக்கை அறிய மாட்டாள், எத்தனை எத்தனை பேர் (அவளுக்காக) உயிரை விட்டானோ, தனது முகத்திரையை இப்போது அவள் உதறிவிட்டாள் ….என்று போகிறது! கஜலின் அழகு அதன் கவிதை மொழி. அதன் உயிரை மொழிபெயர்ப்பில் முழுதும் உய்த்துணர்ந்து விட முடியாது.
‘மோகத்தைக் கொன்றுவிடு அல்லால் என்றன் மூச்சை நிறுத்தி விடு‘ என்றானே மகாகவி. அடடா…. மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் நினைவுக்கு வந்துவிட்டார். அந்த முதல் வரியில் எத்தனை ஒய்யார நடை நடக்கிறார்…….பின் அடுத்தடுத்த வரிகளில் அதன் ஒவ்வொரு சொல்லின் அழகையும் அனுபவித்து அனுபவித்து…..முதல் சரணத்தில் ‘பந்தத்தை நீக்கிவிடு‘ என்ற இடத்தில் அலாதியான ஆலாபனை, ‘உயிர் பாரத்தைப் போக்கிவிடு‘ என்பதைக் கடந்து ‘சிந்தை தெளிவாக்கு‘ என்ற இடத்தில் என்ன அழுத்தம்….’செத்த உடலாக்கு‘ என்பது என்னமாக வந்து விழுகிறது! ‘உள்ளம் குளிராதோ‘ என்ற சரணம் இருக்கிறதே, அடடா…. ‘பொய் ஆணவ ஊனம் ஒழியாதோ‘… அதற்கும் மேலாக, ‘கள்ளம் உருகாதோ‘ என்பதில் என்ன குழைவு, என்ன மன்றாடுதல்! ‘அம்மா‘ என விளித்து ‘பக்திக் கண்ணீர் பெருகாதோ‘ என்கிற ததும்பல், கேவல் இருக்கிறதே…..
உயிரைக் கொடுத்தும் கேட்கத் தக்க இசை என்று சும்மாவா சொல்கிறார்கள்…. இத்தனைக்கும், சங்கீதமோ, ராகமோ, ஸ்வரங்களோ, நுட்பங்களோ அறியாத போதே நம்மை இப்படி கொள்ளை கொள்கிறதே இசை, எல்லாம் தெரிந்தவர்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்று அடிக்கடி தோன்றும். பக்தி இல்லாமலே பரவசமும் சாத்தியமாகிற ரசவாதம்.
தெற்கே எந்த ஊருக்குச் செல்லும்போதும், விழுப்புரம் கடக்குமுன் வரும் விக்கிரவாண்டி ஊரைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், அந்த விபத்து அன்று தான் நடந்ததுபோல், நாம் இழந்த அந்த அருமையான சங்கீத மேதையை நினைவுக்குக் கொண்டுவரும். சாலை விபத்தில் சரிந்த இடத்தில் சரீரம் விழுந்தும் சாரீரம் கலந்த பெருவெளியில் தழுவிய காற்றில் பரவிக் கொண்டேதான் இருக்கிறது அவரது இசை.
பத்தாவது கட்டுரை எழுதும் போதாவது உண்மையைச் சொல்லியாக வேண்டும், சேலம் சஹஸ் அவர்கள், ஏதாவது தொடர் என்று பேசி மூன்றாவது புதன் கிழமை வந்தாச்சு…. இசை பற்றியாவது ஒரு தொடரை எழுதலாமே என்று தூண்டியவர்! கடந்த வாரம், மிக அசாத்தியமாக அற்புதமான ஓர் ஆங்கிலப் பாடலை இணையத்தில் கேட்க இணைப்பு கொடுத்துக் கேளுங்கள் என்று இணைய தளத்தின் கமெண்ட்ஸ் பெட்டியில் போட்டிருந்தார்…..1956ல் ஆஸ்கர் விருது பெற்ற அற்புதமான பாடல்…. கே ஸெறா ஸெறா பின்னர் அதே மெட்டில் (ஆஹா….மெட்டு!) தமிழ்ப் பாடலையும் இணையத்தில் பிடித்துக் கேட்டால்…..என்ன நடக்குமோ அது நடக்கும் ( கே ஸெறா ஸெறா என்ற வரியின் பொருள்)….விரிவாகப் பின்னர்!
கே ஸெறா ஸெறா …… கே ஸெறா ஸெறா ….
(இசைத்தட்டு சுழலும் ….)
தொடர் 1 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-1-venugopalan-sv/
தொடர் 2 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-2-venugopalan-sv/
தொடர் 3 – ஐ வாசிக்க…
https://bookday.in/music-life-series-3-venugopalan-sv/
தொடர் 4 – ஐ வாசிக்க…
https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/
தொடர் 5 – ஐ வாசிக்க..
https://bookday.in/music-life-series-5-venugopalan-sv/
தொடர் 6 – ஐ வாசிக்க..
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
தொடர் 9 – ஐ வாசிக்க..
மன்னிக்கவும் தோழர். தொடர் ஒன்று முதல் படிக்கத் தவறியதற்கு. உங்களின் அற்புத எழுத்துகளை ஏற்கெனவே அறிந்தவன்தான். பிறகு படிக்கலாம் என்று தள்ளிவைத்த தருணங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துவிட்ட காலமாக, இப்போது பத்தாவது தொடர் விழிமுன் விருந்திட்டது.
படித்து முடித்து நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன். ஓரிரு நாட்களில் பிற ஒன்பது தொடர்களையும் நிச்சயம் படித்துவிடுவேன். அருமை தோழர். பேசுகிறேன்.
நிறைந்த நேசத்துடன்
ரியாஸ்
கே ஸெரா ஸெரா டோரிஸ் டே பாடியது. ஹிட்ச்காக் படமொன்றில் என்று கருதுகிறேன், பள்ளிக் காலங்களில் இசையைக் காட்டிலும் வரிகளில் நான் பிரமித்துப் போயிருக்கிறேன்,
அதே போன்று மிரியம் மகெபாவின் படா படா அறுபதுகளின் இறுதியில் பரபரப்பான தனிப்பாடல் அதையும் கேட்கலாம்
Ke sera sera! மெட்டில் உலகின் பல மொழிகளிலும் பாடல்கள் உள்ளன. தமிழில் “நான் சின்னப் பெண்னான போதிலே! என் அன்னை ஒரு நாளிலே” என்றொரு பாடல் உண்டு.
வெறும் பாடல்களால் மட்டுமே நிரம்பியுள்ள படங்கள் “Musical Extravaganza ” என்ற அழைக்கப்படுகின்றன. தமிழில் ‘சாந்தி நிலையம்’ , ‘அன்பே வா’, போன்ற படங்களை இவ்வரிசையில் வைக்கலாம்.
ஆங்கில படங்கள் The Sound of Music, My Faith Lady. போன்ற படங்கள் இசையால் நிரம்பியவை.