மகத்தான பாடகர் எஸ் பி பி அவர்கள் நினைவில் கடந்த வாரக் கட்டுரை எழுதி இருக்க, அது வாசகர் வாசிப்பில் அவரவர் நினைவலைகளோடு கலந்து துயரில் ஆழ்த்தியும், துயரைப் பகிர்ந்தும், துயரை ஆற்றுப்படுத்திக் கொள்ள அவரது நினைவுகளிலேயே மீண்டும் நீந்தவுமாகக் கடந்தது. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்றாரே வள்ளுவர். அடக்கம் செய்யப்பட்ட தாமரைப்பாக்கத்தில் அல்ல, செம்புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சமெல்லாம் தான் கலந்துவிட்டிருக்கிறார் எஸ் பி பி.
நள்ளிரவு வரை அவர் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருப்பவரிடமிருந்து காற்றில் கைமாறி அந்த ஊரைக் கடக்கும் ரயிலில், பேருந்தில் அல்லது ஏதோ வாகனத்தில் செல்லும் வேறு ஒரு மனிதர் வசம் ஒலிக்கும் அவர் குரல் அப்படி அப்படியே தொடர் பயணத்தில், வேறெங்கோ விடியக் காத்திருக்கும் பொழுதில் பால் கறப்பவரிடம் குடிபுகுந்து அந்தப் பாலோடு புறப்படும் கேன்களில் ததும்பித் ததும்பி வழி நெடுக வாசலில் கோலமிடும் பெண்களிடம் தொற்றி உள்ளே இடம் பெயர்ந்து உறங்குவோரையும் உசுப்பி அப்படியே அவரவர் அன்றாடங்களில் பகல் முழுவதும் இழையோடிப் பின், மாலையில் சொல்ல வேண்டுவதே இல்லை, அப்புறமென்ன, இரவுகள் அவருக்கானவை…இல்லை, அவர் எல்லோருக்குமானவர்.
பாலுவின் சங்கராபரணத்தை ஏன் விட்டீர்கள் என்று நண்பர் ரமணன் கேட்டிருக்கிறார். அவருக்கு விருது பெற்றுத் தந்த அந்தப் பாடலை அந்நாட்களில் கச்சேரியில் பாடாத குழுக்கள் இருக்க முடியாது (இசை வாழ்க்கை 7: இசை கடத்திகள் அத்தியாயத்தில் அந்தப் படத்தின் சங்கரா, ஓம்கார பாடல்கள் இரண்டுமே பேசப்பட்டிருந்தன). சோமயாஜுலு பாத்திரத்திற்கான அந்தப் பாடல்களை எஸ் பி பி மிகவும் கொண்டாடிய மாமா மகாதேவன் அவர்கள் தான் அற்புதமாக இசைமைத்திருந்தார். அத்தனை அபாரமான சங்கதிகள், இழைப்புகள் எல்லாம் உண்டு இரண்டிலும்.
சங்கரா பாடலின் சந்தம் அழகு, அருமை ! வேடூரி சுந்தர ராம மூர்த்தி அவர்கள் புனைந்து. மொழி தெரிந்திருக்க வேண்டிய தேவை இல்லாத சுந்தரத் தெலுங்கு. பாடுபவர் வயதின் நடுக்கம், உளவியல் பதட்டம் யாவுமே ஒலிக்கும் பாலுவின் குரலில். கடைசி சரணத்தில் மெல்ல மெல்ல அடுக்குகள் ஏறி, அங்கிருந்து ராக ஆலாபனையில் படிகள் இறங்கி, ஆசுவாசமாக ஷங்கரா என்றெடுக்கும் இடத்தில் ரசிகர்கள் தங்களுக்குள்ளாகத் தாங்களே பாடி முடித்த பெருமூச்சோடு அடைகிற பூரிப்பும், சிலிர்ப்பும் உணர்ந்து ரசிக்கத் தக்கது.
ஆனால், வங்கியில் அகில இந்திய மாநாடுகள், பேரணிகள், தர்ணா போன்ற நிகழ்வுகளில், ஆந்திராவைச் சார்ந்த தோழர்களோடு தனியே அமர்ந்து அன்பு பரிமாறிப் பேசிக் கொண்டிருக்கையில், விறகுவெட்டி சிவாஜி மாதிரி எடுத்து விட்ற பாலுவின் பாட்டு வேறு ஒன்று உண்டு. டூ இன் ஒன் பக்கத்தில் பித்துப் பிடித்த மாதிரி நின்று அந்தப் படம் வந்தபோது உணர்ச்சிவசப்பட்டு ரசித்த பாடல் அது. அதைச் சொல்லுமுன், படத்தின் மற்ற சில பாடல்களையும் சொல்லியே ஆகவேண்டும்.
கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல், சரிதா நடித்திருந்த மரோ சரித்ரா படத்தின் அத்தனை பாடல்களுமே அருமை, சொல்ல வேண்டியதில்லை, இசை அமைப்பு எம் எஸ் வி.. எல் ஆர் ஈஸ்வரி கொண்டாட்டமாகப் பாடியிருந்த ‘பலே பலே மகாடிவோய் பங்காரு நா சாமிவோய்‘ ஓர் உற்சாகத் திருவிழா. அதன் ஆங்கில வரிகளை பிரபல எழுத்தாளர் ராண்டார் கை எழுதி இருக்க, புரட்டிப் புரட்டி எடுத்திருப்பார் எஸ் பி பி. ‘கலிசி உண்டே‘ என்று தொடங்கும் பாடல், முழுக்க முழுக்க தெலுங்குப் படத் தலைப்புகளை வைத்தே புனையப்பட்டது (மேரே ஜீவன் சாத்தி என்று இதன் இந்தி ஆக்கத்தில் ஏக் துஜே கேலியே படத்தில் !), அதிலும், கன்னி மனசுலு மூக மனசுலு என்ற வரிகளை, பாலு அநியாய சேஷ்டைகளோடு உச்சரிக்கும் காதல் மொழி அள்ளிக்கொண்டு போகும். குதூகல பொங்கலாகப் பாட்டை நிறைவு செய்திருப்பார்கள் பாடகர் இருவரும்.
இங்கே குறிப்பிட வந்த பாடல், மௌத் ஆர்கன் சோக வாசிப்பில் தொடங்கும் உள்ளத்தைத் தொடும் ‘ஏ தீக பூவனு‘ என்பது! படத்தின் முக்கிய பாடல் அது. ஏற்கெனவே நாயகி மகிழ்ச்சியாகப் பாடி இருந்த பாடலின் (அதை பி சுசீலா அருமையாகப் பாடி இருப்பார்), துயர வடிவை, எஸ் பி பி பாடுவது வேறு ஒரு தளத்தில் இயங்குவது!
எந்த சம்பந்தமும் இல்லாது நாம் எப்படி இணைந்தோம் (யாயும் ஞாயும் யாராகியரோ…..குறுந்தொகை) என்பதை கவித்துவமாக, ஏதோ ஒரு கொடியில் மலர்ந்த பூவும், வேறெங்கோ இருக்கும் கிளைத் தண்டும் எப்படி ஒன்று சேர்ந்ததோ என்ற (தெலுங்கு தெரிந்தவர்கள் சரி பார்க்காமல் மன்னித்துக் கடந்து விடவும்!) அற்புதமான தொடக்கமே, பாலுவின் குரலில் துன்பக் கேவலாக முளைக்கும். முதல் சரணத்தில், ‘மனசு மூகதி மாட்டலு ரானிதி‘ (மனம் ஓர் ஊமை, அதற்குப் பேச வராது, மீண்டும் தெலுங்கு நண்பர்கள்…..ஆமாம்… கடந்து விடவும்) என்ற வரியில் இருந்து அடுத்து, ‘மமத ஒக்கடே அதிநேர்ச்சினிதி‘ என்ற வரிக்கான நகர்தல், ஆஹா… மீண்டும் அந்த வரிகளை இரண்டாம் முறையாகப் பாடுகையில் மாட்டலு ரானிதி என்கிற பதங்களில் குழைக்கும் துன்பியல் அவஸ்தை அசாத்திய பாவமாகத் தெறிக்கும். ‘பாஷ லேனிதி பந்தமுன்னதி மன இத்தரினி ஜத கூர்ச்சினதி‘ என்ற வரிகளுக்குப் பொருள் சொல்லாமல் புரிந்து கொண்டுவிட முடியும்….அந்த ‘பாஷ‘ என்ற சொல்லில் எத்தனை சோகம் குழைப்பார் பாலு!
இரண்டாம் சரணத்தில் இந்த வேதனையும் வலியும் மேலும் ஒரு பங்கு கூடுதலாகப் பரவும்போது ரசிகர்கள் அதே உளவியலில் தாமும் தவிப்பதைப் பாடல் முடிந்தபின் தான் உணர்வார்கள். இந்தப் பாடலைப் பாடினால் போதும், அப்படியோர் அன்பின் கசிவோடு சூழ்ந்து நின்று கொண்டாடுவார்கள் தெலுங்கு மொழி பேசும் தோழர்கள். மொழி கடந்த அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!
உயர் நிர்வாகியாக இருக்கும் நண்பர் கணேஷ்ராம், எஸ்பிபி எனும் மென்குரல் அசுரன் பாடல்களை இலங்கை வானொலியில் கேட்ட இளமைக்காலத்து நினைவுகளை, அவரது மறைவின் துயரில் நினைவில் இருந்து பத்திருபது நிமிடங்களில் 66 பாடல்களை மீட்டெடுத்தேன், எல்லாம், 1980க்கு முந்தையது, பின்னர் நேரமெடுத்து நினைவில் இருந்து சேகரித்தது என்று 116 பாடல்களின் முதல் வரியை வரிசையாக அடித்து வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தார்.
எத்தனை வாரங்கள் எழுதினாலும், நிற்காத தேரோட்டம் அவரது பாடல்களின் உலா. அதற்காக ஒரு நூல் வேலி கட்டிக்கொண்டு தான் எழுத வேண்டும்! வங்கனூர் ராஜலட்சுமி டாக்கீஸில் அந்தப் படம் ஓடத் தொடங்கிய சிறிது நேரத்தில் அந்தச் சிற்றூரில் மின் தடை ஏற்பட்டு, எல்லோரும் எரிச்சலோடு வெளியேறிக் கொண்டிருந்தனர். கடைசி வரிசையில் நாற்காலியில் இருந்து எழுந்து வெளியே வந்த என்னை நோக்கி ஆப்பரேட்டர் அறையில் இருந்து வேகமாக வந்த சிறுவன் ஒருவன், சார், இதே டிக்கெட்ட பத்திரமா நாளைக்கு எடுத்திட்டு வாங்க, படம் பார்க்கலாம், எல்லோருக்கும் சொல்லிக்கிட்டிருக்கோம் என்றான். நான் சிரித்துக் கொண்டே, நாளைக்கு வேற டிக்கெட் வாங்கிக்கிட்டா போச்சு என்று அவனிடமே அதைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். ஒரு ரூபாய் டிக்கெட்டில் கடைசியாகப் பார்த்த படம் நூல்வேலி. அந்தத் தேரோட்டம் எப்படி மறக்கும்?
ஆஹா, மெல்லிசை மன்னர் எம் எஸ் வி அவர்களின் அற்புதமான இசையமைப்பில், எஸ் பி பி நிகழ்த்தும் ராக ஆலாபனையும், கண்ணதாசனின் நளினமான சொற்களைத் தனது இசை ஆற்றில் குள்ளக் குளிர நீராட்டி நீராட்டிக் கூழாங்கல்லைப் போல் இன்னும் வழுவழுப்பாக்கி அவர் பாடும் சரணங்களும் ஆஹா…ஆஹா..
பல்லவியை நோக்கிய மென்னடையிலேயே ‘ஹுஹும்…ஹும் …ஹாஹஹா ஹ ஹாஹ …’ என்று பாட்டின் திசையை இலேசாகத் தொட்டுக் காட்டி விட்டு, ‘தேரோட்டம் ஆனந்த செண்பகப் பூவாட்டம்‘ என்று தொடங்கி, ‘காவிரி பொங்கிடும் நீரோட்டம் கண்டதும் நெஞ்சினில் போராட்டம்‘ என்ற வரிகளில் வழியும் நீரும், நடக்கும் போரும் அம்மம்மா…..பாடல் முழுக்க அந்த நீரோட்டமும், போராட்டமும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ரசிப்பில் தெறிக்கும்! காதல் உருகுதலின் மெருகேறிக் கொண்டே செல்லும் சரணங்கள் மட்டும் என்னவாம்…முதல் சரணத்தின் மூன்றாம் வரியில் ‘சின்னச் சின்ன நடை திண்டாட்டம்‘ என்பதைச் சொற்களால் அப்படி ஒரு சின்ன நடையே நடந்து காட்டி இருப்பார் பாலு. இரண்டாம் சரணத்தில், அதே போல், ‘வண்ண வண்ண முகம் பாலாட்டம்‘ என்ற வரியில் பால் மட்டும் அல்ல வண்ண வண்ண என்ற சொற்களும் சேர்ந்து பொங்குவதைக் கேட்க முடியும். அது ஒரு புறம் இருக்கட்டும், இரண்டாம் சரணத்தை ஒரு கிறக்கமான ஆலாபனையோடு போய்த்தொட்டுப் ‘பூந்தோட்டம்‘ என்று அந்த இரண்டாம் சரணத்தின் தொடக்க சொல்லுக்குப் புல்லாங்குழலில் அந்தப் பூந்தோட்டத்தை மலர்த்தி இருப்பார் எம் எஸ் வி. மூன்றாம் சரணம் பாலுவுக்கு ஏற்றாற் போன்றே, இன்னும் ஒய்யாரமாகப் பாடி நிறைவு செய்வதற்கான குறுகுறுப்பாக என்ன என்ன சுகம் உள்ளோட்டம் என்று போய், பாடலைக் கேட்பவரையும் ‘இந்திர லோகத்தில் தாலாட்டும்‘!
அண்ணன் ஒரு கோவில் படத்திலும் ஒரே பல்லவியில் தொடங்கும் இன்பியல், துன்பியல் பாடல்கள் உண்டு. பி சுசீலா இன்பமாகப் பாடும் அந்தப் பாடலை, எஸ் பி பி, படத்தின் பிற்பகுதியில் பாடுவது சோகச் சுவையின் ருசிப்பில் திளைப்போரை ஆட்டிப் படைத்த ஒன்று.
ராக ஆலாபனையில் தொடங்கும் பாடலில், ‘பொன்னை வைத்த இடத்தினிலே‘ என்று தொடங்கும் முதல் சரணத்தில் அந்த இடத்தினிலேவில் இடம் பெறும் ‘லே‘ என்ற எழுத்து எத்தனை சுகமான இழைப்புக்குத் தன்னை அவரிடம் ஒப்புக்கொடுக்கும்! ‘அண்ணனன்றி யாரும் உண்டோ‘ என்ற அடியை இரண்டாம் முறை பாடுகையில், ‘யாரும்‘ என்ற சொல்லை எத்தனை கற்பனையோடு விரிப்பார் அவர்! தொட்டில் இட்ட தாயும் இல்லை, தோளில் இட்ட தந்தை இல்லை என்ற இரண்டாம் சரணத்தின் முதல் வரியை ஏக்கம் ததும்பும் ஓர் அறிக்கை வாசகமாக முதல் தடவை எடுத்துக் கொடுக்கும் பாலு, அதே அடிகளை இரண்டாம் முறை என்னமாக உருட்டி உருட்டித் துயரைப் பெருக்குவார்…. சிதார் சிதறலும், வளைத்து வளைத்து இழைக்கும் வயலினும், இரவு நேர முணுமுணுப்புக்காகவே உருவாக்கியது போல் பாடலைச் சிறப்பாக்கி இருக்கும்.
இன்னும் எண்பதுகளில், தொண்ணூறுகளில் என்று பைனாகுலர் வைத்துப் பார்த்தால், பட்டிக்காடா பட்டணமா படத்தில், சோழவந்தான் பூமியில், ‘அதோ பாரு, அம்புட்டும் நம்ம நெலந்தே‘ என்று கணேசன் சொல்வாரே அப்படி செழித்திருக்கிறது பாலுவின் பாடல் உலகம். அவரது மறைவை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனங்களில் திறமையான பாடகராக மட்டுமல்ல, அருமையான மனிதராகவும் அவர் நிலை பெற்றிருப்பதை உணர முடிகிறது.
சோதனையைக் கடந்து மீண்டும் சோதனை மேல் சோதனை பாட்டுக்கு! வங்கியில் உடன் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர் எம் எல் குமரன் அவர்கள், காவல் துறை அதிகாரிக்கான பாடல் என்பதால், கண்ணதாசன் அதில் அடி, விலங்கு என்றெல்லாம் சொற்களை சேர்த்திருந்த நயத்தைச் சுட்டிக் காட்டி இருந்தார். முதன்மை மேலாளராக இருந்தாலும் சமதையாகப் பழகும் பாங்கு மிக்க குமரன், அலுவலக நேரத்திற்குப் பின்னும் வேலைகள் தொடர்கையில் சிலபோது அலைபேசியில் அருமையான பாடல்களை ஒலிக்கவைத்து சிலாகித்து ரசித்துக் கொண்டாடுவது ரசமான காட்சியாக இருக்கும்.
உள்ளபடியே, அந்தப் பாடலை உற்றுக் கேட்டால், அவர் சொன்ன அடி, விலங்கு ஆகிய சொற்கள் மட்டுமல்ல, ஆதாரம், அதிகாரம் என்ற சொற்களும் இடம் பெற்றிருப்பதை கவனிக்க முடியும். அவ்வளவு ஏன், சோதனை என்ற சொல்லே காவல் துறையின் முக்கிய சொல்லாடல் ஆயிற்றே,
ஆதாரங்களையே அழிக்கும் அதிகார வெறியை நாடு அதிர்ந்துபோய் பார்த்துக் கொண்டிருக்கிறது. இது புதிதல்ல என்றாலும், ஹத்ராஸில் ஓர் இளம் பெண்ணை அலைக்கழித்து, அவமதிப்புக்குள்ளாக்கி, கேடு விளைவித்துக் குத்துயிரும் குலையுயிருமாக பரிதவிக்க விட்டுச் சென்றவர்களை பாதுகாக்கும் வேலையைச் செய்திருக்கின்றனர். ‘மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான்‘ என்று பாஞ்சாலி சபதத்தில் பதறி எழுதினார் மகாகவி. ‘பாரதத்தில் ஒரு போர் நடக்கும், இது சத்தியம் சத்தியம்‘ என்ற பாடல் தான் சட்டென்று நினைவுக்கு வந்தது. (நாம் பிறந்த மண்).
இசை தாலாட்டவும் செய்கிறது. அமுதூட்டவும் செய்கிறது. வழி நடைக்குத் துணை வருகிறது. சோர்வுற்ற தோள்களைத் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. துயரில் ஆழவைத்து ஆற்றுப்படுத்தவும் செய்கிறது. சக உயிர்களை நேசிக்க வைக்கும் இசை, அப்பாவி உயிர்களுக்கு அநீதி இழைக்கப்படுகையில், அதற்கு எதிராக சத்திய ஆவேசம் கொள்ளவும் வைக்கிறது. இசை, வாழ்வின் சவால்களில் இருந்து தப்புவிக்கத் தேடும் மயக்க மருந்து அல்ல. அந்த அசதிக்குச் சுடர் தரும் தேன், தமிழைப் போலவே!
(இசைத்தட்டு சுழலும்……)
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
தொடர் 1 – ஐ வாசிக்க..
தொடர் 2 – ஐ வாசிக்க..
தொடர் 3 – ஐ வாசிக்க…
தொடர் 4 – ஐ வாசிக்க…
https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/
தொடர் 5 – ஐ வாசிக்க..
தொடர் 6 – ஐ வாசிக்க..
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
தொடர் 11 – ஐ வாசிக்க..
https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/
தொடர் 12 – ஐ வாசிக்க..
தொடர் 13 – ஐ வாசிக்க..
தொடர் 14 – ஐ வாசிக்க..
தொடர் 15 – ஐ வாசிக்க..
தொடர் 16 – ஐ வாசிக்க..
தொடர் 17 – ஐ வாசிக்க..
தொடர் 18 – ஐ வாசிக்க..
தொடர் 19 – ஐ வாசிக்க..
எஸ்.பி.பி நம்மிடையே இல்லை என்பதைஇன்றும் மனம் ஏற்க மறுக்கிறது. அவர் பாடிய ஒவ்வொரு பாடலும் ஒரு கதை சொல்லும். படிக்கும் பொழுது நாமும் நன்கு உணர்கிறோம்.
அருமையான பதிவு. இசை விருந்தாக மருந்தாக சுமைதாங்கி கல்லாக பல பரிமாணங்களில் உணரப்படுகிறது.
/அவரது மறைவை ஏற்றுக் கொள்ள மறுக்கும் மனங்களில் திறமையான பாடகராக மட்டுமல்ல, அருமையான மனிதராகவும் அவர் நிலை பெற்றிருப்பதை உணர முடிகிறது. …/
உண்மை ஐயா. இன்று அவரைப்பற்றி வெளிவரும் ஒவ்வொரு காணொலியும் , அவர் மீதான மதிப்பை உயர்த்திக் கொண்டே செல்கிறது
கட்டுரை எஸ்.பி.பி.யின் குரலோடு கசிந்து கண்ணீர் பெருக்கெடுக்க வைக்கிறது.
Venugopal sir. It’s very difficult to restrict SPB’s talent . We can see veriety in his voice. If you take each of the song he sang, it will take months / years for you to write. Your ‘Isai Payanam’ will never end and our passion for enjoying his singing also will not see the end.
இவ்வளவு இசை நயம் அறிந்த எஸ்விவே என்ன சிறப்பாக எழுதியுள்ளார். கைகளில் முளைத்திருக்கும் சிறு முடிகளே சிலீரென்று விரைக்கின்றதே. அருமையான பொக்கிசம் இசைஞானம் உள்ளோர் கொண்டாடுவார்கள். ஆஹா அருமை அருமை
திரைப்படப் பாடல்களை இவ்வளவு நயம் பாராட்ட முடியுமா என்று வியக்கிறேன். சுப்புடு கனிவாக எழுதினால் இப்படித்தான் இருக்குமோ? நூல்வேலி பாடல் வாலியா? அவ்வளவு மோனைகளை ( தவறாக இருந்தால் தமிழ் இலக்கணம் தெரிந்தவர்கள் திருத்தவும்.)போட்டிருக்கிறாரே? பாடல்களை கேட்காமலே எழுதுகிறேன். இன்று இரவுக்காக பாடல்கள் ரிசர்வ் செய்திருக்கிறேன்.
அன்புத் தோழர் வேணுகோபால்! இசை வாழ்க்கை 20 படித்து மகிழ்ந்தேன். வங்கி அதிகாரி குமரன் வேலை நேரம் கடந்த வேலையின் போது பாடலைக் கேட்டுக்கொண்டே வங்கி வேலையைத் தொடர்வார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இசையுடன் இணைந்த வேலை இனிமையானதாகவே இருக்கும். மதுரையில் ஒரு ஜவுளிக் கடையில் குறைந்த ஒலியில் பாடல்கள் எங்கோ மறைந்திருக்கும் ஸ்பீக்கர்கள் இசையால்கடை வெளியை நிரப்பிக் கொண்டிருக்கும். மெல்லிய அளவில் கேட்கும் பாடல்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதோடு, விற்பனைப் பணியில் ஈடுபட்டிருக்கும் பணியார்களுக்கும் பணிச் சுமையை போக்கிடும் மருந்தாய் இசை அமைந்திடும். பட்டுக்கோட்டையார் இதைத்தான் “ ஆடிப் பாடி வேலை செசஞ்சா அலுப்பிருக்காது” என்று பாடினார். ஆனால் தமிழகத்தில் பஸ் பயணத்தின் போது பேரிரைச்சலில் பாடல்களை ஒலி பரப்பி மிகப் பெரிய இடைஞ்சலாக மாற்றிவிடுவது இசைக்கு இழைத்திடும் பெருந் துரோகம் ஆகும். தொடரட்டும் உங்கள் இசைப் பயணம் தோழர்.
அன்புடன்,
விஜி.
உங்களது உணர்வின் இரசனையின் வெளிப்பாடு மட்டுமல்ல இக்கட்டுரை. படிப்பவர்களதும் கூட .
எஸ் பி பி கடல். எத்தனை நேரம் பார்த்தாலும் சலிக்காது. எஸ் பி பியை கேட்டுக் கொண்டேயிருக்கலாம். மனதில்தானே அடங்கியுள்ளார்
இசை தாலாட்டவும் அமுதூட்டவும் செய்கிறது… அப்பாவி உயிர்களுக்கு அநீதி இழைக்கப்படுகையில், அதற்கு எதிராக சத்திய ஆவேசம் கொள்ளவும் வைக்கிறது.. True lines Sir. நன்றி..
எஸ்.பி.பி நம்மோடு தான் இன்றும் , எப்பவும் இருக்கிறார் என்ற உணர்வே அவரது பாடல்கள் உணர்த்துகின்றன. இந்தத் தொடரை வாசிக்கும்போதும் அந்த உணர்வே எழுகிறது.அவரது மறைவை மனம் மறுக்கிறது. இசை மயக்குவது மட்டுமல்ல; நம்மை இயக்குவதும் கூட ! என்று இப்பகுதியை முடித்திருக்கிறார். இதுதான் கலையின் இயங்கியல் தன்மை. பாராட்டுகள் எஸ்.வி.வி. கால ஊஞ்சலில் நம்மை முன்னும் பின்னுமாக ஆட வைக்கிறார்.
பிரம்மாண்டமான, அழகான,ஆர்ப்பாட்டம் இல்லாத, அமைதியான சிவன் கோவில் அமைந்திருக்கும் இடமான
தாமிரப்பாக்கம் தற்போது எஸ்பிபி நிரந்தரமாக உறங்கும் இடமாக அமைந்துவிட கண்ணீரைக் கடன் வாங்கி துன்பம் வரும் வேளையில் சிரிக்க இயலாமல் அழுதுகொண்டே சிரிக்கும் சூழலில் ‘சங்கராபரணம்”மரோ சரித்ரா”ஏக் துஜே கேலியே’ போன்ற பிறமொழி பாடல்களின் சோக இசை குறிப்பாக மரோ சரித்ரா படத்தில் மௌத் ஆர்கன் இசையுடன் தொடங்கும் ‘ஏ தீக பூவனு‘ பாடல் சோகத்தின் எல்லைக்கு நம்மை அழைத்துச் சென்று ‘யாயும் ஞாயும் யாராகியரோ’ என மொழிக்கு அப்பாற்பட்டு அவரது பாடல்களை,அவரை நினைவுகூற செய்கிறது.
தேரோட்டம் பாடல் இடம்பெற்ற
நூல் வேலி படத்தைப் பார்க்க இயலாது மின்தடை தடுக்க அதே ஒரு ரூபாய் டிக்கெட்டை மறுதினம் படம் பார்க்க கொண்டு வாருங்கள் என்று திரையரங்க ஆப்பரேட்டர் அறையில் இருந்து ஓடிவந்து சிறுவன் கூற அதனை அவனிடமே கொடுக்க அச்சிறுவன் அவ்வமயம் அடைந்த மட்டற்ற பூரிப்பை தாங்கள் கண்டு களித்து ரசித்திருந்திருப்பதை எங்களால் உணரமுடிகிறது. மகிழ்ச்சி துயரம் என மாறுபட்ட ரசனை உள்ள மற்றுமொரு பாடலான ‘அண்ணன் ஒரு கோவிலை’ நினைவுறச்செய்து,
நாட்டை சோகத்தில் ஆழ்த்திய
ஹத்ராஸ் நிகழ்வை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்கும் அமைப்புகளுடன் இணைந்து போராடத் தூண்டுவதுடன் ‘மாடு நிகர்த்த துச்சாதனன் அவள் மைக்குழல் பற்றி இழுக்கிறான்‘ என்ற பாஞ்சாலி சபதம் மகாகவியின் கூற்றை மேற்கோள் காட்டி ‘பாரதத்தில் ஒரு போர் நடக்கும், இது சத்தியம் சத்தியம்‘ என்று அனைவரின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இசை
அப்பாவி உயிர்களுக்கு அநீதி இழைக்கையில்ஆவேசம்கொள்ளும் இசை அசதி தமிழ் தரும் தேன்தான்.
செழித்த எஸ்பிபி
யின் பாடல் உலகம் ‘அம்புட்டும் நம்ம நெலந்தே’ என்பதனாலேயே உலகிலுள்ள கோடான கோடி மக்கள் எஸ்பிபி அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான நிகழ்வுகளைக் காணநேர்ந்தது.
‘இசையோட்டம் உள்ளத்துயரோட்டும்’ என்ற ஆணித்தரமான செய்தி தங்கள் இசை ஆராய்ச்சி பயணத்தை மேலும் வழிநடத்த மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தங்களுக்கும்
புக்டே. கோ.இன் தோழர்களுக்கும்
எல்லாம் சரி! இப்படி சங்கதி சங்கதியாய் மக்கள் அவரது பாடல்களை ரசிக்கிறோம் என்பது எஸ் பி பிக்குத் தெரியுமா?