செப்டம்பர் 25ம் தேதிக்குப் பிறகு இதுவரை ஒலிக்காத, கேட்காத, பகிர்ந்திராத பாடல்களும், திரும்பத் திரும்பக் கேட்டவையுமாக எங்கெங்கோ செல்லும் (என்) எண்ணங்கள், பொன் வண்ணங்கள் எல்லாவற்றிலும் நிலாவே நிலாவே என்று கொஞ்சிக்கொண்டே இருக்கிறார் எஸ் பி பி. அதெல்லாம் சரி, இப்படி சங்கதி சங்கதியாய் மக்கள் அவரது பாடல்களை ரசிக்கிறோம் என்பது எஸ் பி பிக்குத் தெரியுமா என்று ஓர் அன்பர் இணைய தளத்தில் கருத்துக்கள் பகுதியில் கேட்டிருக்கிறார்.
பரவசத்தின் செல்லக் குழந்தை பாலசுப்பிரமணியன். குழந்தை தனது ஓவியத்தை முதலில் தான் ரசிக்கிறது, அப்புறம் மற்றவர்களுக்கு அதை ரசிக்கத் தெரிந்திருக்கிறதா என்று கொண்டு வந்து காட்டுகிறது. அவர்களது கண்களில் உண்மையைத் தேடுகிறது, பாவனைகளைக் கண்டுபிடித்துவிடுகிறது. அற்புதமாக வரையும் குழந்தை, பின்னர், யாரும் அருகே இல்லாத போதும் அந்த ஓவியத்தை நெருக்கமாக அணைத்து முத்தமிட்டு பத்திரமாக உள்ளே வைத்துக் கொள்கிறது. ஆனால், வீட்டுக்குப் பின்னர் வரும் உறவினர்கள், விருந்தினர்கள் பார்வைக்கு எடுத்து வைத்து அவர்களில் சிலர் உற்சாகமாக ரசிக்கும்போது, எதைப் பார்த்து ரசித்து, என்னென்ன வண்ணங்கள் குழைத்து, எப்படி எப்படியெல்லாம் வரைந்தேன் என்பதை கண்கள் மலர விளக்குகிறது. பேப்பர் யார் வாங்கிக் கொடுத்தார், பிரஷ், பெயிண்ட் எல்லாம் எப்படி தன்னிடம் வந்து சேர்ந்தது என்பதையெல்லாம் ஒரு சேர அவர்கள் பார்வைக்கு வைத்துவிடுகிறது. கொஞ்சம் தள்ளி நின்று கைகளைத் தட்டிக்கொண்டும், குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டும் அந்தச் சூழலை மேலும் கவித்துவமாக்குகிறது குழந்தை.
பாலு, தமது பாடல்களின் பெருமையை இசையமைப்பாளர்க்கும், பாடலாசிரியர்களுக்கும், இசைக்கருவிகளை வாசித்த கலைஞர்களுக்கும், படத்தை உருவாக்கியோர்க்கும் வழங்கி மகிழும் வாழ்க்கையைத் தேர்வு செய்திருந்தார். கனமற்ற தனது சட்டைப் பையில், ரசிகர்களின் குதூகலத்தை, அன்பின் ஆர்ப்பாட்டக் கரவொலியை, உரத்த குரலில் தெறித்த உற்சாகத்தை மட்டுமே நிரப்பிக் கொண்டார். மேடையில், தொலைக்காட்சி நேர்காணலில், ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்ளும்போது பாடல்களில் தமது எந்த நுட்பமான பகுதியை ரசிகர்கள் பேரார்வம் பொங்க எதிர்பார்த்திருப்பார்கள் என்பதை அவர் எப்போதும் உணர்ந்திருந்தார். ஆனால், தன்னடக்கமாக அதைச் செய்து கொண்டிருந்தார். தனது ஓவியத்தை யாராவது பாராட்டினால், தனது தங்கையின் ஓவியத்தை, வகுப்புத் தோழியின் கலைத்திறனை, வேறு பிள்ளைகளின் சாதனையைக் கொண்டாடும் குழந்தைகள் போல் உற்சாகமாக வாழ்ந்தார்.
அரசுகள், முக்கிய எழுத்தாளர்களது புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குகின்றன. பாலுவின் பாட்டுடைமை, நாட்டுடைமை அல்ல உலகத்தின் கூட்டுடைமை ஆகிவிட்டது.
வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும் இழையோடுகிறது இசை என்பதைத் தற்செயலாக, ஆங்கில நாளேட்டில் பெரிய புகைப்படத்தோடு வெளியாகி இருந்த ஒரு பெண்மணிக்கான அஞ்சலி குறிப்புகளில் திகைப்போடு பார்க்க முடிந்தது. மறைந்தவர் அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் நலத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவில் சர்ஜன்.
குடும்பத்தில் யார் யார்க்கு என்னென உறவாகத் திகழ்ந்தார் என்ற கவித்துவக் குறிப்புகளோடு வெளியான அந்த விளம்பரத்தில், மூன்று முக்கிய செய்திகள் இணையும் புள்ளி மகத்தானது. தென் சென்னை கடற்கரையோர குடியிருப்புகளின் ஏழை எளிய குடும்பத்துப் பிள்ளைகளின் உடல் நல காப்பாளராக விளங்கி இருந்த அந்த மனுஷி, வீட்டில் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கதை சொல்லியாக (ரெட் ரைடிங் ஹூட்), ‘கே செறா செறா‘ வின் ருசியைத் தொட்டுத் தொட்டு விஷயங்களை அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தியவராக இருந்தார் என்பதோடு வேறோர் அம்சமும் ஈர்ப்பதாக இருந்தது. அவரது வெடிச்சிரிப்பின் இசை தொடர்ந்து சுழன்று கொண்டே இருக்கும் என்ற வரி தான் அது. ‘சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதம்‘ அது. பரிச்சயமற்றவராக இருந்தால் என்ன, அர்ப்பணிப்பு மிக்க டாக்டர் தேவி அவர்களுக்கு நம் அஞ்சலியும் உரித்தாகிறது.
உண்மையில் இசை என்னவெல்லாம் செய்கிறது…..வெறும் தம்பூரா சுருதியின் பின்னணியில் டி ஆர் மகாலிங்கம் பாடுகிறார், வேறு கருவிகளே இல்லை.
‘இல்லாததொன்றில்லை’ (திருவிளையாடல்) என்று தொடங்குகிறது ! உள்ளபடியே அந்தப் பாடலில் என்ன தான் இல்லை…. ராக ஆலாபனையும், குரல் இனிமையும், சொற்களின் விதவிதமான நெளிவு சுளிவு உச்சரிப்புமாக அந்தப் பாடல் அம்மம்மா…அப்பப்பா… புல்லாகிப் பூண்டாகி புழுவாகி என்று எழுதிவிட்டால் மளிகைக்கடை பட்டியல் மாதிரி வேகமாக வாசித்து விட்டுப் போய்விட முடியுமா, நடக்குமா அவரிடம்?
ஒவ்வொரு சொல்லும் எத்தனை ஏற்ற இறக்கங்களோடு தெறித்து விழுந்து கொண்டே செல்லும் பாடல் நெடுக! படிப்படியாக உயரத்தை நோக்கிய மலை ஏறுதலில் ஆங்காங்கே இளைப்பாறும் கல் திண்ணைகளாக ஒவ்வொரு சரணத்திலும் எத்தனை எத்தனை சுகானுபவங்கள்! ‘சொல்லாலும் மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை‘ என்ற இழைப்பைத் தொடர்ந்து அடுத்து வரும் அந்த ‘மென்மேலும் உயரவைத்தாய்‘ வரியில் மென்மேலும் என்ற சொல் மென்மேலும் பெருமை தேடிக்கொள்ளும் அவரது ராக வசீகரிப்பில்.
‘கல்லான உருவமும்’ என்ற சரணத்தை அப்படி ஓர் இழு இழுத்து, ‘கனிவான’ என்ற சொல்லை மிகுந்த கனிவோடு உருக்கிக் ‘கனிவ் வான’ என்று ஆக்கி, கனிவான உள்ளமும் வடிவான சதுர்வேதனே என்ற படிக்கட்டில் ஆலாபனை எடுத்து… அடடா…அடடா… அப்படியே சொற்களால் கட்டியெழுப்பும் ஆலய விமானத்தில், ‘சிவ நாதனே’ என்று உச்சியை எட்டி, ஓர் இதம் பதமாக இறங்கி வந்து முடிக்கும் இடம்….ஆஹா… என்ன சொல்ல! கே வி மகாதேவன் அவர்கள் இந்தப் படத்திற்காக வழங்கிய இசை குறித்தே ராக நுட்பங்களும், சங்கீத ஞானமும் மிக்கவர்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருக்க முடியும்.
கண்களை மூடியபடி, எந்தக் குறுக்கீடும் இன்றி லயித்துக் கேட்கும் ஒருவர், பாடல் நிறைவு பெறும் வேளையில் கண்கள் கசிந்துருகி நிற்பார் என்பதற்கான சாத்தியங்கள் அதிகம். அந்த இடத்தில் ஏற்றி வைக்காத ஊதுவத்தி, சாம்பிராணி மணம் அத்தனையும் தாமாகவே அந்த அறையில் கமழ்ந்து கொண்டிருக்கும் உணர்வை இந்தப் பாடல் உருவாக்கி விடுகிறது. அதற்கு ஒருவர் ஆத்திகனாக இருக்கவேண்டிய முன் நிபந்தனை கிடையாது. இசை எல்லா பேதங்களையும் கடந்து ஈர்க்கிறது. சிகிச்சையும் வழங்குகிறது.
கடந்த கட்டுரையில் சோழவந்தான் ஊரைச் சொல்லவும், இந்த வாரம் அங்கே பிறந்த அற்புத பாடகர் டி ஆர் மகாலிங்கம் அவர்களைப் பேசுவதும் தற்செயலானது. சிறந்த நடிகராகவும் திகழ்ந்த அவரது கணீர் குரலுக்கு முக்கிய காரணம், 1930களில் நாடக மேடைகளில் சவுண்ட் சர்வீஸ் இல்லாத காலங்களில் உரத்துப் பாடிய தொண்டைக்காரர்கள் வரிசையில் முக்கியமானவர் அவர். அதனால் தான் சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டில் மென்மையான தடம் பதித்துப் போகும் செந்தமிழ்த் தேன் மொழியாளை (மாலையிட்ட மங்கை) அவரால் அதனினினும் இனிய குரலால் இழுத்து நிறுத்த முடிந்தது.
பல்லவியில் புறப்படும் ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்‘ என்பதில் மொழியாள் என்ற சிலிர்ப்பைக் கன்னங்களில் விரல்களால் தெறிக்கும் ஐஸ் சிதறல் போல ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக வழங்கி இருப்பார் அவர். முதல் சரணத்தை அவர் தொடும்போதே பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பவர் சோலையொன்றில் நுழைந்து விட்டிருப்பார். ‘காற்றினில் பிறந்தவளோ புதிதாய்க் கற்பனை வடித்தவளோ…’ என்ற வரியின் நீட்சி, காற்றின் கற்பனை வாசல்களில் எல்லாம் போய்த்தட்டிவிட்டு வருவதாக இருக்கும். சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ என்ற வியப்பு தீர்வதற்குள் அவரது குரல் செவ்வந்திப் பூச்சரமாகி மணக்கிறது!
‘கண்களில் நீலம் விளைத்தவளோ‘ என்ற இரண்டாம் சரணம் தனி அழகு. அதைக் ‘கடலினில் கொண்டு கரைத்தவளோ‘ என்பதில், கொண்டு என்ற சொல்லை அவர் உச்சரிக்கும் ஓயிலில் சொக்கி நிற்க வைக்கும் (குற்றியலுகர விதி பொருந்தினால், ‘கொண்டு’ எனும் சொல்லில் கடைசி எழுத்தான டுவை அரை மாத்திரம் குறைக்க வேண்டி இருக்கும், அது சரி, மாத்திரையே இல்லாமல் நம்மை போதையில் ஆழ்த்துபவரிடம் எதற்கு இலக்கணக் கணக்கு!). அப்புறம், ‘பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்‘ அழகு பேரழகாகத் தான் இருக்க வேண்டும், அதை மேலும் பேரழகாக உச்சரிக்க மகாலிங்கம் அவர்களால் தான் முடியும்!
செந்தமிழ்த் தேன் மொழியாள் உள்ளிட்டு 15 பாடல்கள் எழுதி, மெல்லிசை மன்னர்கள் விசுவநாதன் – ராமமூர்த்தி இசையமைப்பில் பல பாடகர்களைப் பாடவைத்து, கவிஞர் கண்ணதாசன் அவர்களே தயாரித்த படம் மாலையிட்ட மங்கை. மனோரமாவை இந்தப் படத்தில் கவிஞர் தான் அறிமுகப்படுத்தி நடிக்க வைத்தார். நடிகர்களுக்கு வழுவூர் ராமையா பிள்ளை நடன பயிற்சி அளித்திருக்கிறார். மகாலிங்கம் அவர்களுக்கு முக்கிய வெற்றியாக வாய்த்த படத்தின் டைட்டில் காட்சிகளில் இடம் பெற்ற எங்கள் திராவிட பொன்னாடே எனும் அருமையான பாடலும் அவர் பாடியது தான்.
அமுதவல்லி படத்திற்காக பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய ஆடை கட்டி வந்த நிலவோ பாடல், டி ஆர் மகாலிங்கம் அவர்களது மற்றுமொரு முத்திரைப்பாடல். சிட்டுக் குருவி போல் படபடத்து, ‘துள்ளித் துள்ளி ஆடும் இவள்‘ என்று வந்து இணையும் பி சுசீலாவின் இனிய குரல் இணைகுரலாக ஒலிக்க மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் இன்றும் ஈர்த்து வரும் பாடல் அது. மக்கள் கவிஞரின் சந்தம் கொஞ்சும் காதல் கீதத்தின் சொல்லடுக்குகள் கற்பனையின் சுவாரசியம். ‘குளிர் ஓடையில் மிதக்கும் மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்‘ என்ற வரி, எந்தக் கணத்தில் கவிஞருக்குள் இறங்கியதோ? அதுவும் மகாலிங்கத்தின் தீஞ்சுவைக் குரலில் ‘காடு விட்டு வந்த மயிலோ‘ என்ற கேள்வியின் தொடர்ச்சி ‘நெஞ்சில் கூடு கட்டி ‘வா…..ழும் குயிலோ‘ என்று நெடிய வாழ்க்கையின் காதல் வேட்கையோடு முடியும் அழகு தனி. ]
ஆண் குரலின் மெட்டிலிருந்து மென் தளத்தில் இறங்கித் துள்ளாட்டமாகப் போகும் பெண் குரலுக்கான மெட்டு, காதுகளைக் குளிர்விக்கும். உள்ளத்தைத் தொட்டு இலேசாக்கும். ராக ஆலாபனைகள் இருவரது தனித்துவத்தோடு கலக்கியவாறு, நிறைவில் ஒன்று கலக்கவும் செய்யும். ராக ஆலாபனையோடு, ‘அந்தி வெயில் பெற்ற மகளோ‘ என்று எடுக்கும் சரணத்தில்,’உந்தி உந்தி விழும் நீரலையில் ஓடி விளையாடி மனம் சிந்தி வரும் தென்றல் தானோ‘ என்ற வரியை, ஓர் அருவியின் குளிர்ச்சிச் சாரலோடு இசைப்பார் மகாலிங்கம். அவர் முடித்த மாத்திரத்தில், ராக ஆலாபனையில் அடுத்த அருவியில் நனைய வைக்கும் சுசீலாவின் குரல்…போட்டி போட்டுக்கொண்டு இருவரும் பாடல் வரிகளை அத்தனை மலர்ச்சியோடும், கிளர்ச்சியோடும் பாடி இருப்பார்கள்.
பாடும்போது கண்களில் மின்னும் புன்னகை, நளினமான முக வாகு, ஒரு வித அப்பாவித் தோற்றமும், இசைக்காகவே இசைந்த வாழ்க்கையுமாக இருந்த டி ஆர் மகாலிங்கம் அவர்களது பாடல்களுக்குத் தனி ரசிக பட்டாளம் உண்டு.
தொழிற்சங்க வாழ்க்கையில் தட்டி, பேனர்களில் அற்புதமான கையெழுத்தில் அநாயாசமாக வண்ணங்கள் குழைத்த எளிய மனிதர் ‘மிலிட்டரி‘ கண்ணன் மறக்க முடியாதவர். முன்னாள் இராணுவ வீரர் என்பதால் மிலிட்டரி என்ற அடைமொழி. அரைக் கோப்பை தேநீர், பீடி போதும், தர்ணா பந்தல்களை அசர வைப்பார், மாநாட்டு நேரங்களில் இரவெல்லாம் கண் விழித்து தெர்மோகோல் துண்டங்களை ஆங்கில, தமிழ் எழுத்துகளாக மெனக்கெட்டு வெட்டியெடுத்து தங்க ஜிகினா தூவி, செஞ்சீலைகளில் ஒட்டி அபாரமான ஓவியத் தீற்றல்களோடு மேடையின் பின்னணித் திரையை ஒரு திரைத்துறை கலைத்துறை ஆட்கள் போல் ஒற்றை ஆளாக முடித்துவிட்டு, சைக்கிளை மிதித்தபடி வீடு திரும்பிக் கொண்டிருப்பார். அவரோடு மணிக்கணக்கில், நாட்கணக்கில் எத்தனை எத்தனை பகிர்வுகள்…
இந்தத் தீவிர மனிதருக்குள் நகைச்சுவை, இசை, சிறுகதை எல்லாம் குடி கொண்டிருக்குமா என்ற தேடலில், அவ்வப்பொழுது சீண்டிக் கொண்டே இருப்பவன், ஒரு நாள், “கண்ணன், ரொம்ப மோசமா இருக்கு வாழ்க்கை” என்றேன்.
“இந்த வயசுலயே என்னப்பா அவ்வளவு கஷ்டம்?” என்றார் அவர்.
காத்திருந்த நான், “குயிலைப் புடிச்சு கூண்டில் அடைச்சுக் கூவச் சொல்லுகிற உலகம் இது கண்ணன்” என்று நிறுத்தினேன்.
“ஹான்….அப்படி இல்லப்பா…மயிலைப் புடிச்சு காலை உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்” என்று ஒவ்வொரு சொல்லாய் இழுத்து இழுத்துச் சொல்லி ‘எப்புடி‘ என்பது போல் ஒரு பார்வை விட்டாரே, பார்க்கணும் !
அவரைக் கட்டித் தழுவிக் கொண்டாடவும், ‘உடம்பு தான் மிலிட்டரி, இது ஈரமானது‘ என்று சொல்வது போல் இதயப்பகுதியைத் தட்டிக் காண்பித்த அந்த எளிய மனிதர் உண்மையில் அப்படியான இளகிய மனத்தோடு வாழ்ந்து மறைந்தவர்.
ரசனை அவரவர் தனி உலகம். ஒரு புதிய பேனாவோ, வேறு பிடித்த பொருளோ வாங்கி இருப்போம், பிறகு சந்திக்க நேரும் மனிதர்களிடம் அதே பொருள் இருந்து நம் கண்ணில் படும்போது அடையும் இன்பம் போன்றது தான், ஒரே ரசனை எதிர்ப்படும் நேரங்களில் அடையும் பேரானந்தமும். அந்தப் பாடலோடு முடிந்து விடுகிறதா ஒப்பீடு, அதே பாடகரின் வெவ்வேறு பாடல்களும், அதே இசையமைப்பாளரின் வேறு வேறு மெட்டுக்களும், அதே பாடலாசிரியரின் இன்னும் இன்னும் கற்பனை வரிகளும் பேசப் பேச நேரம் போவது அறியாமல் பகிர்ந்து கொள்ள வாய்த்திருப்பது தான் இசை வாழ்க்கை, வேறென்ன!
கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
தொடர் 1 – ஐ வாசிக்க..
தொடர் 2 – ஐ வாசிக்க..
தொடர் 3 – ஐ வாசிக்க…
தொடர் 4 – ஐ வாசிக்க…
https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/
தொடர் 5 – ஐ வாசிக்க..
தொடர் 6 – ஐ வாசிக்க..
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
தொடர் 11 – ஐ வாசிக்க..
https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/
தொடர் 12 – ஐ வாசிக்க..
தொடர் 13 – ஐ வாசிக்க..
தொடர் 14 – ஐ வாசிக்க..
தொடர் 15 – ஐ வாசிக்க..
தொடர் 16 – ஐ வாசிக்க..
தொடர் 17 – ஐ வாசிக்க..
தொடர் 18 – ஐ வாசிக்க..
தொடர் 19 – ஐ வாசிக்க..
தொடர் 20 – ஐ வாசிக்க..
உண்மைதான் ஐயா. நாம் பெரிதும் விரும்பும் பாட்டை | கண்களை மூடி, ரசிக்கையில், மனம் பாட்டில், பாட்டின் இசையில் கலக்கையில், லயிக்கையில், எங்கிருந்தோ ஒரு சுகந்த மணம் வீசுவதை உணர முடிகிறது.
மிக சிறந்த கட்டுரை. இசையின் மகிமையை சொல்லிக்கொண்டே போகலாம். கே வி மகாதேவன் ஒரு மேதை. அவருக்கு உரிய அங்கீகாரம் தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை.
கண்ணனை பற்றி படித்தவுடன் கண்கள் கலங்கின. மறக்க முடியாத மறக்க கூடாத தோழர்.
ஆடை கட்டி வந்த நிலவோ.. என்ன அருமையான இசையோடு இணைந்த பாடல். ஞாபக படுத்தியதர்க்கு நன்றி. வேறு என்னத்த சொல்ல..
என்ன ஒரு ஞாபக சக்தி அபார அசத்தல் நடை என மெருகேற்றி தமிழ் திரையுலகத்தை சிறப்பாக எழுதிவருகின்ற எஸ்விவி கொண்டாட வேண்டிய ஆளுமை. அருமை நன்றி.
ஒரு சமயம் பரம்பிக்குளம் காட்டில் உள்ள கன்னிமார் மரங்களை பார்க்க போயிருந்தோம். குளிர்ந்த சுழல். தெளிவான நீரோடை. காட்டின் மணம் விதம் விதமாக கடந்து கொண்டிருந்தது. பறவைகளின் கச்சேரி வேறு.
உங்கள் கட்டுரைக்குள் போய் வருவதும் அப்படித்தான். பலவித உணர்வு நரம்புகள் மீட்டப்பட்டன. வாழ்த்துக்கள்.
உச்சஸ்தாயியில் பாடும் மஹாலிங்கம் கீழேயும், ஏ.பி.கோமளா மேலேயும் பாடும் நானன்றி யார் வருவார் பற்றியும் இரண்டு வரி எழுதியிருக்கலாம் ..