‘ஒரு சமயம் பரம்பிக்குளம் காட்டில் உள்ள கன்னிமார் மரங்களைப் பார்க்கப் போயிருந்தோம். குளிர்ந்த சூழல். தெளிவான நீரோடை. காட்டின் மணம் விதம் விதமாகக் கடந்து கொண்டிருந்தது. பறவைகளின் கச்சேரி வேறு. இசை வாழ்க்கை கட்டுரைக்குள் போய் வருவதும் அப்படித்தான். பலவித உணர்வு நரம்புகள் மீட்டப்பட்டன‘ என்று தமது பிரதிபலிப்புகள் பதிவு செய்துள்ளார் நண்பர் உமாமகேஸ்வரன். இயலிசை நாடகம் எல்லாம் மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வியலின் பகுதியாகவே கொண்டுவிட முடியுமானால், தனியே அவற்றுக்கான நேர ஒதுக்கீடு தேவைப்படுவதில்லை. பரவசமிக்க வாழ்க்கைக்கு வாழ்த்துகள் !
டி ஆர் மகாலிங்கம் அவர்களது தனித்துவம் குறித்த மிகச் சுருக்கமான கடந்த வாரக் கட்டுரையில் சிலிர்ப்புற்றோர் உண்டு. ‘உச்ச ஸ்தாயி பாட்டுக்காரரான அவர் கீழ் ஸ்தாயியிலும், ஏ பி கோமளா அவர்கள் மேல் ஸ்தாயியிலும் பாடிய ‘நானன்றி யார் வருவார்‘ பாட்டைப் பற்றியும் இரண்டு வரிகள் எழுதி இருக்கலாம்‘ என்று பதிவிட்டிருக்கும் எழுத்தாளர் – மொழி பெயர்ப்பாளர் தோழர் ச சுப்பாராவ் இசை ஞானமிக்க பரம ரசிகர்.
மிக சுவாரசியமான சொற்கட்டுகளில் கண்ணதாசன் அருமையாக எழுதி இருக்கும் இந்தப் பாடல், உள்ளபடியே, எம் ஜி ஆர் – சாவித்திரி நடித்த மஹாதேவி படத்திற்காகப் புனையப்பட்டதாம், மிகவும் மந்த கதியில் அமைந்திருக்கிறது என்று சொல்லி, வேறு பாடல் எம் ஜி ஆர் கேட்க, அவருக்காக எழுதிய பாடலும் அருமையானது, அதைப் பின்னர் பார்ப்போம்.
மஹாதேவி படத்திற்காக எழுதிய பாடலைத் தமது சொந்த தயாரிப்பான மாலையிட்ட மங்கை படத்தில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இசையமைப்பில் பயன்படுத்தி விட்டார் கவிஞர். டி ஆர் மகாலிங்கம், ஏ பி கோமளா இருவரும் பாடிய அந்தப் பாடலின் மென்காதல், மெல்லூடல், மென்மேலும் காதல் என்ற உட்கருவிற்கு ஏற்ற கீழ் ஸ்தாயியில் மகாலிங்கம் அசத்தலாக இழைத்திருக்கிறார், வம்புக்கு இழுக்கும் நாயகியின் பொய்கோபத்திற்கு ஏற்ப கோமளா சற்று உயர்ந்த ஸ்தாயியில் இசைத்து அசத்துகிறார்.
https://youtu.be/A9L7XgQkgzA
‘நானன்றி யார் வருவார், இளநங்கை உன்னை வேறு யார் தொடுவார்‘ என்று தொடங்கும் நாயகனை அசராமல் ஒரு வெட்டு வெட்டி, ‘ஏன் இல்லை?’ என்று நிறுத்துகிறாள் நாயகி. ‘இன்றொருவர் அருகில் வந்தார் முத்தம் எனக்கே என்றார்‘ என்று பொடி வைக்கிறாள். அதைவிட அடுத்து வரும் சொற்களைப் பாருங்கள்: ‘கொண்டார் தந்தார்‘ ! அதில் காலகாலத்திற்கும் வாழ்வார் கண்ணதாசன். அடடா…அடடா…எத்தனை வேகத்தில் காதல் பரிமாறப்படுமோ அதைவிட வேகமாகச் சீண்டும் சொற்கள் எத்தனை செறிவாக! அதை கோமளா, அத்தனை மிடுக்காக ராக பாவங்களோடு இசைப்பது இன்பத்திலும் இன்பம்.
இந்தப் புதிருக்கான விடையைச் சரணங்களில் தேட வைக்கிறார் கவிஞர். ‘வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில் இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன‘ என்று வினவுகிறான் நாயகன். காயத்தையும் மாயத்தையும் மகாலிங்கம் ஜாலம் செய்வது அபாரம். ‘கூண்டுக்கிளி எடுத்துக் கொஞ்சினேன்‘ என்கிறாள் நாயகி. ‘இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ‘ என்று புரிந்து கொள்ளப் பார்க்கிறான் நாயகன். அதை இரண்டாம் முறை கோமளாவும் மகாலிங்கமும் பாடுவதில் எத்தனை கொஞ்சலும் மிஞ்சலும்! அடுத்து நாயகன் சமாதானம் அடைகிறான்: ‘சொந்தம் கொண்டதோ முத்தம் தந்ததோ‘ என்று! விடுவாளா நாயகி, ‘இன்னும் சந்தேகமா‘ என்று கிண்டலாய்ச் சீறுகிறாள், ‘கண்ணே‘ என்று வெள்ளைக் கொடி ஏந்துகிறான் அவன், ‘கண்ணா‘ என்று அவனை ஆட்கொண்டு விடுகிறாள் நாயகி. அங்கே முடிவதில்லை, இந்தக் காதல் குறும்பு, ‘மாதென்னை யார் தொடுவார், எந்தன் மன்னன் உமையன்றி யார் வருவார்?’ என்று போகிறது பாடல்.
டி ஆர் மகாலிங்கம் – ஏ பி கோமளா இருவரது குரலினிமையும், ராக பாவங்களும் அத்தனை அருமை இந்தப் பாடலில். படத்தின் காட்சியிலும் அத்தனை நளினமாகத் தோன்றுவார் டி ஆர் எம்.
மெல்லிசை மன்னர்கள் இந்தப் பாடலை மிக நுட்பமான ஆபோகி ராகத்தில் தொடுத்து மெட்டுப் போட்டிருக்கிறார்கள் என்கிற சுவாரசியமான கட்டுரையைத் தேடி வாசிக்க வைத்து விட்டது, சுப்பாராவ் அவர்களது கேள்வி. ராகங்கள் எல்லாம் எங்கே கண்டேன் நான்… ‘பாட்டன்றி வேறறியேன் இசையொன்றே கேட்பேன் வேறு ஏதறிவேன்‘ என்று மேற்படி பாடலின் மெட்டிலேயே பாடலாமே தவிர, சங்கீத நுட்பங்கள் கேள்வி ஞானத்தோடு சரி! சாருலதா மணி அவர்கள் எழுதி இருக்கும் ரசமான அந்தக் கட்டுரை, பல்லவியை இந்த ராக லட்சணத்திற்கேற்ப பாடகர்கள் எப்படி ரசமாகப் பாடி இருக்கின்றனர், இசை அமைப்பாளர்கள் எத்தனை ரசனையோடு உருவாக்கி உள்ளனர் என்று பேசுகிறது. ‘யார் தொடுவார்‘ என்ற இடத்தை அத்தனை சிலாகிக்கிறார் கட்டுரையாசிரியர்.
https://www.thehindu.com/features/friday-review/music/a-ragas-journey-arresting-abhogi/article2954010.ece (இந்த இணைப்பை கிளிக் செய்தால் கட்டுரையை வாசிக்க முடியும்).
கட்டுரையாளர் வேறு சில அருமையான பாடல்களையும் எடுத்துக் காட்டி, ஆபோகியின் அழகை, மெல்லிசை மன்னர்களும், பின் இளையராஜாவும் அவரவர் கற்பனையில் எப்படி எல்லாம் திரைப்பாடல்களில் வடித்திருக்கின்றனர் என்று கொண்டாடி எழுதி இருக்கிறார்.
கலைக்கோவில் படத்திற்காக, கண்ணதாசன் எழுத,மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி அற்புதமாக இசை அமைக்க, புகழ் பெற்ற வீணை கலைஞர் சிட்டிபாபு அவர்களின் சிறப்பான பங்களிப்போடு, எம் பாலமுரளி கிருஷ்ணா – பி சுசீலா அசாத்திய இனிமையில் பாடி இருந்த ‘தங்க ரதம் வந்தது வீதியிலே‘ பாடல் பெரிதும் பேசப்படுவது.
https://youtu.be/a48iEYo3LQc
மிக நெருக்கமான நண்பர் இல்லத் திருமணத்திற்குச் செல்கிறீர்கள். உங்களை உள்ளிருந்து கேட்கும் நாதஸ்வர இசையும், அதைவிட வேகமாக வெளியே ஓடிவந்து வரவேற்கும் நண்பரும் போட்டி போட்டுக் கொண்டு கைப்பிடித்து அழைத்துச் செல்ல, அலங்காரப் பந்தல், கொண்டாட்டத் திருமணம், வாழ்த்து எல்லாம் சேர்ந்து உற்சாக ஆரவாரம் உடலினுள் புகுந்து சிலிர்க்க, ‘சாப்பிட்டு விட்டுத் தான் போகவேண்டும்‘ என்று இழுக்காத குறையாக நண்பரது உறவினர் அழைத்துச் சென்று அமர்த்த, அந்த விருந்தின் சுவையோடு சுகந்த வெற்றிலை பாக்கும் தரித்து எந்த அவசரமும் காட்டாது மண்டபத்து இருக்கை ஒன்றில் காற்றாடச் சென்று அமர்கையில் நண்பர் தமது இல்லாள் சகிதம் வந்து கைகூப்பி நன்றி தெரிவித்து தாம்பூலப் பைகள் வழங்க நெகிழ்ந்து நெக்குருகிப் போகிறீர்கள். அப்படியான முழுமையான அனுபவத்தை வழங்கும் வகையிலான பாடல் அல்லவா, தங்க ரதம் !
பாடலின் தொடக்க ஆலாபனையே நுழைவாயில் வரவேற்பாக அமர்க்களப்படுத்தும். பாலமுரளி தொடங்கும் ஆலாபனையின் அழகை அப்படியே கைமாற்றி எடுத்துச் செல்லும் பி சுசீலாவின் குரல். தங்க ரதம் என்ற சொற்களை ஒவ்வொரு முறையும் என்னமாக அழைப்பார்கள் பாடகர்கள் இருவரும். ‘மரகதத் தோரணம் அசைந்தாட‘ என்பதை பாலமுரளி உச்சரிக்கும் அழகும், சுசீலா இழைக்கும் ஒயிலும் ஆஹா… அது மட்டுமா, ஒவ்வொரு முறையும் பல்லவியைப் பாடி முடித்ததும் பாலமுரளி தொடுக்கும் ஆலாபனையின் அழகு,,,,பாடலில் எந்த இடத்தைக் குறிப்பிட, எந்த இடத்தை விட்டு விட!
சிருங்கார ரசம் என்று சொல்லிவிட்டால் அப்புறம் கேள்வி இல்லை. அதுவும் பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன். எத்தனை இலக்கியமாக அதைக் கொண்டுவர முடியுமோ – தலைவரைக் கேட்கவேண்டுமா, அப்படி கொண்டு வந்திருப்பார்…. அதை விடுங்கள். சாருலதா மணி குறிப்பிடும் நுட்பமான அம்சத்திற்கு வருவோம். பல்லவியில் ‘மாணிக்க மாலைகள் அசைந்தாட‘ என்னும் இடம் ஆபோகி ராகத்தின் அசத்தல் முகவரி என்கிறார்.
இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், இந்தப் பாடலுக்கான இசை உருவான விதம் பற்றி, இப்போது இல்லாது போய்விட்ட இரு மேதைகள் உரையாடும் காட்சியை மிக மிக தற்செயலாக இணையத்தில் பார்க்க நேரிட்டது. அடடா….அம்மவோ …அய்…..யோ …….சிலிர்க்கவைக்கும் அந்தக் காட்சி அனுபவத்தை எப்படி விவரிப்பது ! எம் எஸ் வி அவர்களும், பாலமுரளி கிருஷ்ணா அவர்களும் பேசும் அரிய காட்சி!
கிளாசிக்கல், லைட் என்ற இரண்டுக்கும் என்ன வேறுபாடு? பாலமுரளி சொல்கிறார், “என்னைக் கேட்டால் எந்தப் பாட்டு ஒரு பத்து வருஷத்துக்கும் மேல ஜனங்க மனசில் நிலைச்சிருக்குமோ அது கிளாசிக்கல். உடனே மறைஞ்சுட்டா அது லைட்” என்கிறார், “நீங்க எத்தனையோ ராகங்களை எடுத்து சினிமாவில் கொடுத்திருக்கீங்களே” என்று சொல்லிவிட்டு, “நீங்க தான் தமிழில் ஒரு திரைப்படப் பாடல் என்னை முதன்முதல் பாட வச்சது, அது தான் தங்க ரதம்” என்கிறார்.
தங்க ரதம் பாடல் உருவான விதத்திற்குப் போகிறது பேச்சு. தான் முதலில் எப்படி மெட்டு போட்டேன் என்பதையும், பாலமுரளிக்காக கனமாக அமைக்க இயக்குனர் கேட்டுக் கொண்டதும் பாடலுக்கு இசை இப்படி மாறியதையும் ஹார்மோனியத்தை இசைத்துப் பாடிக் காட்டுகிறார் மெல்லிசை மன்னர். கூடவே அந்தப் பாடலைப் பாடும், பாலமுரளி, “இது ஆபோகி ராகம், சிருங்கார ரசத்துக்கு ஏற்றது, உங்களுக்கு எப்படி இந்த ராகத்தை யோசிக்கத் தோன்றியது?” என்று கேட்கிறார்.
மிகுந்த தன்னடக்கத்தோடு பதில் சொல்கிறார் எம் எஸ் வி: “இந்தப் பாடலை அந்த ராகத்தில் அமைக்கும்போது, அது உங்க மாஸ்டர் பீஸ் ராகம் என்று எனக்கு நிஜமாகவே தெரியாது… எப்படியோ அமைஞ்சது” என்கிறார். பாலமுரளி சொல்கிறார், “மாஸ்டர் பீஸ் இருக்கட்டும்…நான் எங்க கச்சேரி பண்ணினாலும், வெளிநாட்டுல போகும்போதும் தங்க ரதம் பாட்டைப் பாடாமல் முடிச்சது கிடையாது“.
அதோடு முடியவில்லை. பால முரளி தொடர்கிறார்: “நீங்க நிறைய கிளாசிக்கல் பாட்டு போட்டுருக்கீங்க… சாமா ராகத்தில் என்னைப் பாட வச்ச பாடல்….ஆமாம், நூல் வேலி படத்தில், ‘மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே…’ அடடா.. என்ன பாட்டு…கண்ணதாசன் எப்பேற்பட்ட கவி. அவருக்கு உடம்பு சரியில்லாதபோது அவரைப் போய்ப் பார்த்தேன், இந்தப் பாட்டைத் தான் காஸெட்ல போட்டுக் கேட்டுக்கிட்டு இருந்தார்..அவருக்கும் ரொம்ப பிடிச்ச பாட்டுன்னாங்க. சங்கீதம் ஒரு உலகம், அதாவது விஸ்வம். அதுக்கு நீங்க நாதம். அதுதான் விஸ்வநாதன்” என்கிறார் சங்கீத கலாநிதி.
ஆனால், எம் எஸ் வி என்ற மெத்தப் பணிவான மனிதர், அந்தப் புகழைக் கொஞ்சமும் ஏற்காது, “கிளாசிக்கல் சங்கீதத்தில் சினிமாவில் இந்தியில், மலையாளத்தில், தெலுங்கில், கன்னடத்தில், ஏன், நௌஷத் செய்ததை விடவா…இங்கேயும் முன்னோடிகள் எவ்வளவு இசையமைச்சிருக்காங்க…” என்று கை கூப்பி நினைவைப் போற்றுகிறார்.
வாழ்க்கை முழுக்க இசையால் நிரப்பிக் கொண்டிருந்தவர்களது உரையாடலில் எத்தனை சுருதி பேதம் இல்லாத, பிசிறு தட்டாத, தாளம் தப்பாத இசை ஒலிக்கிறது! இது தானே இசை வாழ்க்கை!!
ராகத்தைப் பற்றித் தெரியாவிட்டாலும், மேற்சொன்ன ஆங்கிலக் கட்டுரையில் ஆபோகி ராகத்தின் வரிசையில் மேலும் இரண்டு பாடல்களைக் குறிப்பிட்டதை இங்கே சொல்லாமல் போக மனம் வராது. ஒன்று, அவன் ஒரு சரித்திரம் படத்தின் அற்புதமான பாடலான, ‘வணக்கம், பல முறை சொன்னேன்‘ ! அதில் ராக முத்திரை, ‘சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே‘ என்ற இடத்தில் விழுந்திருக்கிறது என்கிறார் சாருலதா.
டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா இணை குரல்களில் அந்தப் பாடலின் சரணங்கள், அவற்றில் கொண்டு சேர்க்க வயலினும் புல்லாங்குழலும் நதியலை போல குதியாட்டம் போட்டுக் கொண்டு சேர்க்கக் கரை புரளும் இன்பம். சுசீலாவின் இனிய குரலில் ஆலாபனையோடு எடுக்கும் பாடலில் இடையே ‘வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்‘ என்ற வரிகளோடு வந்து டி எம் எஸ் கலக்கும் இடம் ரசிகரைக் கொண்டாடிக் கேட்க வைக்கும். பாடலின் துள்ளலோட்டமான குழலிசை ஓர் இன்பம் எனில், குரலிசை இன்னுமோர் இன்பம்.
ஆபோகியின் அழகு கொஞ்சமும் சிந்தாமல் சிதறாமல் இளையராஜா, சமரசம் செய்து கொள்ளாமல் திரையிசையில் வார்த்திருக்கும் பாடல் என்று கட்டுரையாளர் திளைத்துக் குறிப்பிடுவது, வைதேகி காத்திருந்தாள் படத்தின் மறக்க முடியாத பாடலான ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே‘ !
மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுகிறது….நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்கிறது…அப்படியான ஒரு மாரிக்காலத்தில் (இ)ராப் பாடகனின் குரல் எங்கிருந்தோ ஒலிக்கிறது. தனது ஜதியால் அதற்குப் பதில் சொல்கிறாள் அவனது காதலி. ராக ஆலாபனை எடுக்கிறான் அவன். ஸ்வரங்களை வேகமாக அடுக்கிப் போய், அப்புறம் என்ன?’ என்பது போல் சதிர் காட்டுகிறாள் அவள். பெய்ய வேண்டிய மழை ஓரம் நின்று வேடிக்கை பார்க்க, இவர்களது கொண்டாட்டமான காதல் களியாட்டத்தின் கவிதைத் தெறிப்புகளில், வீணையும், புல்லாங்குழலும் இன்னபிற கருவிகளும், அதிரும் மிருதங்கத்தின் அதிவேக தாளக்கட்டும் நிகழ்த்தும் இசையின் அசுர சாதகத்தில் அவனும் அவளும் சங்கமித்துக் குரலெடுக்கப் பாடல் நிறைவுக்கு வரவும் இயற்கையே அசந்து நிற்கிறது.
‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே‘ பாடல் அப்படியான அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறது. பல்லவியில், ‘கனவுகளின்….’என இழுத்து ‘சுயம்வரமோ‘ என்று மேலும் இழைக்கும் இடத்தில் ஆபோகி ராகத்தின் ஸ்வர லட்சணங்களை பாடகர்கள் இருவருமே அசாத்தியத் திறமையோடு மிக இலகுவான தன்மையில் பாடி இருப்பதாக ரசித்து எழுதுகிறார் சாருலதா. ஜெயசந்திரன், வாணி ஜெயராம் என்ற அற்புதமான பாடகர்களுக்காகவே உருவானது போல் நர்த்தனம் செய்கிறது பாடல் மெட்டு. பாடகர்கள் குரலில் சலங்கை ஒலிக்கிறது. இசைக்கருவிகளின் ஒலியில் சொற்கள் கொஞ்சுகின்றன. இந்தப் படத்தின் பாடல்கள் யாவுமே ஒரு சிற்பி பார்த்துப் பார்த்துச் செய்த சிற்பங்கள் போலவும், மொத்தமும் இணைந்த கலையின் இன்னொரு கோவிலாகவே நிலவொளியில் மின்னுகிறது.
இப்படி ராகங்கள் பெயரை அறிந்து ரசித்தாலும், அறியாமலே கொண்டாடினாலும் வாழ்க்கை இசை வாழ்க்கை தான். இசையின் நுட்பங்கள், அடிப்படை ஞானம் இவை ரசனைக்கு ஒரு போதும் முன் நிபந்தனையாக இருக்க முடியாது. அப்படி இருந்தால், இந்தத் தொடரே பிறந்திருக்காது. அன்றாடம் பூங்காவைச் சுற்றி ஒரு நடை நடந்துவரப் போகையில், பெயர் அறியாமலே புன்னகைகளைப் பரிமாறிக் கொள்வோம், நேரில் பாராமல் கூட நட்பு உருவாகி வலுவான தோழமை உறவு தழைக்கிறது வாழ்க்கையில். யார் படைப்பு என்றறியாமல் ஓர் ஓவியத்தை, கவிதையை ரசிக்கவும் நேர்கிறது வாட்ஸ் அப் பரிமாற்றங்களில் பல நேரம். இசையும் அப்படியான ஓர் அனுபவம் தான். அதன் நுட்பங்கள் அறிவதன் தேடல் ஆனந்தமானது. அவற்றை அறியாமலே திளைப்பது குழந்தையின் புன்னகை போன்றது. ஞானியின் புன்னகையும் அப்படித் தானே இருக்கும்!
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
தொடர் 1 – ஐ வாசிக்க..
தொடர் 2 – ஐ வாசிக்க..
தொடர் 3 – ஐ வாசிக்க…
தொடர் 4 – ஐ வாசிக்க…
https://bookday.in/isai-vazhkai-web-series-by-s-v-venugopalan/
தொடர் 5 – ஐ வாசிக்க..
தொடர் 6 – ஐ வாசிக்க..
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
தொடர் 11 – ஐ வாசிக்க..
https://bookday.in/https-bookday-co-in-music-life-series-11-venugopalan-sv/
தொடர் 12 – ஐ வாசிக்க..
தொடர் 13 – ஐ வாசிக்க..
தொடர் 14 – ஐ வாசிக்க..
தொடர் 15 – ஐ வாசிக்க..
தொடர் 16 – ஐ வாசிக்க..
தொடர் 17 – ஐ வாசிக்க..
தொடர் 18 – ஐ வாசிக்க..
தொடர் 19 – ஐ வாசிக்க..
தொடர் 20 – ஐ வாசிக்க..
தொடர் 21 – ஐ வாசிக்க..
இசைப்புலமை இவரிடம் புகுந்து விளையாடுகிறது. என்ன ஒரு அபாரமான விளக்கத்துடன் கூடிய கட்டுரை. பாடல்களும் அருமருந்து. நன்றி நன்றி
இசை நுட்பமும், இசை குறித்தான ஞானமும் இல்லாமல்தான் என்னைப் போல் பலர் இசையை ரசிக்கிறோம்.
உண்மை ஐயா
Super narration. Get going