எல்லோர்க்கும் மெல்லிசை, இன்னிசை, பண்ணிசை அன்புசெய் புத்தாண்டு வாழ்த்துகள் !
வெள்ளைத் தாளில் தேர்வு எழுதுகையில், நாமாகக் குறுக்கும் நெடுக்குமாகக் கோடுகள் போட்டு வரையறுத்துக் கொள்வதைப் போலவே, பரந்து விரிந்த காலத்தையும் நாமாக ஒரு வரையறை செய்து வைத்துக் கொள்கிறோம். கிழமைகள், வாரங்கள்,மாதங்கள், ஆண்டுகள் என்று உத்தேசமாக ஒரு கணக்கு தேவைப்படுகிறது நமக்கு. நினைவில் வைத்திருப்பதற்கு, அப்புறம், மறக்க முடியாமல் தவிக்கவும் செய்கிறோம்.
வீட்டில் இரண்டு கடிகாரங்கள் இருந்தால், முன்பாகவே தயாராக வேண்டும் என்ற நினைப்பில் அதில் ஒன்றை வலுக்கட்டாயமாக முட்களை நகர்த்தி அரை மணி முன்னதாகக் காட்டுமாறு செய்து கொள்வோம், ஆனால், நேரம் பார்க்கும் போது, சரியான நேரத்தைக் காட்டும் கடிகாரத்தையும் பார்த்துக் கொண்டு, சரிதான் இன்னும் அரை மணி நேரம் இருக்கிறதே என்று ஆறுதல் செய்துகொண்டு தயாராவோம்.
அதைப்போலவே, உற்சாகம் கொள்வதற்கான நாட்களை நல்ல நாள் என்று எழுதி வைத்துக் கொண்டு, அருகே, நினைவு நாள் பட்டியலும் வைத்துக் கொண்டு நடமாடிக் கொண்டிருப்பது மனித வாழ்க்கை. இருந்தாலும், நம்மை உற்சாகப்படுத்திக் கொள்ள முன் கூட்டியே தயாரித்த தேதியை நோக்கி நாமும் நம் பங்குக்குக் காலத்தை நகர்த்திக் கொண்டு வந்து புத்தாண்டு வாழ்த்து சொல்வது, நம்பிக்கையைத் தற்காத்துக் கொள்ளும் ஆரோக்கியமான உளவியல். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவும் செயல்படுவதுமே அல்லாமல் வேறொன்று அறியாதவர்களாக முன்னேறுவோம்.
‘இதம் தரு மனையின் நீங்கி இடர் மிகு சிறைப்பட்டாலும்‘ என்று எழுதி இருந்தார் மகாகவி. மனையிலேயே சிறைப்பட்டுக் கிடந்த காலமாயிற்று கடந்த ஆண்டு. புத்தாண்டு அன்று, விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்த மக்கள் திரள் வெளியே அலைமோதிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. இன்னும் கூட்டில் அடைபட்டுக் கிடப்போரது சமூக விடுதலை குறித்தும் இந்தப் புத்தாண்டில் சிந்திப்போம்.
மதுரையில், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில அமைப்பு மாநாட்டுக்கு 1985ல் சென்றது, பல காரணங்களுக்காக மறக்க முடியாதது. வாடகைக்குப் பிடித்துப் போன தனியார் பேருந்துகள் இரண்டின் ஓட்டுநர்களிடமும் உரிமம் இருக்கவில்லை, வண்டிக்குக் காப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை. சாலை வரி கூட கட்டியிருந்தனரா தெரியவில்லை. விழுப்புரத்தை நெருங்கும்போது, காவல் துறை அதிகாரிகள் தடுத்தும் பறந்த வாகனங்களைத் துரத்திப் பிடித்து நடந்த விஷயங்கள், பின்னர் சுவாரசியமான அசைபோடலுக்குப் பயன்பட்டன, பத்திரமாகப் போய்ச் சேர்ந்தோம் என்பதால்!
ஒரு தொழிற்சங்க மாநாட்டில், மிகப் பெரிய இசைக்கலைஞரை, ஆய்வாளரை, பேராசிரியரை மிக மிக எளிமையாகப் பார்க்கக் கிடைத்ததுதான் இன்றுவரை வியக்கவைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்குமுன் அவரைப் பார்த்தது இல்லை.
ஒரு முற்போக்கு இசைக்குழுவை மேடையில் பார்ப்பது, அது முதல் முறை அல்ல. வங்கிப்பணியில் சேர்ந்த புதிதில், வாழ்க்கையின், முதல் மே தின பொதுக்கூட்டம் ஒன்றில், அம்மையார்குப்பம் எனும் சிற்றூரில் எண்பதுகளின் தொடக்கத்தில் கலந்து கொள்கையில், அதிரடியான பாடல்கள் சிலவற்றை அப்போதுதான் கேட்டது. அதுவரை புரிந்து வைத்திருந்த வாழ்க்கையின் பல்வேறு விஷயங்கள் மீது (அரிவாள்) சுத்தியல் ‘ணங் ணங்‘கென்று இசையால் விழுந்த தருணம் அது. ஆனால், மதுரையில் செவிமடுத்த பாடல்கள், புரட்டிப் போட்டன, அதுவரை உள்ளே சுழன்று கொண்டிருந்த இசை தட்டுக்களை!
கே ஏ குணசேகரன், கோட்டைச்சாமி இருவரையும் மேடையில் பார்த்தபோது, ஏதோ வயல்காட்டில் பாதி வேலையிலிருந்து அவசர தகவல் கேட்டுப் புறப்பட்டு வந்த உழைப்பாளிகள் போலவே தெரிந்தது.
குலசேகர மன்னன், ஒவ்வொரு முறையும் தனது அவையில் யாராவது இராம காதை விரித்துச் சொல்லும்போதும், யுத்த காண்டம் வருகையில், தனது படையைத் திரட்டிக் கொண்டு, மீட்டுவருவேன் சீதா பிராட்டியை என்று தென்திசை கடல் நோக்கிப் புறப்பட்டு விடுவாராம். பின்னர் இராமபிரான் சீதையோடு நேரெதிரே தோன்றி அவரை ஆசுவாசப்படுத்தி, மீட்டு வந்துவிட்டேன், நீ உன் அரியணைக்குத் திரும்பு என்று சொன்னபின் தான் மீள்வாராம்.
சிறுவயதில் கேட்ட கதை. இசைப் பாடல்களுக்கு அத்தனை சக்தி உண்டா என்றால், விளிம்பு நிலை மக்களின் பாடுகளை, ஒடுக்குமுறை அவலங்களை நெஞ்சதிரப் பாடி, அநீதிக்கு எதிராக ஆவேசம் கொள்ளவைக்கும் குரலை, அப்போதே புறப்பட்டு வா என்று அழைக்கும் அதிரடி உடல் மொழியை கே ஏ குணசேகரன் அவர்களிடம் கண்டு பெரிதும் உணர்ச்சிவசப்பட்ட பொழுது இன்னும் நினைவில் நிற்கிறது.
ஒரு மணி நேரம் போல நடைபெற்ற அந்த இசை நிகழ்ச்சியில், உள்ளத்தைத் தைத்த பாடல்கள் வரிசையில், ‘பாவாட சட்ட கிழிஞ்சு போச்சுதே, என்ன பள்ளிக்கூடப் பிள்ளயெல்லாம் கேலி பேசுதே‘ முக்கியமானது.
ஆடு மேய்க்கும் வயசு இல்லை என்ற காரணத்தாலும், மதியம் ஒரு வேளை சோறாவது உறுதிப்படும் என்பதற்காகவும் மட்டுமே மகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறாள் அம்மா என்பது அறியாத அப்பாவி ஏழைச் சிறுமி. தான் படும் அவமானத்தைத் தாயிடம் அவள் கொட்டித் தீர்ப்பதும், ‘வேறு வழியில்லை, பொறுத்துக்க’ என்று காலகாலமாக அப்படியான தாய்மார்கள் பிள்ளைகளுக்குச் சொல்லும் போதனையைத் தானும் அழுது கொண்டே சொல்லித் தேற்றுவதுமான உரையாடல் தான் பாடல். ‘கையில் ஒரு காசுமில்ல தெரிஞ்சுக்க கண்ணே, ஏழை கடன் கேட்டாக் கிடைக்காது புரிஞ்சுக்க கண்ணே‘ என்பதை விட என்ன வேண்டும்….
சாதாரண மக்களது வாழ்க்கைப் பாடுகளைக் கேட்போர் நெஞ்சதிரக் கொண்டு சேர்த்த குரலை அன்று மதுரையில் கேட்டேன். ஒரு கவிதைக்கும், இசைப்பாடலுக்கும், வாசிப்பதற்கும் வாசித்துக் கேட்பதற்கும், இசையுருவில் வாங்கிக் கொள்வதற்குமுள்ள தொடர்புகளையும், வேறுபாடுகளையும் இந்தப் பாடல் பளிச்சென்று விளக்கும். கே ஏ குணசேகரன் குரலில் கிடைக்குமா என்று இணையத்தில் தேடுகையில் சட்டென்று தட்டுப்பட்ட இந்தக் குரல், மாரியம்மாள் அவர்களுடையது. உள்ளத்தைத் தொடுகிறது.
இப்படியான சமூக அடித்தள மக்கள் குரல்களை எதிரொலிக்கும் கவிதைகளும் பாடல்களும் வடித்த, கன்னிவாடி பச்சை நிலா என்ற முற்போக்கு எழுத்தாளர் இயக்கக் கவிஞர் எழுதிய உணர்ச்சிகரமான பாடல் அது. சமூகக் கரிசனம் மிகுந்த படைப்புக்களை வழங்கி மறைந்த பலரும் பொதுவெளியில் அதிகம் அறியப்படாத துயரம் தனியே பேசவேண்டியது. பொதுவுடைமை இயக்கத்தின் அனுபவமிக்க இலக்கியவாதி தோழர் எஸ் ஏ பெருமாள் அவர்களது இந்தக் குறுங்கட்டுரை, பச்சை நிலா அவர்களது பங்களிப்பை உள்ளன்போடு எடுத்துப் பேசுகிறது. ( https://theekkathir.in/News/tamilnadu/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/art-armed-communists-in-the-war-of-independence )
கவிஞர் இன்குலாப் அவர்களது எழுச்சிகரமான ‘மனுசங்கடா, நாங்க மனுசங்கடா‘ என்ற பாடலும் முதன்முறை கேட்டது அந்த மேடையில் தான். ‘ஒன்னப் போல அவனப் போல எட்டு சாணு ஒசரமுள்ள மனுசங்கடா’ என்பது அடுத்த வரி!
அதிரவைக்கும் உடல் மொழியும், புரட்டி எடுக்கும் பாடல் வீச்சுமாக உள்ளே இன்னும் ஓர் ஒளிப்படமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்தக் காட்சி. ஒடுக்கப்பட்டோரது விடுதலை வேட்கையில் புறப்பட்ட சாட்டையடியாக வந்து விழும் சொற்கள், பாடல் நெடுக!
‘ஒங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும், ஒங்க ஊர்வலத்துல தரும அடிய வாங்கிக் கட்டவும், எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும், நாங்க இருந்தபடி இருக்கணுமா காலம் பூராவும்?’ என்று தெறிக்கும் நெருப்புப் பொழிவின் இறுதியில் ‘டேய்‘ என்ற ஒரு தனிச்சொல் போட்டு, பல்லவிக்குத் திரும்பும் இடத்தில், குறைந்த பட்ச சமூக உணர்வற்ற ஆளைக்கூடக் குப்புறப் புரட்டிப் போடும் அதிர்வை உணர முடியும். நூற்றாண்டுகளின் அடிமைத் தனத்திற்கு எதிராகக் குவிக்கப்பட்ட ஒட்டுமொத்த வலுவான பதிலடியை, குணசேகரன் அவர்களது குரலில் மட்டுமல்ல, உடல் அதிர்வுகளிலும் பார்த்தது மறக்க முடியாதது.
அதன் பின்னர், தொண்ணூறுகளில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கலை இரவு என்ற வடிவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளில், இசைப் பாடல்கள் பால் தனி ஈர்ப்பு இருக்கும். எத்தனை எத்தனை பாடல்கள், இசை வழி கடத்தப்பட்ட சமூக உணர்வுகள் !
மாற்றங்களை சிந்திக்கத் தூண்டும் கருத்தியல் சாதனமாக இசை எல்லாக் காலங்களிலும் இருந்து வந்திருக்கிறது. இன்பமான காதல் பாடல்கள் என்ற இடத்தில், பிரச்சனைகளுக்கு இடையேயான காதலை, அருமையான வாழ்க்கை என்ற இடத்தில் சவால் மிகுந்த வாழ்க்கைகளை இவை வேறுபடுத்தி எடுத்து வைத்தன. அந்த ஆவேசக் குரல்களும், உடைப்புகளும், திறப்புகளும் முக்கியமானவை. பேச நிறைய இருக்கிறது.
சமூகத்தின் போக்கு திரையிலும் பிரதிபலித்தே வந்துள்ளது. காலத்திற்கேற்ற படங்களும், கதைகளும் அமையும்போது, திரைப்பாடல்களும் அந்தக் கருத்துகளை ரசிகர்களிடம் ஏந்திக் கொண்டு சென்று சேர்த்திருக்கின்றன.
திரையில், சாதாரண மக்கள் படும் கொடுமைகள் குறித்த பாடல்கள் வந்திருக்கின்றன. இப்போதும் தொடர்கின்றன.
சட்டென்று, திருச்சி லோகநாதன் சிறப்பாக இசைத்த, ‘கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன எடம் தெரியல‘ நினைவுக்கு வந்தது. அதைத் தேடி எடுக்கையில், வியப்புக்குரிய விஷயமாக, யூ டியூபில், இரும்புத் திரை படத்தில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய மூன்று பாடல்களுமே ஒரே காணொளிப் பதிவில் கிடைத்தது. தேடப்போன பாடல் தான் அதில் முதல் பாடல், நகைச்சுவை நடிகர் கே ஏ தங்கவேலு அற்புதமாக நடித்திருக்கும் காட்சியில் விரியும் அதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு பாடல்களுமே சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கம்பீரக் குரலில் உரத்து ஒலிக்கின்றன.
‘கையிலே வாங்கினேன் பையிலே போடலே‘ என்ற பல்லவியை பட்டுக்கோட்டை தனது சொந்த வாழ்க்கை அனுபவத்திலிருந்து மிக எளிதாக எடுத்து எழுத முடிந்திருக்கும் என்றாலும், எப்படி அந்த வரி வாய்த்தது என்பது, இன்றும் திண்டாடிக்கொண்டிருக்கும் பாட்டாளி வர்க்கத்தினர் குரலில் அதைக் கேட்க முடிவதில் தெறிக்கிறது. ‘காதலி பாப்பா காரணம் கேப்பா‘ என்ற அடுத்த வரியும் அபாரமானது. பாடல் வரிகளில் பிரதிபலிக்கும் வெவ்வேறு உணர்வு நிலைகளைத் தனது குரலில் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பார் திருச்சி லோகநாதன்.
இந்தப் பாடலைத் தொடரும் அடுத்த பாடல், ‘நெஞ்சினைப் பிளந்த போதும் நீதி கேட்க அஞ்சிடோம்‘ என்ற தொழிலாளி வர்க்கத்தின் கொந்தளிப்பு கீதம். ‘காலி என்றும் கூலி என்றும் கேலி செய்யும் கூட்டமே, காத்து மாறி அடிக்குது நீ எடுக்க வேண்டும் ஓட்டமே‘ என்ற வரிகளில் உணர்ச்சி பொங்கும். மூன்றாவது பாடல், சரிநிகர் சமமான சமூகத்தைக் குறித்த கற்பனை. எஸ் வி வெங்கட்ராமன் அவர்களது இசையமைப்பில் விளைந்தவை இந்தப் பாடல்கள்.
எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன என்கிற குரலும், இல்லை எல்லாமே ஏற்றலும் தாழ்த்தலுமாக உள்ளன என்கிற எதிர்க்குரலும் சமூகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கவே செய்கின்றன. அநீதியை மௌனமாகக் கடக்கப் பழகிக் கொள்பவர்களுக்கு, அதற்கு எதிரான முழக்கம், அமைதியைக் குலைப்பதாகத் தோன்றுகிறது. இந்த இடைவெளியில் இசைக்கு மிகப் பெரிய பாத்திரம் இருக்கிறது.
இலத்தீன் அமெரிக்க நாடுகளில், அய்ரோப்பிய நாடுகளில் போராட்டக் காட்சிகளைப் பார்க்கையில், கண்டனப் பேரணிகளை இசையே நிறைக்கிறது. இசையே ஒருமிக்கிறது. இசையே ஆவேசப்படுத்தி நம்பிக்கைச் சுடரை ஏந்த வைக்கிறது. இசை, நாமும் மனிதர்கள், இந்தப் புவி எல்லோருக்குமானது தான் என்று உணரச் செய்துவிடுகிறது.
இசை அமைதியை நோக்கித் தான் வழி நடத்துகிறது. ஆனால், இடையே ஒரு பெரிய பள்ளத்தைக் கடக்க வேண்டி இருக்கிறது. என்ன செய்ய, அந்த இசை அதிர அதிரத் தான் ஒலிக்க வேண்டி இருக்கிறது.
(இசைத்தட்டு சுழலும் ….)
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
தொடர் 1 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 2 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 3 – ஐ வாசிக்க…
இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 4 – ஐ வாசிக்க…
இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 5 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 6 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 11 – ஐ வாசிக்க..
தொடர் 12 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 13 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 14 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 15 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 16 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 17 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 18 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 19 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 20 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 21 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 22 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 23 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 24 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 25 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 26– ஐ வாசிக்க..
தொடர் 27– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 28– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 29– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 30– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 31 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்
அருமையான கட்டுரை. இசையின் வலிமையை பிரதிபலிக்கின்றது.
இசைக்கும் இயக்கங்களுக்குமான இணைப்பு குறித்து அழகாகச் சொல்லியுள்ளீர்கள், வேணுகோபால்.
கல்லூரி ஆசிரியர் அரங்கில் எனக்கும் இப்படியான மறக்க முடியாத அனுபவங்கள் உண்டு.
மதுரை மீனாட்சி அரசு கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ஜஃபூரா பேகம் இயக்கக் கூட்டங்களில் உணர்ச்சி மிகு பாடல் ஒன்றினைப் பாடுவார். கேட்பவர்கள் கண்களில் நீர் மல்கும்.
ஊமை விழிகள் திரைப்படத்தில் பி.பி.சீனிவாசன் பாடும்
‘தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?” எனும் பாடலை
ஆசிரியர் இயக்கத்திற்கு ஏற்ற வண்ணம் சற்று மாற்றி அருமையான குரலில் பாடுவார்.
கொட்டாரம் கணேசன் என்று நாங்கள் அன்புடன் அழைக்கும் பேரா.கணேசன் (அண்ணா கல்லூரி, ஆரல்வாய் மொழி) அவர்களும் மூட்டா கூட்டங்களில் இயக்கப் பாடல்களைப் பாடுவார்.
அதுபோல் பேரா.ஜி.ஆர்.மகாதேவன் (சௌராஷ்டிரா கல்லூரி, மதுரை) அவர்களை பட்டுக்கோட்டையார் பாடல்களை பாடச் சொல்லி கேட்போம். இன்னும் எத்தனையோ பேராசிரியர்கள் இசையால் எங்களை மகிழ்வித்துள்ளனர்.
ஆம்; இசை எனும் இன்ப வெள்ளம் இயக்கங்களையும் நனைத்துள்ளது.
நன்றி தோழர் வேணுகோபால்! தொடருங்கள் உங்கள் இசைப் பயணத்தை.
எல்லாம் சரியாகத்தான் இருக்கின்றன என்கிற குரலும், இல்லை எல்லாமே ஏற்றலும் தாழ்த்தலுமாக உள்ளன என்கிற எதிர்க்குரலும் சமூகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கவே செய்கின்றன. அநீதியை மௌனமாகக் கடக்கப் பழகிக் கொள்பவர்களுக்கு, அதற்கு எதிரான முழக்கம், அமைதியைக் குலைப்பதாகத் தோன்றுகிறது. இந்த இடைவெளியில் இசைக்கு மிகப் பெரிய பாத்திரம் இருக்கிறது.
அற்புத வரிகள் ஐயா