பழைய படம், புதிய காப்பி என்று சுவரொட்டி ஒட்டுவார்களே, அப்படி ஒட்டாமலே, சலங்கை ஒலி பற்றிய கடந்த வார பிரதிபலிப்புகள் எண்ணற்ற வாசகர் இதயத்தைத் தொட்டுவிட்டது.
பண்பலை வரிசையில் பழைய திரைப்பாடல்களை ரசித்துத் தமது கவிதை இணைப்பு மொழியோடு ஒலிபரப்பிவரும் யாழ்ப்பாணம் சுதாகர் (இப்படி சொன்னால் சுவாரசியமில்லை, யா….ழ்…..சுதா….கர் என்று அவர் யாழ் மீட்டிச் சொல்வதைக் கேட்க வேண்டும்!), திரைப்படங்களை வின்சென்ட் தியேட்டரில் பார்த்தேன், ராணி தியேட்டரில் பார்த்தேன் என்று படங்கள் வந்த ஆண்டையும் குறிப்பிட்டுச் சொல்வதைக் கேட்பது போலவே இருந்தது, சலங்கை ஒலியை எங்கே எப்போது பார்த்தோம் என்று பலரும் அதே சிலிர்ப்போடு பகிர்ந்து இருப்பது.
‘வாசிப்பு ரசனை வாழ்க்கை‘ எனும் தொடர் ஒன்று, பாரதி புத்தகாலயத்தின் புத்தகம் பேசுது இதழுக்காக எழுதி வருவதைப் பகிர்கையில், தமிழ் ஆசிரியர்கள் அருமையாக வாய்த்த அதிர்ஷ்டம் தான் காரணம் என்று பதில் போட்டிருக்கும் நண்பர் அடுத்து எழுதிய பதில் அதிர்ச்சியாக இருந்தது. பெண்கள் பள்ளியில் அப்படி அதிகம் வாய்ப்பது இல்லை என்றும் தாம் படித்த பத்து பள்ளிகளிலும் வாசிப்பை ஊக்குவிக்கும் வாய்ப்பின் வாசல் இப்படி திறக்கவில்லை என்று எழுதி இருந்தார். இன்னும் சொல்லப்போனால், வகுப்பறையில் கவிதைகள் எழுதுவதற்காகக் கண்டிக்கப்பட்டதையும், வீட்டிலும் பெற்றோர் கண்டிப்புக்குப் பயந்து ஒளித்துவைத்துத் தான் படித்து வந்த நினைவும், திருமணத்திற்குப் பிறகு அதுவும் பரணில் ஏறி அமர்ந்து விட்டது என்றும் எழுதி இருந்தது நமது சமூகத்தின் சாபக்கேடு அன்றி வேறென்ன?
2005 ஏப்ரல் மாதம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில் உலக புத்தக தினத்தை ஒட்டி நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் பேசுகையில், மூத்த தோழர் பாப்பா உமாநாத், சமையல் அறையின் எண்ணெய்க் கறையும், வாசமும் படிந்த புத்தகங்கள், பெண்கள் எப்படி குடும்ப ஆண்களுக்குத் தெரியாமல் ரகசியமாக வாசித்தனர் என்ற கதைகளைப் பேசும் என்றார். தமது பாட்டியின் வாசிப்பு குறித்துப் பேசிய தோழர் மைதிலி சிவராமன், பின்னர் அவரைப் பற்றிய அருமையான புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுத, தமிழில் கி ரமேஷ் அவர்கள் மொழிபெயர்ப்பில் ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்‘ என்ற சிறப்பான நூலாக வந்திருப்பதை வாசித்தால் மகத்தான அனுபவ வாசிப்பு கிடைக்கும்.
இந்தத் தொடரில், இசைப்பாடல் கேட்பதிலும் இளவயதிலிருந்தே பெண்களுக்கு இயல்பாகவே குடும்பங்களில் நிலவும் தடைகள், குடும்பம் அடையும் பதட்டங்கள் பற்றி விவாதித்திருந்தோம். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினராக அருமையாக செயல்பட்ட கவிஞர் பாலபாரதி அவர்களது கவிதை ஒன்று, ஓர் இளம் பெண், ஆண் பிள்ளைகள் போல் தானும் சுதந்திரமாக தேநீர்க் கடையில் நின்று டீ அருந்துவது, ஊர்ப்புறத்தே வாராவதி அருகே நண்பர்களோடு அமர்ந்து பேசுவது, குதிரைக் குளம்படிகள் போல் ஒலிக்கும் பரோட்டா கடை சத்தத்தை ரசிப்பது போன்ற விருப்பங்களைச் சொல்லி, அதை அறிய வந்ததும், ‘கழுதைய உடனே கட்டிக் கொடுத்துவிட வேண்டும், பூசாரிய அழைச்சு மந்திரிச்சு விடணும்‘ என்று பேசிக்கொள்ளும் குடும்ப உறுப்பினர்கள் உரையாடலை அதிர்ச்சி வருத்தம் சொட்டப் பேசி நிறைவு பெறும்.
சுதந்திர சிந்தனைக்கே இப்படி எனில், இளம் பெண்களின் காதல் விஷயத்தைக் குடும்பங்கள் எப்படி ‘டீல்‘ செய்யும் என்பதன் விளக்கங்கள் நாளேட்டில் அன்றாடம் செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனாலும், காதல் உயிர்களது ஆதி உணர்வு, இயற்கை நியதி அல்லவா….
காதல் பாடல்கள் எத்தனை எத்தனை கேட்டாலும் திகட்டாத சுவையில் தமிழ்த் திரையில் கொட்டிக் கிடக்கின்றன. இளவயதில், மிகவும் தற்செயலாக, சீர்காழி கோவிந்தராஜன் குரலில் காதல் பாடல் ஒன்று கேட்டதும் திடுக்கிட நேர்ந்தது, பெரிய பண்பாட்டு அதிர்ச்சி, இந்த மனிதருமா காதல் பாடல் பாடி இருக்கிறார் என்று!
https://youtu.be/EPae1ydB1yg
‘நாடி துடிக்குது துடிக்குது‘ பாடலை அவரும் பி சுசீலாவும் இணைந்து திரை இசைத் திலகம் ‘மாமா‘ மகாதேவன் இசையில் பாடி இருப்பது தனிச்சுவையாக அமைந்திருக்கும். கண்ணதாசனின் காதல் பாடல்களை மட்டும் எடுத்து யாரும் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்திருக்கின்றனரா தெரியாது, இந்தப் பாடல் அப்படியான நுணுக்கங்கள் நிறைந்த ஒன்று!
காதலன் மருத்துவர் என்பதால், ‘நாடி‘ வரும் இடத்தில் தொடங்கும் பல்லவியை பி சுசீலா எழிலாகத் தொடங்கி வைக்க, ‘கண்ணழகு நாடி கன்னியிடை நாடி‘ என்று சீர்காழி இணையும் இடமே அதிரடி காதலாக இருக்கும். பல்லவியின் போக்கில், ‘நினைவு மயங்குது, எதற்கோ நெருங்குது‘ என்ற வரிகளை அடுத்து, ‘அறியாதிருந்த அனுபவம் மெல்ல மெல்ல விளங்குது‘ என்று முடிகிற மெட்டு அபாரமாக அமைத்திருப்பார் கே வி மகாதேவன். அதிலும், அந்த அறியா….திருந்த என்பது மலைப்பாதையின் ஒரு சிறிய கொண்டை ஊசி வளைவு போல கிறக்கமுற வைக்கும் உணர்வை வெளிப்படுத்தும். ஒவ்வொரு சரணம் முடிவிலும் இந்த மெட்டு திரும்ப வரும்,சீர்காழியும் (அறியாதிருந்த அனுபவம்) பி சுசீலாவும் (என்னவோ புதிய அனுபவம்…. அம்மம்மா போதும் அனுபவம்) அத்தனை உயிர் கலந்து இசைத்திருப்பார்கள். பாடல் முழுவதுமே காதலை ‘நாடி‘ பிடித்துப் பார்க்கும் இளவட்டங்களின் கனவும் கற்பனையும் கண்ணதாசன் வரிகளில் விளையாடும்.
இரவுப் பொழுதில் சிலிர்க்கவைக்கிற பாடல்களைத் தனியே தொகுக்க வேண்டும். அதில் தவறாமல் இடம் பெறத்தக்க ஒன்று, மெல்லிசை மன்னர் இசையில் டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா குரல்களில் ‘நீ என்னென்ன சொன்னாலும் கவிதை‘ பாடல் காதலிக்க மறுப்பவர் உள்ளத்தையும் தீண்டும் இசை அனுபவம். புலமைப்பித்தன் வரிகள் காதல் சுவையின் அற்புதமான மென் பிரதி. இனிமை இளமை என்றே தனித் தலைப்பிடலாம் பாடலுக்கு!
ஒரு மலைக்கோவிலுக்குள் மெல்லிய தீப வெளிச்சத்தை ஏந்தி மிதமான வேகத்தில் இசைக்கருவிகள் நடக்க, பளிச்சென்று வெளிப்படும் உருவச்சிலை போல, ‘நீ என்னென்ன‘ என்று டி எம் எஸ் தொடங்குமிடத்தை மட்டுமே ஒரு கோடி முறை கேட்டுக் கொண்டிருக்கலாம். (அவர் மறைந்த செய்தி அறிந்த அன்றிரவு சொல்லி வைத்தாற்போல் வீட்டில் எல்லோரும் வெளியூர் போயிருக்க, காதலின்பப் பாடலான இதனைக் கண்ணீர்த் துளிகள் ததும்பப் பாடிக்கொண்டும், கேட்டுக் கொண்டும் கழிந்த கணங்கள் இன்னும் நினைவில்).
பாடகர்கள் இருவரும் பல்லவி தொடங்கி சரணங்கள் வரை (மூன்றாவது சரணத்தில் தொடக்கத்தில் கொஞ்சம் போனால் போகட்டும் என்று படுத்தாமல் விட்டுவிட்டார் எம் எஸ் என்று நுட்பமாகக் கவனித்து) அநாயாசமாக சங்கதிகளை ஒரு தோரணம் போல் தங்கள் குரலில் கட்டித் தொங்கவிட்டு ஆடவிட்டு உருக்கி வார்த்திருப்பதை எம் எஸ் வி ரசிகர் பாலாஜி அவர்கள் கரைந்து கரைந்து எழுதி இருக்கும் ஆங்கிலக் கட்டுரை ஒன்றைத் தற்செயலாக இணையத்தில் பார்க்க முடிந்தது ( http://msvtimes.com/forum/viewtopic.php?t=356&sid=80186761389434da2ea2e2ff0944afbc )
‘சின்னஞ்சிறு மலர்‘ என்ற சொற்களை எடுத்துத் தனது குரலின் ‘பனியினில்‘ நனைத்து எடுக்கும் டி எம் எஸ், ‘என்னைக் கொஞ்சும் வந்து‘ என்பதில் குழைக்கும் காதல் சுகமும், ‘தழுவிட நினைந்து‘ என்ற இடத்தில் வெளிப்படுத்தும் காதல் பெருமிதமும், ‘முல்லைக் கொடியென கரங்களில்‘ அவர் ‘வளைக்கும்‘ இடமும், ‘முத்துச் சரமென குறுநகை புரிந்து‘ என்ற வரியில், அந்தக் குறுநகைப்பும், அதை ஏந்திக் கொள்ளும் படி, ‘புரிந்………து‘ என்பதை விரிப்பதும் …ஆஹா…ஆஹா! அதுவும், சரணத்தின் தொடக்கத்தில், ‘சின்னஞ்சிறு மலர்‘ முதல் முறை ஓரழகு எனில், இரண்டாம் முறை சொல்கையில் அழகோ அழகாய் டி எம் எஸ் போடும் சங்கதிகள் அந்த மலரை விரித்து மணத்தை நுகரும் சுவாரசியத்தை வெளிப்படுத்தும்.
பி சுசீலா, ‘பொன்னின் அழகிய‘ என்ற சரணத்தைக் கையில் ஒரு சதங்கையை எடுத்து அதை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்துக் கன்னத்தில் ஒத்தியெடுத்து, காலில் ஆர்வத்தோடு கட்டிக் கொண்டு அதன் ஒலியை ரசித்தவாறு ஆடும் நடனக்காரரைப் போலவே அத்தனை இன்பமாகப் பாடி முடிப்பார். அதிலும் இரண்டாம் வரியில் ‘பொங்கும் தமிழினில்‘ என்பதில் ‘தமிழினில்‘ சொல்லை இனிய தமிழாக சங்கதிகள் போட்டு இசைப்பார். ‘கங்கை நதியென உறவினில் கலந்து‘ என்ற கடைசி அடியை என்னமாக ராகமிழைத்துப் பாடுவார்.
மூன்றாம் சரணம், ‘வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து‘ என்று டி எம் எஸ் எடுக்க, பி சுசீலா, ‘வெற்றித் திருமகன்‘ என்பதில் ஓர் இளம் சங்கதி கொஞ்சுகிறது. ‘உள்ள சுகத்தினை‘ சாதாரணமாகக் கடந்து செல்லும் டி எம் எஸ், ‘முழுவதும் அளந்து‘ என்பதில், ‘அளந்து‘ எனும் சொல்லை முழுவதும் ‘அளந்………….து‘ வைப்பார் சங்கதியில் ! அடுத்த வரியில், ‘இன்ப உலகினை….’.என்று இழுத்து ஒரு மிகச் சிறு இடைவெளி கொடுத்து, ‘ஒரு கணம் மறந்து….’.என்று இழுக்கும் இடத்தில் சொக்கி உறைய வைப்பார் சுசீலா. எம் எஸ் வி அவர்களது கற்பனையைப் பாடகர்களும், இசைக்கருவிகளும் ரசனையின் பரந்த வெளியில் பூக்களாக விரிய வைத்த பாடல்.
எஸ் பி பி இல்லாமல் ஒரு காதல் விவாதமா, சாத்தியமா? ‘தம்பிக்கு எந்த ஊரு‘ படத்தின் அந்தக் ‘காதலின் தீபம் ஒன்று‘ அவர் எண்ணற்ற நெஞ்சினில் ஏற்றிக் கொண்டே இருப்பது ஆயிற்றே ! தொடக்க ஆலாபனையிலேயே பற்றிக்கொள்ளும் மயக்கமும், போதையும் பாடல் நெடுக ராக தீபங்களாக ஜொலித்துக் கொண்டே இருக்கும். பல்லவியின் ‘காதல் வாழ்க‘ அவர் கொஞ்சிக் கொஞ்சி வாழ வைக்கும் காதல்.
https://youtu.be/2C78pEVf9oY
‘நேற்று போல் இன்று இல்லை‘ என்ற வரியை ஒரு ஞானியைப் போல் எடுத்து வைக்கும் எஸ் பி பி (அந்த ‘இல்லை‘யில் ஓர் அழகான சங்கதி இழைப்பு), ‘இன்று போல் நாளை இல்லை‘ என்ற அடுத்த வரிக்குப் போய் ராக ஆலாபனையால் கனவாக விரித்து சரணத்தை முடிக்கும் விதம் அபாரமாக இருக்கும். மீண்டும் பல்லவியைத் தொட்டு மீளும் போது, அந்த ‘ஏற்றினாளே‘ எத்தனை மென் உல்லாசம்!
இரண்டாம் சரணத்தில், ‘என்னை நான் தேடித் தேடி‘ என்பதில் அந்தத் ‘தேடித் தேடி‘யை ராக இழைப்பில் குழைத்துத் தேடும் அழகு. ‘உன்னிடம் கண்டு கொண்டேன்‘ என்ற கண்டடைதலின் அமைதியான பெருமிதம். ‘பொன்னிலே பூவை அள்ளும்‘ சொல்லும் விதமும், அங்கே ராக ஆலாபனை அள்ளுவதும், புன்னகை மின்னுதே வில் மின்னும் குரலும், அடுத்த வரியில் காந்தம் ஈர்ப்பதும், அன்பே இன்பம் சொல்ல வா என்ற கடைசி வரியை ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வோர் அழகில் எடுத்து வைப்பதும்….என்ன சொல்ல! பாடலை நிறைவு செய்கையில், சொந்தம், இன்பம் என்ற சொற்கள் தவம் செய்திருக்கும், அவர் இசைக்கும் விதத்திற்கு! வழக்கமான மென் புன்னகையால் காதலை ஆசீர்வதித்து முடிக்கிறார் பாலு.
இளையராஜாவின் அற்புதமான இசையமைப்பில் சீரான தாளக்கட்டு மீதில் வயலின் இசை இதம் பதமாகவும், மெல்லிய நீரோட்டமாகவும், இரண்டாம் சரணத்தை நோக்கிய திசையில் பாம்பைப் போல் வேக வேகமாக ஊர்ந்தும் இன்பம் கூட்டும். இணையான ஓட்டத்தில் புல்லாங்குழல் அந்தக் காதலைத் தாலாட்டும். இந்தப் பாடல் பதிவின் போது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ராஜா, சிகிச்சையில் இருந்தவாறே பாடலுக்கான டியூனை விசில் ஒலியெழுப்பி பாடகர்களுக்கு உணர்த்தினார் என்னும் அசர வைக்கும் செய்தியும் உண்டு. அசாத்திய இசை வாழ்க்கை.
இன்னும் இன்னும் இன்னும் மென் காதல் கீதங்கள் இருக்க, சில பத்தாண்டுகள் தாவி வாருங்களேன். மென் காதல் அல்ல, காதலையே மென்று தீர்க்கும் சாதீய வெறிச் சூழலில், இறக்கை விரித்து வானத்தில் பறக்கும் காதல் பாடல் அது.
அற்புதமான படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களது ‘பரியேறும் பெருமாள்‘ இக்காலத்தின் மிக முக்கிய பிரச்சனையின் மீது ஓர் ஆரோக்கியமான உரையாடலைத் திரையில் தொடங்கி வைத்திருக்கிறது. அவரது தேடலின் ஆழத்தில் அருகே நீந்தும் ஆர்வத்தோடு சந்தோஷ் நாராயணன் இசையில், யோகி சேகர், ஃபரீதா பாடி இருக்கும், ‘பொட்டக் காட்டில் பூவாசம்‘, கவிஞர் விவேக் எழுதிய பாடல்.
‘றெக்கை வச்சா வானத்தை அள்ள‘ என்று சன்னமான காதலை எடுக்கும் யோகி சேகரின் குரல் அப்படியே காதலை இழைத்து வளர்த்தெடுக்கும் வரிகளை இசைக்கையில் கிராமப்புறக் காதலின் அசல் வாசம் பரவுகிறது. சூப்பர் சிங்கரில் அசாத்தியமான தனித்துவக் குரலில் சிறப்பான பாடல்களை இசைத்த ஃபரீதாவுக்கென்றே உருவான பாடல் போலும் பொருந்திப் போகிறது அவரது குரலில் தெறிக்கும் அதே மண் வாசம். ‘பத்திரமா நீ தான் பாக்கணும் இவள‘ என்ற இழைப்பில் தெறிக்கும் உரிமையில் சிந்தும் காதல் ஏக்கம் பாடலை ஒரு படகு போல் உள்ளத்துள் மிதக்க விடுகிறது.
யோகியின், ‘பொட்டக் காட்டில் பூ வாசம் சிட்டுப் புள்ள சாவாசம்‘ ஒரு விதமான கிறக்கத்தில் புறப்படும் எனில், ‘என்னைக் காக்கும் உன் நேசம் புல்லு மேல ஆகாசம்‘ என்ற வரிகள் கதையின் போக்கில் உணர்த்தும் பிரச்சனையை கவித்துவமாக உணர்த்துவது, குரலிலும் சிதறிச் சிந்துகிறது. ஃபரீதா குரல் அடுத்தடுத்த சரணங்களில் மேலும் நெகிழ வைக்கிறது. பின்னணியில் ஒலிக்கும் ஹம்மிங் பாடலின் களத்தை எதிரொலிக்கிறது.
பொதுவாக, திரைப்படங்களில் காதல் பாடல், எல்லா பிரச்சனைகளில் இருந்தும் தப்பி வெளியேறி எங்கோ இயற்கைக் காட்சிகள் அருகே சொக்கித் திரியும் காதலர்களைக் காட்டும். ஆனால், பரியேறும் பெருமாள், நிஜ வாழ்க்கையின் சவால்களை, கனவிலும் தப்பி வெளியேறி விட முடியாத சங்கிலிப் பிணைப்புகளை, உருத்தெரியாமல் அடித்து நொறுக்கவென்றே பயிராகிக் கொண்டிருக்கும் நூற்றாண்டுகளின் வன்மத்தை எல்லாம் ஊடாகக் காட்சிப் படுத்தியவாறே காதலை இசைக்கிறது. உண்மைக்கு எத்தனைக்கெத்தனை நெருக்கமாகப் போய்ப் பார்க்க முடிகிறதோ அங்கே அழைத்துச் செல்ல முனையும் படைப்பாளி, காதல் படரும் நிலத்தின் அரசியலைக் கொத்திக் கிளறிப் பார்க்கவும் வைக்கிறார்.
காதல் பரவசமானது தான், ஆனால், பரபரப்பாக ஆக்கப்படுகிறது. பாடல்கள் காதலை நினைத்து உருக வைக்கின்றன. காதலை எண்ணித் துள்ள வைக்கின்றன. காதலில் ரசிகரையும் இறங்கி நீந்த வைக்கின்றன. அதே நேரத்தில், பாடல் முடியும்போது அந்த உணர்வில் இருந்து வெளியேறிவிடுமாறு சொல்வோர் இந்தக் காதலர் தினத்திலும் கொஞ்சம் தீவிரமாகக் களத்தில் காணப்படுவார்கள். காதலர்களை விடவும், இவர்களே காதலர் தினம் என்று வரும் என காத்திருக்கின்றனர். ஆனால், காதல் வெட்ட வெட்டத் தழைக்கிறது. எந்த மண்ணிலும் விளைகிறது. ஏனெனில், அது மனிதர்களது ஆதி உணர்வு. இப்போது மீண்டும் நம் காதில் வந்து சொல்கிறார் எஸ் பி பி, ‘காதல் வாழ்க‘ என்று!
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmail.com
தொடர் 1 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 2 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 3 – ஐ வாசிக்க…
இசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 4 – ஐ வாசிக்க…
இசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 5 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 6 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள்.! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 7 – ஐ வாசிக்க..
தொடர் 8 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 9 – ஐ வாசிக்க..
தொடர் 10 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 11 – ஐ வாசிக்க..
தொடர் 12 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 13 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 14 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 15 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 16 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 17 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 18 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 19 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 20 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 21 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 22 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே ! – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 23 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 24 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 24 : இசையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 25 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 26– ஐ வாசிக்க..
தொடர் 27– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா ? – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 28– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 29– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 30– ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 31 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 32 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 33 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 34 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்
தொடர் 35 – ஐ வாசிக்க..
இசை வாழ்க்கை 35: இசையின் அலையில் தினமும் அலையும் குமிழி | எஸ் வி வேணுகோபாலன்


காதல் வெட்ட வெட்டத் தழைக்கிறது. எந்த மண்ணிலும் விளைகிறது. ஏனெனில், அது மனிதர்களது ஆதி உணர்வு.
அருமை
உண்மை ஐயா
இத்தொடரில் என்ன சிறப்பு என்றால் எஸ்.வி.வேணுகோபாலன் என்ன உணர்ந்தாரோ அவற்றை அப்படியே வாசகருக்கும் வார்த்தைகளில் கடத்தும் இலாவகம்! இச்சிறப்பு தொடர வாழ்த்துகள் !