இயக்கங்களின் கூட்டங்களில், பொதுவாக முதல் விஷயமாக, இடைப்பட்ட காலத்தில் மறைந்தோர்க்கு அஞ்சலி செலுத்துதல் வழக்கம். ஓரிரு மாத இடைவெளிக்குள் இழந்தோர் பட்டியலில், இரண்டு ஆண்டுகளுக்கான அறிக்கையில் இடம் பெறும் எண்ணிக்கையிலா பெயர்கள் வாசிப்பது? பெருந்தொற்றுக் காலம் வாட்டி எடுக்கிறது.
கி ரா அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டமொன்று நடத்திய மறுநாள், அவரோடு நெடிய கடிதத் தொடர்புக்காகப் பேசப்படும் நெருக்கமான நண்பராக இருந்த தீப நடராஜன் அவர்கள் காலமான செய்தி வருகிறது. ரசிகமணி டி கே சி அவர்களுடைய பெயரன் அவர். அமுத சுரபி ஆசிரியர், எழுத்தாளர், இலக்கிய நேயர் திருப்பூர் கிருஷ்ணன் தமது அருமை மகனைப் பறிகொடுத்திருக்கும் செய்தி புரட்டிப் போடுகிறது. விசுவாசமித்திரனோடு அன்பு மகனைக் காட்டுக்கு அனுப்புவதற்கான பிரிவுக்கே அத்தனை வருந்தினான் தசரதன் என்பதை, ‘கண்ணிலான் பெற்றிழந்தான் என உழன்றான் கடுந்துயரம் காலவேலான்‘ என்று எழுதி இருப்பார் கம்பர். புத்திர சோகத்தில் ஆழ்ந்திருக்கும் அன்புள்ளத்திற்கு என்ன ஆறுதல் மொழி சொல்ல இயலும்?
ஆயினும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், கொடுந்தொற்றுக் காலத்தில் பரிதவிப்பில் இருக்கும் மற்றவர்களுக்குமான ஆறுதல் மொழியைச் சொல்லி, தங்கள் துயரில் பங்கெடுத்தோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். தோழர் சீதாராம் யெச்சூரி அவர்கள் ஆருயிர் மகனை இழந்த போது, டுவீட்டரில், உலகின் பலரும் எதிர்கொண்ட இழப்பை உணர்ந்தபடியே இந்தத் துயரத்தைக் கடக்க வேண்டும், எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது. சக உயிர்களிடத்துக் காட்டும் தன்னியல்பான அன்பும் பரிவும்தான் சொந்தத் துயர ஆற்றை நீந்திக் கடக்கவும் துணிவு தந்தருள்கிறது.
அடுத்தவரைக் கொண்டாடுவோர் என்று வரும் போது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இளம் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் நடுவர்கள் பலரையும் பாராட்டத் தோன்றும். எஸ் பி பி, மனோ, எஸ் பி ஷைலஜா, மால்குடி சுபா, ஸ்ரீனிவாஸ் என்று நிறைய பேரைச் சொல்ல முடியும். பாடகி சுஜாதா அதில் முக்கியமானவர்.
எப்போதும் சிரித்த முகத்தோடு அவர் பேசும் தமிழும் இனிமையானது. கணையாழி கடைசி பக்கங்களில் ஒரு முறை சுஜாதா எழுதி இருந்தார், மலையாளம் நனைந்த தமிழில் பேசுகிறார் ஜேசுதாஸ், ஹாஸ்யத்திற்கு சிரிப்பதுபோல் நன்றாக சிரிக்கிறார் என்று. அப்படி, மலையாளத்தில் தோய்த்தெடுத்த தமிழில் பேசும் சுஜாதா, பாடல்களில் வெளிப்படுத்தும் குரலினிமை, குரல் தனித்துவம், குரல் வீச்சு, ஆலாபனைகளின் அழுத்த முத்திரை எல்லாமே ரசனை மிக்க ஓர் இசைக்கலைஞரின் வெளிப்பாடுகள்.
அண்மையில், வீட்டுத் திரையில் அவ்வை ஷண்முகி படம் ஓடிக்கொண்டிருந்த போது, மகன் நந்தா தான் கேட்டது, அந்த டூயட் பாடலில் பெண் குரல் யார் என்று. இரண்டு குரல்களுமே உச்ச ஸ்தாயியில் பல்லவி அமையப்பெற்றிருக்கும் அந்தப் பாடலை அசாத்திய இனிமையாக வழங்கி இருக்கிறார்கள். தேவா மிகவும் சிறப்பாக இசை அமைத்திருக்கும் ‘காதலா காதலா காதலில் தவிக்கிறேன்‘ பாடல் பல கோணங்களில் ஈர்த்துக் கொண்டே இருப்பது. சுஜாதா, ஹரிஹரன், ஆஹா…ஆஹா.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் போன்ற வரிசையில் வரும் பாடல் இது.
கதையோட்டத்தில், ஆசையை இணை சேர்ந்து ஆகமாட்டாமல் பிரிந்து போக நேர்ந்து மீண்டும் சேரத் துடிக்கும் உள்ளங்களின் உணர்ச்சித் துடிப்பு தான் இந்தப் பாடல். சின்னச் சின்ன சொற்கட்டுகளில் அடுத்தடுத்துப் பின்னிப் பின்னி வரும் தத்தகாரத்தில் அமைந்த மெட்டு. பாடல் எழுதி இருப்பவர் கவிஞர் வாலி, கேட்க வேண்டுமா என்ன !
ஒன்றே போல இரண்டு சுழலும் தட்டுகளாக உழலும் இதயங்களின் தாபத்தை ஏற்ற இசைக்கோவை முன்னுரை கொடுத்துப் பாட வைக்கிறார் தேவா. பல்லவியின் தொடக்கத்திலேயே சுஜாதாவின் உருக்கம் நிறைந்த குரல், காதலில் தவிக்கிறேன் என்ற பதத்தை அதன் முழுப்பொருளில் கேட்போர்க்குக் கடத்தி விடுகிறது. ஹரிஹரன், சொல்ல வேண்டுமா, காதலி காதலி என்ற விளியைத் தொடர்ந்து, காதலில் என்ற சொல்லில் கடைசி எழுத்துக்கு மட்டுமே அவர் செய்துகொடுக்கும் வேலைப்பாடு இருக்கிறதே, அடடா…அடடா… அப்புறம் அந்தத் தவிக்கிறேன் என்பதில் ஒலிக்கும் சுய கழிவிரக்கம், நெஞ்சில் நிறைவது. ‘ஆதலால்‘ என்ற அடுத்த சொல்லில் ஒரு திருப்பம் கொடுத்து ‘வா வா‘ என்பதில் உள்ளத்தின் அறைகூவல் விடுத்து, ‘அன்பே அழைக்கிறேன்‘ என்பதில் பூச்சொரிகிறது உள்ளத்தில் அவர் குரல்.
சரணங்களில், நீண்ட நீண்ட கால அளவுக்குச் சின்னச் சின்ன சொற்களை இழைக்கும் கோலம், பிரிவின் வேதனையைப் பரிமாறும். ‘நாள் தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு‘ என்பதில், அந்தப் பூங்காற்று சோகக் கதையைப் பேசுமளவு வீசும்படி இருக்கும் சுஜாதாவின் குரல் வித்தை. ‘உன் ஞாபகம் கொல்லும்‘ என்ற ஹரிஹரன் மறுமொழியில் மேலும் சிறப்பாக நகரும் சரணத்தில், சுஜாதா, ‘தன்னந்தனியாகச் சின்னஞ்சிறு கிளி தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத்துளி‘ என்று வாலியின் சந்தக் கவிதை வரிகளுக்கு உயிரூட்டி, ‘இந்த ஈரம் என்று மாறுமோ‘ என்று நிறைவில் ஆலாபனை இழுத்து முடிக்குமிடம் அத்தனை அபாரமாக அமைந்திருக்கும்.
இரண்டாம் சரணத்தில், ஹரிஹரன் தொடங்க, சுஜாதா வளர்க்க, ஹரி முடிக்குமிடம் அதைப்போலவே அபாரம். ‘நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று‘ என்ற வரிகளில் உச்சரிப்பின் சுகம் அத்தனை கொடுத்திருப்பார் ஹரி. ‘ஜென்ம பந்தம் விட்டுப் போகுமோ‘ என்ற நிறைவில் தொடுக்கும் ஆலாபனை அம்சமாக இருக்கும். ஹரியின் நுட்பமான பாடுமொழிக்கு, முகப்பொலிவுடன் நடித்திருப்பார் கமல் எனில், மீனாவும் சுஜாதாவின் குரல் சுவாரசியங்களை அனுசரித்து பாவங்கள் வெளிப்படுத்தி இருப்பார்.
ஜானி படம், ராஜாவின் இசைக்காகவே அந்நாட்களில் மிகவும் பேசப்பட்டது. படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல்களில் ஒன்று, ஒரு பறவையின் பறத்தல் போல நெஞ்சில் அலைவுறும். ‘ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்….’எத்தனை இசையாய் ஒரு பல்லவி! கங்கை அமரனின் அருமையான பாடல் அது. அத்தனை இசையார்ந்த குரலில் பாடலில் இருந்து தேனெடுத்துப் பொழிவார் சுஜாதா.
லல லலல லலல லலலா ….ஓர் இதமான ஹம்மிங் தொடுக்கும் சரத்தில் பூத்துக் குலுங்கத் தொடங்குகிறது பல்லவி. பல்லவியிலிருந்து சரணத்தை நோக்கிய பயணம், இசைக்கருவிகளின் பன்னீர் தெளிப்பில் தொடர்கிறது. வயலினும் குழலும் அமுது படைக்கின்றன. ‘ஜீவனானது‘ என்ற சரணத்தின் தொடக்கம், இசை மீதான பக்தியில் சிலிர்ப்போடு பரவுகிறது. அந்தப் பரவசத்தில் வெளிப்படும் ஆஹா ஆஹா எனும் ஹம்மிங் இசைக்கான அர்ப்பணிப்பை இன்னும் உன்னதமாக்குகிறது. ‘வாழும் நாளெல்லாம் என்னை வாழ வைப்பது இசை என்றானது‘ என்பதை விட இசை வாழ்க்கை வேறென்ன இருக்க முடியும்!
இரண்டாம் சரணத்தில், எண்ணங்களை மீட்டும் சொற்களும், அதன் வண்ணக் கோலங்களும், இசையின் தாபங்களுமாக நிரம்பித் ததும்புகிறது பாடல். மீண்டும், ஒரு பரவசம். மீண்டும் ஆஹா ஆஹா ஹம்மிங்… ‘பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே கவி பாடுங்கள் உறவாடுங்கள்‘ என்று நிறைவு பெறுகிறது சரணம்.
பாடலின் சொற்கள் ஒவ்வொன்றிற்கும் அத்தனை சுகமளிக்கும் விதத்தில் கற்பனையோடு விரியும் சுஜாதாவின் குரலில், இசைத்தட்டு சுழன்று முடித்தது அறியாமல், கேட்போர் உள்ளங்களில் சுழன்று கொண்டே இருக்கிறது பாடல்.
புதிய முகம் படத்தின் ‘நேற்று இல்லாத மாற்றம் என்னது‘ அடுத்து நினைவில் சுழலத் தொடங்கிவிட்டது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் கவிஞர் வைரமுத்து வழங்கி இருந்த பாடல். கடல் அலைகளைப் போல் வந்து தழுவிச் செல்லும் இசையலைகளைத் தொட்டுத் தொட்டு சுஜாதா இசைக்கும் ஓர் அருமையான காதல் கீதம் இது.
பல்லவியின் முதல் வரி, இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால் என்ற அறிவிப்பு. அடுத்து, ‘காற்று என் காதில் ஏதோ சொன்னது…’ என்பது வயலின் வாசிப்பைத் தான் பேசுகிறது. ‘இது தான் காதல் என்பதா‘ என்ற வியப்பும், அடுத்தடுத்த கேள்விகளும் தான் எதற்கும் பொறுப்பல்ல, காதல் இப்படித்தான் அலைக்கழிக்கும் என்ன செய்ய என்று அழகூட்டிப் பேசுகின்றன.
பல்லவியிலிருந்து புறப்படும் இடத்தில் சிதார் எழுப்பும் வினாக்களுக்கு, சின்னச் சின்ன முனங்கல்களாக வீணை பதில் சொல்லிப் பார்க்கிறது. காதல் தாபத்திற்குப் புல்லாங்குழல் மருந்திட்டுப் பார்க்க, முதல் சரணத்தில் கொஞ்சலோடு நுழையும் சுஜாதாவின் குரல், ‘கடவுள் இல்லை என்றேன் தாயைக் காணும் வரை‘ என்ற வரிசையில், ‘காதல் பொய் என்று சொன்னேன், உன்னைக் காணும் வரை‘ என்ற இடத்தில் கொண்டு நிறுத்துவதில் கடத்தும் காதல் உணர்வு பூவாய்ப் பூக்கும். அதன் நீட்சியில், ‘கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை‘ என்று தொடங்கிச் செல்கையில், ‘காதல் சுவை ஒன்று தானே காற்று வீசும் வரை‘ என்ற முடிப்பில் இன்னும் சிறக்கும்.
இரண்டாம் சரணத்தைச் சென்றடையும் பாதையில், குழலிசையின் ஆட்சி நீட்டிக்கப்பட்டிருக்கும். ‘வானம் இல்லாமலே பூமி உண்டாகலாம்‘ என்ற பட்டியலில், ‘காதல் இல்லாமல் போனால் வாழ்க்கை உண்டாகுமா‘ என்ற இடம் முக்கியமானதாகும். அதன் நீட்சியில், ‘நேசம் இல்லாமல் போனால் பாசம் உண்டாகுமா‘ என்று முடிகிறது சரணம்.
இரண்டாம் சரணத்திலிருந்து பல்லவிக்குப் போய்ப் பாடல் நிறைவடைந்த பின்னும் சிதார் துளிகளும், குழலும் இசை சிந்தியபடியே ஒலித்துக் கொண்டிருப்பது, காற்றின் சகபயணி தான் காதல் என்று ஆய்வறிக்கை எழுதிக் கொடுப்பது போலிருக்கும். அடர்த்தியான மரத்தடியில் ஒய்யாரமாக ஊஞ்சல் ஆடுதல் போலவே பாடலை அசாத்திய விதத்தில் பாடி இருப்பார் சுஜாதா.
கவிதை வரியின் சுவை அர்த்தம் புரியும் வரை என்று இந்தப் பாடல் வரிகள் சொல்லவும், கவிஞர் நகுலனின் புகழ் பெற்ற கவிதை வரியொன்று நினைவுக்கு வந்தது: ‘இருப்பதற்கென்றே வருகிறோம், இல்லாமல் போகிறோம்‘. கொடுந்தொற்றுக் காலத்தில் இதைவிடவும் நெருக்கமான இலக்கிய விவரிப்பு இருக்குமா தெரியவில்லை.
கி ரா அவர்களது இசை வாழ்க்கையில் விளாத்தி குளம் சுவாமிகளுக்கு முக்கிய இடமுண்டு. மே 27, 2021 தமிழ் இந்து நாளிதழின் இணைப்பிதழில் தஞ்சாவூர் கவிராயர், விளாத்தி குளம் சுவாமிகள் குறித்த ஒரு சுவாரசியமான கட்டுரை படைத்திருக்கிறார். மழைத்துளிகளின் தாரைகளை இசை நரம்புகளால் மீட்டிப் பாடுவதுபோல் பார்ப்போரை மயக்கும் வண்ணம், மழைக்கே இசையமைத்துப் பாடுவார் சுவாமிகள் என்று எழுதி இருக்கிறார். (https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/675366-agaththai-thedi.html ).
பாரதியார், சுவாமிகளைப் பார்த்து, ‘பாடு, பாண்டியா பாடு‘ என்று உற்சாகப்படுத்திக் கேட்பாராம்.
கவிராயரை அழைத்து மிகவும் பாராட்டிப் பேசிக் கொண்டிருக்கையில், எத்தனையோ இடர்ப்பாடுகள், நெருக்கடிகள், வாழ்க்கை போராட்டத்திற்கு இடையே தான், மகாகவி பாரதி, ‘எத்தனை கோடி இன்பம் வைத்தாய்‘ என்று பாடினான் என்று குறிப்பிட்டார் தஞ்சாவூர் கவிராயர். இத்தனை சோதனை மிகுந்த காலத்திலும், வேதனையுற்று இருப்போரை ஆற்றுப்படுத்தவும், இயல்பு நிலைக்கு மீண்டு வரவும், இசை எத்தனை உளவியல் சிகிச்சை அளிக்க முடியும். இசையோடிருப்போம். இசையோடு கலப்போம்.
(இசைத்தட்டு சுழலும் ….)
கட்டுரையாளர் அலைபேசி எண் 9445259691
மின்னஞ்சல் முகவரி: sv.ven[email protected]
இசை வாழ்க்கை 42: ஆடிப் பாடி எழுத வந்தால் அலுப்பிருக்காது – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 43: தனியாகப் பாடிடும் சந்தோஷம் தந்தாய் இசையே இசையே..! – எஸ் வி வேணுகோபாலன்
இசை வாழ்க்கை 44: இது அவள் தந்த பாடலடி, வெண்ணிலாவே..! – எஸ் வி வேணுகோபாலன்
சோதனை மிகுந்த இக்காலத்திலும், வேதனையுற்று இருப்போரை ஆற்றுப்படுத்தவும், இயல்பு நிலைக்கு மீண்டு வரவும், இசை எத்தனை உளவியல் சிகிச்சை அளிக்க முடியும். இசையோடிருப்போம். இசையோடு கலப்போம்.
Yes it should be admitted that music plays an important role by giving some solace at this present difficult times.