1.
காற்றின் விசையில் மெல்ல வீசும் பூந்தூரல்
அதில் நனைவதற்குப் பெருவிருப்பம்
எனக்கு எப்போதும்
சிறுதூரல் வந்தால் போதும் நசநசவென பெய்கிறது என்று
பலரும் வெறுப்பாய்ச் சபித்துப் பேசுவர்.
சட்டென வேகமெடுத்து ஆலங்கட்டிகள் வீசி பெய்திடும் மழை
குழந்தைகளைச் சிரிக்க வைத்து விளையாட்டு காட்டும்
புயல் மழையோ உக்கிரமெடுத்துக்கொட்டித் தீர்க்கும்
பல மணிநேரம் ஓசையெழுப்பி இரவில் பேய்க்கணங்கள்
எங்கோ ஒளிந்து கொள்ளும் மறைவாய்
நடமாட்டம் இல்லாத தார்ச்சாலைகளில்
மழை வெள்ளம் பாய்ந்து அழுக்குகள் நீக்கும் பெருமழை.
எப்பொழுதும் எல்லோரையும் மிரட்டும்
மனிதர்களுக்கு எக்காலத்திலும் நன்மையே செய்கிறது மழை.
அப்போதுதான்
” மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும் ” என்றும்,
நல்ல மழை பெய்ததென்றும் ” பாராட்டுதல் பெறுகிறது மழை.
*
2.
புயல் வெள்ளம் அவ்வளவு சாதாரணமானதல்ல.
மிகப் பெரிய திகைப்பை ஏற்படுத்தும்,
பாய்ந்தோடும் தண்ணீரின் வெறித்தனம்
கிராமங்கள், நகரங்களில் உள்ள ஆறுகள்
ஏரிகள் குளங்கள் என எங்கும் நிரம்பி
வழிந்து பாய்ந்தோடும்.
உயிரற்றுக் கிடந்த மரங்கள் செடிகள்
வெள்ளப் பெருக்கில் அல்லல்படும்
மூச்சுத் திணறிப் போராடும் எதிர்த்து
நீர் சூழ்ந்த வெறுப்பில் மௌனமாய் இருக்கும்
நீர்ச்சுழல்கள் ஆங்காங்கே
எங்கும் ஊடுருவிப் பாய்ந்து
எல்லோரையும் வியக்க வைக்கும்.
தன் கோபம் எதையும் மறைக்காமல்
வெளிப்படுத்தி தாறுமாறாய் ஓடும்.
ஒரே நேரத்தில் தன் உக்கிரத்தை
வெளிப்படுத்தி மெல்ல மெல்லக் குறைந்து தணியும்.
மழைநீர் மட்டுமே இருக்க முடிகிறது கொஞ்ச நேரம்.
இந்த நீர் சூழ்ந்த கணப்பொழுதில் எங்கும்
ஒதுங்க இடமின்றி தவித்து அலைகிறதொரு
வெள்ளைப் பூனைக்குட்டி.

