ந க துறைவன் கவிதைகள்.
மேகம் நகர்கிறது? நிலா நகர்கிறதா?
இரண்டுமே நகரவில்லை
அங்கேயே தானிருக்கிறது
நகரும் அழகினைப் பார்த்து
ரசிக்கும் என் மனம் அப்பாலுக்கு
அப்பால் நகர்ந்து போகின்றன
மெல்ல மெல்ல நகர்ந்து, இன்னும்
அப்பாவுக்கு அப்பால் நகர்ந்து எங்கோ?
நிலா அங்கேயே இருக்கிறது
எங்கும் நகராமல் நிலையாய்…
வேகமாக நகரும் மேகங்களை
உணர்கிறது மனம்.
பனிப்பொழிவு விடியல் நேரம்
நீர் நிரம்பிய நதி குளிர்ந்து அமைதி
நீரின் மேல் படர்ந்து திரிகின்ற
நீராவிப்புகை மெல்ல எழுந்து
மேல் நோக்கி பயணம்
நதிக்கரையில் நாணல்கள்
காற்றில் நடனம்
பறவைகள் ஓய்வெடுக்கும்
புங்கைமரம்
மஞ்சள் நிறக் கொன்றை பூக்கள்
உதிர்த்து தரையெங்கும்
பொன்னிற அழகு
யாருமற்ற வெட்டவெளியில்
அநாதையாய் பாய்ந்தோடுகிறது
ஊருக்கு வெகுதொலைவில் பெயர்
இல்லாத நதி.

