அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும்
பூமியின் விருந்தாளி.
அவன்மேல் விழும் ஆயிரம் இலைகளின் நிழல்கள்
அவனை ஒரு
புனித மனநிலைக்குக் கொண்டுசெல்கின்றன.
ஒரு பைத்தியக்காரனைப்போல
அவன் ஓயாமல் வார்த்தைகளைத்
விதைத்துக் கொண்டேயிருக்கிறான்.
உணவு விடுதியில்
மேசை துடைப்பதைவிடவும் மேலான ஒரு கவிதையை
அவனால் எழுத முடியவில்லை.
அவன் தன்னையொரு கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை
அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும்
பூமியின் விருந்தாளி.
முகம் துடைத்து அழுக்காகிப்போன
ஒரு கைக்குட்டையைப்போல
ஒரு மனிதனைத் தூக்கியெறிய
அவன் விரும்புவதேயில்லை.
ஆனால் அவன் ஒரு காலியான
தண்ணீர்ப்பாட்டிலைப்போல
எறியப்பட்ட நதிகள் ஏராளம்.
ஆனால் அவன் அறிந்துவைத்திருக்கிறான்
இந்தியாவின் கங்கையில் எறியப்பட்ட சடலம்
கனடாவின் ஃபிரேசர் நதியில்
உயிர்பெற்று நீச்சலடிக்கும் என்று.
காலம் ஒரு மனிதனின் இருக்கையின் கீழ்
உலைக்களத்தை வைத்துவிடுகிறது.
அவன் ஒரு காய்ச்சப்பட்ட இரும்பைப்போல
மீண்டும் மீண்டும்
சம்மட்டியால் அடிவாங்குகிறான்.
அவன் ஒருநாள்
ஆயுதமாக மாறுவான் என்பதை
அவனது உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டேயிருக்கிறது.
அவன் ஒரு வழிப்போக்கன்
ஆயினும் பூமியின் விருந்தாளி.
–நா.வே.அருள்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
பிரபஞ்ச ரகசியத்தை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்