நேம்சேக் (Namesake)
2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வங்காளி/ஆங்கில மொழிப்பாடம். ஜும்பா லாக்கரை எழுதிய நாவலின் அடிப்படையில் சூனி தாராபூர்வாலா எழுதியது.மீரா நாயர் இயக்கியுள்ளார். தபு,இர்ஃபான் கான்,கால் பென்,சாஹிரா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பின்னர் 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
கொல்கத்தாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் ஒரு வங்காளிக்க குடும்பம். கணவன் அசோக் கங்கூலி .மனைவி அஷிமா கங்கூலி அங்கு அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் அமெரிக்கக் கலாச்சாரத்தில் வளர்கிறார்கள். இடையிடையே இந்தியா வந்து போகிறார்கள்.மகனுக்கு அவர்கள் அழைக்கும் செல்லப் பெயரான கோகுலே அவனது பெயராக மருத்துவமனையில் கோகோல் என பதிவு செய்யப்படுகிறது. அந்தப் பெயர் மகனுக்குப் பிடிக்கவில்லை.தன் பெயரை நிகில் என மாற்றிக்கொள்கிறான்.ஆனால் கோகோல் என்ற பெயருக்குப் பின்னால் ஒரு சிறு கதை இருக்கிறது. அது ஒரு ரசிய எழுத்தாளரின் பெயர்.ஒரு ரயில் பயணத்தில் சக பயணி ஒருவர் அசோக்கிற்கு அவர் எழுதிய புத்தகத்தை அறிமுகம் செய்வதோடு பல இடங்களுக்கு பயணம் செய்வதன் முக்கியத்துவம் குறித்தும் கூறுகிறார். அந்த ரயில் விபத்துக்குள்ளாகி அந்தப் பெரியவர் இறந்துவிடுகிறார்.அசோக் பிழைத்துவிடுகிறான். மகனின் பெயர் உட்பட தன் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் இந்த நிகழ்வை நினைவுபடுத்துகிறது என்கிறான் அசோக்.
கோகோல் எனும் நிகில், மேக்சின் எனும் அமெரிக்கப் பெண்ணுடன் நட்பு கொள்கிறான்.ஆனால் அவன் தந்தை திடீரென இறந்ததும் அவன் மனம் மாறுகிறது.இந்தியக் கலாச்சாரத்தோடு வாழ விரும்புகிறான். மேக்சினோடு உறவை முறித்துக் கொள்கிறான்.பிரான்ஸ் நாட்டில் படித்து அமெரிக்காவில் வாழும் வங்காளிப் பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான்.அவளால் அவனுடன் வாழ முடியவில்லை.தன் பழைய நண்பனோடு வாழ சென்று விடுகிறாள்.அஷிமா கொல்கத்தா திரும்பி இளமையில் செய்துகொண்டிருந்த இசை பயிற்றுவிக்கும் பணிக்கு திரும்புகிறாள்.நிகில் எங்கே போவது என்று தெரியாமல் பயணப்படுகிறான்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபுகும் மக்களின் கலாச்சார சிக்கல்களை படம் காட்டுகிறது.ஆனால் நிகில் திடீரென இந்திய கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டு அமெரிக்க காதலியை கைவிடுவதும் வங்காளிப் பெண்ணாக இருந்தாலும் மேலை நாட்டுக்கு கலாச்சாரத்தில் வாழும் மவுஷ்மியை திருமணம் செய்து கொள்வதும் சற்று நெருடலாக இருக்கிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபுகும் மக்களின் கலாச்சார சிக்கல்களை படம் காட்டுகிறது.ஆனால் நிகில் திடீரென இந்திய கலாச்சாரத்தின் மீது பற்று கொண்டு அமெரிக்க காதலியை கைவிடுவதும் வங்காளிப் பெண்ணாக இருந்தாலும் மேலை நாட்டுக்கு கலாச்சாரத்தில் வாழும் மவுஷ்மியை திருமணம் செய்து கொள்வதும் சற்று நெருடலாக இருக்கிறது.
இயக்கம் சிறப்பாக இருக்கிறது.மவுஷ்மி நிகிலிடம் தனக்கு ஆசிரியர் பணி கிடைத்திருப்பதாகவும் ஆனால் அவன் பயப்படத் தேவையில்லை ; தான் ஒரு வங்காளிப் பெண்ணாக அவனுக்கு சமோசா செய்து கொடுத்துக் கொண்டு வீட்டு மனைவியாக இருப்பேன் என்று கூறும்போதே அவர்களுக்கு இடையிலுள்ள முரண்பாடு வெளிவந்துவிடுகிறது.அவனுடன் மண உறவை முறித்துக் கொள்ளும்போதும் அவள் சொல்வது’நாமிருவரும் வங்காளிகளாக இருந்தால் மட்டும் போதாது.’என்று சொல்வதும் சிறப்பு.ஒரு மலையாள படத்தில் ஒரு தமிழ் ஆணும் வேறு மொழி பேசும் லம்பாடி இனத்தை சேர்ந்த பெண்ணும் மொழி தெரியாமலே நல்ல கணவன் மனைவியாக இருப்பார்கள்.இந்த திரைப்படத்திலேயே அசோக்கின் மகள் சோனியா ஒரு அமெரிக்கரை மணந்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
அஷிமா கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க வாழ்க்கைக்கு சரி செய்து கொள்வதும் அங்கேயே நூலகர் வேலை செய்வது;ஆறு மாத பயிற்சிக்காக கணவன் வேறு ஊர் செல்லும்போது தான் வரவில்லை என்பது அங்கே திடீரென அவன் இறந்ததும் தன் சுயநலத்தினால் அவன் இறந்துவிட்டான் என்று வருந்துவதும் அந்த பாத்திரம் ஒரு முழுமையான ஆளுமையாக சித்தரிக்கப்படுகிறது. தன்னை ஏன் அவள் கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்பதற்கு’தனக்கு பார்த்த மாப்பிள்ளைகள் ஊனம் உள்ளவர்கள்,அல்லது நான்காம் தாரம் .அதைவிட அவன் மேல். மற்றும் அவன் காலணி தனக்கு பிடித்திருந்தது என்று சொல்லும்போது சற்று வேதனையும் வேடிக்கையும் கலந்து வெளிப்படுகிறது.
ரசிய எழுத்தாளர் நிக்கொலாய் வசிலிவிச் கோகோல், அவரது கதை, பாத்திரங்கள், மேற்கோள்கள் ஆங்காங்கே காட்டப்படுவது ; துன்பம் வரும்போது இதற்கு முன் ஏற்பட்ட மகிழ்ச்சியான சம்பவங்களை மனதுக்குள் நினைத்துப்பார் எனும் ஒரு உளவியலாளரின் அறிவுரை ஆகியவை படத்திற்கு ஒரு அறிவார்ந்த பின்னணியை தருகிறது.ஒளிப்பதிவு,நடிப்பு ஆகியவை சிறப்பு.பல விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.நல்ல விமர்சங்களைப் பெற்றது.
திரைவிமர்சகர் ரமணன்

