நூல்: நறுமணம்
ஆசிரியர்: இமையம்
பதிப்பகம்: க்ரியா
₹220
2016யில் வெளிவந்த நூல். மொத்தம் 9 சிறுகதைகள் உள்ளன. என்னுடன் பணிபுரிந்த ஆசிரியத்தோழி அவர். ஒரு நாள் வேலைக்கு வந்ததும் விஷ் பண்ணிய போது முகம் வாடியிருந்தது. என்னாச்சு டீச்சர்? என்றேன்.
அமைதியாக இருந்தவர்கள் திடீரென வெடித்த குரலில், ” ஒரு 500 ரூவாய்க்கு வக்கில்லாமப் போயிட்டானா? எங்க சித்தப்பா பையன் கல்யாணம். ரொம்ப நாளுக்கு அப்புறம் சொந்த ஊருக்கு போறோம். முடிக்கு டை அடிக்க, காசு கேட்டா, எவன மயக்கறதுக்கு இதெல்லாம்னு கேக்கறாருபா ” என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, இவரின் சம்பள பணம் முழுவதும் அவரது கையில். ஏடிஎம் இல்லை. 5,10 க்க்கும் அவரிடம் கேட்க வேண்டும்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரின் உணர்வுகளை எப்படி சரியாக இமையம் தன் வீடும் கதவும் கதையில் கொண்டு வந்தார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
திருமணமான தோழியர் இருவர் பேசிக்கொள்ளும் கதைதான் கதவும் வீடும். ஒருவர் பஞ்சாயத்து தலைவி. மற்றொருவர் அரசுப்பள்ளி ஆசிரியர். அவர்களின் வாழ்வு, பணம், சொத்து எல்லாம் இருந்தும் எப்படி ஆதிக்கத்துக்கு உள்ளாகிறார்கள் என்பதை முகத்தில் அறைந்தாற் போல காட்டுகின்றார்.
இதில் இருக்கும் எல்லா கதைகளும் வெவ்வேறு கதைக்கருவில் இருந்தாலும் அடிநாதமாக இருப்பது பெண்களின் வாழ்வை மையப்படுத்தியே இருக்கின்றன. சிறுகதை தொகுப்பு தானே ஒரு நாளில் படித்துவிடலாம் என்று எடுத்தால் மூன்று நாட்கள் ஆனது. சில கதைமாந்தர்களிடம் இருந்து வெளிவர முடியாமல் மனம் சஞ்சலமடைந்தது.
அதுவும் துபாய்காரன் பொண்டாட்டியில், கள்ள உறவினால் அவள் அவமானப்படும் போது, ஓர் இரவில் அவளுக்குள் நிகழும் மன அலைகழிப்பு சுழி மாதிரி நம்மையும் உள்ளிழுக்கிறது. கல்யாணம் ஆன பிறகு அவளது சொந்த பெயர் மறைந்து துபாய்காரன் பொண்டாட்டி என்றானது என்று எழுதும் போது கூட, ஒரு பெண்ணுக்கு மணமானதும் அவளின் பெயர் கூட சொந்தமாவதில்லை என்பதை நுணுக்கமாக சொல்லும் இடமெல்லாம் க்ளாஸ்.
ஈசனருள் கதையில் இரண்டு தலைமுறையாக பணிவிடை செய்தாலும் சாதியை காரணமாக வைத்து கலியம்மாள் வெளியே அமர்வதும், தன் முதலாளி பெண்
பாட்டு கற்றுக்கொள்ள மாட்டு வண்டியில் போகும் போது, கலியம்மாள் ஐந்து மைல் நடந்தே போய் நடந்தே வருவது ஒரு அடக்குமுறை என்றால், கோயிலில் திருவாசகம் பாடும் புனிதவதி அதே காரணத்திற்காக திருமணம் அமையாமல் போவதுமாக கதையை கொண்டுச்சென்றிருப்பார்.
அடுத்த நூல் எடுத்து படிக்க மனம் வரவில்லை. சில நூல்கள் கொடுக்கும் பாதிப்பு அப்படி .
அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.
இந்நூலை பரிந்துரைத்த சதிஷ்க்கு நன்றி.

