ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் வேரூன்றுவதற்கு முன்னர் மனுதர்மம் தன் செல்வாக்கை, இந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த அரசர்களிடம் பெற்றிருந்தது. எனவே பார்ப்பனல்லாதார் இந்நாட்டில் கல்வி பெற முடியாமல் பாமரர்கள் ஆயினர்:அறிவு வாய்க்கப்பெறாத இவர்கள் பார்ப்பனீய வலையிற் சிக்கி மதத்திற்கு அடிமைப்பட்டு ,அதன் காரணமாகப் பார்ப்பனர்க்கு அடிமைப்பட்டுச் சிந்திக்கும் திறனற்ற வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர்.இவ்வாறு கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த தென்னாட்டுச் சமுதாயங்களுக்கும் தாழ்த்தப்பட்டோரின் நிலை பெரிதும் வருந்தத்தக்கதாக இருந்தது.பாமரத்தன்மையிலிருந்து பார்ப்பனரல்லாதாரை மீட்க அவர்களுக்குக் கல்வி உடனடியாகத் தரப்பட வேண்டியிருந்தது.அவர்கள் பார்ப்பனரால் அழுத்தி வைக்கப்பட்டதிலிருந்தும் எழுப்பப்பட வேண்டியிருந்தது;மதத்தின் பேரால் மூடநம்பிக்கை, தன்மானக் குறைவு என்ற படுகுழிகளில் பார்ப்பனரால் அமிழ்த்தப்பட்டுக் கிடந்த இம்மக்களுக்குத் தன்மான வாழ்வும் தரப்பட வேண்டியிருந்தது.
தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற வரையறைகளில் கிடந்த இவர்களின் இத்தேவைகளை நிறைவேற்றுவதற்காக, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சி உருவாயிற்று. 1916இல் தோன்றிய இவ்வியக்கம் அது தோன்றிய நான்கு ஆண்டுகளில் சென்னை மாகாண ஆட்சியைப் பிடித்தது. தான் வெளியில் சொன்னவற்றையெல்லாம் நீதிக்கட்சி தன் ஆளுகையின் போது சட்டமாக்கி அறிவு நாணயத்துடன் செயல்பட்டது. தன் ஆட்சிக்காலத்தில் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மாபெரும் உதவிகளை நல்கிற்று.
காங்கிரசில் இருந்தபோதே நீதிக்கட்சியின் வகுப்புரிமைக்கு ஆதரவு தந்து காங்கிரஸ் இயக்கத்திற்குள் சூறாவளியை எழுப்பியவர் தந்தை பெரியார்… வகுப்புரிமையைக் காங்கிரஸ் ஏற்கவில்லை. எனவே பெரியார் வகுப்புரிமையை ஏற்காத காங்கிரசை விட்டு வெளியேறிச் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார்.

வகுப்புரிமைக்காகத் தோன்றிய நீதிக்கட்சிக்கும் தம் பேராதரவை வழங்கினார். பெரியார் அளித்த பேராதரவு நீதிக்கட்சிக்கு மேலும் உரத்தைத் தந்தது.எனவே அவர் வருகைக்குப் பின் நீதிக்கட்சி அரசு துணிவுடன் செயலாற்றியது என்பதை வரலாற்றில் காண்கிறோம்.
நீதிக்கட்சி ஆட்சி 1920 ஆம் ஆண்டு ஏற்படாமல் இருந்திருந்தால்- அது பதினாறு ஆண்டுகள் இடைவிடாது ஆட்சி நடத்தாமல் இருந்திருந்தால்-அந்த ஆட்சிக்கு 1925 முதல் தம் முழு ஒத்துழைப்பை பெரியார் தராமல் இருந்திருந்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் தலை எடுத்திருக்கவே முடியாது;வளர்ச்சி நிலையை அடைந்திருக்க முடியாது.
இந்நூலுக்கு வேண்டிய மிகப் பெரும்பாலான செய்திகள்,தகவல்கள் சென்னையிலுள்ள ஆவணக் காப்பகத்திலிருந்து திரட்டப்பட்டு, நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து மூன்றாண்டுகளில் அது நிகழ்த்திய சாதனைகளை இந்நூல் உள்ளடக்கியுள்ளது…
நீதிக்கட்சியின் போர்க்கோலம், சொல்லிய வண்ணஞ்செயல்,வருவாய்த்துறை ஆணைகள், சட்டம் (பொது)ஆணைகள், வளர்ச்சித்துறை ஆணைகள், உள்ளாட்சித்துறை ஆணைகள், பொதுத்துறை ஆணை, சட்டம் (கல்வி)துறை ஆணைகள், நீதிக்கட்சி பாடுபட்டது யாருக்காக?, இந்நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள அரசு ஆணைகள் என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் ஆவணங்களாக இடம்பெற்றுள்ளன…
குறிப்பாக, கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற்கும்,ஆதிதிராவி டர் முன்னேற்றத்திற்கும் பல வகையான திட்டங்களைக் கொண்டு வந்த தகவல்கள் ஆவணங்களாக இடம்பெற்றுள்ளன…
அவசியம் படித்து நீதிக்கட்சி ஆட்சி செய்த வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டிய நூல்…!
நன்றி!!!
அன்புடன்
அ.கற்பூரபூபதி
நூல்- நீதிக்கட்சி அரசு பாடுபட்டது யாருக்காக ?
ஆசிரியர்- பேராசிரியர் முனைவர் பு.இராசதுரை
வெளியீடு-திராவிடர் கழகம்

