நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் “நீங்கள் சுங்கசாவடியில் நின்றுக் கொண்டு இருக்குறீர்கள்” – அ.வெண்மணி

நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் “நீங்கள் சுங்கசாவடியில் நின்றுக் கொண்டு இருக்குறீர்கள்” – அ.வெண்மணி

எனக்குத் தெரிந்த வரையில், ஒரு புத்தகத்தின் முன்னுரையில், அதன் ஆசிரியர் தனது  வாசகனிடம் ஒரு உரையாடலைத் தொடங்குவார். அந்த உரையாடலில்  ஆசிரியர், தன் புத்தகத்தின் கதைக்களம், கதை மாந்தர், பேசும் அரசியல், என வாசகனை தன் படைப்பை படிக்கத் தயார்படுத்தும் ஒரு கருவியாக பயன்படுத்துவதாகவே எனக்குத் தோன்றும். 
 
      ஒரு வகுப்பில் பாடம் நடத்த துவங்கும் ஆசிரியர் மாணவர்களின் கவனம் தன் பக்கம் ஈர்க்க, பல உத்திகளைக் கையாள வேண்டியிருக்கும். ஒரு மணி நேர வகுப்பின் கவனத்தைப் பெற முதல் 10 நிமிடம் ரொம்ப முக்கியம்.  அதுவே அடாவடியான, கவனச் சிதறல் அதிகம் உள்ள வகுப்பென்றால் கொஞ்சம் பில்டப்போடு…. “இன்றைய வகுப்பு இப்படி, இப்படி இருக்கும்… சில முக்கியமான விசயங்களக் கற்க வேண்டி  இருப்பதால்… அனைவரும் அமைதியாக.. கூர்ந்து கவனிக்கனும்…. தொல்லை செய்யும் நினைப்பு இருந்தால் இப்படியே ஓடிப்போயிடு… இல்லனா அமைதியா கவனி….”, இப்படியாக வகுப்பை ஆரம்பிப்பார். மாணவர்கள் அடுத்த ஒரு மணி நேரம் கவனம் சிதறாமல் பாடத்தை கவனிக்க வைக்க இந்த உத்தி உதவும். என்னை பொறுத்த வரையில் அந்த 10 நிமிட உரைதான் ஒரு புத்தகத்தின் முன்னுரையாக புரிந்துக் கொள்கிறேன். அதே முறையைதான் இப்புத்தகத்தின் ஆசிரியரும் கையாள்வதாக எனக்கு தோன்றுகிறது (ஒருவேளை வாத்தியார் புத்தியாகக் கூட இருக்கலாம்) . இப்புத்தகத்திலுள்ள கதைகளில், வாசகன் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை விட எதையெல்லாம் எதிர்பார்க்க கூடாது என்பதை ஒரு பட்டியிலிடுகிறார். அது அந்த ஆசிரியர் நிபந்தனையுடன்  மாணவனை வகுப்பில் அனுமதிப்பது போல,  கறார் தன்மையுடன் “ நான் துஷ்டக்கதைகளை எழுதுகிறேன் ஆறடியோ, ஆறுபதடியோ தூரந்தள்ளி போகுமாறு ஆசாரச்சீலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்”, என்ற பீடிகையுடன்,  முன்னுரையில் தன் கதைகள் பேசப்போகும் கருத்தை மிக சாதுர்யமாக எடுத்துவைக்கிறார்.
 
நீங்கள் சுங்கசாவடியில் நின்றுக்கொண்டு இருக்குறீர்கள் என்ற புத்தகம்,  8 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு, ஒவ்வொரு கதையும் வெவ்வெறு தளத்தில் அதற்கான அரசியல் பேசுகிறது. வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் வழக்கமான பிரச்சனைகளை தாண்டி,  சமூக அக்கறையுள்ளதால்,  சாதியத்தில் அக்கறையில்லாத அருங்கிளி தம்பதிகள்,  சந்திக்கும் பிரச்சனைகள் மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத, ஆச்சரியமான காரணங்களாக தோன்றினாலும், தனிப்பட்ட முறையில் படிக்கும் போது எனக்கு ஆச்சர்யமாக தோன்றவில்லை. நாங்கள்  வாடகைக்கு போன புதிதில் வீட்டிற்கு வரும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள், எங்கள் வீட்டில் பூஜை ரூமோ,  கடவுள் படங்களோ இல்லாததையும், புத்தக அலமாரிகளைப்  பார்த்ததும் வித்தியாசமாக  புருவத்தை உயர்த்துவார்கள். அவர்கள் வந்துப் போன சிறிது நேரத்திலோ அல்லது சிறிது நாட்களிலோ வீட்டு ஓனர் சம்பந்தம் இல்லாமல் போன் செய்து விசாரித்ததும், அவர்களின் திடீர் விஜயத்திற்க்கான காரணமும் “காக்கை குருவி உங்கள் ஜாதி”,  கதை படித்தப் போதுதான் புரிந்தது. கதையில், வாஸ்து பார்த்து கட்டிய வீடு என்றாலும் அம்பேத்கர் காலனி திசையை நோக்கி இருப்பதால் வீட்டின் demand குறைந்து, குறைந்த வாடகையில்  சுலபமாக குடியேறிய வீட்டை கொஞ்ச நாளில் அந்த காலனி பிள்ளைகளுடன் தங்கள் குழந்தைகள் விளையாடியதால் காலி செய்ய வேண்டிவருவதும்,  வீட்டில் அம்பேத்கர் புத்தகம் இருப்பதால் “புலங்க கூடாத ஆளுங்களா இருப்பாங்களோ”, னு அக்கம்பக்கத்து வீட்டாரின் சந்தேகத்திற்க்காக மற்றொரு வீட்டையும் காலி செய்வதும் ,  என  அருங்கிளி  தம்பதிகளுக்கு ஏற்படும் கோபமும், ஆதங்கமும்   கதையை படிக்கும் நமக்கும் தொற்றிக் கொள்ளும். இந்த வீடு தேடும் பிரச்சனைக்கு அவர்கள் எடுக்கும்  முடிவில்  நமக்கும்  நிம்மதி ஏற்படும். 
 
  நம்ம சுற்றி நடக்கும் சில சாதிக் கொடுமைளைக் கேட்கும் போதே மனம் பதைத்து, சிறிது நாட்களுக்கு அதையே விவாதித்து, பிறகு  அவை வெறும் செய்தியாகி,   நாம் வசதியாக  மறந்துப்போன பல பெயர்களில், மறக்க முடியாத பெயர் ” திவ்யா”.   #இந்த_கதைக்கு _மூன்று_தலைப்புகள் என்ற கதையில் முதல் தலைப்பில் “1.இது திவ்யாவின் கதை” என்றதும்”  “ஓ…அந்த கதையா?”, என்று யோசிக்கமுன்னே…. “அந்த திவ்யாவின் கதை அல்ல”, இதன் கதையும் அதுவல்ல என்று கூறி….அந்த திவ்யாவின் வலியை, பரிதவிப்பை, கோவத்தை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.  
மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க ஒரே ...
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
 
    இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியை விஷத்தால் காதல், கல்யாணம் என்று வாழ்க்கையை பலிகொடுக்கும் எண்ணற்ற திவ்யாக்களின் வாழ்க்கையை, இரண்டாவது கதையாக “2.இது வேறு_ திவ்யாவின் கதை”,ல் தந்திருக்கிறார்.  சாதிவிட்டு, திருமணம் செய்வதில் அதிலும் சேரிக்காரிக்கும், ஊர்க்காரனுக்கும் காதல் என்றால் என்னன்ன வில்லங்கங்கள் வரும், என்று இக்கதையின் திவ்யா, பட்டியலிடுவதோடு…..அப்படி காதல் விவகாரத்தில் சேரிக்கார ஆண் அல்லது பெண் மீதே பழி சொல்லபடும் போது, “சேரிக்காரங்க மயக்குனா மயக்குற அளவுக்கு உங்க சாதி ஆணுபொண்ணு அத்தனையும் வீக் பார்ட்டிங்களா?”, னு இந்த சேரிப் பொண்ணு கேள்விக்கு   சாதிக்காரங்கதான் பதில் சொல்லனும்.  அதே நேரத்தில் இந்த சமூக, சாதிவெறியால்  வஞ்சிக்கபட்டு கொண்டிருக்கும் பல   “திவ்யா”க்கள் கேட்கும் கேள்விக்கும் பதில் சொல்லபடாமலே இருக்கு. 
 
“மூன்றாவது தலைப்பு என்னவென்று குறிப்பிடாமலே  கதையை முடிக்கிறாரே”, என்று நம்மை எண்ணவைத்து கதையை முடித்த ஆசிரியரின் எண்ணம் என்னவென்று எனக்கு பிடிபடவில்லை.
 
“வருது, வருது விருது வருது”, என்ற சிறுகதையில் ஒரு விருதை வாங்கத் தயாராகும் கவிஞரின் அவலநிலையை (விருதை வாங்குவது அவல நிலையா? என்று கேட்பவர்களுக்கு, கதையைப் படித்தால் விளங்கும்) நினைக்கும் போது யார் யாரோ ஞாபகத்தில் வர…அவரா இருக்குமோ…இவரா இருக்குமோ….என யோசித்து ஒரு கட்டத்தில் “ஆசிரியர் நம்மல குறிப்பிட வாய்ப்பில்லை”,  என்ற நினைப்போடு (நிம்மதியோடு)   சிரித்துக்கொண்டே படிக்கலாம். நீண்ட காத்திருப்பிற்குபின் , இறுதியில் அவருக்கு அறிவிக்கும்  விருதுதான் இதில்  ultimate. 
 
 லிபர்ல் பாளையத்தில் பாராளுமன்ற  தேர்தல் முடிந்து, முடிவு அறிவிக்கும் ஒரு நாளைக்கு முன் பிரதமர் வேட்பாளர் காணாமல் போகிறார். வெற்றி வேட்பாளரான, அவர் திடீர் மாயமான மர்மத்தைக் கண்டுபிடிக்க கட்சித் தலைவர்கள் புலனாய்வு, காவல்த்துறை என எல்லோரும் பலவகையில் முயற்சி செய்ய,  கடைசியில் அவர் மாயமானதின்  மர்மம் யாரும் எதிர்பாராதது. இனி யாருக்காவது “ஆதரவு அலை”, என்று வார்த்தையை கேட்டாலே #அலை_என்பது_சொல்லல்ல  என்ற கதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் நம்ம நாட்டில்  இப்படி நடக்காம போச்சே என்கிற வருத்தம் படிப்பவர்கள்  மனதில் நிச்சயம் மேலோங்கும். 
 
இன்னொரு கதையில் அதே லிப்பரல் பாளையத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், ” அகண்ட சாலைகள்”, என்கிற முழக்கத்தோடு…ஆங்காங்கே சுங்கசாவடி அமைத்து  தொட்டதிற்கெல்லாம் வரி போட்டு மக்களை கொள்ளையடிக்கின்றனர். அப்படியே அருகேயுள்ள “கக்கா நாட்டில்”, புகுந்து  வீட்டு வரி, கழிப்பறை பயன்படுத்தவரி, படுக்கையறை வரி, சுங்க வரியென எதற்கெடுத்தாலும் வரிப் போட்டு இங்கேயும் கொள்ளையடிக்கிறார்கள். “அட …இதிலென்ன புதுசு,  நம்ம நாட்டில் மட்டும் என்ன வாழுது”, என்று நமக்கு தோன்றினாலும், லிப்பரல்பாளையம், கக்கா நாட்டு மக்கள் காட்டும் எதிர்ப்பு, மேற்கொள்ளும் போராட்ட யுக்தி, நமக்கு உற்சாகமூட்டும். போராட்ட யுக்திகள் கற்பனையாக இருந்தாலும்  மக்கள் போராட்டம்  வெற்றியடையும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். கதையை படித்து முடித்தப்பின் லிபரல் பாளைத்திலேயே செட்டில் ஆகலாமென எண்ணத் தோன்றுகிறது. ஆசிரியர் விலாசம் பகிர்ந்தால் வசதியாக இருக்கும். 
 
நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்
எல்லாவற்றையும் விட, நாடக வடிவில் ,#நாட்டிலொரு நாடகம் நடக்குது கதை மற்றக் கதைகளில் வித்தியாசமானது. இந்நாடகத்தை, சமீபத்தில் தமுஎகச நடத்திய “தென்னிந்திய நாடகவிழாவில்”, ஏற்கனவே பார்த்திருந்தாலும் கதையாக படிக்கும் போது தனி சுவாரஸ்யமாக இருந்தது. நாடகத்தின் முதல் காட்சி காவல்நிலையம் என்று விளக்க காவல் துறை, காவல் நிலையம் குறித்து  ஆசிரியர் விவரிக்கும் விதம்  இதுவரை கண்டிராதது.   காவல்துறையிடம் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால்.. ஆள் நடமாட்டம் இல்லாத ஊர் ஒதுக்குப்புறத்தில் அனுமதி தரும் சூழ்நிலையில் “குககுகூ” அமைப்பினர்   சுடுகாட்டில் கூட்டம் நடத்த அனுமதி கேட்கின்றனர். எதிர்பாராத விதமாக், கூட்டத்தில்  பிணங்கள் கலந்துக் கொண்டு தங்கள் குறைகளை சொல்ல, பெரிய போராட்டமாக வெடிக்க,  காவல்துறை தீவரவாத பிணங்களை சுட்டுதள்ளுவதாக கதை முடிகிறது.,
 
      இப்புத்தகத்தின் பெரும்பாலான கதைகளில் நடைமுறை பிரச்சனைகளுடன்,  புனைவுகளும் சேர்த்து, ஆசிரியரின் கற்பனைக் குதிரை மற்றும் அவர் சொற்கள் பிரயோகங்கள் ஓடும் வேகத்திற்கு இணையாக ஓட முடியாமல் மூச்சி வாங்குகிறது, இன்னும் பயிற்சி  தேவையோ (எனக்கு) என்று தோன்ற வைக்கிறது. கதைகளுக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும், கதாபாத்திரங்கள் மற்றும்  நிகழ்வுகளின், நியாயங்களை விவரிப்பதாக இருந்தாலும் கலகத்தனத்துடன், எதிர்மறையாக விவரித்தே நம்மை ஏற்றுக் கொள்ளவைக்கும் யுக்தி பிரமிக்கவைக்கிறது.

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்

Author: ஆதவன் தீட்சண்யா

Publisher: சந்தியா பதிப்பகம்

No. of pages: 112

விலை: ₹105

–  அ.வெண்மணி
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *