“தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்” என்றொரு சொல் வழக்கு உண்டு. பசியின், பஞ்சத்தின் வலிகள் கூட மனித சமூகத்திற்கு அவ்வளவு சுலபத்தில் புரிந்து விடுவதில்லை. அதை தெளிவாக மனதிற்குள் பதிய வைக்கிறது “நெருங்கி வரும் இடியோசை” எனும் இந்நாவல்.
தலைப்பில் துவங்கி, கதை முழுக்க திகில் கலந்த திகைப்பின் வழியே, வாசிக்கும் நம்முள் பெரும் வலியை கடத்தி விடுகிறது வங்கத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகம்.
இத்தனைக்கும் நாவல் ஆசிரியர் பிபூதி பூஷன் பஞ்சம் குறித்து எந்த ஒரு விளக்கமோ, விவரணையோ கதைக்குள் தரவே இல்லை. கதையின் கதாபாத்திரங்களும் பஞ்சம் குறித்து புரிதலற்று இருப்பதே நம்மை பதற வைக்கிறது. அரிசி விலை உயரும் என்ற செய்தியை வதந்தி என நினைத்து கடந்து செல்லும் போதும், பின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் அரிசியை வாங்கி, உயிர் வாழ்ந்திட சாதாரண மக்கள் படும் அவஸ்தையை எதார்த்தமாக விவரித்து பஞ்சத்தின் கோரப் பற்களை நம் மனதில் பதிய வைத்து விடுகிறார்.
‘விருந்தோம்பல் ‘ எனும் பண்பு பஞ்ச காலத்தில் பாடாய்ப்படுத்துவதை படிப்பதே நமக்கு பெரும் துயரம்.
அரிசி வாங்குவதற்கு, ஆண்களும் பெண்களும் தங்களது தன்மானத்தை இழப்பதை இயல்பாய் எழுதி, வாசிக்கும் இதயத்தில் இடியை இறக்கி விடுகிறது எழுத்து.
உதாரணமாக இரு நடுவயது தோழிகள். ஒருத்தி அடுத்தவருடைய வீட்டு சமையலறையை எட்டிப் பார்த்து விட்டு கேட்கிறார்.
“பாமுன் தீதி.. என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க..
சும்மாதான் இருக்கேன்..
சமைக்கிறதுக்கு ஒன்னும் இல்ல..
எல்லார் வீட்லயும் இதே கதை தான்.”
வேறொரு காட்சி. விற்பனைக்கு அரிசி கிடைக்கும் என்று ஓரிடம் தேடி செல்கிறார். அங்கே அரிசி இல்லை என சொல்லப்படுகிறது. இருந்தும் இவர் அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் வெளியே வரும் அவர் இவரை பார்த்து சொல்கிறார்.
“அரிசி இல்லை..
அது தெரிஞ்சது. உங்க வாயால அதை கேக்கணும்னு காத்திருந்தேன்..”
ஆழமான உரையாடல்களை கொண்ட நாவல்.
கொஞ்சமும் உறுத்தாத மொழிபெயர்ப்பை செய்து சிறப்பாக பணி முடித்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் சேதுபதி அருணாசலம்.
1940 இல் ஆங்கிலேய அரசால் வங்காளத்தில் உருவாக்கப்பட்ட பஞ்சத்தை பின்னணியாக கொண்ட நாவல்.
அரசால், அதிகாரத்தால் உருவாக்கப்படும் பஞ்சம் குறித்தானப் படிப்பினையை நாம் பெற வேண்டியதன் அவசியம் இன்றளவும் இருப்பதனால் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.
– அமீபா.
நூலின் பெயர் : நெருங்கி வரும் இடியோசை
ஆசிரியர் : பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா | தமிழில்: சேதுபதி அருணாசலம்
வெளியீடு:- சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.220

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

