நெருப்புச் சொற்கள் - கா.பாண்டிச்செல்வி | Neruppu Sorkkal - Ka.PaandiSelvi

தோழர் கா. பாண்டிச்செல்வி எழுதிய “நெருப்புச் சொற்கள் “

தோழர் பாண்டிச்செல்வி, மிகவும் மென்மையானவர்

எளிமையானவர் ஆனால்,

அவரின் கவிதைகள் அப்படி அல்ல

அது நான்கு கால் பாய்ச்சலில்

வேங்கை என சீருகிறது.

அவரின் சொற்களெல்லாம் ஆண்களை அல்ல

ஆணாதிக்கத்தை உரித்துத் தொங்க விடுகிறது.

பெண்களின் மனதை, நிமிடத்திற்கு நிமிடம்

அவர்கள் படும் அவஸ்தையை

அவிழ்த்துக் காட்டுகிறது.

பேருந்துப் பயணத்தில்

நீர் குடித்து நீர் கழிக்க

அவள் படும் துயரத்தை

நெருப்புச் சொற்கள் கொண்டு வடிக்கிறார்.

கைம்பெண் வாழ்க்கையை

துணைக்கால் இல்லா எழுத்தாய்

பழுதாய் கிடக்கிறது அவள் வாழ்க்கை

கொதிக்கிற பானையில் எல்லா சோற்றையும்

பதம் பார்க்க வேண்டியதில்லை.

நெருப்புச் சொற்களிலும் கூட அப்படித்தான்

இந்த இரண்டு சொற்களே போதும்.

இந்த இரண்டு வரி என்னை நீண்ட நேரம்

சிந்திக்க வைத்தது.

துணைக் கால் இல்லாவிட்டால்

அந்த வார்த்தைக்கு என்ன பொருள் இருந்து விடும்.

துணையை இழந்த பெண்ணின் வாழ்க்கையில்

என்ன சுவை இருந்துவிடும்….

கவிஞரின் இந்த கவிச்சுவையை மனம் திறந்து பாராட்டுகிறேன்.

பெண்ணோடு தான் பிறக்கிறோம்

பெண்ணோடு தான் வாழ்கிறோம் வளர்கிறோம்

ஆனாலும் பெண்களின் மனம் மட்டுமல்ல

அவர்களின் ரணம் கூட நமக்குத் தெரிவதில்லை.

தெரியப்படுத்துவதும் இல்லை

அவர்களின் முந்தானையிலேயே

அதை முடிந்து வைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் தோழர் பாண்டிச்செல்வியின் கவிதைகள்

அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்கிறது,

மறைத்து நிற்கும் பிம்பங்களை

நாறு நாறாக கிழித்துத் தொங்க விடுகிறது.

தோழர் பாண்டிச்செல்வி யாரிடமும் எளிமையாக பழகி விடுவார்

எவ்வித மனத் தடையும் இல்லா குழந்தை போன்றவர்

அவரிடம் பழகிப் பார்த்தால், நெருப்புச் சொற்கள் இவரிடம் இருந்துதான் வந்ததா என்று வியந்து போவீர்கள்.

ஒரு சுடு சொல்

என்னவெல்லாம் செய்யும்,

எப்படியெல்லாம் மனதை ரணப்படுத்தும்.

என்பதை கவிதைப்படுத்திய பாங்கு

என்னை திகைக்க வைக்கிறது.

துருவேறிய

ஆணி பாய்ந்த காயத்தில்

கருவேல முள்ளின்

முனை குத்தி கிழித்த ரணமாய்

மனது

வேப்பம் பழத்தில்

பிழிந்த சதையாக

பழுத்துத் தொங்கி நிற்கிறது

அசட்டையாக விழுந்த

அக்கறையற்ற அவன் சொற்கள்.

மனதை வேப்பம் பழமாக பிழிகிறது

இந்தக் கவிதை.

சொற்களை அனாவசியமாக

வீசிச் சென்று விடுகிறோம்.

ஆனால் அது

நம் உறவுகளின் மனங்களைச்சென்று

எப்படி பொசுக்கி விடுகிறது.

நெருப்புச் சொற்களாக மாறி.

என்பதை கவனம் கொள்ள தவறுகிறோம்.

வகுப்பறையில் கேட்கும் பேச்சரவ சத்தத்தை

அருவியின் பேரிரைச்சல்

என்று ரசிக்கிறார் கவிஞர்.

நீண்ட நாட்களுக்கு முன்

நான் எழுதிய கவிதை ஒன்று

ஞாபகத்துக்கு வருகிறது.

எங்கெங்கோ கவியரங்கம்

இன்று என் பக்கத்து அறையில்

என் பிள்ளைகளின் சிரிப்பு சத்தம்

ஒரு முக்கியமான கவிதை

இதை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்

நாம் எல்லோரும் பாரதியைத்தான் படித்தோம்

பாரதியத்தான் பேசினோம். ஆனால் இவர்,

பாரதியின் ஒரு பாதியான செல்லம்மாவை பார்க்கிறார்,

கவி படைத்த பாரதி

வயிற்றுப் பாட்டுக்கு

ஒரு நாளும் நின்றதில்லை

அண்டை வீட்டின் அரிசிக்கு

இது யாரும் பார்க்காத பார்வை.

இதுதான் பெண்ணியப் பார்வை போல

இந்தப் புத்தகத்தில் உள்ள கவிதைகளிலேயே

ஒரு மேலான கவிதை ஒன்று இருக்கிறது அது,

ஒரு நாள் சண்டையில் பேசாமலே போன

கணவன் மனைவியை நான் பார்த்திருக்கிறேன்.

அவர்கள் சண்டையிட்டது என்னவோ ஒரு நாள் தான்

ஆனால் பேசாமல் போனது ஒரு ஆயுள் முழுக்க

அவர்களுக்குள் அப்படி என்ன சண்டையோ தெரியவில்லை

இருவரில் ஒருவர் யாராவது கோவக்காரராக இருப்பார் என்றால்

அப்படி இல்லை இருவருமே சாந்த சொருபிகள் தான்.

ஆனால் அப்படி சாந்தமாக இருந்து

பேசாமலே இருந்து விடுவதை விட,

கோபம் கொள்

சண்டையிடு

விசனச்சொற்களால்

வசைமழை பொழி

நகத்தால் குத்திக்கிழி

புன்னகை சிந்தும் பற்களால்

காயப்படுத்து

மௌனத்தை விட

மேலானது….

என்கிறார்.

நான் என் மனைவியிடம்

இந்த கவிதையை படித்துக் காட்டி

நான் மேலானவன் என்று சொல்லிக் கொண்டேன்

இன்னும் சொல்ல வேண்டிய கவிதைகள்

நிறைய இருக்கிறது எல்லாவற்றையும் நானே சொல்லிவிடக்கூடாதே என நினைக்கிறேன்

அதில்லாமல் எனது விமர்சனம் என்பது எப்போதுமே நீண்டதாகவே இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லவே முற்படுகிறேன்.

பெண்ணின் வலியைப் பற்றி நானும் சொல்லி இருக்கிறேன். எனது சித்திரத்தில் பெண்ணெழுதி நூல் முழுக்க பெண்ணின் வலி தான்.

உடலிலும் மனதிலுமாக எத்தனையோ வலி. எட்டு வயதில் வலி எட்டிப் பார்க்கும், காலப்போக்கில் வலி நெருங்கிப் பழகிய சினேகிதியாக மாறிவிடும். என்னதான் வலியை நான் எழுதினாலும் அதை அனுதினமும் அனுபவித்தவள் எழுதும் போது, வலிக்கும் கூட வலியெடுத்து விடுகிறது .

அவளின் முலைக்காம்புகளில்

ஈக்கி பாய்ந்ததாய் ரணம்

கணங்களுக்கு ஒரு முறை

பால் கட்டிப்போன மார்பகமாய்

விண்ணென்று தெறிக்கும் வலி

அவளின் நுனி நகத்தின் ஸ்பரிசம் படும் முன்

தேள் கொட்டியதாய்

துடி துடித்துப் போகிறாள்

தேகத்தில் ரசாயன கலவையின்

அதிர்வலையால்

அடிவயிறு பிசைகிறது

சொட்டு நீர்ப் பாசனமாய்

சிறுநீர் பை உருமாறுகிறுது

யோனியின் தசை நரம்புகள்

இழுத்துப் பிடிக்கும் வேதனையில்

வெளியேறும் உதிரம்

அவளைப் பெறும் பாடாய்ப் படுத்தும்…

என குருதி கசியும் ரணத்தை

ஆண் அறியாத வலியை

ஆணும் அறியும் வகையில் உணர்த்துகிறது

நெருப்புச் சொற்கள்

கவிஞர் தோழர் பாண்டிச்செல்வி அவர்கள் கவிதையிலிருந்து

அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்

சிறுகதைகள் எழுதத் துவங்கியிருக்கிறார்

சமீபத்தில் அவருடைய அருமையான

ஒரு சிறுகதை செம்மலரில் வெளிவந்து சிறப்பித்தது.

ஆகவே இனி கவிஞர் சிறுகதை எழுதுவதில்

கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்து கவிஞரின் சிறுகதைத் தொகுப்பை

எதிர்பார்க்கிறேன்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : நெருப்புச் சொற்கள்

தமிழில் : கா.பாண்டிச்செல்வி

வெளியீடு : சொற்கூடு பதிப்பகம்

விலை : ரூ. 100/-

 

எழுதியவர் 

பொன் விக்ரம்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *