1. “உங்கள் வெற்றுக் கூச்சலுக்கு மத்தியில்
என் உலகத்தை நானே சமைத்துக் கொள்கிறேன்…” பாவலன் கவிதை
*****************************************************************
அந்த உலகம்
அவ்வளவு அழகாக
இருந்தது.
எங்களுக்கானவற்றை
நாங்களே
உருவாக்கிக் கொள்கிறோம்.
எப்பொழுதும்….
ஒருநாளும்
அந்த வாழ்நாளை வெறுக்கவில்லை.
அச்சமும்
பயமும்
கிஞ்சித்தும் இல்லை.
எங்களுக்கு
வாழப் பிடித்து இருந்தது.
அங்கு எந்த
பாகுபாடும் வேறுபாடும்
யாரும் யாரிடமும்
காட்டவில்லை.
எல்லோரும் எல்லோரிடமும்
இயல்பாகப் பழகுகிறார்கள்.
அழகானவர்களாகவும் இருக்கிறார்கள்.
நிறவேற்றுமை
சாதிப் பாகுபாடு
பெண்ணடிமை
வன்புணர்வு
வன்கொடுமை
தீட்டு
குடிநீரில் மலம் கலப்பது
இரட்டை குவளை
மலச்சட்டியைச்
தூக்கிச் சுமப்பது
சாணிப்பால்
சவுக்கடி
எந்தக் கொடுமையும் இல்லை.
அங்கு
குரோதமான
வன்மம் நிறைந்த
மனிதர்கள்
இல்லவே இல்லை.
பெண்கள் தேவதைகளைப்
போன்று அழகாக
இருந்தார்கள்.
அவர்களின்
காதலுக்கு
யாரும் தடையாக
இருந்ததில்லை.
மனிதர்களே
உன்னதமானவர்களாயிருந்ததால்
கடவுள்களைப் பற்றிக்
கருதவேயில்லை
எல்லா உயிர்களையும்
தம்முயிர்ப் போன்று
நேசிக்கிறார்கள்.
குழந்தைகளைத்
தம் குழந்தைகளாகவே
பார்ப்பதால்
வன்புணர்வுக்கு வழியே இல்லை..
பாலின வேறுபாடு
பார்ப்பது இல்லை
பணத்தேவை
இல்லவே இல்லை
சொல்லப்போனால்
பாரத மாதாவுக்கு ஜே!
வெற்று கோஷம்
இல்லாமல் இருந்தது.
பாராளுமன்றம்
நாடாளுமன்றம்
சட்டமன்றம்
மேலவை
கீழவை
பற்றிய அச்சம்
எதுவும் இல்லை.
ஒடுக்கப்பட்டவர்கள்
என்ற சொல் புழக்கத்திலேயே
இல்லை.
நாங்கள்
நினைத்த இடங்களுக்கு
சென்று வந்தோம்.
விரும்பிய உணவை உட்கொண்டோம்.
ஒருவரை ஒருவர்
பார்க்கும் பொழுது
அன்பு பாராட்டி
ஆரத் தழுவிக்
கொண்டோம்.
நாங்கள் முழுச் சுதந்திரமாக இருப்பதை உணர்ந்தோம்.
வர்ணங்களால் வேறுபாடு இல்லை
வார்த்தைகளில் வன்மம் இல்லை.
அதனால்…
பிரம்மா
விஷ்ணு
சிவன்
போன்ற
கடவுளர்களையும்
புத்தன்
இயேசு
நபி
போன்ற போராளிகளையும் நாங்கள் அறிந்ததில்லை.
எங்களுக்குள்
சாதியே
இல்லாதபோது
சாதிப் பெருமை
பேச வேண்டிய
அவசியம் இல்லை.
தூங்கி எழுந்தவுடன்
எங்கள்
தலைகளைத்
தொட்டுப் பார்த்து
நாம்
உயிருடன் தான்
இருக்கிறோமென்று
நிம்மதிப்
பெருமூச்சு விட்டதில்லை.
நாங்கள்
விரும்பிய
கல்வியைக் கற்றோம்.
விரும்பிய உணவை உட்கொண்டோம்.
எங்கள்
கரங்களில் இருந்து
எந்தப் புத்தகங்களும்
களவாடப்படவில்லை.
எங்கள்
கரங்களில் தவழ்ந்து விளையாடும்
எழுதுகோல்
இசையைப்
போல எல்லா இடங்களிலும்
நீக்கமற நிறைந்திருந்தோம்.
எங்கள்
குழந்தைப் பருவம்
எப்படியோ?
அப்படியே
இருந்தது
முதுமையும்.
அங்கு எங்கள்
உழைப்பை மதித்தனர்.
அதற்கேற்ற
ஊதியம் கிடைத்தது.
எந்தச் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படவில்லை.
வர்க்க பேதமுமில்லை.
மானுட தத்துவத்தின்
அடையாளமான
மனிதர்களாக
மட்டுமே இருந்தோம்.
*****************************************************************
2. என் இளமை.
அவிழ்க்கப்படாத
ஆடையில
வடிந்து ஒழுகியது
உன் காம போதை.
உன் மோகப் பார்வை
முள்ளாய்க் குத்துகிறது
கிழட்டு நரியின்
நமட்டுச் சிரிப்பு.
பனி பொழியும் இரவில்
நனையாத அங்கங்களில்
கதகதப்போடு
சில்லிட்டுப் பேசுகிறேன்
உன்னிடம்.
நிம்மதிப் பெருமூச்சில்
ஆழ்ந்து தூங்கினாய்
நலிந்து செல்கிறது
என் இளமை.
******************************************************************************
📚 எழுதியவர் :
✍🏻 பாவலன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


அருமை ஐயா