“பிறழ்” நாவல் என்ற புத்தகத்தின் ஆசிரியர் நிஜந்தன் அவர்கள் இடதுசாரி அமைப்புகளோடு தன்னை இணைத்துக் கொண்டவர். நூல்கள் குறித்த அறிமுக கட்டுரைகளை சமூக ஊடகங்களில் எழுதி வருபவர். இவருடைய குறுங்கதைகள், சிறுகதைகள் வாசகசாலை, நடுகல் போன்ற இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. பிறழ் இவரின் முதல் நாவல்.
நாம் இதுவரை பாலியல் துன்புறுத்தல்களால் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவங்களை பத்திரிகைகள மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் பல புத்தகங்களில் கதைகளின் வாயிலாகவும் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஆண்களின் பாலியல் துன்புறுத்தல்கள் சமூகத்தின் பார்வைக்கு இன்னும் அதிகம் வெளிப்படாமலே இருக்கிறது. ஆண்களின் பாலியல் துன்புறுத்தல்களை எந்த கதைகளிலும் இதுவரை நான் படித்ததில்லை. அவர்களும் இச்சமூகத்தில் பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை இப்புத்தகம் வெளிப்படுத்துகிறது.
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படுவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் மன உணர்வுகளும் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் மனச்சிதைவுகளும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும்..தனக்கு நடந்த துன்புறுத்தல்களையும், மனவேதனையையும் யாரிடமும் வெளிப்படுத்த முடியாமல் இருபாலரும் தவிக்கின்றனர்..இதைப் புரிந்து அவர்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய சமூகமும் ,குடும்ப அமைப்பும் இங்கு இல்லை எனலாம்..இத்தகைய சமூக சூழலாலே அவர்கள் மேலும் மேலும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே நிஜம் .
குழந்தைகள் பெற்றோர்களிடம் மனம் விட்டு பேசக்கூடிய சூழ்நிலை இன்று வரை பல இடங்களில் இல்லாத நிலையே நீடிக்கிறது. இதனால் வேறு யாரிடமாவது அவர்கள் பகிர்ந்து கொள்ள முற்படும் போது அவர்களாலும் மேலும் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்கள் எத்தகைய மனச்சிதைவுக்கு ஆளாகிறார்கள் என்பதை இப்புத்தகம் கூறுகிறது.
சிறுவயதில் குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்தினால் சிறு சிறு தவறுகள் செய்யும்போது அதை அவர்களிடம் அன்பாகக் கூறி வழி நடத்தாமல் அந்தத் தவறைச் சொல்லி குத்திக் காட்டுவதும் வயதுக்கு மீறிய தண்டனைகளைத் தருவதும் குழந்தைகளை எத்தகைய பாதிப்புக்குள்ளாக்குகிறது என்பதை புத்தகம் உணர்த்துகிறது.

குழந்தைகளின் மீது பெற்றோர்களின் நம்பிக்கை இன்மையால் குழந்தைகள் சோர்ந்து போகிறார்கள..பட்ட காலிலே படும் என்பது போல் அடுத்தடுத்து அவர்களுக்கு நேரும் துன்பங்களை பெற்றோர்களின் ஒத்துழைப்பின்மையால் தாங்களே எதிர்கொள்ளும் போது பல குழப்பங்களுக்கு உள்ளாகி. மிகுந்த மன அழுத்தத்திற்காளாகிறார்கள்.
இக்கதையில் வரும் சிறுவன் ஒரு ஆணால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிற போது ஏற்பட்ட அவனுடைய அருவருப்பையும் ,அசூயையும் யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து தான் மிகவும் மதிக்கும், விரும்பும் டியூஷன் அக்காவாகிய பவானி அக்காவிடம் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை வெளிப்படுத்துகிறான். அவள் ஆறுதல் அளிப்பது போல் அளித்து அவனை நிர்வாணமாகப் படம் பிடித்து அதை வைத்து மிரட்டி தன்னுடைய பாலியல் உணர்வுகளுக்கு அவனைப் பயன்படுத்திக் கொள்கிறாள். இதனால் அச்சிறுவன் வெளியே கூற முடியாமல் பல வகையான மனச் சிதைவுக்குள்ளாகிறான்.
அவனுடைய மனநிலை மாற்றத்தையும், யாரிடமும் சிரித்து பேசாததையும், இரவில் பயந்து அடிக்கடி அழுவதையும் கண்ட பெற்றோர்கள் பல இடங்களில் பலவிதமான மருத்துவங்களைப் பார்க்கிறார்கள்.இதிலிருந்து அவன் மீண்டு வர முடிந்ததா என்பதை இப்புத்தகத்தை வாசித்து அறிந்து கொள்ளலாம்.
மனச் சிதைவுக்குள்ளாகும் குழந்தைகள் இரு வேறு மன நிலைகளில் இருப்பதை ஆசிரியர் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.நாம் நிஜத்தில் இருக்கிறோமா? இல்லையா? என்பதே அவர்களுக்கு சந்தேகமளிக்கிறது.இதனால் அவர்களால் நிஜ வாழ்விலும் வாழ முடியாமல் கற்பனையிலும் வாழ முடியாமல் அகச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்.
சிறுவயதில் ஏற்பட்ட இந்த நிலை இவர்கள் பெரியவர்களான பின்னும் நீடிக்கிறது.இவர்களை பாதித்த சம்பவங்கள் திரும்பத் திரும்ப மனதில் பிரதிபலித்து மேலும் மனச் சிதைவுக்கு ஆளாகிறார்கள். இத்தகைய தடுமாற்றங்களை எப்படி கையாள்வது என்று புரியாமல் தவிக்கிறார்கள்.இதனால் அவர்களின் திருமண உறவும் பாதிப்புக்குள்ளாகி அவர்களின் வாழ்க்கையே பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.
இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலையையும், சமூகத்தில் இதை எதிர்கொள்ளும் அவர்களின் மனநிலையையும் நாவலில் எத்தகைய முடிவும கூறாமல் நம்முடைய புரிதலுக்கே விட்டு விடுகிறார் ஆசிரியர்.
ஆசிரியரின் பிறழ் நாவல் இந்த காலகட்டத்திற்கு மிகவும் தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருக்கிறது. நம்மைச் சுற்றி இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பின் அவர்களைக் கையாளவும், புரிந்து கொள்ளவும் இப்புத்தகம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.. பாதிக்கப்பட்ட ஆண்களின் மன உலகை இப்புத்தகத்தின் மூலம் வெளிக்காட்டிய ஆசிரியருக்கு அன்பும் நன்றியும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “பிறழ்” நாவல் |
| ஆசிரியர்: | நிஜந்தன் |
| வெளியீடு: | எதிர் வெளியீடு |
| விலை: | ₹.150 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 ச.சுபாஷிணி, திருச்சி. |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

