நூல் அறிமுகம்: ரமணாவின் ‘நீல தேவதை’ – வே.சங்கர்

நூல் அறிமுகம்: ரமணாவின் ‘நீல தேவதை’ – வே.சங்கர்




பத்து வரியில் ஒரு சிறுகதையை எழுதமுடியுமா? சிறுவர்களுக்கான சிறுகதையை? அதுவும் நூல் வடிவில்? முடியும் என்று சாத்தியப்படுத்தியிருப்பது வேறு யாருமல்ல, மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ரமணா என்ற சிறுவன். இந்நூலின் ஆசிரியர்.

எழுதப்பட்ட பத்து வரிகளுக்குள்ளும் ஒரு ரயில் வண்டி, ஒரு ஈ, ஒரு தேவதை, வானவில் மற்றும் வானம் கதாபாத்திரங்களாக வந்து போகிறார்கள். கதைக்காக எழுதப்பட்ட வரிகளைவிட அதற்குத் தோதான ஓவியங்களே முழுக்கதையையும் சொல்லிவிடுகின்றன. அத்தனை நேர்த்தி, அத்தனை மெனக்கெடல் இந்த நூலில் கண்ட சிறப்பம்சம். அதுதானே இன்றைய தேவையாக இருக்கிறது?

ஆறுவயதில் ’சிம்பாவின் சுற்றுலா’ என்ற சிறார் நாவலை எழுதியிருக்கும் ரமணா, 2020ல் ’யாருக்குத் தைக்கத் தெரியும்?’ என்ற கதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். ’நீல தேவதை’ மூன்றாவது நூல் போலும். கற்பனை செய்து பார்க்கவே சற்று பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

குழந்தைகளின் கற்பனைக்குச் சிறகு முளைக்கும்போது அவை பறந்து செல்லும் தூரத்திற்கும் நேரத்திற்கும் எல்லையே இருக்க முடியாது என்பதற்கு உதாரணம் இந்த நீல தேவதை என்ற நூல்.

அண்டார்டிக்காவில் வாழும் ஒரு பென்குயின் குடும்பத்தைக் கொண்டு கதை சொல்ல முடிந்த ரமணாவால், காய்கறிகளையும் பழங்களையும் கதாபாத்திரங்களாக உருவகித்து வீணான போர் தேவையில்லை என்று சொல்லும் எதார்த்தம், ஒரு குழந்தையால்தான் சாத்தியம்.

குழந்தைகள் கதையில், காட்டில் வாழும் புலிக்குட்டிகள் கால் பந்து விளையாட முடியும் என்றால் அவை ராக்கெட் ஏறி வேற்று கிரகத்திற்கும் செல்லமுடியும்தானே! அதையும் ஒரு கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லவேண்டுமானால், தன்னைத் துன்புறுத்தும் மரவெட்டியின் தலையில் ஒரு தேங்காயைப் போட்டு ஒரு தென்னைமரமே மனிதனுக்குப் புத்தி சொல்லமுடியும் என்பது ஒரு குழந்தைமையின் வெகுளித்தனத்தைத் தவிர வேறென்னவாக இருக்க முடியும்.

இந்நூலை எழுதிய குழந்தையின் பின்புலத்தை ஆராய்ந்து கொண்டிருப்பதைவிடச் சிறுவன் ரமணாவின் கதை சொல்லலில் மிளிரும் கற்பனைத் திறத்தைப் பாராட்டக் கிடைக்கப்பெற்ற மனம், ஒரு வரம். வளர வளர கற்பனையும் வளர்ந்து கொண்டே வரட்டும் என்று வாழ்த்துவோமாக.

-வே.சங்கர்

நூல் : நீல தேவதை
ஆசிரியர் :
ரமணா (வயது-8)
விலை : ரூ.₹30
பக்கங்கள் : 32
வகை : சிறார் இலக்கியச் சிறுகதை
வெளியீடு : வானம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *