நூலின் பெயர் : நிலவென்னும் நல்லாள்
நூலாசிரியர் : கவிஞர் கூடல் தாரிக்.
வெளியீடு : தட்டான் பதிப்பகம்
பக்கங்கள் : 85
விலை : ரூ.100
தொடர்ச்சி மலையின் சாரலும், இளவேனில் காற்றும் கலந்த அன்பு ததும்பும் ஈரக் கவிஞர் கூடல் தாரிக் 2000 வருட தமிழ் கவிதையின் பரப்பில் ஐந்திணை மரபின் தொடர்ச்சியாக அதனை மறவாமல் மரபை மீறாமல் கவிதைகள் படைக்கும் அற்புதமான கவிஞர்.
கூடல் தாரிக்கின் கவிதைகளில் பருவங்கள், திணைகள் பறவைகள்,மலர்கள், என இயற்கை சார்ந்த பொருள்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தென்றல் காற்றோடு நிலவொளியும் சேர்ந்து மனதை மயக்கும் ஒரு அழகிய கவிதை தொகுப்பு இது. கவிதைத் தொகுப்பில் கடல், மழை, நிலவு,காற்று, பறவை,பூக்கள் என இயற்கையைப் பாடுபொருளாக்கி மிகவும் அழகாக இந்நூலைப் படைத்துள்ளார்.
நிலவைத் தாயாக, இயற்கையின் பாடுபொருளாக அவர் படைத்திருக்கும் பாங்கு விசித்திரமானது. இவரின் முந்தைய கவிதைத் தொகுப்புகளைப் போலவே இயற்கையை மெனக்கட்டு நுணுகி ஆராய்ந்து கவிதையாகப் படைத்துள்ளார்.ஒரு கவிஞர் தான் காணும் காட்சிகளை எல்லாம் எவ்வளவு நுட்பமாக காண்பார் என்பதை இந்த கவிதை மூலம் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது. இயற்கையின் மீது இவர் கொண்ட ஆர்வம் மனித நேயத்தின் மீதும் இயற்கைச் சூழல் மீதும் பறவை இனங்கள் மீதும் இவர் காட்டும் அன்பும் நம்மை மகிழ்ச்சியில் திளைவிக்கிறது.
நூலில் இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்புகளில் எனது மனதைக் கவர்ந்த கவிதைகள்:
1. கடல் மேல் பறந்து செல்லும் சின்னதொரு பறவைக்கு எப்படி எனது சாயல் வந்து இருக்கும்.
2. கடல் என்பது இன்னொரு வானமின்றி வேறென்ன!
3. நீலப் பறவை ஒன்று பறப்பது பார்க்க வேண்டும் போல் இருக்கிறது
கடலுக்கு இறக்கை முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
4. அப்படி என்னதான் சொல்ல நினைக்கிறது அலை ததும்ப ததும்ப
பேசத்துடிக்கும் கடல்.
இக்கவிதை வரிகளில் கடலை கவிஞர் காணும் விதம் கடல் அலை சொல்லத் துடிக்கும் தவிப்பை காதலைச் சொல்ல துடிக்கும் காதலன் தவிப்போடும் அவர் ஒப்பிட்டுக் கூறும் விதம் நம்முடைய மனதை வருடும் ஒரு கவிதையாகும்.
5.நீந்துவது போலவே பறந்து செல்லும் இந்த பறவைக்கு ஆகாயம் என்பது நதி!
6.விழிகள் படபடக்க இந்தக்கவிதை எனக்கானதா என அவள் கேட்கும் பொழுதெல்லாம் இந்த கூடு என்னுடையதா என மரத்திடம் பறவை கேட்பது போல இருக்கிறது! என காதலியின் கெஞ்சலையும் மரத்தில் வாழும் பறவையோடு ஒப்பிடும் இயற்கைக் கவிஞர் இவரையன்றி வேறு எவராக இருக்கக்கூடும்?
7.கணீர் குரலில் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் ஒலிக்கும் வெண்ணிலா தேநீர் கடையில் முதல் வாடிக்கையாளராக உள் நுழைகிறார் விபூதி மணம் மணக்க மலையாளத்துக்காரர்ஒருவர். பொழியும் மழைக்கிடையில் சிறு தூக்குவாளியில் தேநீர் வாங்கி திரும்புகிறான் சிலுவை அணிந்த சிறுவன். இந்தக் கவிதையில் சமய நல்லிணக்கத்தை உணர்த்தியமை மிகச்சிறப்பு!
8.தேய்ந்த பிறகு வளரும் நிலாவினை விடவும் இந்த வாழ்விற்கு நம்பிக்கையூட்டுவது வேறு எதுவும் இல்லை என நிலாவைக் கவிஞர் பார்க்கும் பார்வை தன்னம்பிக்கை ஒளியாய் பரவுகிறது!!
9.அறை முழுவதையும் வானமாக்கி விடுகிறான் வெள்ளை காகிதத்தில் நிலா வரைந்து முடிப்பவன்! என்று குழந்தைகளின் ஓவியத்தை ஆகாயத்தோடு உயர்த்தி காட்டும் கவிஞரின் பார்வைதான் என்னே!!
10.ஒற்றை முலையில் நிலா கருணை சுரப்பது இவர்கள் எல்லோருக்கும் ஆகத்தான்!!
என்ற கவிதை நிலவைத் தாயாகப் பார்த்து அவளின் கருணையை ஒளியாக உருவகப்படுத்தும் கவிதையின் சிகரமான இடம் இது!
11.காற்றில்லாமல் இருந்தால் என்ன நிலாவில் குடியேறும் வா!
என்று கவிதையை சந்திராயன் விண்கலமாக்கி நம்மை நிலவுக்கே அழைத்துச் செல்கிறார்!
இந்தக் கவிதை தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு சில கவிதைத் துளிகளையே உங்களுடன் பகிர்ந்துள்ளேன். கவிதை மழையில் சாரலில் நீங்களும் நனைய விரும்பினால் நிலவென்னும் நல்லாள் என்ற கவிஞரின் இந்த கவிதை தொகுப்பு நூலை வாங்கி வாசித்து நீங்களும் பயன்பெற வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!!


கடல் என்பது இன்னொரு வானமன்றி வேறென்ன!!!! அழகான சிந்தனையோட்டம் கவிஞர் கூடல் தாரிக் படைத்த கவிதைநூலின் இம்மதிப்புரை அழகு!மிக அழகு!!!