இத்தாலியிலிருந்து தமிழுக்கு நேரடியாக ஜி .கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட “நிரபராதிகளின் காலம்” ஸீக்ஃரிட் லென்ஸ் என்ற ஜெர்மன் எழுத்தாளரின் நாடகப் பிரதியை இன்று படித்தேன்.
சிக்கலான சூழ்நிலைகளில் நிகழும் மனித மனதின் சித்திரமே இந்நாடகம்.
சாமானியர்கள் சர்வாதிகார ஆட்சியை எதிர் கொள்வதில் ஏற்படும் தவிர்க்க முடியாத இன்னல்களாக இதன் உரையாடல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன
உண்மைகள் ஆழ ஆழத்தில் புதைந்து கிடப்பதற்கான சாட்சிகளும் அவற்றைத் தோண்டி எடுப்பதற்கான முயற்சிகளுமாகவே ‘லென்ஸ்’ இந்த நாடகத்தை எழுதியுள்ளார் இவற்றில் இடம்பெற்றிருக்கும் பாத்திரப் படைப்புகள் அனைவரும் ஆண்களே…
சோற்றுப் பதமாக இவற்றில் இடம்பெற்றிருக்கும் உரையாடல்களில் ஒருசில…
“இவன் மாதா கோயில்களில் பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருக்கின்ற சீட்டுப்பெட்டியைப் போன்றவன்,மக்கள் தங்களுடைய துயரங்களைத் தாளில் எழுதி அதனுள் போடலாம் ஆனால் அப்பெட்டியைத் திறந்து கவனிப்பதற்குத்தான் யாரும் இருக்க மாட்டார்கள்”
“ஆட்சிப் புரிவது எவ்வளவு சிரமமானது எனக் காட்டிக் கொள்வது அதிகாரவர்க்கத்தின் வழக்கமான வேலை”
“உலகத்தை கைவிட்டுவிட முடியாது என நாம் நினைத்துக் கொண்டிருக்கலாம் ஆனால் உலகம் கண்ணிமைக்கும் நேரத்தில் நம்மை கைவிட்டமைக்குப் பதில் வேறு ஒருவர் செயல்பட கிடைத்து விட முடியும் என்பது எப்படி உருவாக்கப்படுகிறதோ அதற்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டே ஆக வேண்டும்”
“பழைய நினைவுகள் மனதுக்கு உகந்தவையாக இல்லாமல் போகும் போது ஞாபக சக்தி இல்லை” என்று குறைபடுவது எல்லோருக்குமே இயல்புதான்”
“மௌனத்தில் விலைமதிப்பற்ற புத்திசாலித்தனம் மட்டும் வெளிப்படும் என்பதில்லை முட்டாள்தனத்தையும் மறைக்க உதவுகிறது”
இவை சில எடுத்துக்காட்டுகள் 1961இல் லென்ஸால் எழுதப்பட்ட இந்நாடகம் இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்திப்போகிறது. வாய்ப்பிருப்போர் வாசித்துப் பாருங்கள்.