nool arimugam: tamilnattu varalaru : paadaikalum paarvaikalum - s.p.agathiyalingam நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் - சு.பொ.அகத்தியலிங்கம்
nool arimugam: tamilnattu varalaru : paadaikalum paarvaikalum - s.p.agathiyalingam நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் - சு.பொ.அகத்தியலிங்கம்

நூல் அறிமுகம்: தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும் – சு.பொ.அகத்தியலிங்கம்

வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும்.

தமிழ்நாட்டு வரலாறு என்றதும் சேரன் ,சோழன் ,பாண்டியன் ,பல்லவன் என நம் பொது புத்தியில் ஏற்றப்பட்டுள்ள செய்தியோடு இந்நூலைப் புரட்டுவோர்கள் ஏமாந்து போவார்கள் . இந்நூலில் ஏழு பகுதிகளில் அடங்கியுள்ள 25 கட்டுரைகளும் வரலாறு என்பது என்ன ? வரலாற்றைப் புரிந்து கொள்வதென்பது யாது ? வரலாற்றின் உயிர்த் தடங்கள் எவை என்பதை நமக்குப் பாடம் சொல்லும் .

கா.அ.மணிக்குமார் வெவ்வேறு இதழ்களில் பல ஆண்டுகளாக தனித்தனியே எழுதிய கட்டுரைகளை /நேர் காணலை /நூல் மதிப்புரைகளை ஒரே நூலில் கோர்த்துப் படிக்கும் போது ஒரு புதிய பார்வைக் கோணம் நமக்குப் புலப்படுகிறது.

புராணப் புனைவுகளை ,புருடாக்களை வரலாறு என சொல்லிக் கொடுக்க பாஜக அரசு கடும் முயற்சி செய்யும் காலத்தில் இந்நூல் புதிய வழித்தடத்தில் நம்மை இட்டுச் சொல்கிறது .

” விடுதலைக்கு முன்பும் பின்புமாக சமூக வன்முறைகளை சாதிக் கலவரங்களாக பலரும் திரித்து கூறி வந்த நிலைக்கு மாற்றாக அவற்றை சமுக நீதிக்காகவும் , சமத்துவத்திற்காகவும் , சுயமரியாதைக்காகவும் என நிறுவும் மணிக்குமார் , இப்போராட்டங்கள் பொருளாதார மற்றும் பண்பாட்டுக் கட்டமைப்பில் உண்டாக்கியுள்ள மாற்றங்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார்.” என முன்னுரையில் ஆதவன் தீட்சண்யா கூறுவது மிகை அல்ல.

இந்நூல் ஏழு பகுதிகளை உள்ளடக்கியது . முதல் பகுதி இந்திய வரலாற்று சான்றுகள் ,ஆரியர் திராவிடர் சர்ச்சை .பிராமண எதிர்ப்பு , புத்தமதக் கோட்பாடுகள் என ஓர் இந்திய வரலாற்று அறிமுகமாகவே அமைந்துவிட்டது.

இரண்டாம் பகுதி , ஆங்கில வருகையையும் பொருளாதார மாற்றங்களையும் சொல்லிச் செல்கிறது . தாதாபாய் நெளரோஜி அன்றே தொலை நோக்கோடு சொன்ன பொருளாதாரச் செய்திகள் முக்கியமானவை. “இந்தியாவில் பொருளாதார தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் :இந்திய தேசியத் தலைமையின் பொருளாதாரக் கொள்கைகள் [ 1880 – 1905 ]”எனும் பிபன் சந்திரா எழுதிய நூலின் தமிழ் மொழியாக்க நூலுக்கு அறிமுகமாக மணிக்குமார் எழுதிய கட்டுரையே “காலணிய இந்தியப் பொருளாதாரம் ‘ எனும் கட்டுரை [பிபின் சந்திரா நூல் குறித்த அறிமுகத்தை 2013 செப்டம்பரில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது .] .மணிக்குமார் குறிப்பாக பயணிப்பது ’பொருளாதார வரலாறு’ எனும் நுட்பமான பிரிவு ஆகும். அது குறித்த அவரின் நேர்காணல் ஏழாவது பகுதியில் இடம் பெற்றுள்ளது .

மூன்றாம் பகுதி , விடுதலைப் போரில் தமிழ் நாட்டின் பங்கான வரலாற்றின் சில அத்தியாயங்களைப் பேசுகிறது .வேலூர்ப் புரட்சி , திருநெல்வேலி உருவாக்கம் , விடுதலைப் போரில் தமிழக வணிகர்கள் பங்கு எனும் கட்டுரைகள் அறிய வேண்டிய செய்தி .

நான்காம் பகுதி சமூக எதிர்ப்பு இயக்கங்கள் குறித்த ஓர் அழுத்தமான பார்வையை முன் வைக்கிறது . நூலாசிரியர் சொல்கிறார் ;

“ பெரும்பாலும் சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் பொழுதே சமூக வன்முறைகள் வெடிக்கின்றன .அவை பின்னர் சமூக இயக்கங்களாக உருவாகின்றன . சமுதாயத்தில் அதிகாரமற்ற பிரிவினர் தாங்கள் விரும்பிய மாற்றத்தைக் கொண்டுவர சமூக வன்முறைகள் அவசியம் என சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர் .ஆனால் வன்முறை தழுவிய அத்தகைய ஜனநாயக இயக்கங்கள் பெரும்பான்மையும் சாதிய மோதல்களாகவும் சாதியக் கலவரங்களாகவுமே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளன .சமூகநீதிப் போராட்டத்தில் மக்களுடைய பங்கை மறுத்து அல்லது மறைத்து சில தலைவர்களை மட்டுமே போராளிகளாக உயர்த்திக் காட்டும் தமிழகப் பாரம்பரியமும் அதற்கு ஓர் முக்கிய காரணமாகும்.”

இந்த கோணத்தில் நாடார்கள் போராட்டம் , சிவகாசிக் கொள்ளை ,கழுகுமலைக் கலவரம் ,முதுகளத்தூர் கலவரம் , தென் மாவட்ட சாதிய மோதல்கள் , இடங்கை வலங்கைப் பிரச்சனை , கொடியங்குளம் ,கீழ்வெண்மணி ,நாலுமூலைக் கிணறு ,பிளாக் டவுண் கலவரம் ,பெத்து நாயக்கன் பேட்டை மோதல் ,தாமிரபரணி படுகொலை உட்பட நிறைய சமூக மோதல்களை சுட்டி அவற்றை வரலாற்றின் ஓர் முக்கிய கூறாக உணர வைத்துள்ளதில் இந்நூல் வெற்றி பெற்றுள்ளது .

நூல் அறிமுகங்களும் ,நேர் காணலும் ஓர் பரந்த பார்வையைக் கொடுக்கின்றன . ஐந்து மற்றும் ஏழு பகுதிகள் இவ்வகையினால் ஆனது . இந்திய வரலாற்றில் தென் இந்தியாவிற்கு இடமில்லை என்கிற கட்டுரை இன்னும் விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம் .இடதுசாரிகள் எழுதும் வரலாற்று நூலிலும் இப்போக்கு நிரம்பி உள்ளது ; அதிலும் தமிழ்நாடு புறக்கணிக்கப் படுகிறது என்பது என் அழுத்தமான கருத்து. அம்பேத்கர் குறித்து மணிக்குமார் கூறிய ஒரு கருத்தில் ஆதவன் தீட்சண்யா மாறுபடுகிறார் .[ எனக்கும் ஆதவன் தீட்சண்யா கூறும் அதே கருத்தே.]

ஆறாவது பகுதியாக இடம் பெற்றுள்ள ,வரலாற்று பேரறிஞர் எரிக் காப்ஸம் குறித்த கட்டுரை வரலாறு குறித்த நம் பொதுபுத்தியை திருத்தி நேர் செய்து சரியான திசையில் பயணிக்க உந்துவதாக அமைந்துள்ளது .

மொத்தத்தில் வரலாறு குறித்த பழுதான பார்வைகளை இனங்காணவும் ; புதிய திசை வழியில் பயணிக்கவும் உதவும் நூல் . வாசிப்பீர் .வாசல்கள் திறக்கும்.

தமிழ்நாட்டு வரலாறு : பாதைகளும் பார்வைகளும்,
ஆசிரியர் : கா.அ.மணீக்குமார் ,வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
தொடர்புக்கு :24332924 / 8778073949 bharathiputhakalayam@gmail.com
பக்கங்கள் : 304 , விலை : ரூ .280 /

சுபொஅ.
2/08/2023.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *