Subscribe

Thamizhbooks ad

நூல் அறிமுகம்: கயிறு – இ.பா.சிந்தன்

ஓங்கில் கூட்டத்தின் மற்றொரு முக்கியமான நூல் ‘கயிறு’. முதல் நூலில் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுமியின் மனதில் சாதி குறித்து என்ன புரிதல் இருந்தது என்பதை எழுதியதைப் போல், இன்றைய காலகட்டத்தில் சாதி என்னவாக இருக்கிறது என்பதை மிகமிக நேர்த்தியாக சொல்லப்பட்ட ஒரு கதை நூல்தான் கயிறு. இதுதான் நம்மூருக்கு ஏற்ற அச்சு அசலான 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கதை. இங்கே சாதி எப்படி உருவானது, அது என்னவாக இருந்தது, இப்போது என்னவாக இருக்கிறது, அதை ஒழிக்க என்னவெல்லாம் செய்யமுடியும் என்கிற விவாதத்தை குழந்தைகளிடம் உருவாக்கியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதை மிகச்சரியாகச் செய்திருக்கிறது கயிறு.

18 வயதில் இந்த நாட்டையே ஆளப்போகிறவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்படுகிற சூழலில், 12 முதல் 18 வயது வரையிலான இளையோருக்கு இந்த தேசம் குறித்தும், அது கடந்து வந்த பிரச்சனைகள் குறித்தும், இன்றைக்கு அந்த தேசமும் அதில் வாழ்கிற மக்களும் எதிர்கொள்கிற பிரச்சனைகள் குறித்தும் ஒரு விவாதத்தை ஏற்படுத்த வேண்டியது மிகமிக அவசியம். சமூகம் குறித்தும், சமூகப் பிரச்சனைகள் குறித்தும் எதையுமே பேசாமல், 18வது வயது பிறந்தநாள் வருகிற ஒருநாளில் இந்த நாட்டை ஆளவும், ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கவுமான மாபெரும் பொறுப்பினை அவர்களிடம் கொடுத்தால், அவர்கள் என்னதான் செய்வார்கள் பாவம்? குழம்பித்தான் போவார்கள். தடுமாறத்தான் செய்வார்கள்.

வீடுகளும், மக்களும், சமூகமும் பிற்போக்கான எண்ணங்களைக் கொண்டிருக்கிற சூழலில் பொதுவான ஒரு பார்வையினை உருவாக்க வேண்டிய கடமை பள்ளிகளுக்குத்தான் மிக அதிகமாக உண்டு. ஆனால், பள்ளிப் பாடநூல்கள் எதுவுமே நம் சமூகப் பிரச்சனைகளைப் பேசுவதற்கான களத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில்லை. “தீண்டாமை ஒரு பாவச்செயல்” என்று முதல் பக்கத்தில் எழுதிவிட்டு, உள்ளே இருக்கிற முன்னூறு பக்கங்களில் சாதி குறித்தோ, சாதியின் வரலாறு குறித்தோ, இடஒதுக்கீடு குறித்தோ கூட பேசாத நூல்களைத்தான் நாம் வைத்திருக்கிறோம். எந்த சமூகப் பிரச்சனைகளையும் பேசுவதற்கான சூழலை உருவாக்கும் வகையிலான பாடத்திட்டங்களும் வடிவமைக்கப்படவில்லை.

ஐரோப்பாவின் பலநாடுகளில் பள்ளிப்பாடத்திட்டமே சமூகப் பிரச்சனைகளைப் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தந்த நாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை கதைவடிவிலோ அல்லது வேறு ஏதாவது வடிவிலோ பாடத்திட்டத்தில் வைத்திருப்பார்கள். அவற்றை சொல்லிக்கொடுக்கும் சாக்கில், வகுப்பறையில் ஒரு விவாதத்தை உருவாக்கிவிடுவார்கள். எங்காவது ஒரு குண்டுவெடிப்பு நடந்தால் கூட, உடனே மறுநாளே அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைமுகமாகவாவது தொட்டுச்செல்லும்படியான பாடங்களுக்கு இடையில் சிலவரிகளாவது நுழைத்துவிடுவார்கள். அதன்வழியாக ஒரு விவாதத்தைத் துவக்கி, குண்டுவெடிப்பு குறித்தான அச்சத்தைப் போக்கவும், எந்தவொரு தனி இனக்குழுவின் மீதும் வன்மம் கொள்ளக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் அமைத்துவிடுவார்கள்.

ஆனால் இந்திய பள்ளிக்கூடங்களில், சமூகப்பிரச்சனைகள் குறித்து பேசினாலே, அது அரசியல் பேசுவதாகக் கருதி தடைசெய்யப்படும் சூழல்தான் நமக்கிருக்கிறது.
வீட்டிலும் பேசாமல், பள்ளிக்கூடங்களும் பேசாமல் போனால், இளவயதை எட்டிய குழந்தைகளிடம் யார் தான் உரையாடுவது?
இரண்டாயிரம் ஆண்டுகளாக இங்கே அசையாமல் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் சாதி குறித்து யார்தான் பேசுவது?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கிருக்கும் பெண்-ஆண் பேதங்களின் தவறுகளை யார் தான் சுட்டிக்காட்டுவது?
அதிகமான மக்களைக் கொண்டிருக்கும் ஒரு இனக்குழுவினால் குறைவாக வாழும் மற்றொரு இனக்குழு கொடுமைப்படுத்தப்படுவது குறித்தான விவாதத்தை யார் தான் துவங்குவது?

இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதையும் அனைத்து உயிரினங்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பார்வையை யார் தான் உருவாக்குவது?
இன்னும் நம்மிடையே சுற்றிக்கொண்டிருக்கும் பிற்போக்குத்தனங்களையும், களையப்படவேண்டிய இன்னபிற பழக்கவழக்கங்களையும் பிரச்சனைகளையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் தடுக்கிற பணியை யார் தான் செய்வது?
அந்த முக்கியமான பொறுப்பு இளையோருக்காக எழுதும் எழுத்தாளர்களுக்கும் இருக்கிறது என்பதை விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து தன்னுடைய கதைகளின் வழியாக வலியுறுத்தி வருகிறார்.

அவர் இதுவரை எழுதிய கதைகளில் இருந்து ஒரே பாய்ச்சலாக பல அடிகள் வேகமாக முன்னோக்கித் தாவி, இந்த “கயிறு” என்கிற கதைநூலை எழுதியிருக்கிறார். “ராமு, சோமு என்று இருவர் இருந்தார்களாம். அதில் ராமு நல்லவனாம். சோமு கெட்டவனாம்” என்று இரு தனிமனிதர்களின் பிரச்சனையாக இக்கதையை அனுகாமல், ஒரு பிரச்சனைக்கான தன்மையையும் அதன் வேர்கள் எங்கு இருக்கிறது என்பதை வாசிப்பவர்களையே தேடவைக்கிற விதத்தில் இக்கதையை எழுதியிருக்கிறார். எந்தப் பிரச்சார நெடியும் வரியும் கலக்காமல், மாறுபட்ட ஒரு கதைசொல்லலின் மூலம் இக்கதையைப் படிப்போருடனேயே ஒரு நெருக்கமான உரையாடலை நிகழ்த்தியிருக்கிறார். இக்கதையில் அம்மாவுக்கும் மகனுக்கும் உரையாடல் நடக்கிறது. பெற்றோராக இக்கதையை வாசித்துப்பார்த்தால், அந்த அம்மாவின் இடத்தில் நாம் இருப்பதாக எண்ணவைத்திருப்பதும், இளையோராக வாசித்துப்பார்த்தால், அந்த மகனின் இடத்தில் நம்மை வைத்துப் பார்க்கமுடிவதும் இக்கதை எழுதப்பட்ட விதத்தினால்தான் சாத்தியமாகியிருக்கிறது.

“இதெல்லாம் தெரிஞ்சிக்கிற வயசு உனக்கு இல்லை”
“இதெல்லாம் எதுக்கு உனக்கு?”
“போய் உன் வேலையை மட்டும் பாரு”
“இதுக்குதான் பள்ளிக்கூடமே அனுப்பக்கூடாதுங்குறது. எங்கயாவது மெக்கானிக் ஷாப்ல வேலைக்கு விட்றேன் நாளைக்கே”
என்று இக்கதையில் வரும் சிறுவனிடம் அவனுடைய அம்மா ஒருபோதும் சொல்லிவிடவில்லை என்பதுதான் கதையின் ஆகச்சிறந்த புள்ளி.

இவையெல்லாவற்றையும் விட, இக்கதையை அச்சிறுவனின் அம்மாவைக் கொண்டு நகர்த்தியதற்கே கதையாசிரியருக்கு மனப்பூர்வமான பாராட்டுகள். ஒரு சமூகப் பிரச்சனையை ஒரு குழந்தையிடம் அக்குழந்தையின் போக்கிலேயே புரியவைக்கிற ஒரு கதாப்பாத்திரத்தை அப்பாவாக வைக்காமல், அம்மாவாக வடிவமைத்திருப்பது பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது எனக்கு. சமூக அறிவும், பிரச்சனை குறித்த புரிதலும், பிரச்சனைக்கான தீர்வும் ஆண்களிடம் மட்டும்தான் இருக்கும் என்பது போலவே கருதிக்கொண்டு, தெரிந்தோ தெரியாமலோ அந்த கதாப்பாத்திரத்தை அப்பாவாக உருவாக்கிவிடும் வாய்ப்புதான் அதிகமாக இருக்கிறது. ஆனால், மிகக்கவனமாக அம்மாவாக வடிவமைத்தது சிறப்பு.

இந்நூலின் கதை எதுகுறித்து எழுதப்பட்டிருக்கிறது என்பதை அணுவளவும் கசியவிடாமலேயே இந்த அறிமுகத்தை எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். உங்கள் வீட்டிலோ அல்லது உங்களுக்குத் தெரிந்தோ 12 வயதுக்கு மேல் குழந்தைகள் இருந்தால் நிச்சயமாக அவர்களைப் படிக்கச் சொல்லுங்கள். படித்துமுடித்ததும், அது குறித்து அவர்கள் ஏதேனும் பகிரவிரும்பினாலோ, பேச விரும்பினாலோ, உடனடியாக உரையாடலைத் துவக்குங்கள். அதுதான் இக்கதைக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கும் நம்மால் செய்யமுடிகிற நியாயம் என்று கருதுகிறேன்.
நூலின் ஒருபுறம் ஆங்கிலத்திலும் மறுபுறம் தமிழிலும் இக்கதை இடம்பெற்றிருக்கிறது. ஆளுக்கு 10 நூல்களை வாங்கி தெரிந்தவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டும். பிறந்தநாள் பரிசாகக் கொடுப்பதற்கும் ஏற்ற நூல் இது.

Latest

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ....

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம்...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில்...

நூல் அறிமுகம்: தோட்டியின் மகன் – சுரேஷ் இசக்கிபாண்டி‌‌

"யார் வர்க்க எதிரி, ஏன் ஒன்றுசேர வேண்டும்"   ஆலப்புழா நகராட்சியில் தோட்டியாக (துப்புரவு...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்:இசைவு-ஜெயஸ்ரீ பாலாஜி

நூல் : இசைவு எழுத்தாளர்: பிரியா ஜெயகாந்த் வெளியீடு: முகவரி வெளியீடு பக்கங்கள்: 72 விலை: ரூ. 100 வணக்கம், எம்முடன் தமுஎகச அறம் கிளையில் பயணிக்கும் தோழர் பிரியா ஜெயகாந்த் அவர்களின் முதல் குறுநாவலுக்கு மதிப்புரை அளிப்பது மட்டற்ற மகிழ்ச்சி. தன்னை...

அத்தியாயம் : 9 பாப்பா கரு.. கருவாக உருவாகி.. 18 வாரங்களில்- பேரா.சோ.மோகனா

18 வார பாப்பாக்கரு .. உங்கள் பாப்பாக்கரு 18 வாரத்தில் என்னவெல்லாம்ஜாலம் காட்டுகிறார்கள்..பார்ப்போமா ? இனி பாப்பாக்கருவை குழந்தை/கரு என்று அழைப்போமா? அவர்களுக்குதான் 5 மாதங்கள் துவங்க இருக்கிறேதே. இப்போது உங்கள் குழந்தையின் வயது...

அத்தியாயம் 21: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பின் தரம் “இந்தியா முழுவதிலும் உற்பத்தித் துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களில் 42% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகிறார்கள்; தமிழ்நாட்டில் முறைசார் பொருளாதாரத்தில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு இந்தளவுக்கு அதிகமாக உள்ளது” - 2023...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here