எப்பொழுதும் நான்
ஏதாவதொரு அடர்த்தியான மரத்தின் நிழலில் அமர்ந்து
ஓய்வெடுக்க விரும்பினேன்
என் காதுகளில்
பயங்கரமான அலறல் சத்தம்
கேட்கத் தொடங்கியது
ஒவ்வொரு சிறு மெல்லிய கிளையின் மீது
தொங்குகின்றன
லட்சக்கணக்கான சடலங்கள் போல…
தரையின் மேல்
விழுந்து கிடக்கிறது
சம்புகனின் துண்டிக்கப்பட்ட தலை.
நான் எழுந்து ஓட விரும்புகிறேன்
சம்புகனின் தலை
என் வழியை மறிக்கிறது
அலறி அலறிச் சொல்கிறது
யுகங்கள் _ யுகங்களாக
மரத்தின் மேல் தொங்குகிறேன்
அடிக்கடி ராமன்
என்னை கொலை செய்கிறான்
என் வார்த்தைகள் இறக்கை வெட்டப்பட்ட பறவை போல துடிக்கின்றன.
நீ தனியாக கொலை செய்யவில்லை
தபஸ்வி (சந்நியாசி )
இங்கேயோ ஒவ்வொரு நாளும்
கொல்லப்படுகிறார்கள்
கணக்கற்ற ஜனங்கள் ;
அவர்களின் கேவல்கள்
மூச்சுத் திணறலோடு வாழ்கிறது
இருளின் கறுப்பு மடிப்புகளில்.
இங்கே தெரு _ தெருக்களில்
ராமன் இருக்கிறான்
சம்புகன் இருக்கிறான்
துரோணன் இருக்கிறான்
ஏகலைவன் இருக்கிறான்
இருந்தும் எல்லாம்
மெளனமாய் இருக்கின்றன
எங்கோ சில இருக்கிறது
அது மூடப்பட்ட அறைகளிலிருந்து
எழுகின்ற அழுகையை
வெளியே வர விடாமல் செய்கிறது
ரத்தத்தால் நனைந்த விரல்களை
மகிமை அலங்கரித்து.
சம்புகா ! உனது ரத்தம் பூமிக்குள்
கலந்து போய் இருக்கிறது
ஏதாவதொரு நாளில்
அது வெடித்து வெளியே வரும்
எரிமலையாகி.
(1) ஜூட்டன் (சுயசரிதை ) _ 1997

