“உனக்கு ஒரு செய்தி தெரியுமா மங்கை? , என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தாள்”, ருக்மணி.
“வா அக்கா, எங்கே ஆளையே காணோம் என்ற மங்கையை பார்த்து
“நான் எங்கே போக போறேன், மங்கை”. இங்கே தான் தள்ளு வண்டியில் நாஷ்டா கடைக்கு பக்கத்திலேயே தான் நம்ம பூ கடையில் உக்காந்து இருக்கேன். உனக்கு தெரியாதது என இருக்கு. இந்த டிரிப்பிளிகேணி விட்ட எனக்கு எங்க போக நாதியிருக்கு என அங்கலாயித்துக் கொண்டு ஒரு கப் காபி தண்ணி கொடேன் “, என அமர்ந்தாள்.
ருக்மணி பூ விற்க ஆரம்பித்து 35 வருடங்கள் ஆகிவிட்டது திருவல்லிக்கேணியில் தனது 10 வயதில் பூ விற்க ஆரம்பித்தாள். ஒரு விபத்தில் பெற்றோர்களை இழந்து விட்டாள். அம்மாவின் தூரத்து சொந்தம் கமலா பாட்டி தான் ருக்மணிக்கு அடைக்கலம். பாட்டி பூ கடை. கடை என்றால் பெரிய கடை அல்ல. பார்த்தசாரதி கோயில் வாசலில் கூடையில் பூ போட்டு அமர்ந்துவிடுவார்
ருக்மணியிடம் முதலில் இரண்டு முழம் பூ கொடுத்து கோயில் ஒட்டிய தெருக்களில் பூ விற்க அனுப்பினாள்.. குழந்தை பருவம். துருதுருவென கண்கள். அக்கா பூ வாங்கிக்கங்க அக்கா என் அவள் கேட்கும் போது தா மா என்று கடப்பவர்கள் சொல்லும் நிலையே உண்டாகும்.
இரண்டு முழம் 5, 10 என அதிகரித்தது.
தன் வியாபாரத்தை 10 வயதில் துவங்கினாள். இன்று வயது 30. இந்த இடைப்பட்ட காலத்தில் அவள் பூ வியாபாரம் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து ஆரம்பித்து லைட் ஹவ்வுஸ் வரை வளர்ந்தது, இன்று கமலா பாட்டி வைத்த இடத்திலேயே ஒரு சிறுமேடை அமைத்து பூ கடை வைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டாள். கமலா பாட்டி திடிரென்று ஒரு நாள் உறக்கத்திலேயே இயற்கை எய்தினார். மகளாக இருந்து அயோத்தி குப்பம் மக்கள் உதவியோடு ஈமக் காரியங்கள் செய்து முடித்தாள்.
5 வருடம் முன் பூ மார்க்கெட் செல்லும் வழியில் கதிரேசன் நட்பு கிடைத்தது. அது திருமணத்தில் முடிந்தது. ஒரே வருடத்தில் அழகான பெண் குழந்தைக்கு தாயானாள் ருக்மணி. கதிரேசன் குடி பழக்கம் அவனை நோயாளி ஆக்கியது. ஆக குழந்தை வளர்ப்பு கணவன் மருத்துவச் செலவு என இரு பொறுப்புகள் ருக்குவின் தலையில் பலு கூடியது. திருமணமும் திருப்பு முனையாக அமையவில்லை. ஆனால் ருக்கு நம்ம டிசைன் அப்படி என எதையும் சமாளிக்கும் தன்மை கொண்டவளாக இருந்தாள்.
அக்கா, “இந்தாங்க காஃபி; என காஃபி கொடுத்து விட்டு பக்கத்தில் வந்து அமர்ந்தாள் “மங்கை.
சட்டென நினைவு திரும்பினாள் ருக்கு. சக்கரை சரியாக இருக்கா அக்கா?
“சரியா இருக்கு” மங்கை. “தலைவலிக்கு காஃபி நல்லாயிருக்குது என சொல்லிக் கொண்டே காப்பியை குடித்து முடித்தாள்”.
“என்னா விஷயம் சொல்லுங்க, அக்கா”.
இந்த கொரோனா நோய் வந்ததாலும் வந்தது, நம்ம பொழப்பு பாழாய் போச்சி. சாமி. இருக்கற கோயிலையே மூடிபுட்டாங்கா. கொரோனா நம்மை பாட ஏத்துதோ இல்லையோ இந்த பட்டினி நம்ம ஏத்திடும் போல் இருக்கு
“ஆமா உன் கடை எப்படி போது மங்கை”.
“அதே கதை தான் கா”.
“வயித்துல ஈர துணி போட்டு உக்கார்ந்து இருக்கிறோம் பல நேரங்களில். தையல் தெரிஞ்சதால நம்ம ஸனங்களுக்கு மாஸ்க் வைச்சி தரேன். பாதி பேரு நம்ம ஆளுங்க மாஸ்க் போடரது இல்லை. நம்ம தைக்கிற மாஸ்க்கை பணக்காரர்கள் வாங்குவதில்லை. மாஸ்கில் கூட ஏழை பணக்காரன் மாஸ்க் என ஆயிடுச்சு போன வரைக்கும் போகட்டுமே”.
“ஆமா மங்கை, எல்லாம் அவன் விட்ட வழி”
இப்போ வந்த செய்தி கேளு. நமக்கு கவர்மெண்ட் 4500 ருபாய் பொங்கலுக்கு தர போராங்களாம். அந்த நல்ல செய்தி சொல்ல தான் வந்தேன். நீயும் ஒரு பழைய தையல் மிஷன், அந்த பழைய பொருட்கள் கடையில பார்த்தேன் என் சொன்னயே. அத போய்
அந்த கடைக்காரன் ராமுவான்ட சொல்லி வைச்சிடு. வேற யாருக்காச்சும் கொடுத்துட போறான்
“நானும் கடையில் கொஞ்சம் பூ வைச்சிட்டு, பெனாயிலு, சோப்பு, லைய்சால் வாங்கி வைக்கலாம்,என இருக்கிறேன்”. “சின்ன வயசுல ஆரம்பிச்ச என கஷ்ட காலம் என்னிக்கு திருமோ கடவுளுக்கு தான் வெளிச்சம”.
“சாமியையே பார்க்வே வரமாட்டேன்னும் போது, நம்ம கடை பூ என்ன ஆவறது”. “ஏகாதசி அப்போ நம்ம கடை எப்படி இருக்கும் சிவப்பு, மஞ்சள் பெங்களூர் ரோஸ், ஜாதி மல்லி, குண்டு மல்லி, துளசி, சாமந்தி என கடை தினமும் கல்யாண கலை கட்டும். இப்போ அப்படி இல்லை”.
“காலத்திற்கு ஏற்ப நாம் மாறி தானே வேண்டும் அவரை ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போகனும். பிள்ளைக்கு நல்ல சாப்பாடு செஞ்சி கொடுக்கனும் . கவர்மெண்ட் கொடுக்கிற 4500 ரூபாய் நம் வாழ்க்கையே மாற போகுது. நமக்கு 4500 ரூபாய் எவ்வளவு பிரச்சினைகள் தீர்க்கும். கடவுள் புண்ணியத்தில் நமக்கு அந்த மகராசன் கொடுக்கிறான். நல்லா இருக்கனணும். சரி நான் வர மங்கை என கிளம்பினாள் ருக்கு பல கனவுகளோடு.
ருக்கு கிளம்பி சென்றவுடன் பழைய கடை நோக்கி நடந்தாள் மங்கை ராமுவிடம் பழைய தையல் மிஷன் சொல்லி வைக்க.
அதே தெருவில் இருக்கும் சிலர் தன் சகாவிடம், டேய் அரசு 4500 /2500 என பொங்கல் ஈனாம் என சொல்லி கொண்டு இருக்காங்க. முடிஞ்ச வரை கொடுக்கலாம். மீதம் வழக்கம் போல ….. என திட்டமிட்டு கொண்டு இருந்தான்.
எதிரகட்சி இந்த பொங்கல் ஈனாம் மக்களுக்கு எந்த விதத்திலும் உபயோகப் படாது. மக்களின் தேவை அதிகமாக உள்ளது. நாங்கள் ஆட்சியில் இருந்தால் இந்த தொகையைவிட அதிக அளவில் சலுகை கொடுத்து இருப்போம் என அவர்களின் சொந்த செனல் செய்தியில் ஒளிபரப்பு ஆகி கொண்டு இருந்தது.
ஒரு செய்தியை மையமாக வைத்து எத்தனை எத்தனை திட்டங்கள்??
இதற்கிடையில் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது. அரசு பொங்கல் ஈனாம் 2500 ரூபாய் மட்டுமே அளிக்க நிர்மாணிக்கப்பட்டது என..
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

