லக்னோவைச் சார்ந்த பத்திரிக்கையாளரான சரத் பிரதான் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நேரடி சாட்சியாக இருந்தவர்

1980களின் முற்பகுதியில் இருந்தே அயோத்தியில் நடந்து வந்த நிகழ்வுகளை கண்காணித்துக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், 1992 டிசம்பர் 6 அந்த இருண்ட ஞாயிற்றுக்கிழமையன்று அயோத்தியில் நடந்த மோசமான நிகழ்வுகளின் மத்தியில் இருந்தவன் என்ற முறையில், மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது என்னைப் பொறுத்தவரை இயலாததாகவே இருக்கிறது. 16ஆம் நூற்றாண்டு பாபர் மசூதியை இடிப்பதற்கு கிரிமினல் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேருக்கும், அந்த நீதிமன்றம் குற்றமற்றவர்கள்  என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\accused-1 32 living.jpg

வேண்டுமென்றே பார்வையற்றவர்களாக நடிப்பவர்களால் மட்டுமே மசூதி இடிக்கப்பட்டதில் எந்தவொரு சதித்திட்டமும் இல்லை, கரசேவகர்கள் என்ற பெயரில் அந்தப் பண்டைய கோவில் நகரத்திற்குள் பதுங்கியதாக நம்பப்படுகின்ற சமூக விரோதிகளைக் கொண்ட ஆவேசமான, கோபமான கும்பலாலேயே மசூதி இடிக்கப்பட்டது என்று கூறப்படுவதை நம்ப முடியும். வேண்டுமென்றே காது கேளாதவராக நடிப்பவராலேயே, துரதிர்ஷ்டமான அந்த நாளில், அந்த இடத்தில் இருந்த உயர்மட்ட பாரதிய ஜனதா மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் யாரையும் தூண்டிவிடாமல் மசூதியைக் காப்பாற்றவே உண்மையில் முயன்றனர் என்ற நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியும்.

என்னைப் போன்றவர்களுக்கு, அன்றைய நிகழ்வுகளை மிக நெருக்கமான இடங்களிலிருந்து பார்த்தவர்களுக்கு, சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையில் முக்கிய சாட்சிகளில் ஒருவராக இருந்தவர்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பில் வைக்கப்படுகின்ற இதுபோன்ற திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட பொய்களை நிச்சயமாக ஜீரணிக்க இயலாது. ரேபரேலி மற்றும் லக்னோ ஆகிய இரு இடங்களிலும் இருந்த தனி நீதிமன்றங்களின் முன்பாக 14 நாட்களுக்கு நடந்த எனது வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணைகள் பயனற்ற நடைமுறையாகவே இருந்ததாகவே, இன்று பின்னோக்கிப் பார்க்கும் போது எனக்குத் தெரிகிறது. என்னைப் போன்ற பல சாட்சிகளும் இதுபோன்றே உணர்கிறார்கள்.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\Training.jpg

முதல் நாள் வழங்கப்பட்ட மசூதி இடிப்பு பயிற்சி

பாபர் மசூதி சதுக்கத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைக் காணும் வகையில் பாஜக மற்றும் விஎச்பி தலைவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஒலிபெருக்கி அமைப்பின் மூலம் செய்யப்பட்ட அறிவிப்புகள் இன்னும் என் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கிருந்து உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தைகளும் அங்கே நடக்கவிருந்த இடிப்பு வேலையின் மீது தாக்கங்களைக் கொண்டிருந்தன என்பது முற்றிலும் தெளிவாக இருந்தது.

‘அந்த அமைப்பு கீழே விழப் போகிறது; குவிமாடங்களுக்கு மேலே உள்ளவர்கள் கீழே வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்ற அறிவிப்பு மசூதியைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கி அமைப்பிலிருந்து திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி மற்றும் அவர்களைப் போன்றவர்கள் அங்கே சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

அங்கிருந்த ஒலிபெருக்கி மசூதிக்கு எதிரான ஆவேசத்தைத் தூண்டும் வகையில் ஆத்திரமூட்டும் முழக்கங்களை எழுப்புவதற்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. குவிமாடங்களிலிருந்து கீழே இறங்குமாறு மக்களை வேண்டுகின்ற அந்தக் குறிப்பிட்ட அறிவிப்பு மட்டும் வெவ்வேறு இந்திய மொழிகளில் சொல்லப்பட்டது. ஒருவேளை வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த கரசேவகர்களின் நன்மைக்காக அவ்வாறு சொல்லப்பட்டு இருந்திருக்கலாம். அத்தகைய அறிவிப்பு இடிப்பு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களிடமிருந்து மட்டுமே வர முடியும் என்பது வெளிப்படையானது. மசூதியைப் பாதுகாக்கும் முயற்சியாக அந்த அறிவிப்பைப் பார்ப்பதற்கான சாத்தியமே இருக்கவில்லை என்ற போதிலும், அவ்வாறு சாத்தியமற்ற ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்பு நிறைவேற்றியிருப்பதாகத் தெரிகிறது.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\wall Babri masjid.jpg

அந்தக் கட்டிடம்  திட்டமிடப்பட்ட முறையில் தங்கள் பணியை மேற்கொண்ட பயிற்சியளிக்கப்பட்ட நபர்களாலேயே வீழ்த்தப்பட்டது என்பது நிகழ்வுகளை அங்கே இருந்து தொடர்ந்து பார்த்துக் கொண்டு சாட்சியாக இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். கூர்மையான இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தி மசூதியைத் தாங்கிக் கொண்டிருந்த பிரதான சுவர்களின் இருபுறமும் தரைத்தளம் வரைக்கும் தோண்டி, இரண்டரை அடி தடிமனான சுவர்களை கிட்டத்தட்ட ஓரடிக்குக் குறைவாக குறுக்கிவிடுவதில் வெற்றி பெறும் வகையில் அங்கிருந்த ஒரு குழு எவ்வாறு செயல்பட்டது என்று நான் நேரடியாகக் கண்டதை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக அளித்திருந்தேன். அவ்வாறு செய்த பிறகு, அவர்கள் சுவற்றில் இரண்டு துளைகளைத் தோண்டி, அவற்றின் வழியாக தடிமனான கயிறுகளை நுழைத்தனர். கயிற்றின் இரு முனைகளையும் பிடித்து இழுக்கும்படி ஆயிரக்கணக்கான கரசேவகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். குறுகலாக்கப்பட்டு பலவீனமாக இருந்த சுவர்கள் தகர்ந்து, மேலிருந்த குவிமாடத்தை தடாரென்று கீழே சாய்த்தன.

நாட்டின் முதன்மை விசாரணை நிறுவனமான சிபிஐ சேகரித்த அனைத்து ஆதாரங்களும் போதுமானதாக இல்லை அல்லது பலவீனமாக இருப்பதாக நீதிமன்றத்தால் கருதப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றம் யாரையும் குற்றவாளியாக்காததற்கு அதுவே போதுமான காரணமாக இருந்திருக்கிறது. அவர்களுக்கு எதிராக சிபிஐ சமர்ப்பித்த வீடியோ மற்றும் ஆடியோ கிளிப்புகள் திருத்தப்பட்டவையாக அல்லது இட்டுக்கட்டப்பட்டவையாக இருந்தது என்று கூறி, அவையனைத்தையும் மிக மோசமான ஆதாரம் என்று கருதி, பா.ஜ.க தலைவர்கள் மற்றும் வி.எச்.பி மற்றும் பிற ஹிந்துத்துவ அமைப்புகளில் இருந்த அவர்களது தொண்டர்கள் அனைவரும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் மகிழ்ச்சியுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். மசூதி இடிக்கப்பட்ட பிறகு, இந்த 28 ஆண்டுகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 17 பேர் இறந்து போயுள்ளனர். மிகநீண்டகால விசாரணையின் முடிவில், குற்றம் சாட்டப்பட்ட 32 பேருக்கும் குற்றமற்றவர்கள் என்ற சான்றிதழ்  வழங்கப்பட்டுள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\babri-demolition-case-verdict_.jpg

அயோத்தி இடத் தகராறு வழக்கில், ராமர் கோவிலுக்கு ஆதரவாக 2019 நவம்பரில் இறுதித் தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வால் குறிப்பிடப்பட்டிருந்த குறிப்புகளைக்கூட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் கவனத்தில் கொள்ளவில்லை என்பது விசித்திரமானது. ஒருவித சதித்திட்டம் இருந்ததைத் தெளிவாகக் குறிக்கின்ற வகையில், மசூதியை இடித்தது திட்டமிடப்பட்ட செயல் என்றே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\SC Bench Ram mandir.jpg

இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, ‘பொது வழிபாட்டுத்தலத்தை அழிக்கின்ற திட்டமிடப்பட்ட செயலில் மசூதியின் அமைப்பு முழுமையாக வீழ்த்தப்பட்டது’ என்று சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் ‘முஸ்லீம்கள் தவறாக 450 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மசூதியை இழந்திருக்கின்றனர்’ என்றும் அந்த அமர்வு கூறியிருந்தது.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\Liberhan.jpg

அப்போதைய பி.வி. நரசிம்மராவ் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி லிபரான் ஆணையத்தின் அறிக்கையிலும் இதேபோன்றதொரு உணர்வே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அந்த இடிப்பு திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என்று தனது கண்டுபிடிப்புகளைச் சொல்வதற்கு 17 நீண்ட ஆண்டுகளை நீதிபதி எம்.எஸ்.லிபரான் எடுத்துக் கொண்டார்.

ஆனால் இவை எதுவுமே நீதிபதி யாதவ் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, 2019 செப்டம்பரில் ஓய்வு பெற்ற யாதவ் இரண்டு பணிநீட்டிப்புகளைப் பெற்று மேலதிகமாகப் பணியாற்றி இருப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கே நன்றி சொல்ல வேண்டும். இந்திய தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ரஞ்சன் கோகோய், 2019 நவம்பரில் வழங்கப்பட்ட கோவில் தீர்ப்பிற்குப் பின்னர் ஓய்வு பெற்றார் என்பது இங்கே தற்செயலான நிகழ்வாகவே இருக்க வேண்டும்.

C:\Users\Chandraguru\Pictures\Ayodhya\Gogoi and Yadav.jpg

இப்போதைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால், வேறு எந்தக் குற்றத்தையும் போலல்லாமல், மசூதி இடிப்பு எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்பதையே நம்ப வேண்டும். ஆனாலும், மசூதி தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது.

https://thewire.in/communalism/babri-masjid-demolition-conspiracy-eyewitness

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *