“இந்தா தாத்தா, புடி, அம்மாகிட்டே சொல்லாதே மீதி காசு இந்தா!”
“நீயே வச்சிக்க என் ராஜா“
பேரன் வாங்கி வந்த பீடிக்கட்டை வாசனை பார்த்தார் பெரியவர்.
‘என்ன வாசனை… இதைப்போய்த் தொடாதே என்கிறார்களே‘ என்றவாறு அக்கம்பக்கம் பார்த்து தலைகாணிக்கடியில் ஒளித்து வைத்தார். அதற்குள் மருமகள் வந்து விட்டாள்.
“ராஜா, தாத்தாகிட்டே என்ன குடுத்தே ?”
“தேன் மிட்டாய். அவர் அதை வாயில் போட்டுகொண்டார், இல்லையா தாத்தா?”
“பொய் சொல்லாதே, பீடி தானே வாங்கியாந்து கொடுத்தே? ஏங்க மாமா, இது நல்லா இருக்கா நேத்தி தானே டாக்ட்டர் படிச்சி படிச்சி சொன்னாரு சும்மா பீடி குடிக்கிறது அப்பறம் ரவைக்கு இருமிண்டே இருக்கறது உள்ளே வந்து படுன்னு சொன்னாலும் கேக்கறதில்லே…. என்னங்க, இனி என்னால முடியாது, உங்க அப்பன் தான் நான் சொன்னா கேக்கறது இல்லை இப்போ மவனும் சேந்துக்கிட்டான்“
“அப்பா, ஏம்ம்பா சொல் பேச்சு கேக்கறது இல்ல, டாக்டர் எங்களை ஏசுறாங்க…. உங்களைக் கொண்டு போய் எங்கனாச்சும் உட்டுட்டு வரப் போறேன் எப்போ பாத்தாலும் வீட்டுக்கு வந்தா இந்த ரவுசு!”
“அது தான் சரி, இந்த கட்ட போகணும்னு பாத்தா முடியலே“
“என்னங்க, நான் அவரக் கண்டிக்கத் தான் சொன்னேன். வீட்ட விட்டு தொரத்த சொல்லலே இது அவர் வீடு நெனப்பு இருக்கட்டும்“
“நீ அப்படியும் பேசுறே இப்படியும் பேசுறே… உங்க நல்லதுக்கு தானப்பா சொல்றோம்“
“அட போடா, அப்படி என்னடா இந்த உசிரு பெருசு“
“சரி சரி, நாளைக்கு படையல் போடணும் சாமான் வாங்கி வந்தீங்களா?.. என்னங்க, வாழைப்பழம் ஒரு சீப்புத்தான் கொண்டாந்திருக்கீங்க. பெரியவரு பழம் மட்டும் தான் சாப்பிடுறாரு, கூட வாங்கிருக்கலாமில்ல?”
“கருத்திடும் அப்பாலே வாங்கிக்கலாம். என்ன நீ பொறப்பட்டியா? நம்ப போகுங்குள்ளாற சினிமா ஆரம்பிச்சுடும் நான் போய் ருக்குவே கூப்பிடுறன்”
“இந்தாங்க மாமா, உங்களுக்கு கஞ்சி, தொட்டுக்க பக்கோடா ஒடச்சி வச்சிருக்கேன். நாங்க வர முச்சும் காத்திருக்க வேணாம், வெள்ளனே சாப்பிட்டுட்டு படுங்க காத்தடிக்குது உள்ளே போய் படுங்க, கதவ வெறுமனே சாத்தி வச்சிருக்கேன்“
‘இன்னிக்கு என்னமோ தெரியல விடிஞ்சதுலேந்து கிழவி நெனப்பு. நாளைக்கு அவள போன தினம். மகனும் மகளும் படையல் போடறாங்களாம்…. இன்னிக்கு நடந்தாப்போலே இருக்கு. அவளே மொத மொத இந்த வீட்டுக்குக் கூட்டியாண்டது. மவராசி ம்முனு முனகியது கிடையாது. மகன் பொறந்து மக பொறந்து அவங்கள கட்டி கொடுத்தது, வீட்டிலே ஆயிரம் நல்லது கெட்டது நடந்துடுச்சி, அவளும் சீக்குன்னு படுக்காம பொட்டுன்னு போயிட்டா! இந்த உசுரு தான் கிடந்து அலையுது. ஊருக்கே நான்தான் மூத்ததாம்… எங்க போனாலும் மருவாதி எல்லாம் சரி தான் இன்னும் எத்தனை நாள் போட்டிருக்கோ…. எல்லாம் விட்டுடேன் இந்த பீடிய உட முடியலே! பொழுது சாஞ்சிடுச்சு கஞ்சிய குடிப்போம். மருமக வந்து பாத்தா அதுக்கு ஒரு தரம் கச்சேரி நடக்கும். தங்கமான பொண்ணு என் மச்சான் மவ தான். என் நல்லதுக்குத்தான் சொல்லுறா.. மகராசிக்குக் கஷ்டம் தராம அவ மாமியா மாதிரி நானும் போய்டணும்‘
ரோட்டோர வயல் மாடசாமி வந்தான். அவன் கேணில தூரு வாரலாமா, போர் இருக்கு என்ன செய்யலாம்னு கேக்கறதுக்கா(க) வந்தான்
அவன் கேணி தண்ணி கற்கண்டா இனிக்கும். செலவு பாக்காம தூரு வாரச் சொன்னார் பெரியவர். ‘ஊரு சனம் குடிக்க மொண்டு போகுங்க சரி‘ன்னு சொல்லிட்டு அவன் போகவும், இவக வாரவும் சரியாக இருந்திச்சி.
“தாத்தா ரஜினி படம் டக்கரு“
“அதென்னடா டக்கரு?”
“இது தெரியாதா அப்படின்னா சூப்பர் ஜோரா இருக்குன்னு அர்த்தம்! நீ தான் வர மாட்டேன்னு சொல்லிட்டே“
“அட போடா, நான் பாக்காத பயாஸ்கோப்பா எங்க காலத்துலே? பக்கத்து டவுன்ல தான் டூரிங் கோட்டையில் படம் வரும். வாத்தியாரு, ஜிவாசி ஆக்டு குடுத்தா இன்னிக்கெல்லாம் பாக்கலாம். என்ன கருத்து, பாட்டு, குடும்பக் கதை
“இப்ப டிவிலே பாக்கறோமே. பாட்டெல்லாம் தமிழ்ல தான பாடுறாங்க, ஒரே எறைச்சல் …. அவங்க ஆட்டமும் அலங்காரமும்! இதை காசு கொடுத்து கொட்டாயிலே வேறே பாக்கணுமா?”
“போ, தாத்தா உனக்கு ஒண்ணும் தெரியாது… பக்கத்து டவுனுக்கு எப்படி போவீங்க, பஸ்ஸிலியா“?”
“பஸ்ஸா, அதல்லா பகல்ல எப்போவோ வரும்… நாங்க நடந்தே காலேலே சந்தைக்குப் போய் சாமான் எல்லாம் வாங்கி, அப்பாலே சாயந்திரமா மொத காட்சி பாத்துட்டு ரவைக்கித் திரும்புவோம். உன் அப்பன் இருக்கானே அவன் என் தோள்மேல ஏறி குந்திப்பான்.. உன் தம்பி மாதிரி இருக்கும் உன் அத்தே‘
“ருக்கு அத்தே யா?”
“ஆமா, அவள ஆத்தாக்காரி தூக்கிப்பா… தலைல கூடை! சில சமயம் நம்ப ஊர் வண்டிங்க வரும், அப்போ உன் ஆயாவை ஏத்தி அனுப்பிடுவேன்.. நாங்க சினிமா கதை எப்படி இருந்திச்சி, பாட்டு எப்படி இருந்திச்சின்னு.. எல்லாக் கதையும் பேசிக்கிட்டே ஊர் வந்து சேர்ந்திடுவோம். இப்பல்லாம் நம்ம ஊர் கடைக்குப் போகவே உங்கப்பன் வண்டிலே போறான்! சைக்கிள் கூட வீடுகள்லே இல்லை.. பொம்பளை புள்ளைங்களே சர் புர்னு வண்டி ஓட்டுதுங்க இப்போ“
“நானுந் தான் அப்பா வண்டி ஓட்டுவேன்“
“ராஜா, உள்ளாற வா. பேசியது போதும்.. நாளைக்கு வெள்ளனே எழும்பணும். வேலை கெடக்கு. தாத்தா கொஞ்சம் நேரம் படுக்கட்டும். மாமா, சாப்டீங்களா, எதுனா வேணுமா” தண்ணி தல மாட்டுலே வக்கிறேன்”
“அம்மாடி, எனக்கு ஒண்ணும் வாணாம். இந்தக் குடும்பத்த, புள்ளங்கள நீ தான் நல்ல பாக்கோணும் மகராசியா இருப்பே“
“சரிசரி படுங்க நா என்ன பாக்குறது, தெய்வமா இருக்கற அத்தை பாத்துக்கும்”
கதவை வெறுமனே சாத்தி விட்டு வந்து படுத்தாள்.
இருமல் சத்தம் கேட்டது.
“இதுக்குத் தான் ராஜா, தாத்தாக்கு பீடி வாங்கித் தராதேன்னு சொல்லுறன், நீ புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற. இந்த ஊரிலேயே உங்க தாத்தா தான்டா மூத்த தலைமுறை ஆளு அவர ஜாக்கிரதையா பாத்துக்கணும்“
“இல்லம்மா.. இனி வாங்கித் தர மாட்டேன்“
அவனுக்குத் தெரியாது. அது தான் அவன் தாத்தாவுக்கு வாங்கி வந்து கொடுத்த கடைசி பீடிக்கட்டு என்று.
சற்று நேரத்தில் இருமல் அடங்கியது..
********
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இயல்பான நடையில் ஒரு சிறுகதை. வாழ்த்துகள். முடிவு இதுதான் என்பது புரிந்து விடுகிறது. முதியவரின் வாழ்வில் மகிழ்ச்சியானது நினைவுகளும், பீடிகளுமெ!
என்னை என் துயரத்திடமே சரணடைய விடு
அற்புதமான வார்த்தைக் கோர்வை