ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்,Era Murugavel ' s Oru Porularathara Adiyalin Vakumulam book published by Bharathi Puthakalayam - https://bookday.in/

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

நூலின் தகவல்கள்:

புத்தகத்தின் பெயர்: ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
ஆசிரியர் பெயர்: ஜான் பெர்கின்ஸ்
தமிழில்: இரா. முருகவேள்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
மொத்த பக்கங்கள்: 300
விலை ரூ : ரூ.280
தொடர்புக்கு : 44 2433 2924
நூலை இணையதளம் வழிப் பெற கிளிக் செய்யவும் : thamizhbook.com

ஜான் பெர்கின்ஸ் என்பவர் இயற்றிய “Confession of an economic Hitman” என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்ற இந்த புத்தகம்.. தமிழில் இதை மொழிபெயர்த்தவர் இரா முருகவேள்.. வழக்கறிஞரான இவர் எழுத்தாளர், அரசியல் ஈடுபாடு மற்றும் சமூக செயல்பாடு போன்ற பன்முகத் தன்மை கொண்டவர்.. இவருடைய படைப்புகள் மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றிற்கு பல விருதுகளைப் பெற்றுள்ளார்..

மொழிபெயர்ப்பு சிறிதும் தடங்கல் இல்லாமல் தமிழில் இயற்றிய நூலைப் படித்தது போன்ற உணர்வு இருந்தது..

ஜான் பெர்கின்ஸ் அமெரிக்காவின் நியூஹாம்ப்ஷையர் மாநிலத்தின் ஹானோவர் நகரில் பிறந்து கண்டிப்பான பாரம்பரியமிக்க பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார்.. பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர்.. அதன் பிறகு அமைதிப்படை ஊழியராக ஈக்வடார் (லத்தீன் அமெரிக்கா) நாட்டில் பணியாற்றுகிறார்.. அவர் எப்படி ஒரு பொருளாதார அடியாளனாக மாறி வாழ்க்கையில் பயணிக்கிறார்.. அவர் செய்து கொடுத்த சில திட்டங்களினால் அந்த நாடுகளில் நடந்த மாற்றங்களின் மூலம் தனக்கு ஏற்பட்ட மன உறுத்தல் மற்றும் குற்றவுணர்வினால் உந்தப்பட்டு இந்த புத்தகத்தை எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்..

பொருளாதார வளர்ச்சி என்பது ஒரு நாட்டின் உற்பத்தித் திறனைப் பொறுத்தது.. எவ்வளவு அதிக உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளதோ அதற்கு ஏற்ற வசதி, உயர்ந்த வாழ்க்கைத் தரம் என்பது இதன் அடிப்படையில் அமைகிறது.. ஒரு நாட்டின் இயற்கை வளம், மனித வளம், தொழில்நுட்பம் மற்றும் பண முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் உற்பத்தித் திறன் அமைகிறது.. இதை தேவையான அதே சமயம் நேர்மையான முறையில் பயன்படுத்திக் கொண்டு வளர்வதே உண்மையான வளர்ச்சி.. ஆனால் இந்த நெறிமுறைகள் எங்குமே இல்லை என்பதை தான் இந்த புத்தகம் சொல்கிறது..

பல்வேறு நாடுகளில் இயற்கை வளமும், மனித வளமும் இருந்தாலும் கூட தொழிநுட்பம் மற்றும் நிதி என்பது மிகக் குறைவு.. இதன் காரணமாக இன்று உலக மயமாக்கல் என்ற முகமூடி போட்டுக்கொண்டு அனைவருக்கும் வேலை, தனிமனித வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்று உலக வங்கிகளுடன், பன்னாட்டு நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு வளர்ந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை என்றாலும் உண்மையில் அதன் மறுபக்கம் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை விளக்க முயற்சிக்கிறார்.. வளர்ச்சி என்ற பெயரில் ஒவ்வொரு நாடும் அதன் இயற்கை வளங்களை மட்டுமல்ல தங்களுடைய பண்பாடு, காலாச்சாரங்களையும் இழந்துள்ளது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது..

வளரும் நாடுகளுக்கு என்று மிகப்பெரிய அளவிற்கு கடன் வழங்கி அதன் மூலம் அந்த நாடுகளின் கட்டுமானங்களை (infrastructure) விருத்தி செய்ய உருவாக்கும் திட்டங்கள் மூலம் உள்நுழைந்து, அதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.. உண்மையில் கடன் வழங்கும் நாட்டின் நிறுவனங்களின் மூலமாகவே அந்த திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் போன்ற ஒப்பந்தங்கள் போடப்பட்டுக் கொடுத்த பணத்தை வட்டியுடன் அந்த நாட்டிற்கே திருப்பி கொடுக்கும் வகையில் இருக்கிறது..

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, கொடுத்த பணத்தை அப்படியே அதே நாட்டு நிறுவனங்களின் மூலம் திருப்பி எடுத்துச் செல்கிறது.. மற்றும் இராணுவ தளங்கள் அமைப்பதற்கு, எண்ணெய், கனிம வளம் போன்ற இயற்கை வளங்கள், நீராதாரம் என அனைத்தையும் பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் ஐநா சபையில் ஒப்புதல் பெற கடன் பெற்ற நாட்டின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்கிறது..

இந்த பணியில் ஒரு பொருளாதார அடியாளின் வேலை என்பது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக திட்டங்களை தீட்டி, அதற்கான பண உதவியை உலக வங்கியிலிருந்து பெறுவதற்கு மற்றும் கடனாகப் பெறப்பட்ட தொகையை எதில் முதலீடு செய்வதன் மூலம் என்ன வகையான வளர்ச்சிகளை, நன்மைகளை அடையலாம் என்று எல்லோரும் நம்பும் விதமாக அறிக்கையை முன்வைப்பது தான் ! அதாவது கடன் பெறுவதற்கு ஒரு detailed projection போட்டு தருவது..

“Projection” போடுவதென்றால் எவ்வளவு உழைப்பு தேவைப்பட்டிருக்கும் என்பதை நம்மால் யூகம் செய்ய முடியும்.. ஒவ்வொரு நாட்டு மக்களின் தலைமை, அரசியல் நகர்வு, மக்களின் அரசியல் சார்ந்த அறிவு, அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை இவை எல்லாவற்றையும் சார்ந்து தான் தயாரிக்க வேண்டி இருக்கும்.. அதைத்தான் இந்த நூல் முழுவதும் அவர் சொல்லிக்கொண்டே வருகிறார்.. ஒவ்வொரு நாட்டில் ஏற்பட்ட சிரமங்களையும் அரசியல் நகர்வுகளையும் குறிப்பிடுகின்றார்..

வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் உலக வங்கியின் மூலம் கடன் என்ற அமைப்பின் அடிப்படையாக இருக்கின்றது என்பதற்கு உதாரணமாக, FORD நிறுவனத்தின் தலைவராக இருந்த மெகன்மாரா என்பவர் கென்னடி ஆட்சிகாலத்தில் அவரை பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கிறார்.. பின்னர் இதிலிருந்து விலகி உலக வங்கியின் தலைவர் பதவியை வகிக்கிறார்.. இவர் அமைச்சராகப் பதவியில் இருக்கும்போது கெணீசிய பொருளாதார முறையை தீவிரமாக பின்பற்றியதன் உண்மை, உலக வங்கியின் தலைவர் பதவி ஏற்ற பிறகு உலக வல்லரசு நாடான அமெரிக்காவின் முகவராக உலக வங்கி செயலாற்ற தொடங்குகிறது…

சவுதி அரேபியா மக்களிடம் இருந்த பழமையான மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம் அந்த நாட்டின் அரசனை எப்படி கைக்குள் போட்டுக் கொண்டு உலக வங்கி எண்ணெய் வளத்தால் பணம் கொழிக்கும் நாட்டுக்கு உலக வங்கியின் தேவை எப்படி வந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.. அடிமட்ட கூலியாட்கள் செய்யும் வேலையை எந்த அரேபியனும் செய்ய மாட்டான் என்பதைக் கொண்டும் அந்த நாட்டின் waste management துறைக்குள் நுழைந்த அவர் பின்னர் வணிக வளாகம், குடியிருப்புக்குத் தேவையான கட்டுமானப் பணி, அந்த கட்டுமானமும் உயர் தொழில்நுட்பத்தில் உருவாக்கிவிட்டால் பின் அதற்கு பராமரிப்பு என்று அந்த நாடு அவர்களையே சார்ந்திருக்க செய்திருக்கிறது..

இதற்கு அனுகூலமாக எண்ணெய் விலையில் ஏற்ற இரக்கம் இருந்தாலும் அது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவில் இருக்க வேண்டும்.. இதற்கு மற்ற என்னை வளமிக்க நாடுகளான ஈரான், ஈராக், இந்தோனேசியா தடை விதிக்கும் பட்சத்தில் அரேபியாவின் எண்ணெய் வளம் போதும் என்பது தான்.. அது மட்டும் அல்லாது அரச குடும்பம் எண்ணெயிலிருந்து கிடைக்கும் பல ஆயிரம் கோடி டாலர் வருமானத்தை அமெரிக்க அரசின் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிபந்தனையும்…

( “OPEC” என்பது எண்ணெய் வளமிக்க நாடுகள் ஒன்றிணைந்து தோற்றுவித்த ஒரு அமைப்பு.. இதற்குக் காரணம் பலம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டு வைத்துக் கொண்டு எண்ணெய் வளம் மிக்க நாடுகளுக்கு, தங்களுடைய வர்த்தகத்தில் பெட்ரோல் விலையை அதிகரித்தது பற்றிச் சொல்லாமல் சுரண்டி கொள்ளை லாபம் பெறுவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டது)..

காலணி ஆதிக்கத்தின் போது சுதந்திரத்திற்காகப் பாடுபட்டதை போல இஸ்லாமியர்களும் தங்களுடைய உரிமைகளுக்காக போராடுகின்றனர் என்று அவர் சொல்கிறார்.. நம்புவதற்கு வரலாறு அவசியம் இல்லையா.. தேடிப் படித்தால் தான் எனக்கு புரியும்.. அதாவது அமெரிக்காவின் புஷ்ஷும் சவுதி அரசர்களும் சேர்ந்து உருவாக்கிய ஆர்மி தான் பின்லேடன்! என்பது அதிர்ச்சியூட்டும் தகவல்..

உலக அளவில் நடக்கும் வர்த்தகத்தில் கணிசமான பங்கு கடல்சார் வர்த்தகத்திற்கு உண்டு.. பனாமா செயற்கை கட்டுமானத்தில் உருவான ஒரு செயற்கை கடல்நீர் இணைப்பு கால்வாய்.. இது உருவாக்கபடுவதற்கு முன்பு வரை கப்பல்கள் பல ஆயிரம் மைல்கள் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை.. இதனால் நேர விரயம், பண விரயம் என்பது தவிர்க்க முடியாதது.. லத்தீன் அமெரிக்கர்களால் கட்டப்பட்ட இந்த கால்வாயின் கட்டுப்பாடு பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பிறகு பனாமாவிடமே திரும்ப ஒப்படைக்கப்படுகிறது.. அந்த சமயத்தில் ஜான் பெர்கின்ஸ் செய்த வேலைகளை அப்போதிருந்த அரசியல் சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி எழுதி இருக்கிறார்..

அமெரிக்காவுக்கு முக்கிய சந்தையாக விளங்கிய கொலம்பியாவில் இவர் பணியாற்றிய கெய்ன் நிறுவனம் மின் உற்பத்தி மையங்கள் நெடுஞ்சாலைகள் தொலைத்தொடர்பு வசதிகள் போன்றவற்றை அமைக்க பெரும் முதலீடுகள் செய்வது, கொலம்பியாவின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது, அமேசான் பகுதியின் வளர்ச்சி போன்றவற்றிற்கான திட்டங்களை உருவாக்கித் தருகிறது.. இங்கே வேலை செய்யும்போது ஜான் பெர்கின்ஸ் பவுலா என்ற பெண்ணை சந்திக்கிறார்… அவளுடன் பழகத்தொடங்கிய நாட்களிலிருந்து அவரை முழுமையாக குற்றவுணர்ச்சி அபகரித்துக் கொள்கிறது.. தான் வேலை செய்யும் மெயின் நிறுவனத்திடமிருந்தும், இத்தனை நாட்களாக பனாமா, இந்தோனேசியா, கொலம்பியா போன்ற நாடுகளை அமெரிக்கா கொள்ளையடிக்க தானும் உடந்தையாக இருந்ததை நினைத்து இனிமேலும் தொடராமலிருக்க தனை அதிலிருந்து விடுவித்துக் கொள்ள முடிவெடுத்து ராஜினாமா செய்கிறார்..

நான்காம் பாகத்தில் பேரரசு கொள்கைகளுக்கு எதிராக நின்ற டோரிஜான்ஸ் மற்றும் ரொல்டோசின் மரணம் பற்றி எழுதியுள்ளார்.. இதைப் படிக்கும்போது ஒரு மாபெரும் சக்தியை எதிர்த்து நிற்பவர்களின் மரணம் நிச்சயம் என்பது புரிகிறது.. நிறுவன – அதிகார வர்க்கத்தின் போக்கு புரிகிறது.. ரூஸ்வெல்ட், ராக்பெல்லர், ஃபோர்ட் , ரீகன், புஷ் போன்ற பெயர்களையும் பெரும் நிறுவனங்களும் இல்லுமினாட்டி பட்டியலில் படித்தது ஞாபகம் வந்தது.. இவர்கள் பலவீனமான மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த நாட்டின் அரசியல் போக்கை மாற்றி அமைக்கும் பலமும் கொண்டவர்களாக விளங்கி இருக்கிறார்கள்… அமெரிக்கா தான் விரும்புவதை ராணுவ பலத்தால் அடைய வேண்டும் என்ற ஆசையும், உலகின் எண்ணெய் வளங்கள் உள்ள இடங்களைக் கட்டுப்படுத்தும் உரிமை தனக்கே வேண்டும் என்றும் ஒவ்வொரு காயாக நகர்த்திய கதையை உணர முடிந்தது…

ஒவ்வொரு திட்டத்தினையும் நிறைவேற்றும் போது அந்நிய உதவி சுயநலமற்றதாக இருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது ? இது முற்றிலும் பொருளாதாரத்தில் பலவீனமானவர்களாக இருக்கும் நாட்டை, அவற்றின் இயற்கை வளங்களை நோக்கமாக வைத்துக் கொண்டு அவற்றை சுரண்டுவதற்காகவே உருவாக்கப்பட்ட முறை என்பதை கூறியிருக்கிறார்.. அப்போது உலகமயமாக்கல் என்ற பெயரில் நாட்டின் வளர்ச்சி எதுவும் நடைபெறவில்லையா என்ற கேள்வியும் எழுகிறது.. ஆனால் முதலில் வறுமையில் இருக்கும் மக்களை தூக்கி நிறுத்தும் என்று கூறப்பட்ட திட்டங்கள் அவர்களை கருத்தில் கொள்வதே இல்லை என்கிறார்.. பணம் உள்ளவன் இன்னும் அதிக பணமுள்ளவனாக வளர்கிறான் அவ்வளவு தான்..

எனக்கு இங்கே தோன்றிய நெருடல் என்னவென்றால், இந்த செயலை செய்யும் போதெல்லாம், தான் செய்யும் காரியம் உலகை ஆள நினைக்கும் ஒரு பேரரசின் பேராசை, ஏகாதிபத்திய உணர்வு என்ற எண்ணங்கள் அவருடைய மனக்கண்ணில் தோன்றிக் கொண்டே இருந்தாலும், அதற்கு தானும் உடந்தை என்ற எண்ணம் அவ்வப்போது தான் வந்திருக்கிறது என்று சொல்வது தான்.. அந்த குற்ற உணர்வை தவிர்க்க, அவர் அவரை ஒரு பொருளாதார நிபுணன் தன்னுடைய நிறுவனத்திற்காக மட்டுமே வேலை செய்கிறேன் என்ற வகையில் அந்த குற்றவுணர்வை தள்ளி வைப்பதாக சொல்லும் இவர், இவர் கொடுக்கும் ஒவ்வொரு detailed projections மற்றும் அதை நிறைவேற்ற நடத்தும் நடவடிக்கைகளும்காகவும் பை நிறைய டாலர்களை அள்ளி நிரப்பிக் கொள்கிறார்.. அந்த நிறுவனம் வழங்கிய அனைத்து சொகுசான சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டு அவருக்கான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டார் என்று சொல்லி இருப்பது தான்.. தவறு என மனதிற்கு பட்ட போதே தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது..

அரசியல் பற்றிய அறிவு இல்லாத எனக்கு உலக அளவில் இயங்கிய இவ்வளவு நுணுக்கமான நகர்வுகளை முற்றிலுமாக புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் காலணி ஆதிக்கம் முற்றிலும் தடைப்பட்டு போன பிறகு ஒரு நாட்டின் வளத்தை நேரடியாக சுரண்ட முடியாது என்ற நிலையில் இதுபோன்ற வியாபார நோக்கு, உலக வங்கி கடன், பொருளாதார வளர்ச்சி போன்ற ரீதியில் சுரண்டுவதற்கான திட்டம் எப்படி எங்கிருந்து ஆரம்பித்தது என்பதைப் படிக்க வியப்பாக இருந்தது..

நூல் அறிமுகம் எழுதியவர்:

 

சுனிதா கணேஷ் குமார்

 

 

மேலும் படிக்க  கிளிக் செய்யவும் : ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *