“எல்லா திருமணங்களிலும் இரண்டு திருமணங்கள் இருக்கின்றன.
ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது.
அவனுடையது அவளுடையதை விட மேலானதாக இருக்கிறது.”
– ஜெஸ்ஸி பெர்னார்டு
மைதிலி சிவராமன் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மூத்த தலைவர், பெண் உரிமைகள் சார்ந்த தீவிர செயல்பாட்டாளர். அவர் தனது தாய்வழிப்பாட்டியான சுப்புலட்சுமியின் நாட்குறிப்பு களைச் சேகரித்து அதன் வழியே அவரது வாழ்க்கை சித்திரத்தை எழுதியிருக்கிறார்.
ஆங்கிலத்தில் வெளியான அப்புத்தகம் தற்போது பாரதி புத்தகாலயம் சார்பில் கி.ரமேஷால் மொழியாக்கம் செய்யப்பட்டு ‘ஒரு வாழ்க்கையின் துகள்கள்’ என வெளியாகி உள்ளது. சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த புத்தகமிது. சுப்புலட்சுமி என்ற அந்த அரிய மனுஷியின் வாழ்வை எழுத்தில் மீட்டெடுத்திருக்கிறார் மைதிலி சிவராமன். முதலில் அதற்காக அவரை மனம் நிறைய பாராட்டுகிறேன்.
1924 முதல் 26 வரை சுப்புலட்சுமி எழுதிய நாட்குறிப்புகள் இவை. சுப்புலட்சுமி சுதந்திர போராட்ட காலத்தில் வாழ்ந்தவர். அவரது கணவர் ஆங்கிலேய அதிகாரத்தில் பணியாற்றிய போதும் அதை மீறி அவரது சுதந்திர போராட்ட வேட்கை செயல்பட்டிருக்கிறது.
சுப்புலட்சுமி தன் வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து வைத்திருந்த நீலநிறப் பெட்டி ஒன்றில் இருந்த எழுபது வருச பழமையான 26 தாள்களைக் கொண்ட அந்த நாட்குறிப்புகள் அவரது மொத்த வாழ்வின் அடையாளமாகவே உள்ளது.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்பில் அவரது ஆசைகள், திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி எதுவும் நேரடியாக எழுதப்படவில்லை மாறாக தனது கஷ்டங்களை மறைத்துக் கொண்டு எளிய சம்பவங்கள், தினசரி குறிப்புகளின் வழியே அகவலியை வெளிப்படுத்தும் குறிப்புகளாகவே எழுதியிருக்கிறார்.
இந்த நாட்குறிப்பின் வழியாக நூற்றாண்டின் முன்பு வாழ்ந்த ஒரு பெண்ணின் துயர சித்திரம் துல்லியமாக வெளிப்படுகிறது. அசலான வரிகளின் மூலமாக சுப்புலட்சுமியின் குரலை நாம் கேட்க முடிகிறது. அவரது இதயம் விம்முவதை நாம் உணர முடிகிறது. அது தான் இந்த நாட்குறிப்பின் தனித்துவம்.

ஆண்கள் எழுதுவதற்கு அறிவார்ந்த அங்கீகாரம், பெயர், புகழ், தனித்துவம், நுட்பமான ரசனை, தன்னை அறிதல் என எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்களுக்கு எழுத்து பெரும்பான்மை நேரங்களில் தனது சொந்தத் துயரங்களை மறைத்துக் கொள்ளவும் மீட்சி பெறவும், தன்னைச் சுற்றிய உலகின் மீதான தனது விருப்பு வெறுப்புகளை நேரடியாக வெளிப்படுத்த முடியாத குடும்ப, சமூக நெருக்கடியில் இருந்து மீள்வதற்குமே உதவியிருக்கிறது.
எழுதுதல் ஒரு விதமான குணமாக்கும் செயலே (healing). பெண் எழுத்தில் அதை முழுமையாக உணர்ந்திருக்கிறேன்.
ஆனி பிராங் என்ற பதின்வயதுச் சிறுமியின் டைரியான Diary of a Young Girl ஹிட்லரின் யூதப் படுகொலைகளுக்கான அழியாத சாட்சியமாக உள்ளது. ஆயிரம் வருசங்களுக்கு முன்பாக ஜப்பானின் அந்தப்புரங்களில் வாழ்ந்த சுகப்பெண்களான சராஸினா, இருமி ஆகிய இருவரின் நாட்குறிப்புகள் இப்போது வெளியாகி உள்ளது. அந்த நாட்குறிப்புகள் முழுவதும் தனிமையும் காமத்தின் பெயரால் ஒடுக்கபட்ட வாழ்வுமே பதிவாகி உள்ளது.
ஐப்பானின் முதல் நாவலான கெஞ்சிக் கதையை எழுதிய லேடி முராசகியின் நாட்குறிப்பு 1100 வருசங்களுக்கு முற்பட்டது. அவள் ஒரு எழுத்தாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள எத்தனை பிரச்சனைகளை, அவதூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த காலங்களின் சாட்சியாக இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்குறிப்புகள் அச்சாகி உள்ளன. இவை வெறும் சுயவாழ்வு பற்றிய பதிவுகள் மட்டுமல்ல. மாறாக குடும்ப அதிகாரம், சமூக ஒடுக்குமுறைகள் பற்றிய ஆவணங்களாகவே உள்ளன.
பெண்களின் மீது யுத்தம் உருவாக்கிய வன்முறைகள், அவமதிப்புகளை விட குடும்பம் உருவாக்கி வரும் வன்முறைகள் அதிகமானது. அது அங்கீகரிக்கபட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது. அதிலும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் பெயரால் பெண்கள் எழுதுவதையும், தங்களது வாழ்வியல் அனுபவங்களை பொதுவெளியில் பகிர்ந்து கொள்வதையும் தமிழ்சமூகம் எப்போதுமே எதிர்த்தும் கண்காணித்தும் வருகிறது.
நூல்: ஒரு வாழ்க்கையின் துகள்கள்
ஆசிரியர்: மைதிலி சிவராமன் (தமிழில் கி.ரமேஷ் )
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 100
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/oru-valkaiyin-thugalkal-9031/
நன்றி: https://www.thaaii.com/

