( புத்தகம் பேசுது. இதழில் தொடராக வெளிவந்த எழுத்தாளர் பாவண்ணனின், கதவு திறந்தே இருக்கிறது பத்தியின் நூல் அறிமுகக் கட்டுரைகளை முன்வைத்து எழுதப்பட்ட குறிப்புகள் )
எழுதப்பட்ட புத்தகம் என்பது ஒரு சிந்தனை. அதைப்படிக்கும் போது அந்த சிந்தனை நம்மை வந்தடைகிறது. அதைப்பற்றி யோசிப்பதன் வழியாகவும், விவாதிப்பதின் வழியாகவும் நாம் அதை நம்முடைய சிந்தனையாக ஆக்கிக் கொள்வோம். பிறகு நாம் அதைப்பற்றி மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். மேற்கண்ட வழிகள் பாவண்ணனின் பள்ளி ஆசிரியரான இராதாகிருஷ்ணன் தனது வகுப்பு மாணவர்களிடம் புத்தகங்களைப் படிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன வார்த்தைகள் ஆகும். மேலைநாட்டுத் தத்துவஇயலாளரும் மகத்தான எழுத்தாளருமான ஹென்றி தோராவைப் பற்றி பாவண்ணன் எழுதியுள்ள எளிமையும் தியாகமமும் என்கிற கட்டுரையில் இந்த பத்தி இடம் பெற்றுள்ளது. இதைப்போன்ற கட்டுரைகளை 17 உள்ளடக்கியது கதவு திறந்தே இருக்கிறது நூல். புத்தகம் பேசுது இதழில் தொடர்ச்சியாக வெளிவந்தவை இக்கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு நூலை அறிமுகப்படுத்துகிறது. பல காரணங்களால் இந்தத் தொகுப்பில் மிக முக்கியமானது எனக் கருதத் தோன்றுகிறது.
முதற்காரணம். இந்த 17 புத்தகங்களும் தமிழ் வாசகப்பரப்பில் அதிக அறிமுகம் இல்லாதவை. ஆனால் மிக முக்கியமானவை. மிக அரிதான பல புத்தகங்கள் இந்நூலில் பாவண்ணனால் முன் வைக்கப்படுகின்றன. உதாரணமாக எழுத்தாளர் ஜெயமோகனைத் தெரியாதவர் நவீன இலக்கிய உலகில் இருக்க இயலாது. அவர் எழுதிய நாவல்களையும் கட்டுரைகளையும் சிறுகதைத் தொகுப்புகளையும் கணக்கிட்டால் அவற்றின் எண்ணிக்கை குறைந்தது நூறைத் தாண்டும்.ஆனால் ஜெயமோகன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் மொழி பெயர்த்த ஆங்கில அறிஞர் மெர்சனின் இயற்கை எனும் நூலைப்பற்றிய விமர்சனத்தை ( உலகத் தொலைக்காட்சியில்) முதன் முறையாக இப்போதுதான் பாவண்ணன் எழுதி எனக்குப் படிக்க வாய்க்கிறது. ஏறக்குறைய 17 புத்தகங்களுக்கும் இந்த உதாரணம் பொருந்தும்.
இரண்டாவது காரணம் பாவண்ணன் தேர்ந்தெடுத்துள்ள புத்தகங்களின் தனித்தன்மை பால்சாக்கின் யூஜினி, பாரத தேவியின் நிலாக்கள் தூர தூரமாக எனும் தன் வரலாற்று நாவல், சங்க கால
பாரியை தலைமகனாக முன்வைக்கும் மனோஜ்குரூர் எழுதிய மலையாள நாவல், பறவை இன அறிஞர் சலீம் அலியின் வாழ்க்கை வரலாறு, ஆங்கில எழுத்தாளர் பால் காரல் எழுதிய புத்தரின் புனித வாக்கு எனும் அரிய படைப்பு, மறைந்து போன மனைவியின் சிறப்பைக் காவியமாக விவரிக்கும் கடிதங்களின் தொகுப்பான வெ. சாமிநாத சர்மாவின் மனைவி எனும் மகாசக்தி, வில்லியம் சரோயனின் என் பெயர் ஆரம், இந்திய நதிகளைப் பற்றி காகா காலேகர் எழுதிய நதிகளைப் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய ஜீவன் லீலா என்கிற குஜராத்தி நூல், பத்து ஆண்டுகள் சீரிய ஆராய்ச்சிக்குப் பிறகு ராமன் சுகுமார் எனும் யானை ஆராய்ச்சியாளரால் எழுதப்பட்ட யானைகளின் உலகம் என அற்புதமான நூல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் செல்கின்றன பாவண்ணனின் கட்டுரைகள்.
அநேகமாக மூன்று முக்கிய பகுதிகளை
தொகுப்பு, வாசகனை மிகவும் கவர்வதற்கான பிரதான காரணம் பாவண்ணனின் எழுத்துமுறையே ஆகும். ஒவ்வொரு கட்டுரையும் உள்ளடக்கியுள்ளன. முதற்பகுதி, நூலைப் படிக்கும் வாய்ப்பு எப்படி பாவண்ணனுக்குக் கிட்டியது என ஓர் அழகிய புனைவைப்போல் சொல்கிறது. அவர் தரும் தொடக்க அறிமுகம் நூலின் சிறப்பை நமக்கு உணர்த்துவதோடு அதை படிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. இரண்டாம் பகுதி நூலின் உள்ளடக்கத்தை மிகச் சிறப்பாக எடுத்து வைக்கிறது. நாவல் என்றால் கதை சுருக்கத்தைத் தருகிறது. கட்டுரை என்றால் உள்ளடக்கத்தின் கூறுகளை உரைக்கிறது. மதநூல் என்றால் தத்துவங்களின் புரிதல்களைத் தருகிறது. அந்தப் புத்தகத்தை முழுவதும் படித்த உணர்வை வாசகருக்கு இரண்டாம் பகுதி தருகிறது. மூன்றாம் பகுதியே மிக முக்கியமான பகுதி. நூலில் இருந்து பாவண்ணன் கண்டடைந்தது என்ன ? என்று மிக அழகாக வகுத்தும் தொகுத்தும் தரப்படுகிறது. ஓர் நூலை எப்படிப் படித்து அதை நாம் விவாதிக்க வேண்டும், உள் வாங்க வேண்டும் என்பதற்கான 17 செய்முறைப் பயிற்சிகளாக இந்த நூல் விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.
இந்தத் தொகுப்பில் எனக்குப் பிடித்த கட்டுரை, பால்காரஸ் எழுதித் தமிழில் மு.கி. சந்தானம் மொழிபெயர்த்த புத்தரின் புனித வாக்கு நூலை அறிமுகப் படுத்தும் வெள்ளியின் மீது படிந்த தூசு எனும் கட்டுரை. படித்துப் புரிந்து கொள்வதற்கு சிரமமான புத்தரின் அனாத்மா வாதத்தின் சாரத்தை மிக எளிமையாக பாவண்ணன் வாசகருக்கு உரைக்கிறார். மனம் மட்டுமே உண்டு. ஆத்மா இல்லை.
உள்ளன. ஐநூறு வண்டிகளின் சத்தம், ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி கட்டுரைகளின் தலைப்புகளே நம்மை ஈர்க்கவல்லதாக இசைவு நிகழும் கணம் வேட்டை என்னும் மெய்ஞ்ஞானம் ஏற்றி வைத்த விளக்கு அழிவற்ற செல்வம் மகிழ்ச்சியின் ஊற்று பொல்லாச் சூழ்ச்சியான புற்றுகள் என கவிதைத் தன்மை கொண்ட தலைப்புகள் நம்மை நூலுக்குள் ஆற்றுப்படுத்துகின்றன.
புத்தகத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு கட்டுரை தத்துவ அறிஞர் எமர்சனின் இயற்கை பற்றிய கட்டுரை. இயற்கைக் காட்சிகள் பேரழகின் தூதர்கள். ஒரு கணத்தில் நாம் அசைபோடுவது இயற்கையையா ? அல்லது வாழ்க்கையையா ? என்பதே புதிராகி இரண்டும் வேறுபாடற்று இணைந்து போகும். மனிதனும் இயற்கையையும் இணையும் தருணத்திற்கு இந்த இன்பத்தை உருவாக்கும் சக்தி இருக்கிறது. இயற்கை அழகின் கூறுகளை நாம் மூன்றாக வகைப்படுத்தலாம். ஒன்று, இயற்கையின் எளிய வடிவங்களைக் கவனிப்பதால் பெறும் இன்பம். இரண்டு, ஆழ்மனப் பிரக்ஞையோடு அக்காட்சி இன்பத்தை இணைத்து விரித்தெடுப்பதால் பெருகும் அழகில் தோய்ந்து பெறும் இன்பம். மூன்று, அந்த இன்பத்தை அனுபவத் தொகையாகவும், அறிவாகவும் உருமாற்றி எண்ணுந்தோறும் பன்மடங்காக வளர்த்தெடுத்து, திளைத்து பெறும் பேரின்பம். இயற்கையின் இன்பம் அல்லது அழகு என்பது மனத்தில் மறுவடிவம் பெறும் ஆற்றலுள்ளது. அழகின் மீதான காதலே நுண்ணுணர்வு. முழுமை, கச்சிதம், இசைவு இவற்றின் வழியாகவே இயற்கை அழகு பெறுகிறது. மனம் நிறைய பொய்மையையும் போலித்தனமும் சேர்ந்து வரும்போது இயற்கையைச் சார்ந்து தன்னை வெளிப்படுத்தும் திறமையை மனிதன் இழந்து வருகிறான். மெர்சன் இயற்கையை கிறிஸ்துவாகவே காண்கிறார். ஆத்மாவே அனைத்திற்கும் மேலான பேரிருப்பு. நம் மனம் என்னும் தூய இருப்புடன் நம் வாழ்வை எந்த அளவுக்கு நாம் இசைவு கொள்ளச் செய்கிறோமோ அந்த அளவுக்கு மகத்தான சாத்தியங்கள் நம்முள் எழும்.
பாவண்ணனின் பள்ளி ஆசிரியரான இராதாகிருஷ்ணன் சார் தனது மாணவர்களுக்குப் புத்தகங்களை படிக்க வேண்டிய காரணங்களைப் பற்றி சொன்ன வாக்கியங்களோடு இக்கட்டுரை தொடங்கியது. இராதாகிருஷ்ணன் சாரின் வார்த்தைகளோடே இந்த நூல் குறிப்பை முடிக்கத் தோன்றுகிறது. நம் மனம் ஓர் அணைக்கட்டு போல. ஒரு பக்கம் ஆற்றிலிருந்து தண்ணீர் வரத்ததும் இருக்க வேண்டும். இன்னொரு பக்கம் மதகிலிருந்து வெளியேறிச் சென்றபடியும் இருக்க வேண்டும்.
பாவண்ணனின் கதவு திறந்தே இருக்கிறது தொகுப்பு ஓர் நிரம்பித் ததும்பும் அணைக்கட்டு. சந்தேகத்திற்கு இடமில்லை. ★
– முனைவர் க.நாகராஜன்
9443235530
நன்றி: சங்கு இதழ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.