ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

ப.தனஞ்ஜெயன் கவிதைகள்



லடாக் எல்லையில் ஒரு காதல் பேச்சுவார்த்தை

India-China Standoff:முக்கிய முன்னேற்றம் ...

உன்னிடம் அதிகமாகச்
சண்டையிட்டதில்லை
சண்டையென்றால்
இருநாடுகளுக்கிடையே
நடப்பதைப் போன்றில்லை
இருமனங்களுக்கிடையே

தனி நாடுகளே
உருவாகிவிடுகிறது அல்லவா
அந்த கடுகு டப்பா
என்ன செய்தது?
அது தரைமுழுவதும் உன் விழிகள் போல்

முளைத்திருப்பதைக்கண்டு ரசிக்கிறேன்

நீ தட்டிவிட்ட தேநீர் கோப்பையை
ரசித்துப் பிடித்து
அருந்துகிறேன்

அப்படி எதுவும் உன்னைப்
பெரிதாகச் சொல்லவில்லையே
மனம் எத்தனை நாட்களுக்குத்தான்
அன்பாக இருப்பது ?
சற்று கோபம் கொள்ளட்டுமே
அந்தத் தட்டைத் தூக்கி வீசாதே
அடிக்கடி அதில் உன் முகத்தைப் பார்க்கிறேன்

நீ படுத்திருந்த இடத்தில்
அழகான தீவிற்கான அடையாளம்
அதையும் ரசிக்கிறேன்
தயவு செய்து உன் கோபத்தை விட்டுவிடு
அதில் அவ்வளவு அழகாக இல்லை நீ
டம்ளரைத் தேடாதே
அதில் உன் உதடுகள் பொருந்தி உள்ளன
அதை வீச வேண்டிய இடம் தரை அல்ல
மன்னித்து விடு
நான் லடாக் எல்லையில் சமரசம்
பேசுகிறேன்
நாளை நீ என்னோடு பேச வேண்டும்.

நூற்றாண்டுகள் தாண்டிய மரத்தடியில்…..

விவிலியத்தேடல் : வேதனை வேள்வியில் ...

துயர்மிகு வேதனையை அனுபவிக்கிறேன்
உலகெங்கும் நிகழும் மரணத்தில்
நம் வாழ்வை அமைத்துக்கொள்வது
எத்தனை கொடுமையானது?
இறந்த ஆண்கள் பெண்களின்
வலியின் வேதனையில்
சித்திரம் வரைவதும்
எழுதுவதும் உதிர்ந்த காலங்களின்
போக்குகளில் நுழைகின்றன
மனம் துணிந்த நொடியின் வெளிப்பாடுகளாய் இங்கு
காடு தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது
இந்த பூமியின் புண்களில் வடியும் குருதிகளாய்ப் பிணங்கள்
தோண்டப்பட்டு வீசி எறியப்படுவது
அச்ச உணர்வுகளின் ஆழத்தில்
பாலீத்தின் சுருளாகப் பிரபஞ்சத்தை
பார்த்து விழுங்கிய கண்களை
பூமி விழுங்கிவிடுகிறதே
எவ்வளவு பெரிய வாய் இந்த பூமிக்கு
எத்தனை மனிதர்களை விழுங்கிவிட்டது?
லட்சக்கணக்கான மன வேதனையின் துயரத்தை

எப்படி சக மனிதன் கடக்கிறான்?
இறந்தவர்களின் இறுதிக்குரல் என்னவாக
இருக்கும் என மண்ணிடம் கேட்டபொழுது
அவசர மரணம் அதிர்ச்சியடைந்து
கனவுகளின் மறுபக்கத்தில் தள்ளிவிட்டு கல்லறையில்
பூத்த மௌனப் பூக்களாய் முத்தமிடு என்ற பூமியின் குரலில்
சிதைந்த முகத்துடன் அழுதது பூமி
புது மழைபெய்யும்
புது விதையாய் பொறுத்திரு என்றது
ஆனால் நூற்றாண்டுகள் தாண்டிய மரத்தடியில் நின்றுகொண்டு
இருக்கிறேன்
இன்றைய காற்றை நான்கு திசைகளிலும் அவ்வளவாக
ரசிக்க முடியவில்லை
இறந்தவர்களின் வசந்தங்களில்
நகர்கின்றன நாட்கள்.

ப.தனஞ்ஜெயன்.
danadjeane1979@gmail.com
9751800333.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *