1.கொடுஞ்சீற்றமேன் கொண்டானோடி?
ஓயாமல் ஓடியாட கண்டானடி யம்மை கடலென்றே பாடிதான் வைத்தானடி,
வஞ்சனையற்ற நிறைஅன்பை கண்டானடி யம்மை
வற்றாத நதி என்றே சொன்னானடி ,
பொறுமையின் உச்சமாய் கண்டானடி யம்மை
பூமித்தாய் மகள்என்றே இயம்பினானடி,
வளமையான வடிவம் தான் கண்டானடி
வசந்தத்தின் வனமென்றே வர்ணித்தானடி,
உற்றாரை பேணும்பணி தந்தானடி
செயல்கண்டு
கதிர்-மதி என்றேதான் புகழ்ந்தானடி,
உயிர்ஜனிக்க எம்பாட்டை கண்டானடி யம்மை
தியாகத்தின் திருஉருவென போற்றினானடி
கடலென்று நதியென்று நிலமென்று வனமென்று,
தியாகியாள் இவளென்றும் இசைத்தானடி,
ஆழிசூழ் புவியறிந்த உவமைகள் பலகூறி
பக்குவமாய் இங்கெம்மை மயக்கினானடி,
உவமானம் பலகொடுத்தும்
பயன் ஏதடி
வர்ணத்திலும் இடம்மறுத்தது அயனும்தானடி!
பெண்ணாய் மதித்தலே நிறை,
என்மனஓட்டமடி,
நொடிப்பொழுதில் கொடுஞ்சீற்றமேன் கொண்டானோடி?
***************************************************
2.அன்பேதான் அடைக்குந்தாழ்!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்?
வினவி மறுத்தது அறத்துப்பால்…
பௌத்தம் தந்த கோட்பாட்டால்
சமணம் தந்த சமிக்ஞைகளால்
கிருத்துவம் தந்த வாசகத்தால்
இஸ்லாம் இயம்பிய வாக்குகளால்
சைவ,வைணவ சாத்திரங்களால்,
உய்ந்த உலக மாந்தர்கால்
நீவீர் வகுத்த வரைவுகளால்
நித்தம் நீளும் நெறிமுறையால்
பாசம் பரிவென பலகூறுகள்
பகைவர்கும் பகிரும் பண்பாளர்கள்
வாரணவலிமை அகத்தினர்கள்
வளமாய் வாழ்ந்த பெண்ணினங்கள்
திக்கெட்டும் ஒளி போல் பரந்த புகழ்-
தனை திரிக்க இயலா காரணத்தால்,
தீமதி கொண்ட து(ர்)றுபதர்கள்
திறமை இல்லென உறைக்குங்கால்
வளிந்து செய்த வஞ்சத்தால்
வகையாய் சிறைபட்டதிங்கு சகியும் ஆழ்…
பாரில் பண்பாட்டு( சதி)அரசியல்
பகுத்த அன்பென்ற நகைமுரணால்….
குறலறமும் புறம்நின்றதோ பெண்ணியத்திற்கப்பால்!
அன்பே தானிங்கு அடைக்குந்தாழ்…
நன்றி…