நீ எழுதிய எந்தப் பக்கங்களிலும்
நானில்லை.
நெற்றியில் விபூதியுடன்
மனதுருகி வேண்டும் உன்
கோவில் பூஜைகள்
எனக்கானவை அல்ல.
உன் இரவுகளை இனிமையாக்கும்
தேனிசைப்பாடல்களில்
நானில்லை.
கடற்கரையில் சிந்திய
உன் கண்ணீர்த்துளிகளில்
என் நினைவுகளின் ஈரமில்லை.
உன் தியாக வரலாற்றில்
யார் யாருக்கோ வாழ்க்கை.
எனக்கு?
அதில் ஒதுங்கிக்கொள்ளவும்
நிழலில்லை.
வந்துப்போனவர்கள்
இடையில் வந்தவர்கள்
இவர்களுக்கு நடுவில்
என்னைத் தேடாதே.
உன் சந்தனசோப்புக் கரைசலில்
கரைந்துப்போகிறவள் அல்ல நான்.
ரத்தத்தின் ரத்தமாய்
நீ அறியாத மரபணுக்கடலில்
யுகங்களாக
உன் பாற்கடலைக் கடைந்தெடுத்து
அமுதூட்டியவள்..
ஹே சென்னிமல்லிகார்ஜூனா
உன் அமுதூறும் முத்தங்களுக்காக
செத்து செத்து
பிழைத்திருக்கும் பச்சைக்கிளி
மதுரைக்காஞ்சியின்
அந்த ஓரிரவை
விஷமருந்தி பாடட்டும்.

புதியமாதவி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *