தோளில்
கிடந்த பச்சைத் துண்டு
மரத்தில்
தொங்கிக்கொண்டிருந்தது
மீத்தேன்
பறவையொன்று
தூக்கிக்கொண்டு போன
கோழிக்குஞ்சுகளான விவசாயிகள் ,
பயிரிடப்பட்ட
நிலம் முழுவதும்
செழிப்பாக வளர்ந்திருந்தது
இறந்து போன
விவசாயிகளின் கல்லறைகள் ,
மண்வெட்டியும்
கடப்பாறையும்
ஓய்வில்லாமல் குழிகளைப்
பறித்துக்
கொண்டிருந்தன
ஆறடி விவசாய
மரமொன்றைப் புதைப்பதற்காக ,
நிலத்தில்
தூவிய உரத்தில் நஞ்சு
கலந்திருந்தது
தொண்டை அடைத்து விக்கி
செத்துக்கொண்டிருந்தார்
விவசாயி,
அமோக
விளைச்சலை
ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தார் விவசாயி
கழுத்தளவு வளர்ந்திருந்தது
வட்டியும் கடனும் ,
விவசாயக் கிணறுகளில்
நீர் வழிந்து வெளியேறி
கொண்டிருந்தது
கார்ப்பரேட் காக்கைகள்
போட்டுக் கொண்டிருந்த
கற்களாக விவசாயிகளின் பிணங்கள் ,
மாடுகள்
உழுத வயலில்
கூட்டம் கூட்டமாக
கழுகுகளின் வருகை
விவசாயின் பிணங்களாக மண்புழுக்கள் ,
சுடுகாட்டுக் களத்தில்
அடுக்கி வைக்கப்பட்ட
நெல் மூட்டைகளாக
விவசாயிகளின் பிணங்கள்
தூரத்தில் தெரிகின்றன
வட்டியும் தகனமேடையும் ,
வற்றிப்போன மலட்டாற்றில்
திடீரெனப் பெருக்கெடுத்துப்
வெள்ளமெனப் பாயும்
விவசாயிகளின் கண்ணீர்த் துளிகள் ,
பூட்டிய
மோட்டார் அறையிலிருந்து
வெளியேறும்
நாற்றம் நாடாளுமன்ற
வளாகம்
வரை வீசுகிறது
இறந்துபோன
விவசாயிகளின் மூச்சுக்காற்றின்
முடைநாற்றம்!
– கவிஞர்; ச.சக்தி
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி வட்டம்,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

