சென்னை நகரம் யாருடையது?
பழைய பஞ்சாங்கம் – 29
– ராமச்சந்திர வைத்தியநாத்
பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களைக் கொண்ட விரிவான இந்தியாவாக இருந்ததை அனைவரும் அறிவோம்.
காலனி ஆட்சியில்தான் நிர்வகிக்க ஏதுவாக பம்பாய், மத்திய மாகாணம், வங்கம், பஞ்சாப், மதராஸ் போன்றவை உள்ளிட்ட பல்வேறு மாகாணங்கள் உருவாக்கப்பட்டன. இவையன்றி மன்னராட்சிக்குட்பட்ட பரோடா, ஹைதராபாத், கொச்சி, மைசூர் போன்ற பல்வேறு சமஸ்தானங்களும் இவற்றுக்கு அப்பாற்பட்டு இருந்து வந்தன. நாடு விடுதலை பெற்றபின்னரே இத்தகைய சமஸ்தானங்கள் அவற்றையொட்டிய மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.
அன்றைய மதராஸ் மாகாணம் என்பது இன்றைய தமிழ்நாடு, ஆந்திரம், கேரளத்தின் பெரும்பகுதி, கர்நாடகம் மற்றும் ஒரிசாவின் குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்து வந்தது. இந்த அடிப்படையில்தான் தென்னிந்தியர்களை வட இந்தியாவில் உள்ளவர்கள் மதராஸிகள் என்று அழைத்து வந்ததும்.
ஏற்கனவே பல்வேறு காங்கிரஸ் மகா சபைகளில் மொழிவழி மாநிலங்கள் அமைந்திட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வந்ததன் அடிப்படையில், மாகாணத்திற்குள் மொழி வழி காங்கிரஸ் கமிட்டிகள் விடுதலைக்கு முன்னரே சென்னை பிராட்வே பகுதியில் செயல்பட்டு வந்திருக்கின்றன. இருந்த போதிலும் விடுதலைக்குப் பின்னர் வழக்கம்போல் காங்கிரஸ் இக்கொள்கையை புறக்கணித்தது. தேசம் பிளவுபடும் என்ற நொண்டிச் சாக்கினை நேரு மட்டுமின்றி, ’மூதறிஞர்’ ராஜாஜியும் கொண்டிருந்தனர்.
சென்னையிலே பிறந்து வளர்ந்து காந்திஜியால் ஈர்க்கப்பட்ட பொட்டி ஸ்ரீராமுலு, 1952ல் மயிலை லஸ் முனைக்கு அருகில் உள்ள அன்றைய காங்கிரஸ் தலைவர் புலுசு சாம்பமூர்த்தி இல்லத்தில் தனி ஆந்திர கோரிக்கையை முன் வைத்து, சாகும் வரை உண்ணாவிரதத்தினை மேற்கொண்டார். மத்தியிலும் மாகாணத்திலும் உள்ள காங்கிரஸ் அரசுகள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

அவர் மரணத்திற்குப் பின்னரே அதுவும் மாகாணமே கொந்தளித்த சூழலில் 1953ல் தனி ஆந்திரம் உருவாகியது. அத்தருணத்தில் மதராஸ் நகரம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. காலங்காலமாக மதராஸில் இருந்த தெலுங்கு பேசக்கூடிய முக்கிய பிரமுகர்களும் அரசியல்வாதிகளும் ஆந்திரத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தீவிரமாக வற்புறுத்தி வந்தனர். அது குறித்து பல்வேறு இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததைத்தான் இணைப்புச் செய்தியும் வெளிப்படுத்துகிறது.
மொழி வெறியையும், பிராந்திய வெறியையும் தூண்டுவதில் எவருக்கும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காங்கிரஸ் நிரூபணம் செய்தது. ஆந்திரத் தலைவர்கள் தீவிரமாக இருந்தபோது தமிழக தலைவர்கள் பட்டும் படாமல்தான் இருந்து வந்திருக்கின்றனர்.
ஜனநாயகத்தையும், பிராந்திய பண்பாட்டியலையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடியதாகவும் நிர்வாகத்தை மேம்படுத்துவதாகவும் மொழி வழி மாநிலங்கள் அமையக்கூடும் என்பதினால் அதை ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி முன் மொழிந்ததோடன்றி அக்கோரிக்கையை தீவிரமாக வற்புறுத்தியும் வந்தது. ஆந்திய மாநில கம்யூனிஸ்ட் கட்சி சுந்தரய்யா தலைமையில் விசால ஆந்திர போராட்டத்தையே மாநிலமெங்கிலும் மேற்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் பொட்டி ஸ்ரீராமுலுவின் போராட்டத்திற்கு முழுமையான ஆதரவளத்ததே கம்யூனிஸ்ட் கட்சிதான்.
சென்னை நகரம் யாருக்கு என்ற கோரிக்கை எழுந்தபோது கூட கம்யூனிஸ்ட் கட்சி மொழி அடிப்படையில் தமிழகத்திற்கே உரியது என்று திட்டவட்டமாக அறிவித்தது. ஆந்திர கமிட்டியும் தமிழ்நாடு கமிட்டியும் காங்கிரஸ் கமிட்டிகளைப் போலன்றி இதில் ஒத்த கருத்தினைக் கொண்டிருந்தன.
அன்றைய தினம் தமிழ்நாடு ஆந்திரம் ஆகியவற்றுக்கிடையில் ஒரு சுமுகமான சூழலை ஏற்படுத்துவதில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய பங்காற்றியது.
காங்கிரஸ் இரட்டை நிலைபாடுகளை கொண்டிருக்கையில் மாநில மக்களிடமிருந்து அந்நியமாகிவிடுவதை தவிர்த்திடும் பொருட்டு அன்றைய தினம் மாகாண பிரதமரின் நல்லாசியுடன் இப்பிரச்னையில் பிராந்திய மொழி உணர்வுகளை முன்னிருத்திய ம.பொ.சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் இதில் கம்யூனிஸ்டுகளின் பங்கு பணி இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
