கற்சுவர்கள் சிறைச்சாலை ஆவதில்லை
பழைய பஞ்சாங்கம் – 5
– ராமச்சந்திர வைத்தியநாத்
நான் கலகக்காரன், நித்தியமானவன் மற்றும் சுதந்திரமானவன்/என் ஆன்மாவின் ஆணையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது/நான் கடுமையாக கர்ஜிக்கும் புயல்/நான் உயிரோட்டமாய் பாயும் நதி/நான் மௌன அழுகைகளின் குரல்/இருண்ட வானத்தில் நான் வெளிச்சம்/நான் கிளர்ச்சிக்காரன், துணிச்சலானவன், வலிமையானவன்/ஒவ்வொரு பாடலிலும் நான்தான் நாயகன்/அடக்குமுறையை எதிர்கொள்வதில், நான் பெருமையுடன் நிற்கிறேன்/நான் கலகக்காரன், இந்த நிலத்தின் ஆன்மா/
புரட்சி கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாம் (Kazi Nazrul Islam) அவர்களின் புகழ்பெற்ற இக்கவிதை 1921ல் எழுதப்பட்டு 1922ல் வெளியான அக்னிவீணை தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. ஒரு சதாப்தத்தைக் கடந்த போதிலும் உயிரோட்டமாய் நிற்பதெனில் இதில் ஓங்கி ஒலிக்கும் கவிஞனின் கலகக்குரலே. இக்பாலின் சாரே ஜஹான் சே அச்சா என்ற நிகரற்ற உருதுகவிதைக்கு நிகரானது இந்த வங்கப் பாடல்.
வங்க மண்ணில் பிறந்து இளம் வயதிலேயே தீவிரமான படைப்பாளியாக விளங்கியவர் அவர். இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த முஸாபர் அகமதுவின் நட்பு அவரை செம்மைப்படுத்தியிருக்கிறது. இருவரும் இணைந்து பத்திரிகையை கூட நடத்தி வந்திருக்கின்றனர்.

கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக அவர் இல்லையெனினும் அவர் கம்யூனிஸ்ட் கவிஞர் என்றே பரவலாகக் கருதவும் பட்டார். கம்யூனிஸத்தை மிக நெருங்கி வந்துவிட்ட மனித சமத்துவம், விடுதலை என்ற நியதியில் தீராத வேட்கை கொண்ட ஒருவர் என்ற முறையிலும்கூட தெய்வீக சக்தியில் நம்பிக்கை வைத்து ஏற்றுக் கொண்ட ஒருவராகவே நஸ்ருல் இருந்தார்.
விடுதலைப் போரில் தனது படைப்புகள் வாயிலாக மகத்தான பங்களிப்பினை கொண்டிருந்த இவர் பலமுறை சிறை சென்றவருங்கூட. கவிதைகள் மட்டுமின்றி புதினங்கள், இசைப்பாடல்கள், கஸல்கள், சிறுகதைகள், ரவீந்திர சங்கீதம் போன்றவற்றிலும் அவர் பிரகாசித்திருக்கிறார்.
மகாகவி தாகூர் தனது படைபொன்றினை இவருக்கு அர்ப்பணம் செய்திருக்கிறார். அவரது சகோதரர் நஸ்ருலின் ஒரு புத்தகத்தின் அட்டைக்கான சித்திரத்தை தீட்டித் தந்திருக்கிறார். நாற்திசையிலும் சிதறிக்கிடந்த அவரது அனைத்து படைப்புகளையும் தொகுத்து நாட்டுடமையாக்கிட வங்க அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் அது வெற்றிபெறவில்லை. இந்த அம்சத்தில் நமது மாகாண அரசு உத்வேகத்துடன் பாரதியின் படைப்புகளை மக்களின் சொத்தாக்கியது என்பது சாதாரணமானதல்ல.
பலதரப்பினராலும் ஏற்கப்பட்ட நஸ்ருல் இறுதி நாட்களை துயரத்தில் கழித்த போது சுதந்திர இந்திய அரசாங்கம் அவருக்கு ஓய்வூதியம் அளித்து கவுரவித்தது. அதேதருணத்தில் மொழியின்பால் இவர்க்குள்ள பற்றினை போற்றிடும் வகையில் பிளவுபடாத பாகிஸ்தான் அரசும் மாதந்தோறும் ரூ 200 ஓய்வூதியம் அளித்து வந்ததையும், இது பின்னர் ரூ 500 ஆக உயர்த்தப்பட்டிருப்பதையும் நாம் செய்தியின் வாயிலாக அறிகிறோம். வங்க இலக்கியத்தின் மேன்மைக்காக பங்களிப்பினை கொண்டிருந்தவரை இரு நாட்டு அரசுகள் உயர்த்திப் பிடிப்பது சாதாரணமானதல்ல.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நோக்கத்தின்பால் அந்நிய நாட்டின் ஓய்வூதியத்தைப் பெற்றுவந்த மற்றொருவரும் இந்த பாரத தேசத்தில் இருந்திருக்கிறார். “எந்த அரசியல் நடவடிக்கையிலும் நான் பங்கேற்க மாட்டேன், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி மாவட்டத்தைவிட்டு வெளியே செல்ல மாட்டேன்” என்று வைஸ்ராஸ் லின்லித்கோவுடன் எழுத்து பூர்வமாக ஒப்பந்தம் செய்து கொண்ட அவர், காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லீம்களை எதிர்ப்பதை விதேச ஆட்சியாளர்களுடன் பொதுவான நோக்கமாக கொண்டிருந்தவர்.
ஆனாலும் இவர் மாவீரனாகத்தான் சித்தரிக்கப்பட்டுவருகிறார். அன்னாளில் ஏகாதிபத்திய அரசிடமிருந்து அவர் மாதந்தோறும் பெற்றுவந்த தொகை ரூ அறுபது என்றும், அன்றைதினம் ஒரு மாகாண கலெக்டர் வாங்கக்கூடிய சம்பளம் என்றும் பெருமை பொங்க அவரை உயர்த்திப் பிடிப்போர் இன்றும் எழுதி வருகின்றனர். அவர்தான் சாவர்க்கர்.
எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

