கூந்தல்
வாசலை நனைத்துப் போன சாரல்
அவளின் சிரத்தை நனைத்தது.
நீண்ட நாள் முடித்து வைத்த
தலைமுடி முடிச்சை அவிழ்த்தாள்!
ஈரத்தை ஈர்த்துக்கொள்ளமுடியாமல்!.
விரித்த கோலத்தில் களமாட
துரியோதனன்,
ஒன்றா?
பூச்சூடி கொண்டாட,
கிருஷ்ணர்கள்
ராமர் வேடத்தில்.!
விரல்களை சிறுக்கனியாக்கி
சிக்குண்ட மயிரிலையை
பிரித்தெடுத்தாள்.
ஒவ்வொரு மயிரிலைகளிலும்
புடைத்த சடைமுடிகள்.
அவளின் இறுகிய மனதைப் பிரதிப்பலித்தது.
லாவகமாய்
முடிச்சுக்களை பிரித்தெடுக்க முயலுகிறாள்
உதிர்ந்த கேசம்
கேவுகிறது,
வாசனைகளை சூடாத ,
சிரத்தில் வாசம் செய்ய விருப்பமின்றி
முடிச்சுக்களை அவிழ்த்துக்கொண்டது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

