கோலம்
~~~~~~~~
வாசலில் கோலமிட்ட ,
அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்,
எப்போதும் சிக்குக் கோலம்தானா?
அம்மா சொன்னாள் _ அது
அப்பாவிடம் வாழ்ந்த வாழ்க்கை !
முத்தம்
~~~~~~~
அழுத்தி இதழ் பதித்து
ஈரம் நனைய முத்தம் கொடு
அப்படியேனும் இருக்கட்டும்,
ஈரம் உன்அப்பனுக்கு.
தூக்குவாளியற்ற மூடி
நினைவு தெரிந்த நாள் முதலே,
தூக்குவாளியின் பித்தளை மூடி ஒன்று
வசித்து வருகிறது என் வீட்டில்.
அம்மா
அவளின் அம்மா ஞாபகமாக
பேணி வருகிறாள் !
அவ்வப்போது
அப்பாவிற்கு வெஞ்சனம் வைக்க,
சருவம் மூட ,
கை பொசுக்கும்,
குழி பணியாரம் ஆற வைக்க,
பருப்பு சாதம் பிசைந்து
தம்பிக்கு ஊட்ட ,
அன்றாட பயன்பாட்டில்
அம்மாவின் கண்முன்னே.
நேர்த்தியான வடிவமைப்புடையது,
அம்மாவின் கைவண்ணத்தில் — மேலும்
பளிச்சென மின்னும்.
அன்பையும், ஆசையையும்
சேர்மானித்த கஞ்சியை,
தாத்தாவிற்கு கொண்டு போவாளாம் அம்மாச்சி
அந்த தூக்குவாளியில் .
வாசனை பிடித்து யாரும்
விசுக்கென்று இழுத்து விடக்கூடாதென
தலையில் பிருமனை வைத்து
அப்படியே,
வாளியோடு உறிஞ்சிக் குடிக்கும் — தாத்தா
ப்ரியத்தின் மிச்சத்தை
பகிர்ந்தளிப்பாராம்.
அம்மாச்சியை எதற்கும்
கை நீட்டாத ,
அவரின் உச்சபட்ச கோபத்தின்
வடிகால் வாளிதானாம்.!
ஓர் உதை அவ்வளவு தான்.
ஒரு நாள் மாலைப்பொழுதில்
பேரப் பிள்ளைகள்
நீர் மாலை எடுத்ததில்
தொலைந்து போனது தாத்தாவோடு
வாளி மட்டும்.
நிலமற்றவளென
எகடாசி செய்கிறாய்.!
எச்சங்களில்
வளர்ந்த பெரும் காடுகளின் ,
கூடாராம் நான் அறிவாயா.?
உன் வேர் பற்றிப் பரவ
பழுத்த விதையின் ரகசியம்
நானறிவேன்.
உன் விலா எலும்பில்
நான் உயிரூட்டபட்ட உருக்க கதையில்
எழவிடாத நின் தந்திரம் __ என்
குறுகிய இடையறியும்.
ஆதித் தாயிடம்
காட்டை உருவி
வீட்டைக் கொடுத்தவனே,
உன் வம்சாவளி வித்தின்
வன்மம் நானறிவேன்.
நின் சந்ததிகள் ,
ஓங்கி தழைக்க ,
யாசகம் கேட்பவனே,
யார் நிலமற்றவள் ???
க. பாண்டிச்செல்வி
திருமங்கலம்
மதுரை
அருமையான கவிதைகள்