கேப்டனில்லாமல் அவனுக்கு பதிலாக அவன் போன்ற பொம்மையைக் கொண்டு, ஒரு கப்பல், இதுவரை போகாத புதிய கடல் வழித்தடத்தில் போனால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது இந்தியாவின் நிலை.
பிரதம மந்திரி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட கண்மூடித்தனமான ஆதரவை துண்டக்கூடியவராக உள்ளார். ஆனால், அவர்கள் இந்தளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு சாமியாடுவது அவரது தலைமைப் பண்புகளால் அல்ல என்பது தற்போது தெளிவாகியுள்ளது. அவரிடம் தலைமை ஆளுமை கிஞ்சித்தும் கிடையாது. கோவிட் முதல் சீனா வரை, பொருளாதாரம் முதல் சமூகம் வரை, ஒரு மாய அரசியலும், எல்லாவற்றையும் தவிர்க்கும் அமைதியும்தான் உள்ளது.
இந்திய குடியரசு தலைமை இல்லாத நெருக்கயை எதிர்நோக்கியுள்ளது. பல கோடி இந்தியர்கள் எதிர்நோக்கும் பொருளாதார துயரங்கள் மிகவும் தீவிரமானது. போராடிப் பெற்ற ஏழ்மையைப் போக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. கோவிட் பெருந்தொற்று இன்னமும் உச்ச கட்டத்தை அடையவில்லை. கடந்த சில ;வாரங்களாக நடைபெறுவதுதான் இனி நடைமுறை என்பதற்கான சாட்சியாகக் கொள்வேமானால், நாம் தயார் நிலைக்கு கொஞ்சமும் அருகில் இல்லை, நம்மிடம் அதனை அடைவதற்கான திறன் இருந்த போதிலும். நமது மருத்துவ சேவை அமைப்பின் திறன் என்பது மிகவும், கடுமையான சோதனைக்கு உள்ளாகப் போகிறது.
தற்போது இராணுவ சூழலும், மோசமடைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் இடம் என்ன என்பதை சீனா கருத்து ரீதியாக சுட்டிக் காட்டுவது எதில் போய் முடியும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. அது தெளிவாக இந்தியாவின் பொறுமையை சோதித்துக் கொண்டிருக்கிறது. தற்சமயத்தில் நமது அணுகுமுறையின் ஒட்டு மொத்த நோக்கம் உள்நாட்டின் பொதுசனத்தின் முன்னிலையில் தர்மசங்கடமான நிலையை தவிர்ப்பதாகும். இந்தியாவை வந்து பார் என சவால்விடும் நேபாளத்தின் ஆளமை, நமது அதிகாரம் ராஜீய கர்வம் ஆகியவை சுருங்கிவிட்டதை காண்பிக்கிறது. சீனா சர்வதேச நம்பகத்தன்மையை வெகு விரைவாக இழக்கலாம். ஆனால், இந்தியாவும், தனக்கேயான வழியில், தனது ஆகர்ஷிக்கும் அதிகாரத்தை இழந்து வருகிறது, ஏனெனில், அதன் வளர்ச்சி தடைபட்டுவிட்டது, அதன் ஜனநாயகம் இனியும் முன்மாதிரியாக இல்லை.
இந்த நெருக்கடிகள் தற்போது சவால்களாக மாறியுள்ளன. ஆனால், அவற்றை சகித்து கொள்ள முடியாததாக மாற்றியுள்ளது எதுவெனில், இந்தியாவின் தலைமை பீடத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறை. இந்திய அரசியலின் துயரமான நிகழ்வே, நெருக்கடிகளின் ஆழங்களை அங்கீகரிக்கக்கூட முடியாத நிலையில் உள்ளதே. அரசு முழுமையாக புரிந்து வைத்திருப்பது எதுவெனில், இந்த நெருக்கடியின் ஏதாவது ஒரு அங்கத்தை அங்கீகரிப்பதே, அது அதிகாரப்பூர்வமாக கட்டியெழுப்பியுள்ள இந்தியா மிகவும் வலுவான தலைமையின் கைகளில் உள்ளது, அதுவே இந்தியா அடைய வேண்டிய இலக்கை அடைய ஒரே மார்க்கம் என்ற ஊதி எழுப்பப்பட்ட பலுன்களில் ஓட்டை போட்டுவிடும் என்பதையே! ஆனால் பட்டவர்த்தமான உண்மை என்னவெனில், இந்தியாவின் சமீப கால வரலாறு என்றைக்குமே தலைமை இன்றி இருந்ததில்லை.
இதன் நிச்சயமான அடையாளம் எதுவெனில் அரசாங்கத்தின் ஒட்டுமொத்த சக்தியும், தலைவரைப் பற்றி எழுப்பப்பட்டுள்ள கற்பனைகளை பாதுகாக்க பிரச்சாரம் மேற்கொள்வது, திசைதிருப்புவது, அடக்குமுறையை ஏவுவது போன்றவற்றை நோக்கி தயார்படுத்தியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தலைவர்களுக்கு தேவை கருத்துகள் பரவலாக வர வேண்டும், சாதனைகளும் பரவலாக செல்ல வேண்டும். ஆனால், எந்த ஒரு ஜனநாயகத்திலும், ஒரு அரசை நிலைநிறுத்த தேவையான பிரச்சாரம் என்பது, அந்த அரசின் தலைவரின் திறனுக்கு தலைகீழ்வீகிதமாக இருக்கும் என்ற பழமொழி ஓரளவிற்கு நியாயமானதுதான். இந்த அரசு நேருவை உயர் வர்க்கத்தை சேர்ந்தவர் என உதாசீனப்படுத்துகிறது.
ஆனால், எவற்றிலெல்லாம் மிகவும் முக்கியமோ அதிலெல்லாம் நேரு ஒரு ஜனநாயகவாதி. அவர் மக்களின் புத்திகூர்மையை சந்தேகிக்கவில்லை. தனது ஒவ்வொரு செயலின் நோக்கத்தையும், அது சரியாக இருக்கலாம், தவறாக இருக்கலாம், அவற்றை தானே மக்களிடம் விளக்குவார். மக்களின் தலைவரான மோடியோ, மக்களிடம் பேசுவார், மக்களுக்காக பேசமாட்டார். அவ்வாறு பேசுவதெல்லாம் எப்போதும் ஒரே மாதிரிதான், அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது, அவர் ஜனநாயக விவாதங்களுக்கு மேற்பட்டவர், பொதுகருத்திற்கு மேலானவர், அவர் தன்னை அதன் ஒரு பகுதியாக நினைத்துப் பார்த்ததில்லை.
தற்போதைய அரசும், நம்மில் பலரும், மன்மோகன்சிங்கின் தவிர்க்கும் மவுனத்தை விமர்சித்துள்ளோம். அதிலும், குறிப்பாக அப்போது மேலெழுந்து வந்து கொண்டிருந்த அரசை நிர்பந்திக்கும் முதலாளித்துவ வர்க்கம் குறித்து, அதுவே ஐமுகூ அரசை உள்ளிருந்து வீழ்த்தியது. ஆனால் இந்தியா கடந்த 30 வருடத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாத இந்த சமயத்தில், அவ்வப்போது ஏதாவது ஒற்றை வரிகளோ அல்லது அர்த்தமற்ற சொற்றொடர்களோ உதிர்ப்பது தவிர, சமீபத்தில் இந்த பிரதமர் பேசியதில் ஏதாவது ஒரு சொற்றொடர் நாட்டு மக்களை உற்சாகப்படுத்தியுள்ளதா, இந்த நாட்டு மக்களை ஒற்றுமைப் படுத்தியுள்ளதா? மிக முக்கியமாக காரண காரியங்களை அடுக்கி இந்த நாட்டிற்கான தனது தொலைநோக்கு என்ன என்பது குறித்து ஏதாவது பேசியுள்ளாரா? நிறைய நேரம் பேசுவது என்பது நிறைவாக பேசுவதாகாது. வேண்டுமென்றே கடைபிடிக்கப்படும் இந்த பிரதமரின் மவுனத்தை ஒட்டு மொத்தமாக பார்த்தால், இதற்கு முன் இருந்த அனைத்து பிரதமர்களின் இந்த அரசின் முன்னுரிமைகள் எதுவெனில், மவுனங்களின் கூட்டு தொகையை விட அதிகம்.
சீனா ஏன் தசைகளை முறுக்குகிறது?
மேலே சொன்ன விமர்சனங்களுக்கு பதிலாக எப்போதும் சொல்லப்படுவது இதுதான், பிரதமரை கேவலப்படுத்தி பேசுகிறார்கள், அல்லது உயர்வசதி படைத்தவர்கள் (ஏழைஎன்பதால்) எள்ளி நகையாடுகின்றனர் என்று. இந்த புகாரில் ஓரளவுக்கு உண்மையுள்ளது. ஆனால், இந்த பதிலையே தனது சொந்த நோக்கங்களுக்கு கேடயமாக ஏராளமான முறை பயன்படுத்தியது தலைமைப் பண்புகளில் குறைபாடு உள்ளதையே காட்டுகிறது. ஆறுவருட காலமாக பிரதமராக உள்ள ஒருவர், வரலாற்று சாதனையாக வெற்றி பெற்றபின், உண்மையான எதிர்கட்சி இல்லாத போது, தொடர்ந்து தான் பாதிக்கப்பட்டவன் என்று கூறுவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும், ஒன்று தலைமைப் பொறுப்பில் இருப்பவர்க்கு சற்றும் பொருந்தாத, மிகவும் ஆழமான பாதுகாப்பின்மை உணர்வோடு அவர் இருக்க வேண்டும், அல்லது அவ்வாறு நடிப்பதற்கு அவமானகரமாக அவரின் நம்பிக்கை, அவரது ஆதரவு தலத்தில் ஓரளவுக்கு தன்னுடைய குற்றத்தை ஓப்புக் கொண்ட உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் அவர்கள் யாரும் அவரைக் கடினமான கேள்வி கேட்காமல் இருக்கும் நிலைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்த்திருக்கலாம். பொருளாதாரத்தை அவர் நடத்துவது குறித்து கேள்வி கிடையாது, இந்தியாவின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக இருப்பதற்கான தந்திரோபயங்கள் குறித்த கேள்விகள் கேட்காமல் இருப்பது.
ஆனால், தீவிரமாக பேசுவதென்றால், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பரிமாணத்தை பார்க்கும் போது, ஒரு நேர்மையான தலைமையின் முதல் பணி என்பது நாட்டு மக்களை ஒருமைப் படுத்துவதாகும். ஆனால் எந்த ஒரு தனி விஷயத்தை எடுத்துக் கொண்டாலும், அவற்றில் மதரீதியான பிளவு ஏற்படுத்துவதும், தொற்று காலத்திற்கு முந்தைய கேள்வி கேட்பாரற்ற தான்தோன்றித்தனமும் தொடர்கின்றன. இரண்டுமே சிஏஏக்கு எதிரான பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேட்டையாடப்பட்டபோது வெளிப்பட்டது. இந்த அரசின் முன்னுரிமைகள் எதுவெனில், ஒரு தொற்று காலத்தின் நடுவில், அது வெறிகொண்டு இலட்சியங்களை சுமந்து கொண்டு திரியும் மாணவர்களை, அவர்கள் சில சமயங்களில் அதீத வைராக்கியத்துடன் பாரபட்சங்களுக்கு எதிராக போராடுகிறார்கள் என்றாலும், அவர்களை தேசவிரோதிகளாக சித்தரிப்பதும், அதே நேரத்தில் வெறுப்பை விதைப்பவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றுவதும் நடைபெறுகிறது. பிளவு பட்ட வீடு நீடிக்காது என்ற லிங்கன் வார்த்தைகளை ஒரு தலைவர் அறிந்திருப்பார். நமது தலைவர் வீடு பிளவுபட்டிருக்கும் போது அதில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறார்.
இந்தியாவில் கோவிட்-19, காலதமதமான மற்றும் தவறான அணுகுமுறை
பெருந்தொற்று பிரச்னையில்கூட பிரதமர் நாட்டு மக்களை ஒன்றிணைக்கவில்லை. இந்த சவாலை தேசம் உறுதியுடனும், ஆரம்பத்திலிருந்தே தன்னகத்தே உள்ள வளங்களைக் கொண்டு எதிர்கொள்வதற்கு பதிலாக, நாம் விநோதமான பிளவுபடுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டோம் ஒவ்வொருவரும் பெருந்தொற்று என்பது கடினமான சவால் என்று புரிந்து கொண்டனர். பெரும்பாலான குடிமக்கள் இதற்கு ஆதரவு தருவதற்கு எந்தளவுக்கும் செல்ல ஆயத்தமாக இருந்தனர். ஆனால், நாம், பெருந்தொற்றை சமாளிப்பது என்பதில் படுபாதாளத்திற்கு வீழ்ந்தோம்.
இதன் ஆணிவேர் என்பது, உச்சத்தில் உள்ள தலைமையின் பாதுகாப்பின்மை உருவாக்கும் கருத்து மேலான்மையின் கலாச்சாரம். ஆகவே, இப்பிரச்னையின் தீவிரத்தை ஏற்றுக் கொள்வதற்கு பதிலாக, பல மாநிலங்கள், குஜராத்திலிருந்து, டெல்லி, மே.வங்கம் வரை இப்பிரச்னையை உண்மைத் தன்மையை சந்திப்பதற்கு பதிலாக மத்திய அரசைப் போலவே தங்களைப் பற்றிய உருவங்களை எப்படி மேம்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தினர். அவர்கள் சோதனைகளின் எண்ணிக்கையை குறைத்து, அதன் காரணமாக நோய் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை நன்றாக இருக்கும்படி காட்டினர்.

இந்த சமயத்தில் நீங்கள் நினைக்கலாம், சோதனைகள் எந்த தடையும் இன்றி, நாம் கோரினால் சோதித்துக் கொள்ளலாம் என்று, ஆனால், உண்மை அதற்கு மாறாக சோதனைகள் ரேசன் போல கொஞ்சம் பேருக்குத்தான் கிடைக்கும் நிலையே உள்ளது. பல மாநிலத் தலைவர்கள், விஜய் ரூபானி, அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மமதா பானர்ஜி ஆகியோர்கள் பிரதமரைப் போலவே குறை சொல்லப்பட வேண்டியவர்களே ஏனெனில் அவர்கள் பிரதமரின் பாணியையே பின்பற்றினர்.
நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள், தலைமைப் பண்புகள் குறித்த கலாச்சாரம் எந்தளவிற்கு மாறியுள்ளது என்றால், பழங்காலத்தில் தலைமைப் பொறுப்புக்கு வருகிறவர்களிடம் மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகளே இப்போது காணாமல் போய் விட்டது. பிரதம மந்திரி தலைமைப் பண்பை எந்தளவிற்கு சுருக்கியுள்ளார்? உண்மையை சந்திப்பதற்கு பதிலாக அதனை மறுக்கிறார். விமர்சனத்தை ஊக்குவிப்பதற்கு பதிலாக அதனை அடக்குகிறார்: சமூக ரீதியான வேற்றுமைகளை சமரசப்படுத்துவதற்கு பதிலாக அவற்றை அதிகப்படுத்துகிறார்: பொறுப்பு ஏற்பதற்கு பதிலாக, சாதனைகளை ஏற்றுக் கொள்வதும், பழியை மற்றவர் மீது போடுவதும், கருணையான வழிகளை மேற்கொள்வதற்கு பதிலாக கொடூரமான செயல்களில் மகிழ்கிறார்: நாட்டை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்டியமைப்பதற்கு பதிலாக, தொடர்ந்து திசை திருப்பல் என்ற பொறியில் நாட்டை சிக்க வைக்கிறார்.
பிரதம மந்திரி தனது ஆதரவாளர்கள் மத்தியில் மிகவும் கண்மூடித்தனமான பாராட்டுகளை கிளர்தெழச் செய்கிறார். ஆனால், இந்நேரத்திற்கு நமக்கு தெளிவாகியிருக்க வேண்டிய ஒன்று, அவர்களின் கண்மூடித்தமான பாராட்டு எதுவாக இருந்தாலும், அது அவருடைய தலைமைப் பண்புக்கானது அல்ல. அவரிடம் தலைமைப் பண்பு முழுமுற்றாக இல்லை. அதற்கு பதிலாக அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்றால், மாய அரசியல், அதனை நாம் எல்லோரும் நன்றாக உட்கிரகித்துக் கொண்டோம். இந்தியா இதுவரை பயணிக்காத ஒரு கப்பலில் தலைவன் இல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது, தலைவனுக்கு பதில் அவனது உருவ பொம்மையே உள்ளது.
– 16.06.2020 “தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் க.ஆனந்தன், தூத்துக்குடி.

